தொகுப்பு | நவம்பர், 2012

கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? விவாதம்

20 நவ்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

மீண்டும் பதிவர் குலாமுடன் விவாதம். இந்த முறை சற்று சீரிய கட்டுடன் இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கான அடித்தளம் குறித்து அறிய விரும்புவோர் அவருடைய கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல் எனும் பதிவின் பின்னூட்டங்களைப் பார்வையிடுங்கள்

இந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக இவ்விவாதத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் முதன்மையான சில கூறுகளைப் பற்றிய தெளிவுகள் தேவைப்படுகின்றன.

அறிவியல் என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல். மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல். அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள். இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.

மனிதனின் அறிதல் என்றால் என்ன?

மனிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான். தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது. பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல. அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.

கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?

மனிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான். எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில் ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்? மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ எனும் கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

இனி நண்பர் குலாமின் கட்டுரைக்குள் பயணிக்கலாம். அந்தக் கட்டுரையில் சாராம்சமாக அவர் கூறியிருப்பது என்ன? அறிவியல் தன்னளிவில் முழுமையடையாத ஒன்று. அறிவியல் இன்னும் விடையளிக்காத வினாக்கள் இருக்கின்றன. எனவே குறைபாடுடைய அந்த அறிவியலைக் கொண்டு கடவுளை அளக்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது, கூடாது. நண்பரின் கருத்து தவறானது என்பதை அவரின் வாதங்களினூடாவே பார்ப்போம்.

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும்/// நண்பர் குலாம் ஒரு ஆத்திகர் என்பதால் அவரளவில் அவர் கடவுளை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் ஒரு மனிதர் எனும் அடிப்படையில் இதுவரை ஏராளமான விசயங்களை தன் வாழ்வில் உறுதிப்படுத்தியிருப்பார். தயவு செய்து அப்படியான உறுதிப்படுத்தல்களில் அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்தியவற்றை குறைந்தது ஒரு பத்து விசயங்களையாவது அவர் பட்டியலிட வேண்டும் எனக் கோருகிறேன். முடியாது. ஒன்றைக்கூட அவரால் கூற முடியாது. ஆக அனைத்தையும் முழுமைப்படுத்திச் சொல்லாத அறிவியலை மட்டுமே துணைக்கழைத்துக் கொண்டுதான் தன் வாழ்வின் அத்தனை உறுதிப்படுத்தல்களையும் செய்திருக்கிறார். ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் அவருக்கு அறிவியலில் போதாமை வந்துவிடுகிறது. இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் வாழ்வின் மெய்யான விசயங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பேதம் இருக்கிறது.

அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஒரு குண்டூசி உடலில் குத்தினால் ஏன் வலிக்கிறது என்பது தொடங்கி இப்பேரண்டத்தின் கோள்களின் இயக்கம் வரை அனைத்தையும் கண்டறிந்து முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. எதை முழுமைப்படுத்தாமல் குறையுடன் விட்டு வைத்திருக்கிறது? இந்த இடத்தில் நாம் ஒரு புரிதலுக்கு வந்தாக வேண்டும். அறிவியல் குறைபாடுடையது என்று ஆத்திகர்கள் என்ன நோக்கில் கூறுகிறார்கள்? அதற்கு என்ன சான்றுகள் தருகிறார்கள்? என்பதை நுணுகிப் பார்க்க வேண்டும். அறிவியல் இன்னும் கடக்காத எல்லை இருக்கிறதா? என்றால், ஆம் இருக்கிறது. எடுத்துக் காட்டாக பெருவெடிப்புக் கொள்கைக்கு முன்னர் நடந்த மாற்றங்கள் என்ன? என்று கேட்டால் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதே பதில். ஆனால் ஆத்திகர்கள் அறிவியலின் இந்த தொடர்ந்து தேடும் தன்மையை சுட்டிக்காட்டி அறிவியல் குறைபாடுடையது என்று கூறுகிறார்கள். இதோ நண்பர் குலாம் இதற்கு பயன்படுத்தியிருக்கும் வாசகங்களை கவனித்துப் பாருங்கள். \\\ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும்.. .. ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு.. .. அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது/// கடவுளை அதை நம்பாதவர்களும் கூட அதன் இயல்புகளை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று கோரும் நண்பர் குலாம். அறிவியலுக்கு மட்டும் அதன் இயல்புகளை தூக்கிக் கடாசி விட்டது ஏன்? அறிவியல் என்பது ஒரு தேடல். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஒரு விசயத்தில் குறைபாடுடையது என ஒன்றை கூற வேண்டுமாயின் அந்த விசயத்தின் அதன் இயலாமை வெளிப்பட்டிருக்க வேண்டும். அறிவியல் எந்த விசயத்திலாவது இப்படி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அல்லது அறிவியலால் முடியாதவைகள் என்பதற்கு பட்டியல் ஏதும் குலாம் வைத்திருக்கிறாரா? அறிவியலின் இந்த எட்டப்படாத உயரம், தொடர்ந்து பயணப்படும் தன்மைகள் குறித்து குலாம் அறியாதவராக இருக்க முடியாது. என்றால் ஏன் அறிவியலை குறைபாடுடையது என காட்ட முயற்சிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுளை மெய்ப்பிக்க அதைத்தவிர வேறு வழி இல்லை. நண்பர் குலாமுக்கு மட்டுமல்ல எல்லா மதவாதிகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து நண்பர் குலாம் பொருத்தமான ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார். \\\எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்/// சரிதான். இதை யாரும் மறுக்கப் போவதில்லை. தெளிவாகச் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நண்பர் குலாம் இதை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதத்தை நான் இரண்டு விதங்களில் நேர்கொள்கிறேன்.

