கடவுளைக் காணவில்லை

8 ஜூன்

 

” ஒரு நாயிடம் போய் கடவுள் இருக்கா ? இல்லையா ? எனக் கேட்டால் அது என்ன சொல்லும் … சிந்தியுங்கள் … பதிலைக் கடைசியில் சொல்கின்றேன். ” …..

நேற்றுத் தான் இந்த செய்தியைக் கேள்விப் பட்டேன். கடவுள் காணாமல் போய்விட்டதாக XD8975HGYU0987 கிரகத்தைச் சேர்ந்த மனிதர்கள் கலிபோர்னியாவில் இருக்கும் நாசா மையத்துக்கு அவசர மின் காந்த அலை நகல் ஒன்றை அனுப்பினார்கள். இந்தச் செய்தியைக் கேட்டு நாசாவின் ” கடவுள் தேடும் பணி ” பிரிவின் தலைவர் கிரகம் வெல் அதிருந்துப் போனார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக கோடிக் கணக்கான டாலர்களை செலவிட்டு பால்வெளிகளை எல்லாம் சல்லடைப் போட்டுத் தேடி வருகின்றார்கள். இத்தனை நாளாகத் தேடி ஒன்றையும் கண்டுப் பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தகவலை உடனடியாக இராஜாங்க செயலரின் அலுவலகத்துக்கு இரகசியமாக அறிவித்தார் அவர். 

அமெரிக்க உட்பட வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றின் இரகசியப் பிரிவுகளை உள்ளடக்கிய இக்குழுவின் கடவுளைத் தேடி விண்கலம் சில ஆண்டுகளுக்கு முன் தான் NGC 4414 விண்மீன் பேரடை கிரகங்ளின் மனிதக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஏவப்பட்டது. பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்த பால்வெளி கிரகங்களுக்கும் இந்தக் கலம் தமது கதிரியக்கங்களைப் பரப்பி கடவுளின் இருப்பைப் பற்றி தேடி வருகின்றார்கள். இதற்கு முன் ஏவப்பட்ட ஆதாம் விண்கலம் கடவுளைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது NGC 1300 விண்மீன் பேரடைக் கிரகத்தில் இருந்து வந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் அது நொறுக்கப்பட்டது. 

கிரகம் வெல் பதவியேற்றதும், பல புதிய திட்டங்களை வகுத்து கடவுளைத் தேடும் பணியில் மும்முரமாக இறங்கியது இந்த மையம். தமது ஓய்வுப் பெறும் காலத்துக்குள் எப்படியாவது கடவுளைப் பற்றி எதாவது கண்டுப் பிடித்து விட வேண்டும் என்பதே இவரின் பேரவா ? ஆனால் ஆரம்பம் முதலே இவர் எடுத்த எல்லாக் காரியங்களும் தவிடுப் பொடியாகி விட்டது எனலாம். பூமியில் இருக்கும் கடும் போக்காளர்கள் பலர் கடவுளைத் தேடுவது மகாப் பாவம் எனப் பிரச்சாரம் செய்து வருவதையும் அவர் சற்று யோசித்துப் பார்த்தார். ஆனால் வெறும் சிறியக் கூட்டத்தின் போராட்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியே நேரிடையாக சொன்னப் பிறகு இவருக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. 

கடவுளைத் தேடும் பணி மையத்தில் எனக்கு பெரிய வேலை என்று எதுவும் கிடையாது. கிரகம் வெல்லின் உதவியாளர் மரியானா தரும் செய்திகளை வேற்று விண்மீன் பேரடைகளுக்கு மின் காந்த அலை நகல் அனுப்பி வைப்பதைத் தவிர வேறொன்றும் அங்கு செய்வதில்லை நான். சில நேரங்களில் மரியானா தனதுக் கிராமத்தினைக் குறித்து சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருப்பேன். மரியானாவுக்கு கிரகம் வெல் மீது ஒருவிதக் கடுப்பு இருக்கின்றது. காரணம் இருவரும் ஒரேக் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் ஒருவர் மீது மற்றொருவருக்கு பாசம் தானே இருக்க வேண்டும், ஆனால் இவர்களுக்கு சண்டை தான் எப்போதும். என்ன இருந்தாலும் ஹோமோ சாப்பியன்களைப் போல முதுகுக்குப் பின்னால் பேசுவது இவர்களின் வழக்கம் இல்லை. 

நீங்கள் நினைப்பது சரி தான் ! மரியானாவும், கிரகம் வெல்லும் நமது விண்மீன் பேரடையைச் சேர்ந்தவர்களே இல்லை. அவர்களின் கிராமம் என்பது மிகவும் சிறியதொரு கிரகத்தில் இருக்கின்றது. அங்கு நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தினால் பலர் புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்துவிட்டனர். இப்படி வேற்றுக் கிரக வாசிகளை இங்கு நுழையவிடுவதால் தமது வேலைகள் பறிப் போவதாக அமெரிக்காவில் பலரும் விசனப்பட்டுக் கொள்கின்றவர்களும் உண்டு. ஆனால் அமெரிக்காவோ, பிற நாடுகளோ அனைத்து கிரக வாசிகளையும் இங்கே அனுமதிப்பது இல்லை. 

