தொகுப்பு | அறிவியல் RSS feed for this section

ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்

21 அக்
வணக்கம் நண்பர்களே,
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள்  தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும்.
அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றியதின் விளைவே இப்பதிவு.
ஐன்ஸ்டின் அய்யா குறித்து அறியாதோர் இருக்கவே முடியாது என்னும் அள்வுக்கு அறிமுகம் தேவையற்றவர் எனினும் நியுட்டனின் ஈர்ப்பு  விசைக்கு மாற்றுக் கொள்கை[ பொது சார்பியல் கொள்கை General theory of relativity] கண்டுபிடித்தவர்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி[சிறப்பு சார்பியல் கொள்கை Special relativity] என்பதும், பருப் பொருளின்[matter] இன்னொரு பரிமாணமே ஆற்றல்[E=mc^2] என்பதும் இவரின் முக்கிய கொள்கையாக்கங்கள் ஆகும்.

 

யூதராக இருந்தாலும் யூத இன மேட்டிமை மீது கடுமையான விமர்சனம் வைத்த மனித நேயர். 

 

I should much rather see reasonable agreement with the Arabs on the basis of living together in peace than the creation of a Jewish state. …the essential nature of Judaism resists the idea of a Jewish state with borders, an army, and a measure of temporal power….I am afraid of the inner damage Judaism will sustain – especially from the development of a narrow nationalism within our own ranks…
— Einstein speech in New York, 1938.
 
அதே சமயம் யூதனாக இருந்தும் யூத மதத்தை விமர்சிக்கிறாயா என யூதர்கள் யாரும் அவர் தலைக்கு விலை வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும்.
இது அறிவியல் பதிவு அல்ல என்பதால் ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்க தேவையில்லை.  அவர் கடிதம்  குறித்து திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அய்யாவின் இணைய தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் முழுதும் அளிக்கிறோம்.[கடிதத்தின் மொழியாக்கம் மட்டும் சிவப்பு எழுத்துக்களில் இருக்கும்]
******
ஐன்ஸ்டின் கடவுள் பற்றி கூறினார் என மதவாதிகளின்  பரப்புரைகளுக்கு  ஒருவகையில் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. ஐன்ஸ்டினும் கடவுள் என்பதை ஒரு கவிதை உருவகமாக பலமுறை கருத்து வெளியிட்டதன் ஒர் எதிர்பாரா ,விரும்பத் தகாத விளைவே எனலாம்.
ஆகவே ஐன்ஸ்டின் கடவுளை நம்பினார் என்னும் மதவாதிகளின் விளம்பர பிரச்சாரத்தை முழுதும் முறியடிக்க, இக்கடிதத்தை முற்றிலும் படித்து விளங்குவதின் மூலம் செய்ய இயலும்.இக்கடிதம் உள்ளிட்ட இதர ஆவண‌ங்கள் ஐன்ஸ்டின் ஒரு எதார்த்த இறை மறுப்பாளர் என்பதை தெளிவாக்குகின்றன.
இக்கடிதம் 2008ல் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது நான்(ரிச்சர்ட் டாக்கின்ஸ்) எனது அமைப்பிற்காக எடுக்க முயன்றேன்,அப்போதைய  விலை இப்போதைய ஏல தொடக்க விலை 3 மில்லியன் டாலரை[15 கோடி ரூபாய்] விட குறைவாக இருந்தாலும் என்னால் முடியவில்லை.
ஆகவே இக்கடிதத்தை ஏலத்தில் எடுப்பவர்கள் அதன் ஆங்கிலம்& இதர  மொழியாக்கங்களுடன்[ மூலம் ஜெர்மன் மொழி] உலக முழுதும் பரப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 
**********
இந்த தனிப்பட்ட கடிதம் அனைவருக்கும் பகிர்ந்த பொதுவான விடயம் இல்லை என்றாலும் கடவுள், மதம் மற்றும் இனம் சார் சிந்தனை போன்றவைகளின் மீதான‌ ஒரு தலை சிறந்த சிந்தனாவாதியின்  கருத்து என்ற வகையில் அறியத் தக்கதே.
இந்த ஞானியின் கடவுள்,மதம் மீதான தனிப்ப‌ட்ட ,வெளிப்படையான கருத்துகளை வெகு சிலரே சரியாக அறிந்து இருக்க முடியும் என்பதால் இக்கடிதம்  அக்கருத்துகளை ஒரு ஆவணமாக்கி அனைவருக்கும் அளிக்கிறது.
இக்கடிதத்ம் ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதால் ஐன்ஸ்டினின் உள் மனதின் உண்மையான  கருத்தை உறுதியாக தொடர்பு படுத்துகிறது.இக்கடிதத்தின் கருத்துகள் வாழ்வின் நோக்கம் பற்றிய  பல அடிப்படை கேள்விகளின் பதிலை நோக்கிய நெடுநாள் தேடலை எடுத்து இயம்புகிறது.
வாழ்வின் நோக்கம் பற்றிய உண்மைத்தேடல் உடையவர்களுக்கு இக்கடிதம் ஒரு சிறப்பு அறிமுக விளக்கமே. 
இக்கடிதம் ஐன்ஸ்டின் அபோது பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கடித குறிப்பேட்டில் ஜன்வரி 3,1954ல் பிரபல தத்துவவியலாளர் எரிக் குட்கிண்ட்[Eric B. Gutkind] அவர்கள்க்கு ஜெர்மன் மொழியின் எழுதப்பட்டது. 
இக்கடிதம் திரு குட்கிண்ட்டின் புத்தகமான  .Choose Life: The Biblical Call to Revolt”மீதான விமர்சனம் எனலாம்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலத்தில் [1954ல் ஜோம் ஸ்டாம்பர்க் ஆல்]மொழியாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்கிறது.
 