1. கடவுள் உறுதியானவர், அவர் நிலைத்திருந்து காரியமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதைத்தான் நாத்திகர்கள் எதிர்க்கிறார்கள். அது ஒரு கருத்து, ஆத்திகர்களின் நம்பிக்கை என்றால் யாரும் அதில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த விவாதத்தின் தலைப்பு கூட வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? என்றுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது ஒரு நம்பிக்கை என்றால் அதில் எந்த உரசலுக்கும் இடமில்லை. இப்போது குலாம் கூறுவதைப் பாருங்கள், அவர் எந்த விதத்திலிருந்து இதை அணுகுகிறார்? கடவுள் உறுதியாக நிலவுகிறது எனும் அடிப்படையிலிருந்தே மேற்கண்ட வாதத்தை அவர் வைக்கிறார். துல்லியமாகக் கூறினால், அது நம்பிக்கையா? மெய்யான இருப்பா? என்பது தான் இங்கு விவாதமாகியிருக்கிறதேயன்றி கடவுளல்ல. இதை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

2. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதம் ஒரு பாதி தான். “எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிரூபணம் தரவில்லையோ அது இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அது குறித்த தகவல்களோ, வாய்ப்புகளோ உறுதி செய்யப்படாதவரை அது உறுதியாக இருக்கிறது என கூறவியலாது என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்” என்பது தான் அந்த மறுபாதி. இதற்கு குலாம் என்ன பதில் கூறுவார்?

அடுத்து குலாம் எழுப்பியிருக்கும் ஒன்று ‘அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் கடவுள்’ என்பது. முதலில் ஒரு விசயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள் என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான் கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக் கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான். நண்பர் குலாம் கடவுள் மறுப்பு குறித்து தவறான புரிதலோடு இருக்கிறார். கடவுளின் தகுதிகளாக, வல்லமைகளாக ஆத்திகர்கள் கூறுகிறவைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் எனும் கருத்தை மட்டும் மறுப்பது தான் கடவுள் மறுப்பு என்பதாக அவரின் புரிதல் இருக்கிறது. அவ்வாறல்ல, கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் தகுதிகள், வல்லமைகள் என கடவுளின் மீது ஏற்றப்பட்டிருக்கும் அத்தனை புனிதங்களோடு சேர்த்துத்தான் கடவுளை மறுக்கிறோம். அறிவியலால் அளக்கப்படுவதைவிட கடவுள் உயர்வானவர் எனவே அறிவியலில் அகப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று கூற முடியாது என்பது அபத்தமான வாதம்.

அடுத்து நண்பர் குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை/// இப்படிக் கூறுவதற்கு நிரம்பவும் அசட்டுத் துணிச்சல் வேண்டும். கண்ணெதிரே காணப்படவில்லை என்பதால் மட்டுமல்ல, 1. அறிவியல் ரீதியாகவும் 2. வரலாற்றியல் ரீதியாகவும் 3. சமூகவியல் ரீதியாகவும் கடவுள் இல்லை என்பதற்கான காரணிகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

இனி, நண்பர் குலாமின் அமெரிக்கா லாம்கு எடுத்துக்காட்டை கொள்ளலாம். இதில் அமெரிக்கா பற்றிய விளக்கங்கள் புரிதலுக்காகவும், லாம்கு வாதமாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா குறித்த விளக்கத்தில் இருக்கும் தெளிவு,லாம்கு குறித்த விளக்கத்தில் இல்லை. அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் செலவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் கண்ணால் கண்டுவிட்டு வந்துவிடலாம். ஆனால் லாம்கு?

லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? அமெரிக்கா விசயத்தில் நாடு என்பதற்கு என்னென்ன வரையறைகள் பயன்படுத்தப்பட்டனவோ அதே வரையறைகளை இங்கும் பயன்படுத்தினால் எளிதாக முடிவு கிடைத்துவிடும். லாம்கு எனும் நாடு புவிப்பரப்பில் தற்போது எங்கும் இல்லை. லாம்கியர்கள் எனும் தேசிய இனத்தை உலகில் தற்போதுள்ள எவரும் கண்டதில்லை. வேறு எந்த சான்றுகளும் கிடைக்காத நிலையில் நாம் இரண்டு முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். 1. லாம்கு என்றொரு நாடு இல்லை. 2. முன்னெப்போதோ இருந்து பின்னர் அழிவுபட்டுப் போயிருக்கலாம். இப்போது இரண்டாவது முடிவை எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கியக் குறிப்புகளோ, மரபு சார்ந்த கதையாடல்களோ அது இருந்ததாக கருதப்படும் பகுதி மக்களிடையே உலவ வேண்டும். தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த இலக்கியக் குறிப்புகளையோ, மரபுக் கதையாடல்களையோ உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் லாம்கு எனும் கருத்தாக்கம் யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது? அதற்கு தனிப்பட்ட பலன்கள் ஏதும் அவருக்கு உண்டா? அது குறித்த பின்னணிகள் ஆராய்ந்து அதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். இப்படி ஏதுவுமே கிடைக்காத பட்சத்தில் லாம்கு என்ற நாடு இல்லை, இருந்ததில்லை என்று முடிவு செய்து விடலாம்.

இது தான் அறிவியல் முறை. அதவது ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதனதற்குறிய ஆதாரங்கள் வேண்டும். குலாம் இதை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? லாம்கு குறித்த எந்த தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதைக் கூறியவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் முறை என்கிறார். அதாவது லாம்கு குறித்த எந்தத் தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் லாம்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாலும் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி புனைவான ஒரு கருத்தைக் கூறிவிட்டு \\\இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம்/// என்று துணிந்து கூறியிருக்கிறாரே நண்பர் குலாம். எப்படி இது?

இந்த லாம்குவை அப்படியே கடவுளுக்கு ஒட்டுவோம். கடவுள் என்றொருவர் உண்டு, அவருக்கு இன்னின்ன வல்லமைகளை உண்டு, அவரால் தான் எல்லாம் நடந்தது என்று ஒருவர் கூறினால், லாம்குவைப் போல கடவுள் குறித்த தகவல்களைத் தேடுவோம். எந்தத் தகவலும் எப்படியான குறிப்புகளும் கிடைக்கவில்லை என்றால் என்ன நிலை எடுப்பது? நண்பர் குலாமின் முடிவுப்படி அந்த ஒருவர் கூறியதை ஏற்ககலாம். அறிவியலின் வழியில் கிடைத்த சான்றுகளின் படி மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதால் கடவுள் இல்லை என்று முடிவுக்கு வரலாம். இரண்டில் எது சரியான முடிவு என்றால் நண்பர் குலாமின் முடிவை புறந்தள்ளுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

இதில் இன்னொரு உத்தியும் இருக்கிறது. அமெரிக்கா எனும் நாடு இருக்கிறதா இல்லையா? லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா இல்லையா? என்று நண்பர் குலாம் கேள்வி எழுப்பவில்லை. அமெரிக்கா என்றொரு நாடு இல்லை என்றால், லாம்கு என்றொரு நாடு இல்லை என்றால் என்றுதான் கேள்வியை எழுப்புகிறார். அப்போது தான் அவர் விரும்பும் முடிவை வந்தடைய முடியும். அப்போதும் கூட லாம்கு வை கடவுளோடு இணைக்கும் விசயத்தில் அவர் இடறியிருப்பதை ஊன்றிக் கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். லாம்கு என்றொரு நாடு குறித்த தகவல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் கூறுவதை ஏற்று லாம்கு இல்லை என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் கடவுள் எதிரான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். இதைத்தான் நண்பர் குலாம் கூற விருப்புகிறார். ஆனால் முடிவுகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. ஒரு விசயத்தை தெளிவாக முன்வைத்து விடலாம். இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஆய்வதற்கும் அறிவதற்கும் இருக்கும் ஒரே அளவுகோல் அறிவியல் தான். அறிவியலை விலக்கி வைத்துவிட்டு எதையும் அறிந்துவிட முடியாது.