பூமிக்குள் நுழைவது என்பது அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. முதலில் விண்ணப்பம் செய்ய வேண்டுமாம். விண்ணப்பம் செய்வோர்களை தேர்ந்தெடுப்பதில் மரியானாவின் கிரகத்தில் ஒரு விசித்திர நடைமுறை இருப்பதாக அவள் ஒருமுறைக் கூறியது ஞாபகம் இருக்கின்றது. அதாவது அங்குள்ள ஆணோ, பெண்ணோ தமது கிராமங்களை புறந்தள்ளிப் போய்விட முடிவு எடுத்தால் – மீண்டும் அங்கே வரமாட்டேன் என சத்தியம் செய்துக் கொடுக்க வேண்டும். அதனை உறுதி செய்வதற்காக அனைவரின் காலில் விழுந்து எழ வேண்டுமாம். பின்னரே விண்ணப்பங்களை அனுப்ப அங்குள்ளவர்கள் அனுமதிப்பார்கள். 

விண்ணப்பங்களில் கேட்டிருக்கும் கேள்விகள் விசித்திரமானவை. எத்தனைக் கண்கள், காதுகள், மூக்குகள், வாய் என்பவற்றையும். தலை எங்குள்ளது எனவும், சுவாசிக்கப் பயன்படும் வாய் எது எனவும் கேட்பார்கள். நல்ல வேளை மரியானாவின் கிரகவாசிகளும் நம்மைப் போல ஆக்சிஜனையே சுவாசிக்கின்றார்கள். அதனால் அவர்களால் எளிதாக இங்கு வரமுடிகின்றது. கடும் உழைப்பாளிகள், வெறும் ஒரு மணி நேரம் தான் தூங்குவார்கள். பதினைந்து மணி நேரம் கடுமையாக உழைப்பார்கள். அனைத்து மொழிகளையும் கப்” பெனப் பிடித்துக் கொள்வார்கள். 

கிரகம் வெல் மீண்டும் கடுப்பாகின்றார். கடவுளைத் தேடிப் போன விண்கலத்தின் சமிக்ஞ்சைகள் மிகவும் நொந்தலாக வருகின்றது என்றத் தகவல்கள் அவரை மேலும் கலவரப்படுத்தியது. மரியானாவிடம் எதோ சொல்லி விட்டு உள்ளே சென்றுவிடுகின்றார். 

என்னிடம் வந்த மரியானா” நீங்கள் போய் ! உணவு இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் ”  என சொன்னாள் பச்சை நிறக் கண்கள் மிளிர. சரி ! என நானும் எனது கேபினை விட்டு வெளியேறினேன். 

சிற்றுண்டியகத்தில் அனைவரும் பரப்பரப்பாக இருந்தனர். கடவுளைக் காணவில்லை என்ற செய்தியை அறிந்து கலவரத்துடன் திரையில் வெளிப்படும் செய்தியறிக்கையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையில் செய்தியை வாசித்துக் கொண்டிருந்த பெண் ரோபோ, ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடும் கடும்ப் போக்காளரையும் காட்டிக் கொண்டிருந்தது. நான் அவற்றைப் பொருட்படுத்தாது, ஒரு விலன் பானத்தையும், ஒரு ரொட்டித் துண்டையும் ஆர்டர் கொடுத்துவிட்டு ஜன்னல் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.

உணவும் வந்து சேர்ந்தது, ரொட்டியைக் கடித்தப் படியே .. சிவப்பாக மாறிய வானத்தை விறைத்தப்படியே இருந்தேன்….

திடிர் என திரையில் வெளிப்பட்ட செய்திகளைக் கண்ட சக பணியாளர்க் கூட்டம் ” ஹொய் ! ” என கத்தினார்கள். என்னாச்சு எனப் போய் பார்த்தேன். 

கடவுள் அருகில் இருக்கும் விண்கலத்தில் சமிஞ்சைகள் கிடைக்கப் பெற்றது என்ற செய்திகள் கூறியது. கடவுள் காணமல் போனதைப் பற்றி செய்திகளுக்குத் தெரியாது. அது கிரகம் வெல்லின் அலுவலகத்துக்கும் அரசாங்கத்துக்கு மட்டுமே தெரியும். 