Key Passages:
 
கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகம் பற்றி பரபரப்பாக பல விட‌யங்கள் அறிய‌ முடிந்தது. உங்கள் புத்தகத்தின் பிரதியை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் படித்த‌ உடனே எனக்கு தோன்றியது  நம்மிடையே உள்ள ஒற்றுமைகள்தான். சான்றுகள் மீதான எதார்த்த அணுகுமுறை கொண்டு தனிப்பட்ட ,மனித சமூகத்தின் வாழ்வை ஆய்வதுதான் அந்த ஒற்றுமை எனலாம்.

கடவுள் என்பது மனித பலகீனத்தின் உருவாக்கமாகவும்,வெளிபாடாகவும் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.பைபிள்[மத புத்தகம்] என்பது மதிப்புக்குறிய‌ ஆனால்  பழைய புராண ,குழந்தைகள் கேட்கும்அம்புலிமாமா கதைகளின் தொகுப்பு மட்டுமே.

எவ்வளவு நுட்பமான ,தர்க்கரீதியான தத்துவ விளக்கமும் இக்கருத்தை மாற்ற முடியாது.இம்மாதிரி நுட்பமான தத்துவ விளக்கங்கள் விளக்குபவரின் இயல்புக்கேற்ப ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன தவிர அந்த புத்தக்த்தின் எழுதப்பட்டுள்ளவைக்கு தொடர்பற்றவை.

 

[அதாவது மத புத்தகத்தில் அறிவியல்,உருவகமாகப் பார்க்க வேண்டும், சூழலுக்கு பொருத்தி பார்க்க வேண்டும்,அந்த கருத்து  அப்போது மட்டுமே, …இந்த மாதிரி..சார்வாகன்]

.என்னைப் பொறுத்தவரை யூதமதமும் பிற மதங்கள் போல பழைய அம்புலிமாமா கதைகள்,மூட நம்பிக்கைகள் அனைத்தையும் பழைய கள்ளை புதிய புட்டியில் ஊத்தி கொடுப்பது போல்தான்… .
 
யூதர்களின் ஒருவன் என மகிழ்சியுடன் நான் அறிவித்துக் கொண்டாலும், அவர்களோடு ஒத்த சிந்த்னை கொண்டு இருந்தாலும், பிற [இன,மத] மக்களை விட யூதர்களிடம் வித்தியாசமாக எந்த மேம்பட்ட குணமோ தகுதியோ  இல்லை எனவே கூறுகிறேன்.

என் அனுபவத்தில் இருந்து இப்போதைய சூழலில் தங்களை மோசமான நிலைக்கு ஆளாத‌ அளவுக்கு போதிய பாதுகாப்பு சக்தியை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தவிர [கடவுளால்]தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 
 நீங்கள் யூத இன மேட்டிமை என பெருமை பாரட்டுவதும். அதனை வெளியில்  மனிதன்,உள்ளே யூதன் என இரு எல்லைகளிலும் நின்று பாதுகாப்பதும் என்னை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

ஒரு மனிதனாக செய்த வினைகளின் பலனுக்கு விலக்கு கோருவதும் ,இல்லையெனில் ஏற்போம் என்பதும்,ஒரு யூதனாக ஓரிறைக் கொள்கையின் உயர்வு என தூக்கிப் பிடிப்பதுமே ஆகும். 