அடுத்து குலாம் கடவுள் பற்றி கூறப்படுவது வரட்டுத் தத்துவமல்ல என்கிறார். எப்படி? \\\கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள். இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும்/// எந்த நிரூபணமும் தராமல் தாங்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அடம் பிடிப்பதே ஆத்திகர்களின் வேலையாகி விட்டது. கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார், அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள். எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

\\\கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது/// இதுவும் குலாமின் கூற்று தான், கலப்படமில்லாத சுத்தமான பொய்யான கூற்று. அறிவியலின் தொடக்கத்துற்கு முன்னர் கடவுள் எனும் ஒன்று இருக்கிறது என மனிதனால் உணரப் பட்டிருந்ததா? என்று மனிதன் நெருப்பை கண்டறிந்தானோ அன்றே அறிவியல் யுகம் தொடங்கி விட்டது. ஆனால் மனிதனின் வாழ்வில் அதற்கும் வெகு காலத்திற்குப் பின்பே கடவுள் அறிமுகமாகிறார். இது மதவாதிகளுக்கு வழக்கம் தான் அவர்களின் உளக்கிடக்கைகளை பொது உண்மைகளைப் போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கூறிக் கொண்டே செல்வது. நண்பர் குலாம் அவரது கூற்றில் உண்மையுள்ளவராக இருந்தால் இதற்கு சான்றுகள் தரட்டும்.

இனி நண்பர் குலாமின் கேள்விகளின் பக்கம் முகம் திருப்பலாம். பொதுவாக மதவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம் என்ன? எனும் கேள்வியால் துளைக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை யாரும் பதில் கூறியதில்லை. அப்படியான பதில் கூறும் முயற்சிகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒது ஒரே விதமாக தோற்றமளிப்பதைக் காணலாம். அவை அனைத்தும் கேள்விகளின் விளக்கங்களாகவே இருக்கும். ஒருபோதும் அவை பதில்களின் தொகுப்பாக இருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் எதிர்க் கேள்விகள் கேட்பதே கடவுளுக்கான நிரூபணம். அந்த வகையில் தான் குலாமின் இந்தக் கேள்விகளும் அடங்கும். பழைய பாட்டையில் பயணிக்கும் பசலிக் கேள்விகள்.

1. பெருவெடிப்பு ஏன் நிகழ வேண்டும்? பெருவெடிப்பு உறுதியாக நிகழ்ந்தது என்று எந்த அறிவியலாளனும் கூறவில்லை. அது ஒரு அறிவியல் யூகம். அது எப்படி நிகந்திருக்கக் கூடும் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஏன் நிகழ வேண்டும். அது ஒரு தற்செயல் நிகழ்சி. அண்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவை அனைத்தும் தற்செயல் நிகழ்ச்சிகளே. எதுவும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளல்ல. ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் என்ன வடிவத்தில் பரவும் என்பது எப்படி தற்செயலானதோ அது போன்றே பெருவெடிப்பும் தற்செயல் நிகழ்ச்சி தான். காட்டாக ஒரு கோள் ஏன் கோள வடிவில் இருக்கிறது? கோள வடிவில் இருப்பதால் தான் அது கோள். அவ்வாறின்றி வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் இருந்தால், அப்போது வேறு ஏதாவது ஒரு பெயரில் அழைத்துக் கொண்டிருப்போம். ஏன் இந்த வடிவில் இருக்கிறது கோள வடிவில் இருந்திருக்கக் கூடாது? என்று கேள்வி கேட்ட்க் கொண்டிருப்போம். அதேபோல் தான் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது என்பதும். பெருவெடிப்பு நிகழ்ந்ததால் இந்தப் பேரண்டம் உருவானது எனும் யூகம் வேறு விதமாய் இருந்திருக்கும், அவ்வளவு தான். ஏனென்றால் ஏன் நிகழ்ந்தது? ஏன் இப்படி இருக்கிறது? எனபன போன்ற ஆத்திகக் கேள்விகளெல்லாம் அறிவியலிலிருந்தோ தேடலிலிருந்தோ எழுந்ததல்ல. அது ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்திலிருந்து எழுந்தது. அவ்வாறன்றி பெருவெடிப்பு நிகழ்ந்ததற்கு திட்டமிடப்பட்ட காரணம் உண்டு என நண்பர் குலாம் நம்பினால், அந்தக் காரணத்தை அவர் விளக்கட்டும். பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம்.

2. கோள்கள் சரியாக சுற்றுகிறதே எப்படி? இது அறியாமையினால் எழுந்த கேள்வி. வான் வெளியில் கணந்தோறும் எத்தனையோ ஒழுங்கீனங்கள், மோதல்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பிறிதொரு கோளால், அஸ்ட்ராய்டால், விண்கற்களால், எறிகற்களால், வால் நட்சத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளாகாத பருப்பொருள் என்று விண்ணில் எதுவுமில்லை. சந்திரனின் மேற்பரப்பு சிறுவர்களின் பம்பரம் போல் அத்தனை காயங்களுடன் இருப்பது ஏன்? செவ்வாயின் ஒருபகுதி சற்று வீக்கத்துடன் காணப்படுவது குறுங்கோளின் மோதலால் தான் எனக் கண்டறிந்திருக்கிறார்களே. சூரியனின் பாதைக்குள் ஷூமேக்கர் லெவி வால் நட்சத்திரம் பாதை மாறி வந்து போகவில்லையா? ஏன் பூமியில் விண்கல் வந்து மோதிய பள்ளம் சைபீரியாவில் இன்னும் இருக்கிறதே. மரியானா ட்ரன்ச் பூமியிலிருந்து பிய்ந்து போனது என்று தானே அறிவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பூமியே கூட ஒருமுறை தன் துருவத்தை தலை கீழாக மாற்றியிருக்கிறது. இந்த ஒழுங்கீனங்களும் மோதல்களும் ஏன் நிகழ்கின்றன? மதவாதிகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு புளகமடைவார்கள். இதுவும் அதுதான்.