கடவுளுக்கும் கலகக் காரர்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அது நடந்தால் மட்டுமே நாமெல்லாம் வாழ முடியும் என்ற சூழலும் இருக்கின்றது. இல்லையாயின் கலகங்கள் செய்வோர் பூமியின் அமைதியைக் குலைத்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

கடவுள் என்பது ஒரு செயற்கையாக இணைக்கப்பட்ட ஒரு கோளாகும். பூமியை ஒத்த இக்கோளுக்குத் தான் கலகங்களை செய்யும் கடவுளர் கடும்போக்காளர்களை கிரகம் கடத்த உலக நாடுகளின் சம்மேளனம் முடிவு செய்திருந்தது. காரணம் இச்சிறிய மக்கள் அடிக்கடி கடவுளின் பெயரால் கலகங்களையும், கொள்ளையடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் நடத்தி வந்தார்கள். அவர்களின் பலமும் அட்டூழியமும் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. அவர்களை இனிமேல் பூமியில் வைத்திருப்பது ஆபத்து என முடிவு செய்த உலக நாடுகள் அனைவரையும் கைது செய்து கடவுளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஒருத் தொகுதி மக்கள் ஏற்கனவே கிரகம் கடத்தப்பட்ட நிலையில். இரண்டாவதாக சென்ற விண்கலமே ! சமிஞ்சைகள் இழந்துப் போனது. கடவுள் கிரகம் முதலில் நமது பால்வெளி விண்மீன் பேரடைக்குள் தான் இருந்தது. ஆனால் எதிர்க்காலத்தில் இங்கிருந்துப் போகும் கலகக் காரர்கள் அங்கிருந்து திரும்பி வந்து தாக்குதல் நடத்தினால் என்னவாகும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் முப்பது லட்சம் ஒளியாண்டுகள் நகர்வது போல அதனை வடிவமைத்தார்கள். ஆனால் அனைத்து கலகக் காரர்களையும் அங்கு கொண்டுப் போய் சேர்க்கும் முன்னர் திடிர் என அது காணமல் போனதே அதிர்ச்சி சம்பவமாகும். அவற்றை கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தேடியும் பயனில்லை.

இந்நிலையில் பூமியில் மிச்சம் இருந்த கலக்காரர்களும் பெருகத் தொடங்கினார்கள். அவர்களின் பலமும் அதிகரித்து வந்தது. மற்றொரு கடவுளை உருவாக்க உலக நாடுகள் திட்டமிட்டன, ஆனால் அந்த முயற்சிக்கு சில நாடுகள் போதிய ஆதரவுத் தரவில்லை. கலகக் காரர்களை கொன்றுவிடவே சில நாடுகள் விரும்பின. அது உயிரின உரிமைகளை மீறும் செயல் என பல நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த சிக்கல் தொடர்ந்துக் கொண்டு போகவே, கடவுள் தொலைந்த செய்தியை யாரும் அறிவிக்கவில்லை. இதனை எனக்கு சொல்லியப் போதும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும், உண்மையை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னை புரோகிராம் செய்துவிட்டார்கள். 

உலகத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமானதாக இருப்பதை பலரும் அறியாமல் இருக்கின்றார்கள். அரசுகளும் இவற்றை மறைத்தே வருகின்றன. என்ன செய்ய ? கலக்காரர்களின் நம்பிக்கைகள் இன்னும் 2300-ம் ஆண்டிலேயே தங்கிவிட்டது. அதன் பின் சொல்லப்பட்ட கண்டுப்பிடிப்புகளால் பலவற்றை இல்லை என்பதை உலக நாடுகள் அறிவித்தன. ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் கலகக்காரர்களுக்கு இல்லாமல் போனது. இதன் விளைவு இக்கலகங்கள்.

உணவு இடைவேளை முடித்து, எனது கேபினுக்குத் திரும்பினேன். எனது கேபினின் திரையில் அந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டே இருப்பதைப் பார்த்தேன்.

” ஒரு நாயிடம் போய் கடவுள் இருக்கா ? இல்லையா ? எனக் கேட்டால் அது என்ன சொல்லும் … சிந்தியுங்கள் … பதிலைக் கடைசியில் சொல்கின்றேன். ” ….. பிரபலத் தொகுப்பாளரின் வழக்கமான குரலில் யோ டிவியின் நிகழ்ச்சி அது. நாய் ” லொள் ” என்றது. ” சரியான விடை அளித்த நேயர்களுக்கு தமது மனம் விரும்பிய கேலக்ஸி மாக்னாவின் ஒரு வாரம் உல்லாச சுற்றுப் பயணத்துக்கான முழு வாய்ப்பு ” என அவர் தொடர கரவொலி அந்த அரங்கத்தில் பரவியது. 

அறைக்குள் கிரகம் வெல் கவலைத் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதை அவரின் கண்ணாடி அறை வழியாக நான் பார்த்தேன்.

நன்றி: கொடுக்கி, இக்பால் செல்வன்

பின்னூட்டமொன்றை இடுக