[அதாவது யூதர்கள் தாங்கள் 2000 வருடம் துன்புற்றோம் என்பதும்,கடவுள் இந்த தேசத்தை எங்கள்க்கு கொடுத்தார் என்ற வாதங்கள்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பை, துன்புறுத்துவதை நியாயப் படுத்தாது என்கிறார். அவர் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதை எதிர்த்தார்,பாலஸ்தீனர்களோடு யூதர்கள் ஒரே நாடாக ஒன்றுபட்டு வாழவே விரும்பினார்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தது என்பதால் விளக்கம் அவசியம் ஆகிறது]

குறிப்பிட்ட காலத்திற்கான காரண காரியம் முழுமையானது அல்ல,இதனை தத்துவமேதை ஸ்பினோஜா மிக அருமையாக் முதன்முதலில் விளக்கினார்

[அதாவது மனித சமூக வரலாற்றை ஆதியில் இருந்து பார்த்தால் மட்டுமே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் அடைந்ததும்,கொள்கை கோட்பாடுகள் வரையறுத்த வரலாறும் தெரியவரும்.பாருச் ஸ்பினோசா[Baruch Spinoza and later Benedict de Spinoza (24 November 1632 – 21 February 1677) ] எனப்படும் யூத_டச்சு தத்துவமேதையின் பைபிள்,ஓரிறைக் கொள்கையின் மீதான விமர்சனங்களே 18 ஆம் நூற்றாண்டு பைபிள் விமர்சனம் ஆய்வுகளுக்கு அடித்தளம் இட்டது. ‍]

 உருவ,முன்னோர் ,இயற்கை  வழிபாடு போன்றவை உள்ளடங்கிய மதங்கள் ஓரிறைக் கொள்கையால் முழுதும் இல்லாமல்  போய் விடவில்லை.இச்சூழலில் அம்மதத்தவரிடம் ஒழுக்க கோட்பாடுகள் இல்லை அல்லது தரம் அற்றவை என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அப்படி அல்ல!!!
.

நாம் இருவரும் சில அறிவுசார் கருத்துகளில் மாறுபட்டாலும் பல அடிப்படை விடயங்களில் ஒன்று படுகிறோம்[எ.கா மனித நடத்தை மதிப்பீடுகள்,] என்றே எண்ணுகிறேன். நமது அறிவுசார் முட்டு கொடுத்தல்களும்,பகுப்பாய்வுகளும் [மனோ தத்துவ மேதை ஃப்ரய்டின் மொழியில்]மட்டுமே வித்தியாசப்படுகின்றன்.ஆகவே சான்றுகள் உள்ள‌ உறுதிப் படுத்தப்பட்ட விடயங்களை நாம் விவாதித்தால் மட்டுமே நம் ஒருவருக்கொருவர் மீதான சரியான புரிதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.
நட்புடன் கூடிய அன்பின் வாழ்த்துக்களுடன்
ஐன்ஸ்டின்
 

***********

முழுமையான கடிதம் எப்படி இருக்கும் என்பதை மாதிரியாக இந்த பகுதி விளக்கி இருக்கிறது. மதபுத்த்கம் குறிப்பாக யூத கிறித்தவ மத புத்தக கதைகளும் அதன்  மீதான அரசியலே இப்போது வரை தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பதைப் புரிந்தால் இக்கடிதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரியும். ஒருவேளை ஐன்ஸ்டின் யூத மேட்டிமை கொள்கை கொண்டு இருந்தால் இஸ்ரேல் அரசியலில் முக்கிய பதவி கூட கிடைத்து இருக்கலாம்.சிந்தனையாளர்கள் மத இன சார் கொள்கை உடையவர்களாக இருக்க கூடாது என்பதன் எ.கா ஐன்ஸ்டின்தான்!! 

யூத மத இனவாதிகள் கடவுள் இஸ்ரேல் என்னும் நாட்டை தங்களுக்கு எகிப்தில் இருந்து வர வைத்து ,அங்கு ஏற்கெனவே வாழ்ந்தவர்களை வெற்றி கொள்ள வைத்து அளித்ததாக இன்னும் [நம்பி?!!!!] பிரச்சாரம் செய்கிறார்.

இதில் எதிர் கோஷ்டி பாலஸ்தீனர்கள் தரப்பும் இன்னும் மோசமான மதவாதிகளாக முத்திரை குத்தப்பட்டது அவர்கள் பக்க நியாயத்தை எடுபடாமல் செய்து விட்டது.சமீபத்தில் எந்த நியாயமான தீர்வும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இது போன்ற கட்டுக்  கதைகளை ஒழிக்காதவரை அடக்குமுறை ஆக்கிரமிப்பும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும். ஐன்ஸ்டின் இதனை உணர்ந்தே பைபிள் கட்டுக் கதை, எந்த திற்மையான மதப் பிரச்சாரகரின் தத்துவ விளக்கமும் ஏற்புடையது அல்ல என அருமையாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால் ஐன்ஸ்டின் ஆத்திகர் என்றும்,அவரின் கண்டுபிடிப்பும் எங்கள் புத்தகத்தில் சொல்லி இருக்கிறது என மத விளம்பரம் செய்யும் கோமாளிகளும் எதிர்காலத்தில் வருவார்கள் என அறிந்து இருப்பாரா??? ஹா ஹா ஹா!!