3. உயிர்கள் வாழத் தகுதியற்ற பல கோள்கள் விண்ணில் இருக்கின்றனவே, இது ஏன்? உண்மையில் இது ஆத்திகர்களை நோக்கி நாத்திகர்கள் கேட்க வேண்டிய கேள்வி. இப்பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தான் ஆத்திகர்களின் நிலை. அப்படியென்றால் இந்தக் கேள்விக்கு பதில் கூறும் பொறுப்பும் ஆத்திகர்களுக்கே, அதாவது நண்பர் குலாமுக்கே உண்டு.

4. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரணங்களை இப்போதே துல்லியமாக கணித்திருக்கிறார்களா? இது எள்ளல், அதுவும் தன் கருத்துக்கு சாதகமான பயன் கருதிய எள்ளல். போகட்டும். குழந்தை பிறக்கும் நேரத்தை மருத்துவ அறிவியல் இயற்கையாகவும், செயற்கையாகவும் வெகு தெளிவாக கணிக்கிறது. தொடக்கத்தில் மனிதன் மாதக்க்கணக்காக, பின் நாட்கணக்காக, தற்போது மணிக்கணக்காகக் கூட துல்லியமாக கூற முடிந்திருக்கிறது. பெரும்பாலான பிரசவங்களில் நிமிடக்கணக்கில் கூட இந்த துல்லியம் இருப்பதுண்டு. அறிவியல் இதை சாத்தியமாக்கி இருப்பது அனைவரும் அறிந்தது தான். மற்றொருபுறம் வினாடி துல்லியத்தில் தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் செய்பவர்களும் இருக்கிறார்கள். இது அறிவியலின் வளர்ச்சி. ஆனால் இந்தக் கேள்வியின் சாரம் இருக்கிறதே அது ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை பிறக்கும் நாளை சரியாக கணித்துக் கூற முடியுமா? என்று கேட்டார்கள், இன்று வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்கிறார்கள், நாளை மைக்ரோ வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்பார்கள், அதனிலும் பிறகு நானோ வினாடி துல்லியமாக குழந்தை பிறப்பதை கணித்துக் கூற முடியாத அறிவியல் என்ன அறிவியல் என்பார்கள்.இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கேள்வியை அல்ல, கேள்வியின் நோக்கத்தை.

5. மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இது அறிவுபூர்வமான கேள்வியா அறிவுக்கு முரணான கேள்வியா? மனிதன் ஒரு பொருள். எல்லாப் பொருளுக்கும் மூன்று பரிமாணங்கள் இருப்பதைப் போல் திட்டவட்டமாக நான்காவது பரிணாமமாகிய காலமும் இருக்கிறது. காலத்தின் ஒரு புள்ளியில் தொடங்கும் ஒரு பொருள் மற்றொரு புள்ளியில் முடிந்தே தீர வேண்டும். இது அறிவியல் விதி. இதற்கு மாறாக ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கேட்டால் அதில் அறிவியலுக்கு கொஞ்சமும் இடமில்லை. அறிவுபூர்வமான கேள்வியாக நினைத்து கேட்கப்பட்டிருந்தாலும் கூட அதில் அறிவியல் இல்லை. ஆனால் மரணத்தை மனிதன் வெற்றிகரமாக தள்ளிப் போட்டிருக்கிறான். ஆதிகாலத்தில் மனிதனின் அதிகபட்ச வாழ்நாளே முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகள் தான். தெளிவாகச் சொன்னால் முப்பதைக் கடப்பவர்கள் வெகு அரிது. ஆனால் இன்றோ எழுபதைக் கடந்து இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் கடந்த மூன்று லட்சம் ஆண்டுகளில் மனிதன் தன் வாழ்நாளை இரண்டு மடங்குக்கும் அதிகமாக மாற்றிக் காட்டியிருக்கிறான். இதை அவன் ஏதோ ஒரு ஆற்றலின் துணை பலத்தால் அல்ல, தன் சொந்தப் பலத்தில் அடைந்திருக்கிறான்.

