கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மை குறித்து அறிய தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் வரலாற்றுப் பின்னணி கொண்டது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகின்றன.பெரும்பாலும் இலக்கியங்களில் கூறப்படும் விவரங்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அவற்றை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இங்கு ஆதி தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு ஆதாரங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத் தொல்லியல் கழகம் சார்பில் நாகர்கோவிலில் அண்மையில் நடத்தப்பட்ட 20-ம் ஆண்டு கருத்தரங்கில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மையை விளக்கும் பல்வேறு கருத்துக்களை ஆய்வாளர்கள் வெளியிட்டிருந்தனர். மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு கல்வெட்டுகளும் இதன் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான முதல் தொல்லியல்துறை தலைவர். அவரால் கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்து புடைப்புச் சிற்ப நடுகல் கி.பி. 792-ம் ஆண்டைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது.சமணச் சிற்பங்கள் நிறைந்த சிதறால் மலைக்கோயில் ஆய் மன்னன் வரகுணன் காலத்தைச் சேர்ந்தது (கி.பி.906) எனப்படுகிறது.16-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சமணம் இங்கு செல்வாக்குடன் இருந்ததை நாகராஜா கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை, ஆய் அரசிலும், பாண்டிய அரசிலும் இருந்த இந்த நிலப்பகுதி சோழர்களின் அரசு விரிவாக்கத்தால் சோழ பாண்டியர் ஆட்சி நிலமாயிற்று.ராஜராஜனின் திருநந்திக்கரை குகை கல்வெட்டு, பெரிய குளங்கரை பாறைக் கல்வெட்டு, நாகர்கோவில் சோழபுரம், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், குகநாதேஸ்வரர் ஆலயங்கள் போன்றவற்றில் கிடைக்கும், ராஜேந்திர சோழன் முதலான பிறபெயர்களில் இடம்பெறும் சோழ வளநாட்டு.. மும்முடிசோழபுரம்.. போன்றவை சோழர்கால ஆட்சியின் நூற்றாண்டு கால வீச்சைப் புலப்படுத்துகின்றன.முதலாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திவரிகள் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பல்வேறு விஷயங்களை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால் தொல்லியல் ஆய்வுகளில் கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் கன்னி நிலமாகவே இருக்கிறது. அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கருதுகோள்களும், கற்பனைகளும் ஆய்வு முடிவுகளாக பவனிவரும் நிலையுள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.எனவே அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளின் அடிப்படையில் முடிவுகளை கண்டறிய உரிய தொல்லியல் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழகத் தொல்லியல் கழகத்தின் உள்ளூர் செயலர் செந்தீ நடராசன்.முட்டம், சுக்குப்பாறை தேரிவிளை போன்ற இடங்களில் நுண் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. குழித்துறை கோணத்தில் செல்வராஜ் என்பவரால் கண்டறியப்பட்ட தாழிகள் குறித்த ஆய்வுகள் தொடரப்படவில்லை.மேற்குத் தொடர்ச்சி மலை அடுக்கின் இடையே விரவிக்கிடக்கும் இம்மாவட்டத்தின் மலைக் குகைகளை முறையான ஆய்வுக்கு உள்படுத்தினால் பிராமி கல்வெட்டுகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
மேற்கடற்கரையில் கடியப்பட்டினத்தில் கடலின் நடுவே 3 கி.மீ. தொலைவில் உள்ள திட்டு ஆடு மேய்ச்சான் பாறை எனப்படுகிறது.அதற்கு தெற்கே கடலின் அடியில் கல் மண்டப அமைப்புகள் இருப்பதை கடல்மூழ்கிகள் உறுதி செய்துள்ளனர்.குமரி நிலப்பகுதிகள் பலமுறை கடல் கோளுக்கு (சுனாமி) ஆள்பட்டிருக்கிறது. கி.பி.1500 வரையிலும் கூட இத்தகைய ஆழிப்பேரலைகளால் நிலப்பகுதி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தில் கரையில் இருந்து சுமார் 20 கி.மீ. வரையுள்ள ஆழம் குறைந்த கடல் பகுதிகள் ஆய்வுக்குரியன என்றார் செந்தீ நடராசன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்ஆய்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச்செயலர் எஸ். பத்மநாபன்.இதனால் இம்மாவட்டத்தின் வரலாற்று பின்னணி மக்களுக்கு தெரியவரும். கடல் ஆய்வு குறித்து ஏற்கெனவே கூறப்பட்டு வருகிறது. அதை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையிலான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
****************************************************************
பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கடல்கோள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கிய சான்றுகளை மட்டுமே கொண்டு பார்த்தால் பெரும் நிலப்பரப்பு குமரிக் கடலுக்குள் சுருட்டப்பட்டுக் கிடப்பதாக தோன்றும். ஆனால், ஜெயகரன் போன்றோர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு மட்டுமே கடல்கோளால் அழிக்கப்பட்டது, அதை குமரிக்கண்டமாக உருவகப்படுத்துவது தவறு என்கிறார். ஜெயகரனின் ஐயங்களுக்கெல்லாம் பதிலளித்து குமரிமைந்தன் பெரும் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியது என்பதை நிறுவுகிறார். ஆனாலும் இவைகளுக்கான அறிவியல் ஆய்வுகள் மிகவும் குறைவே. இந்திய தொல்லியல், கடலாய்வுத்துறை இவைகளில் கவனம் கொண்டு ஆய்வு செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான பணியாகும்.