நன்றி!!

முதல் பதிவு: சார்வாகன்

பூமிக்கு இரண்டு நிலவுகளா?

9 அக்

நாமிருக்கும்
பூமிக்கு ஒரு நிலவு என்றுதான்
நாம் அறிந்தது !
கவிஞர் புகழ்ந்து பாடியது
கலிலியோ
கூர்ந்து தொலை நோக்கியில்
ஆராய்ந்து வந்தது !
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்
கருத்தியல் மாறி
இரு நிலவுகள் இருந்ததாய்க்
கருத்து மாறுபடும் !
சிறிய நிலவு மோதிப்
பெருநிலவில் ஒட்டிக் கொண்டது !
புண்முகம் மறைவாகிப்
பொன் முகம் ஒளி வீசும் !
போதிய
ஆதாரம் இல்லை அதற்கு !
புவிக் கோளுக்கு
இரு நிலவுகள் என்பது
நவயுகக் கணினியில் விளைந்த
பூத மோதல்
போலி மாடல் !
புனைகதை இல்லை !
நாசா ஏற்றுக் கொள்ளும்
வாசகக் கருத்து !

“நாங்கள் தயாரித்த புதிய இரு நிலவுப் போலிக் கணினி மாடல் (Simulated Computer Model) பூத மோதலில் நிலவு உருவான பழைய மாடலோடு செம்மையாய் இணைந்து செயல்படுகிறது.  அதனால் ஏராளமான மோதல் சிதறல்கள் பெரு நிலவோடு சேர்ந்து பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.  மேலும் அம்மாதிரி ஏற்பாட்டின் இயக்கச் சீர் நிலைப்புக்கும் (Dynamical Stability of a System), சேய் நிலவு குளிர்நிலை அடைந்ததற்கும், நிலவுப் பாறைகளின் வயதுக் கணிப்புக்கும் ஒத்து வருகிறது.”

எரிக் ஆஸ்ஃபாக் (Professor Eric Ashphaug, Planetary Science, University of California)

“அண்டவெளி யுகத்தின் புலர்ச்சிக் காலத்திலிருந்தே ஏன் நிலவின் முன்புறக் கோள்முகம், பின் புறத்தை விட வேறாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்தது.  இரு நிலவுகள் மோதிச் சேர்ந்ததால் நேரிடாது, மோதல் அலை அதிர்வுகளால் அவ்விதம் இரு முகப் பகுதிகள் வெவ்வேறாய் மாறி விட்டன”

பிரான்சிஸ் நிம்மோ (Professor Earth & Planetary Science, University of California)

தோற்றக் காலத்தில் பூமிக்கு இரு நிலவுகள் இருந்திருக்கலாம்

4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பரிதி மண்டலம் தோன்றிய பிறகு பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்திருக்கக் கூடும் என்று இப்போது புதிதாக அண்டக் கோள் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  ஒரு நிலவு சிறிய நிலவை விட மூன்றரை மடங்கு அகலத்தில் பெரிதாக இருந்துள்ளது.  குட்டி நிலவு பெரு நிலவைச் சுற்றிக் கொண்டு ஒரே வட்டப் பாதையில் இரண்டும் புவியையும் வலம் வந்திருப்பதாக கருதப்படுகிறது.  நாளடைவில் குட்டி நிலவு பெரு நிலவோடு மோதியதால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று ஒட்டிக் கொண்டு ஒற்றைப் பெரிய நிலவாய் உருவாகி விட்டது.  இரண்டு நிலவுகளின் மோதலே பெரு நிலவின் இருவித முக மாறுபாட்டுக்குக் காரணம் என்று அறியப் படுகிறது.  நாம் காணும் நிலவின் முகப்பாடுக்கும், நாம் காண முடியாத மறைவு முகப்பாடுக்கும் வேறுபாடுகள் தெரிகின்றன.  இரண்டு நிலவுகளும் புவியைச் சுற்றி வரும் போது இரு நிலவுக்கும் இடையே ‘மெது நகர்ச்சி மோதல்’ (Slow-Motion Collision) நேர்ந்து தற்போதையப் பெரு நிலவு உருவாகி யுள்ளது.  குட்டி நிலவு பெரு நிலவுக்கு 30 இல் ஒரு பாக நிறை.  குட்டி நிலவின் அகலம் 600 மைல்.  பெரு நிலவின் தற்போதைய விட்டம் : 2160 மைல்.