கடைசி இரண்டு கேள்விகளிலும் பிறக்கும் மரணிக்கும் நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இரண்டுமே கணிப்புகளை கோருகின்றன. கணிப்பு என்றாலே அது எதிர்காலம் தொடர்பானது. எதிர்காலம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டால் அது முழுமையாக துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்பில்ல்லை. ஏனென்றால் அவை கணிப்புகள். அப்படி கணிக்கப்படுபவைகளும் பெரும்பாலும் வெற்றியடைகின்றன என்பதிலிருந்து அறிவியலின் ஆளுமையை புரிந்து கொள்ளலாம். மாறாக இப்படியான கணிப்புகளுக்கு அவசியமின்றி ஏதோ ஒரு ஆற்றலுக்கு துல்லியமாக இவைகள் தெரியும் என்றால் கூறட்டும்; மனிதனின் அறிவியல் கணிப்பு துல்லியமாக இருக்கிறதா? அல்லது அந்த ஏதோ ஒன்றின் அறிவிப்பு துல்லியமாக இருக்கிறதா? என்று பார்த்துவிடலாம்.

சரி மேற்கண்ட கேள்விகளை நண்பர் குலாம் ஏன் எழுப்பியிருக்கிறார். அறிவியலெல்லாம் ஒன்றுமில்லை, ஆண்டவனே எல்லாம் என்று காட்டுவதற்காக. மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அவற்றை பார்த்து விடலாம். கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்விக்கான பதிலை நாம் அறிவியலிலும், பேரண்டப் பருப் பொருட்களிலும் அவற்றுக்கிடையேயான இயங்கு விசைகளிலும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்வியின் சாராம்சம் கடவுளைச் சொன்னவன் கூறியது உண்மையா பொய்யா என்பது தான். இந்தக் கேள்வியின் வலியை எதிர்கொள்ள முடியாமல் தான் அதை அறிவியலுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, கடவுள் என்பது அறிவியலுக்குள் சிக்காது என்பதை வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம், கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா என்பதை உறுதி செய்ய கீழே சில கேள்விகளை தருகிறேன், பதில் வந்த பின் தொடர்ந்து பரிசீலிக்கலாம்.

1. கடவுள் ஒரு சுயம்பு என்பதை வாதத்துக்காக கொள்வோம். பேரண்டம் உட்பட அனைத்தையும் அவர் படைப்பதற்கு முன் எங்கு இருந்தார். அதாவது அவர் முதலா? அவர் இருந்த இடம் முதலா?

2. கடவுள் எல்லா ஆற்றல்களையும் கொண்டவர் என்பதை ஒப்புக்கு ஒப்புக் கொள்வோம், அவரின் பிற படைப்பினங்களான, வானவர்கள், சைத்தான்கள் உள்ளிட்ட வேறு சிலவைகளையும் தடம் பிடிக்க முடியவில்லையே ஏன்?

3. கடவுளை அளக்க முடியாது, ஆனால் கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்த வானவர்கள் இயங்குவதற்கு என்ன விசையை பயன்படுத்துகிறார்கள்? அதையும் ஏன் அளக்க முடியவில்லை.

4. மழையைக் கூட பிரார்த்தித்து கேட்க முடியும் எனும் போது இந்த உலகில் சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?

அறிவியலின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற முடிவை வந்தடைய வேண்டும் என்பதற்காக வளைப்பதை விட, நேரிய முறையில் பாரிசீலித்துப் பார்க்கலாம். அப்படியான பரிசீலனைக்கு நண்பர் குலாமை அழைக்கிறேன்,

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

7 நவ்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நவ. 7, 1917, உழைப்பது மட்டுமல்ல, நம்முடைய வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்ற சொர்க்கத்தை உழைப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களுக்கான உண்மையான கொண்டாட்ட நாளும் இதே நாள் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான ஆசான் தோழர் லெனின் தலைமையில், ரசிய கம்யூனிச கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், குடிநீர் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடனடியாகத் தீர்த்து வைத்த்தோடு, அனைவருக்கும் கல்வி-வேலையும் உத்தரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால், நம் நாட்டில் நிலைமை?

விலைவாசி விசம் போல்  ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதியில் வீசப்படுகிறார்கள், விவசாயம் அழிந்து தற்கொலை, பட்டினிசாவு என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறியாக்கப்படுகிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்த நாடே பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீதே இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது. மன்மோகன் – சோனியா கும்பலின் காங்கிரஸ் அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்திவரும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்னும் மறுகாலனியாக்க்க் கொள்கைதான். இது தான் இன்று மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு, நாட்டை மீண்டும் அடிமை (மறுகாலனி)யாக்கி வருகிறது.

இக்கொடுமை நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க்கக்  கொள்ளை. இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் மீதான இன்றைய கடமை. இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை – மறுகாலனியாக்க்கக்  கொள்கையை முறியடிப்போம். இதற்கு தெற்காசிய மக்களுக்கு நாம் ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம். மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் மீண்டும் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டிமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நட்த்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்கு இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

முதல் பதிவு: பு.மா.இ.மு

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

6 நவ்

அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட வெகு சிலரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் தளபதி அளவுக்கு செயல்பாடு கொண்ட ஒரு பெண் போராளி வன்புணர்ச்சியுடன் வேறு தண்டனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை இலங்கை இராணுவம் ஒருபோதும் செய்திருக்காது. எனவே, அந்த செவ்வி புனைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த புனைவினூடாக தெறிக்கும் கேள்விகள்.. .. ..?

 

அந்தப் புனைவு கூறும் செய்தி என்ன? இரண்டு செய்திகளை அது அழுத்தமாக கூற விரும்புகிறது. ஒன்று ஈழப் போராட்டம் முடிந்து விட்டது. இனி அங்கு போராடுவதற்கு யாரும் தயாராக இல்லை, சூழலும் இல்லை. இரண்டு, தமிழகத்தில் ஈழ மக்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஈழம் குறித்து அக்கரையும் புரிதலும் இல்லாதவை. இப்படிக் கூறுவதன் மூலம் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழத்திலிருக்கும் ஆதரவு நிலையை நீர்த்துப் போக வைப்பது; அவர்களை அப்புறப்படுத்திய இடத்தில் அரசு சாரா நிறுவனத்தையோ, வேறு குழுக்களையோ வைத்து, இந்திய அரசு செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும், பிராந்திய நலன்களுக்கான செயல்களை இன்னும் வீரியமாகவும், நுட்பமாகவும், மறைமுகமாகவும் செய்வதற்கான முந்தயாரிப்பாகக் கூட அந்தப் புனைவு இருக்கலாம்.

 

ஆனால் இந்தப் புனைவு யாரைத் தாக்குகிறதோ அவர்கள், அதாவது வைகோ, நெடுமாறன், சீமான் இன்னபிற தமிழ் தேசிய கட்சிகள் போன்றவை இது குறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ‘ஏசு இருக்கிறார், வந்து கொண்டே இருக்கிறார்’ என்பது போல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், இதோ துப்பாக்கியோடு வந்து விட்டார் என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் பேசினாலுமே கூட அது கற்பனையாக எழுதப்பட்டது என்பதை தாண்டி வேறெதையும் கூறப் போவதில்லை. அது கற்பனை உரையாடலாகத்தான் இருக்கும் என்றாலும், மெய்யாகவே தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அது தான்.

 

தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியா எனும் பிராந்திய வல்லாதிக்கத்திற்காக முற்றிலுமாக தகர்த்தெறியப் பட்டிருக்கிறது. தனி ஈழ தாகம் கொண்டிருந்த மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். போராளிகள் போரின் போதும் அதன் பிறகும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள், உயிருடன் எஞ்சியவர்கள் சிறைக் கொட்டடிகளில் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகவோ, போராளிகளுக்கு ஆதரவாகவோ நிலை எடுப்பது குற்றச் செயலாக, அரசு ஒடுக்குமுறைக்குள் வலிந்து மாட்டிக் கொள்வது போன்ற செயலாக மக்களிடம் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு போராட்ட அமைப்பு முற்றிலுமாக குலைக்கப்படுவது முன்னெப்போதும் நடந்தே இராத ஒன்றல்ல. அது அவமானகரமான ஒன்றும் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் விசயத்தில் இவ்வாறான புரிதலுக்கு அதன் ஆதரவாளர்கள் ஏன் வர மறுக்கிறார்கள்? எந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இயக்கம் தான் முதன்மையான ஒன்றேயன்றி அதன் தலைவர்களோ, தனிநபரோ அல்ல. புலி ஆதரவாளர்களிடம் இது தலைகிழாக இருக்கிறது. அதனால் தான் படையணிகளும், ஆயுதங்களும் எதிரியால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்து விரல் சொடுக்கினால் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகிவிடும் என்பதைப் போல கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகள் ஏன் அழிந்தார்கள், எது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதை விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் தான் எனும் நாயக மனப்பான்மைக்கு இவர்களை இட்டு என்றது யார்? எது? லட்சக் கணக்கில் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும், தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அந்தக் கடைசிக்கட்டப் போரில் இங்கிருந்து செய்த பங்களிப்பு என்ன? பாசிச ஜெயாவுக்கு ஓட்டுக் கேட்டது தான் இவர்களின் ஒரே பங்களிப்பு. அங்கு மக்களின் மேல் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தபோது, இங்கே இவர்கள் இலைமலர்ந்தால் ஈழம் மலரும் என்று அறிக்கைக் கணைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள், ஈழ ஆதரவு என்பதை கருணாநிதியை திட்டுவது என்று குறுக்கிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்காக போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததோ அந்த ஆளும் வர்க்கத்தின் பலன்களைப் பெறுவதில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கை அரசு தமிழர்கள் விசயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே தான் இந்திய அரசு காஷ்மீர் விசயத்திலும், மத்திய கிழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை ஆதரித்துக் கொண்டு, இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் பெற துடித்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் ஆதரிக்கிறோம் என்பது அவர்கள் கொள்கையில் இருக்கும் ஓட்டாண்டித் தனமா இல்லையா? இந்த ஓட்டாண்டித் தனத்தை மறைக்கத்தான் பிரபாகரனை ஒரு நாயகனைப் போல தாங்கிப் பிடிக்கிறார்கள். நாளையே அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு களத்துக்கு வந்து விடுவார் என்று பிரமையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் வெறுமனே தலைவராகப் பிறந்தவரல்லர். அங்கிருந்த சூழல் அவரை தலைவராக பரிணமிக்க வைத்தது. ஆனால் இன்று அங்கிருக்கும் சூழல் துப்பாக்கியை அல்ல புரசிகர மக்கள் திரள் இயக்கத்தையே கோரி நிற்கிறது. அரசில் அங்கம் வகிக்கத் துடிப்பவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியுமா? அதனால் தான் அவர்கள் துப்பாக்கியை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக பிரபாகரனுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இருந்தாலும் வெளியில், சொந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈழப் போரை நினைத்தாலே வலிக்கும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொட்டால் நொறுங்கிவிடும் அளவுக்கு அவர்களுக்குள் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதை வெல்ல, அவர்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனை தொடங்கி, வர்க்க அடிப்படையில் திரட்டி, உணவுப் பிரச்சனையினூடாக உலகப் பார்வையை ஊட்டி ஆயத்தப்படுத்தும் பெரும்பணி தேவையாக இருக்கிறது. அதை ஒரு புரட்சிகர இடதுசாரி இயக்கத்தாலல்லாது பிரிதொரு கொள்கையால் செய்யவியலாது.