புவிக்கு இரு நிலவுகள் இருந்திருக்கலாம் என்னும் புதிய கருத்தை முதல்முதல் வெளியிட்டவர் எரிக் ஆஸ்ஃபாக் & மார்டின் ஜுட்ஸி (Eric Asphaug & Martin Jutzi) என்னும் இரு பேராசியர்கள்.  எரிக் ஆஸ்ஃபாக் கலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் விண்கோள் விஞ்ஞானி (Planetary Scientist). மார்டின் ஜுட்ஸி பெர்ன் பல்கலைக் கழகத்தைச் (University of Berne) சேர்ந்தவர்.  இருவரும் புவியின் இரட்டை நிலவுக்களைப் பற்றி முதன்முதல் ஆகஸ்டு 3, 2011 தேதி ‘இயற்கை’ விஞ்ஞான இதழில் (Nature Journal) அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் பூமிக்குத் தெரியும் நிலவின் ஒருபுற முகத்தில் மித ஆழ்குழிகள் தட்டையாகவும், மறைந்துள்ள மறுபக்கத்தில் நீண்ட ஆழ்குழிகள் நிரம்பவும் கொண்ட பெரும் மேடு பள்ளங்களாகவும் ஏன் உள்ளன என்பதற்குக் காரணம் அறிய முடியாமல் இருந்தனர்.  நிலவின் மறைந்துள்ள முகப் பகுதியில் 3000 மீடர் (10,000 அடி) உயரத்துக்கு அதிகமான மலைப் பீடங்கள் பல இருப்பதாக அறியப்படுகின்றன.  மலை மடிப்புகள் முன் பகுதியை விட மறைவுப் பகுதியில் 50 கி.மீ (30 மைல்) தடிமனாக உள்ளன.  பெரு நிலவு குட்டி நிலவைப் போல் மூன்றரை மடங்கு அகலமும், 25 மடங்கு ஈர்ப்பு விசையும் கொண்டது.

எரிக் ஆஸ்·பாக் இரு நிலவுகளின் இந்த மோதலை “பெரும் மோதல்” (Big Impact) என்றும் ‘மித வேக மோதல்’ (Low-Velocity Collision) என்றும் குறிப்பிடுகிறார்.  அந்த மோதலால் சிதறிய தட்டாகிப் பெரு நிலவு ஒருபுறத்தில் சப்பையாகப் போனது (Caking the Big Moon) என்றும் கூறுகிறார்.  இந்த இரட்டை நிலவுகள் தோற்ற சமயத்தில் 100 மில்லியன் ஆண்டுகள் கூடி இருந்தன வென்றும், மோதும் போது குட்டி நிலவின் வேகம் மணிக்கு 5000 மைல் இருந்திருக்க வேண்டும் என்றும் கணினி மாடல் படைத்துக் கணக்கிட்டிருக்கிறார்.

மோதிய பிறகு குட்டி நிலவின் சிதறிய பாறைகள் பெரு நிலவில் படிந்து கொள்ள பல மணி நேரங்கள் எடுத்திருக்கும் என்று பேராசிரியர் ஆஸ்·பாக் விளக்குகிறார்.  இந்த அதிசய மோதல் பூமிக்கு 80,000 மைல் தூரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

வானியல் கோட்பாடின்படி மோதல் எனப்படுவது நிலவின் ஒரு புறத்தில்தான் நிகழ்ந்துள்ளது.  அப்போது ‘மோதல் வெப்ப சக்தியால்’ பாறைகள் உருகிப் போகாதது வரை நிலவின் கூட்டுச் சேர்க்கையில் ‘செஞ்சீர்மை இழப்பு’ (Asymmetry) நேர்கிறது.  பெரு நிலவின் செஞ்சீர்மை இழப்புக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஒன்றும் உறுதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.  நாசா விஞ்ஞான இணை ஆணையாளர் அலன் ஸ்டெர்ன் “இரு நிலவு மோதல் கோட்பாடு உண்மை என்று நிரூபிக்க முடியாத ஒரு சிறந்த புதிய கருந்து என்று கூறியிருக்கிறார்.  நாசா எரிக் ஆஸ்·பாக் & மார்டின் ஜுட்ஸி கோட்பாடை ஏற்றுக் கொண்டுள்ளது.

செவ்வாய் அளவு சிறிய கோள் பூமியோடு மோதிய போது

பூமியின் பிள்ளைப் பருவத்தில் செவ்வாய் அளவு சிறிய கோள் ஒன்று மோதிய சமயத்தில் அந்தப் பெரும் மோதலில் ஒரு நிலவன்று இரு நிலவுகள் தோன்றின என்றுதான் புதிய விஞ்ஞானக் கோட்பாடு கூறுகிறது.  உருவான குட்டி நிலவு பெரு நிலவைச் சுற்றிக் கொண்டு இரண்டும் பூமியை ஒரே வட்டப் பாதையில் வலம் வந்துள்ளன.  பிறகு குட்டி நிலவு பெரு நிலவில் விழுந்து ஒரு முகத்தில் மலை அடுக்குத் தொடர் ஒன்றை ஆயிரக்கணக்கான கி.மீ. உயரம்வரை அப்பியது என்பதே புதிய கோட்பாடு.  அதுவே நிலவின் ‘செம்மை நிலைப்பாடு வடிவத்தைப்’ (Symmetric Shape) பாதித்தது என்றும் அறியப் படுகிறது.