 

அண்மையில் பலநாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிமிகு போராட்டங்கள் புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் இல்லாததால் நீர்த்துப் போய், மக்கள் போராடியதன் பலன் யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுக்கே கிடைத்திருக்கிறது. அங்கெல்லாம் புரட்சிகர இயக்கத்தின் தேவை அவர்களின் சொந்த அனுபவங்களினூடாகவே உணரப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் அவர்களின் சிதைவுக்கும் இந்த இன்மையே தொடக்கமாக இருந்திருக்கிறது. பெண் போராளியின் பெயரால் புனையப்பட்டிருக்கும் அந்தக் கற்பனை உரையாடல், அது என்ன நோக்கத்திற்காக புனையப்பட்டிருந்தாலும் இதையே உணர்த்துவதாய் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

மாவீரர் நாள் எனும் சடங்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பழைய வேதங்களின் நிலையும், குரானின் குழப்பமும்

1 நவ்

 

 

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …

(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.

(குர்ஆன் 2:75)

 

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

 

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.

(குர்ஆன் 15: 9)

                இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

 

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.

(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …

(குர்ஆன் 2: 4)

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

(குர்ஆன் 5:44)

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.

 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :

  • குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
  • குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய வேதங்கள்  ஆகும்
  • குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய      மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
  • முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக       அல்லாஹ்      தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர் ஆன் பாதுகாக்கப்பட்டு   இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

 

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

 

குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

அல்லது

அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ்,  பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தை வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும். 

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?

முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?

அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?

குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்.  இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.

ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.

ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)

ü “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106) 

முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

புகாரி ஹதீஸ்4095

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள்கூறியதாவது :

பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)

” நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள்  சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் “.

நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்?  ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.

புகாரி ஹதீஸ் : 4986          

வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது

…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …

 நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282)  விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில்  தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு (வாத்து, மாடு, ஒட்டகம், பூனை, நாய், முயல்) மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.

புகாரி ஹதீஸ் :        4987  

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில்  இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான்,  குர்ஆனை மீண்டும் தொகுக்க  அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,

(ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,)

Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:

حديث “اقتلوا نعثلا قتل الله نعثلا” تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة

The hadith “kill Nathal, may Allah kill Nathal” refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.

Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:

فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا

Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’

(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக்  கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்” என்பார்.)

ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத்  தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?

பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும்  திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?

எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா இருக்கிறது. 

முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி  பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?

சரி…  

அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி  பெற ஏவுவது எதற்காக?

ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.

(குர்ஆன் 17: 16)

 இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது.  தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம்.  சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா?  இதற்கு ஒரு வேதம் தேவையா?

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2