“நாங்கள் தயாரித்த புதிய இரு நிலவுப் போலிக் கணினி மாடல் (Simulated Computer Model) பூத மோதலில் நிலவு உருவான பழைய மாடலோடு செம்மையாய் இணைந்து செயல்படுகிறது.  அதனால் ஏராளமான மோதல் சிதறல்கள் பெரு நிலவோடு சேர்ந்து பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.  மேலும் அம்மாதிரி ஏற்பாட்டின் இயக்கச் சீர் நிலைப்புக்கும் (Dynamical Stability of a System), சேய் நிலவு குளிர்நிலை அடைந்ததற்கும், நிலவுப் பாறைகளின் வயதுக் கணிப்புக்கும் ஒத்து வருகிறது.” என்று விஞ்ஞானி எரிக் ஆஸ்·பாக் கூறுகிறார்.

புதிய ஆய்வுக் கோட்பாடில் எரிக் ஆஸ்·பாக்கும் அவரது கூட்டாளி மார்டின் ஜுட்ஸியும் சேர்ந்து அமைத்த போலிக் கணினி மாடல்களில் (Computer Simulations) குட்டி நிலவுக்கும், பெரு நிலவுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் விளைவுகளை ஆராய முயன்றனர்.  அந்த முறையில் நிலவின் பரிணாம வளர்ச்சியும் (Evolution of the Moon), உண்டான நிலவுத் தாதுக் கனிமங்களின் அடுக்குப் படிவுகள் பற்றியும் (Distribution of Lunar Materials) ஆய்வு செய்ய முடிகிறது.

பிள்ளைப் பிராயத்தில் இரு நிலவுகள் மோதலின் விளைவுகள்

இரு நிலவுகளின் இந்த ஊகிப்பு மோதல் மெது வேகத்தில்தான் (Low-Velocity Collision) நேர்ந்திருக்க முடியும் என்று எரிக் ஆஸ்·பாக்கும், மார்டின் ஜுட்ஸியும் கூறுகிறார்.  இவ்வித மோதல் நிலவில் பெருங்குழிகளை (Craters) உண்டாக்க முடியாது.  மோதிய தளத்தில் கனிமங்கள் வெப்பம் மிகையாகிப் உருகிப் போகா.  அவ்வாறின்றி மோதல் பாறைகள் விழுந்த கோளப் பகுதியில் அடுக்கடுக்காய்ப் படிந்து மேடுகளாய் அப்பிக் கொள்கின்றன.

அத்துடன் நிலவில் அப்பிய கோளப் பகுதி உயர்ந்த மேடு பள்ளங்களுடன் புவிக்கு எதிர்ப்புறமாய் திருப்பம் அடைந்தது.  நேர்புறத்தில் தெரியும் பொன் முகத்தை விட நிலவின் பின்புறப் புண் முகம் மாபெரும் மலைப் பிரதேசமாய் மாறிக் கண்ணுக்குப் புலப் படாமல் மறைந்து கொண்டது.

“அண்டவெளி யுகத்தின் புலர்ச்சிக் காலத்திலிருந்து ஏன் நிலவின் முன்புறக் கோள்முகம், பின் புறத்தை விட வேறுபாடாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வ்ந்துள்ளது,” என்று பிரான்சிஸ் நிம்மோ (Professor Earth & Planetary Science, University of California) கூறுகிறார்.  இயான் காரிக்-பெத்தல் & பிரான்சிஸ் நிம்மோ இருவரும் எரிக் ஆஸ்·பாக் & மார்டின் ஜுட்ஸி ஆகியோர் காலத்தில் தனியாக ஆய்வுகள் செய்து நிலவின் வேறு பட்ட கோளப் பகுதிகளைப் பற்றிப் புதுக் கருத்துக்களை வெளியிட்டவர்.  அவர் வெளியிட்ட அறிக்கைப்படி  “இரு நிலவுகள் மோதிச் சேர்ந்ததால் நேரிடாது, மோதல் அலை அதிர்வுகளால் அவ்விதம் இரு முகப் பகுதிகள் வெவ்வேறாய் மாறி விட்டன” என்று நிம்மா தன் தனிப்பட்ட அறிக்கையில் கூறுகிறார்.

எரிக் ஆஸ்ஃபாக்கின் அரிய வெளியீடு இரு புதிர்க் கோட்பாடுகளைச் சீராய் இணைக்கிறது.

1.  செவ்வாய்க் கோள் போன்ற சிறிய முரண் கோள் பூமியைத் தாக்கிப் பூத மோதலில் தற்போதைய நிலவு உருவானது.

2.  அந்த மோதலில் தெறித்த ஒரு குட்டி நிலவு பெரு நிலவோடு மோதி ஒரு முகம் தணிந்த தழும்புகள் கொண்டு பொன் முகமாகவும் மறு புறம் மலை மேடுகள் நிரம்பிய புண் முகமாகவும் மாறி விட்டன.

உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய செவ்வாய் அளவு சிறிய கோள் ஒன்று முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப் படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக் கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது ! அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி•போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்•பாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

************************
தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)

3. Astronomy Facts File Dictionary (1986)

4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)

6. Cosmos By Carl Sagan (1980)

7. Dictionary of Science – Webster’s New world (1998)

8. Physics for Poets By : Robert March (1983)

9. Atlas of the Skies (2005)

10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

12. The Associated Press : Earth Once Had Two Moons, Astronomers Theorize (August 3, 2011)

13 Earth May Have Had Two Moons By : Steuart Gary ABC Science Online (Aug 4, 2011)

14. Space Daily – Astrobiology Magazine – The Odds for Life on a Moonless Earth By Nola TaylorRedd (August 5, 2011)

15. Daily Galaxy : Moon’s Mountainous Far Side – Created By a Collision with a Smaller Companion Moon (August 5, 2011)

முதல் பதிவு: நெஞ்சின் அலைகள்

மீண்டும் வேற்றுக்கிரகவாசியா?

21 ஏப்

ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இண்டர்நெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

2 அடி உயரமே உள்ள அந்த உடல் பாதி எரிந்து, அழுகிய நிலையில் காணப்படுவதாகவும், அதன் வாய் திறந்தபடி உள்ளதாகவும், அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் உள்ளதாகவும் இருவரும் கூறியதாக அந்த வீடியோ தெரிவிக்கிறது.

இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக் கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

*****************************************

இதுபோல் அவ்வப்போது பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகவும், வேற்றுக்கிரகவாசிகளைப் பார்த்ததாகவும் அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் இதுவரை அவ்வாறு வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் அறிவியல் ரீதியாக கிடைக்கவில்லை. என்றாலும், பரந்து விரிந்த இப்பேரண்டத்தில் ஏதாவது ஒரு கோளில் ஏதேனும் ஒரு உயிரினம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஒதுக்கிடவிட முடியாது.

மின்சாரம் தயாரிக்கும் செயற்கை இலை

30 மார்ச்

அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு, உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த ஆக்கமானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்கதொரு சாதனை ஆகும். இதன் உருவம் ஆனது உண்மையான இலை போன்று இருக்காது, ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை துள்ளியமாக இது செய்யவல்லது. இந்த செயற்கை இலை தண்ணீரின் மீது மிதக்க விடப்படும் எனவும், இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன், ஆக்சிஜனை இது பிரித்து அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது.

இயற்கை அன்னையின் செயல்பாடுகள் எப்போதுமே மனிதனுக்கு பல ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. அந்த வகையில் மெய் இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர். இதன்படி இந்த இலைகளை நீர்நிலைகளில் மிதக்க விடப்படும். அந்த இலைகளானது நீரில் இருக்கும் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் சூரிய ஒளியினைக் கொண்டுப் பிரித்து அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் fuel battery-களில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பேட்ரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் ஊடாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும்.

ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கிவிட்ட போதிலும், அவரது  ஆக்கம் வெகுவாக பயன்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த பேட்ரியானது நிலையற்ற தன்மை வாய்ந்ததாக இருந்ததாலும் ( ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் ) அவற்றை பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.

ஆனால் தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது, அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான பேட்ரி என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.

தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இலை ஒன்று தொடர்ந்து 45 மணிநேரம் இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதாகவும், இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் தானியேல் நோசேரா.

 

நன்றி: தமிழ்ச்சரம்

மரபணு மாற்று முறையில் மனித உறுப்புகள்

28 மார்ச்

மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் சீன மருத்துவ விஞ்ஞானிகள்.

இப்போது தேவையான உடல் உறுப்புகளை மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று, பாதிக்கப்பட்ட மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவருகிறார்கள்.

மனித உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதால், தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

*****************************************************

அறிவியல், மருத்துவ ஆய்வுகள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயன்பாடுள்ளதாக, பயன்தரத் தக்கதாக இருக்கிறது என்பதைத் தான் இது போன்ற ஆய்வுகளில் முதன்மைத் தனமுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது போன்ற முதன்மைத் தனமுள்ள ஆய்வுகளெல்லாம் சந்தைப் படுத்தப்பட்டு மக்களை சுரண்டும் நோக்கிலேயே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது வலிதரக் கூடிய யதார்த்தம். இந்த நிலை மாறவேண்டும், மாற்ற மக்கள் முன்வரவேண்டும்.

நமது பால்வீதியில் 54 கோள்களில் உயிர்கள் இருக்கலாம்

27 பிப்

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத் திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது.

மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ பெரிசு.

இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெ ரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும்.

கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்.

 

நன்றி: தமிழ் சி.என்.என்

புதிய உயிரி கண்டுபிடிப்பு

4 டிசம்பர்

NASA discovery changes scientific definition of Life!

உயிரின் அடிப்படை ரசாயனமான பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற தனிமம் கொண்ட புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு உயிர் உருவாக 6 வேதியல் பொருட்கள் கட்டாயம் என்பது தான் இதுவரை உயிரிலார்கள் கூறி வந்த ‘விதி’. அந்த 6 பொருட்கள்: கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர்.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் இந்த ரசாயனங்களால் உருவானவை தான்.

இதில் டிஎன்ஏ (deoxyribo nucleic acid-DNA ) எனப்படும் நமது ஜீன்கள் உருவாக பாஸ்பரஸ் மிக மிக அவசியம். இதனால் உயிரின் அடிப்படை வேதிப் பொருள்களில் மிக முக்கியமானதாக பாஸ்பரஸ் கருதப்படுகிறது.

இதனால் பாஸ்பரஸ் இல்லாமல் உயிர் என்பதே இல்லை என்பது தான் இதுவரை கூறப்பட்டு வந்த இயற்கை விதி.

ஆனால், நேற்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா இந்த அடிப்படை விதியையே தகர்க்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது பூமியில் ஒரு புதிய ரக பாக்டீரியாவை நாஸா கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவின டிஎன்ஏவில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டிஎன்ஏவி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் என்பது விஷத்தன்மை கொண்ட, உயிர்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒரு தனிமம். ஆனால், அதுவே ஒரு உயிரை உருவாக்கியும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஏரியில் இந்த பாக்டீரியாவை கணடுபிடித்துள்ளார் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுப் பிரிவு விஞ்ஞானியான பெலிஸா வோல்பே சிமோன்.

இவர் சில ஆண்டுகளுக்கு முனபே, உயிர் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமி உருவானபோது நிலவிய சூழல், இருந்த விஷ வாயுக்கள் சூழ்ந்த வளிமண்டலம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, பாஸ்பரசின் ரசாயன குணங்களைக் கொண்ட ஆர்சனிக் போன்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கூட உயிர்களை உருவாக்கியிருக்கலாம். அந்த வகை உயிர்கள் இன்னும் கூட எங்காவது இருக்கலாம் கூறியிருந்தார்.

அப்போது இவரது இந்தக் கருத்தை ஆச்சரியத்துடன் பார்த்த நாஸா, அது குறித்து மேலும் விரிவான ஆய்வு நடத்த இவருக்கு நிதியுதவி வழங்கியது.

இதையடுத்து சிமோனின் விஞ்ஞானிகள் டீம் இந்த மாற்றுவகை உயிர் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினர்.

அவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த ஆர்சனிக் ஆராய்ச்சியாளராகக் கருதப்படும் ரோனால்ட் ஓரேம்லாண்ட் பெரும் உதவிகள் செய்தார். இவர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த ஆராச்சியாளர் ஆவார். உலகின் ஆர்சனிக் நிறைந்த பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சிமோனின் குழுவினரை வழிநடத்தினார்.

அவர் சொன்ன இடங்களில் ஒன்று தான் கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஆர்சனிக் நிறைந்த விஷ ஏரி. அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு GFAJ-1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ‘உயிர்’ என்பது இது தான் என்ற அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

******************************************************

கடவுளின் தனிப்பட்ட தகுதி என கருதப்படும் படைப்பில் அடுத்தடுத்து அறிவியலாளர்கள் புதிய பரிமாண‌ங்களை எட்டி வருகின்றனர். செயற்கை உயிர் தொடங்கி, புதுவகை உயிர்வரை ஒவ்வொன்றிலும் அடுத்தடுத்த படிகளைக் கண்டு முன்னேறி வருகின்றனர். மனிதர்களின் மூடநம்பிக்கைகளை சரியான அறிவியல் பார்வையே உடைக்கவல்லது என்பதால் இது குறித்த அறிதல்கள் அனைவருக்கும் எழ வேண்டும்.

செயற்கை உயிர் பற்றிய ஒரு கட்டுரையையும் அதனைச்சுற்றி நடந்த விவாதங்களையும் காண ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் கட்டுரையை படிக்கலாம்.

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?