தொகுப்பு | மே, 2012

ஷாருக்கானின் இந்தியாவும் சையத் காஸ்மியின் இந்தியாவும்

25 மே

காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன்

 

அரண்மனை பாதுஷாக்கள் அதே தோரணையோடு உப்பரிகையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால் தெருவிலிறங்கி அப்படி நடக்க முடியுமா? ஒருவேளை அப்படியொரு அசந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் என்னவாகும்? செருப்பில் குத்திய சிறு கல்லுக்காக பூமியைத் தாங்கி நிற்கும் டெக்டோனிக் தகடுகளே மேலெழுந்து வந்து கூத்தாடி பாதுஷாவின் முன் பணிந்து மன்னிப்புக் கேட்டு விடுமா என்ன? கேட்பதற்கே வினோதமான நகைப்புக்கிடமான இது போன்ற கதைகள் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.

பாலிவுட்டின் பாதுஷா என்று போற்றப்படும் ஷாருக் கான் கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்கா சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் 2 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் Chubb Fellowship எனப்படும் சிறப்பு விருது ஒன்றைப் பெற அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியுடன் தனியார் விமானத்தில் சென்று இறங்கிய போது தான் அவருக்கு இந்த ‘அவமானம்’ நேர்ந்தது.

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட  பல்கலைக்கழக நிர்வாகிகள், உடனடியாக பாதுகப்புத் துறை மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவரை சீக்கிரம் விடுவிக்க வகை செய்துள்ளனர்.

அடிமை நாட்டின் ராஜபார்ட்டுக்கு நேர்ந்த இந்த மாபெரும் அவமரியாதைக்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவே களத்திலிறங்கி கம்பு சுற்றியுள்ளார். நடந்த சம்பவம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று குறிப்பிட்டவர், இனி இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கர்களுக்கு இதே விதமான ‘மரியாதை’ தான் காட்டப்படும் என்றோ, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை இந்தியா மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றோ அறிவித்து விடவில்லை. மாறாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை அழைத்து மேற்படி சம்பவத்தின் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானத்தின் பரிமாணத்தை அமெரிக்க எஜமானர்கள் முன் பவ்வியமாக வைக்கும் படி கேட்டிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கம் மயிலறகால் அடித்த அடியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடந்த சம்பவத்துக்காக ‘மன்னிப்பு’ கேட்டுள்ளனர். அந்த மன்னிப்பிலும் எந்த காரணத்துக்காக ஷாருக்கான் மேல் தாங்கள் சந்தேகப்பட்டோம் என்கிற விளக்கமோ இனிமேல் இவ்வாறு நடக்காது என்கிற உறுதிமொழிகளோ இல்லை. ஆனாலும் அடிக்கிற கை தானே அணைக்கும் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு விஷயத்தை ஆறப்போட்டு விட்டது இந்திய அரசும் அல்லக்கை ஊடகங்களும். செருப்பால் அடித்தாலும் மறக்காமல் கருப்பட்டியைக் கொடுத்து விட்டார்களல்லவா?

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி காட்டமாக எழுதிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும், நடந்த சம்பவத்திற்கான அடிப்படையான காரணம் பற்றி மூச்சே விடவில்லை. ஷாருக்கான் போன்ற மாபெரும் அப்பாடக்கருக்கே இந்த நிலையா, இதைக் கேட்பாரில்லையா என்றெல்லாம் குரல்வளை கிழிய கூவிய ஊடகங்கள், இது இந்தியாவுக்கே நேர்ந்த அவமானமென்றும், அமெரிக்காவுக்கே இதே பிழைப்பாய்ப் போய் விட்டதென்றும் அங்கலாய்த்திருந்தன. ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஒருவேளை அப்படிச் சொல்ல நேர்ந்து விட்டால் தேவையில்லாமல் அமெரிக்காவின் முசுலீம் இனவிரோத பாஸிச அரசியல் பற்றியும், அதைத் தொடர்ந்து உலகெங்கும் முசுலீம்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது – இசுலாமிய நாடுகளை எப்படிக் குத்திக் குதறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு நினைவூட்டியதைப் போலாகி விடுமல்லவா? இவர்களே இத்தகைய முசுலீம் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். இது இந்துத்துவ பா.ஜ.கவிற்கும், ‘மதச்சார்பின்மை’ காங்கிரசுக்கும் வேறுபாடின்றி பொருந்தும். அதனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாய் விளங்கும் இந்த அல்லக்கைகளின் பார்ப்பன ஆன்மாவுக்கு தவறிக் கூட அப்படியெல்லாம் எழுதக் கைவராது என்பதே உண்மை. ஊதாங்குழலில் இருந்து சிம்பொனி இசையா பிறக்கும்?

ரத்த நாளங்களெங்கும் அடிமைத்தனமும் கோழைத்தனமும் பாயும் உணர்வுப்பூர்வமான அடிமைகளுக்கென்றே ஒரு விசேஷ குணம் இருக்கிறது – எந்தளவுக்கு எஜமானன் முன் மண்டியிட்டுக் குனிந்து குழைந்து போகிறார்களோ அந்தளவுக்கு தனக்குக் கீழ் இருப்பவர்கள் முன் விறைப்புக் காட்டுவார்கள். எடுப்பது பிச்சையென்றாலும் ராத்திரி பெண்டாட்டியைப் போட்டு அடிக்கும் பிச்சைக்காரர்களையும், செய்வது கூலி வேலையென்றாலும் ‘நாங்களெல்லாம் சத்திரிய பரம்பரை தெரியுமில்லே’ என்று தலித்துகளிடம் மீசை முறுக்கும் சாதி வெறி அற்பர்களையும் கொண்ட புண்ணிய பூமியாயிற்றே?

ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நேர்ந்த அவமரியாதைக்குப் பொங்கிய இந்தியா, அமெரிக்க அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரை இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்தார்களோ அதே  அடிப்படையில் ஒரு அப்பாவியைச் இங்கே சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இவர் ஷாருக்கானைப் போல் ஒரு கார்ப்பரேட் கூத்தாடியாக இல்லாத ஒரே பாவத்துக்காக பத்திரிகைகளும் பெரிதாக இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

சையது அஹமது காஸ்மி ஒரு உருது பத்திரிகையாளர். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இப்பிராந்திய அரசியல் பற்றி எழுதக் கூடிய மிகச் சில இந்திய (Political Analyst) அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் . மார்ச் 6-ம் தேதி தூர்தர்ஷன் உருது சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு திரும்பிய காஸ்மியை காலை 11:30 வாக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். பிப்ரவரி மாதம் இசுரேலிய தூதரக அதிகாரி ஒருவரின் மனைவியினுடைய கார் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையோ கைது செய்தற்கான அடிப்படை ஆதாரங்கள் இன்னதென்றோ தெரிவிக்க காவல்துறை மறுத்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த ஆவணங்களை காஸ்மியின் வழக்கறிஞர்கள் பரிசீலித்த போது, அதில் நடந்த சம்பத்தோடு காஸ்மியைச் சம்பந்தப்படுத்தும் வகையிலான குறிப்பான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது. ஈரானிய விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்த காஸ்மிக்கு ஈரானியர்கள் சிலரோடு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதில் சிலர் சந்தேகத்துக்குரியவர்களென்றும், அவர்கள்தான் கார் குண்டு வெடிப்புக்காக காஸ்மி உதவி செய்ய வேண்டி அமெரிக்க டாலர்களைக் கொடுத்துள்ளார்களென்றும் கதையைக் கட்டி விடும் போலீசு,  இதற்கு ஆதாரமாக காஸ்மியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டாலர் நோட்டுகளைக் காட்டுகிறது – அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 1254 டாலர்கள் மட்டுமே.

சையத் அஹ்மத் காஸ்மி

 

மேலும் காஸ்மியின் வீட்டிலிருந்து ஸ்கூட்டி ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் போலீசு, இதில் சென்று தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர் என்றும் சொல்கிறது. மேலும், குண்டு வைத்தவர்களுக்கு காஸ்மி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறது. அதே போல் காஸ்மியின் செல்பேசியிலிருந்து சில ஈரானிய எண்களுக்கு பேசப்பட்டிருப்பதையும் போலீசு ஆதாரம் என்று காட்டுகிறது. இதில் போலீசார் குறிப்பிடும் அந்த ஸ்கூட்டி வண்டி, சுமார் இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காஸ்மியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் போய் குண்டு வைத்து விட்டு தப்பிக்க வேண்டுமென்றால் அது இளைய தளபதி விஜயைத் தவிற இந்த பிரபஞ்சத்திலேயே வேறு யாராலும் முடியக் கூடிய காரியமல்ல. அதே போல் ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையிலும், அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய அரசியல் வல்லுனர் என்கிற வகையிலும், ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வேலை பார்ப்பவர் என்கிற வகையிலும், காஸ்மியின் செல்பேசியிலிருந்து ஈரானிய எண்களுக்கு அழைப்புகள் செல்வதும் இயல்பானது தான். வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதியாய் வேலை செய்பவர் ஆயிரம் அமெரிக்க டாலர் வைத்திருப்பதும் இயல்பானதுதான்.

ஆக, தீர்ப்பு இன்னதென்று முடிவு செய்து விட்டுத் தான் விசாரணையையே தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் போலீசு என்கவுண்டர்களுக்கு எழுதும் திரைக்கதையை விட மிக மொக்கையான கதையை எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்தியாவின் காவல் துறைக்குப் புதிய விஷயமல்ல. நாண்டெட், சம்ஜௌதா, ஹைதரபாத் என்று எங்கே குண்டு வெடித்தாலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில பத்து முசுலீம் இளைஞர்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வது காவல் துறையின் வாடிக்கையான நடவடிக்கை தான். அதே போல் இங்கே நடந்த பேர்பாதி குண்டு வெடிப்புகளைச் செய்ததே  ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானென்பது விசாரணையின் போக்கில் வேறு வழியின்றி வெளிப்பட்டு அம்பலமாவதும் நமக்குப் புதிதில்லை தான்.

பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து எந்த விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஈரான் தானென்று முதலில் இசுரேல் குற்றம் சுமத்துகிறது. ஈரானின் மேல் இசுரேலும், அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதையும், ஈரானின் பெட்ரோலை எந்த நாடுகளும் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா அடாவடித் தனம் செய்து வந்ததையும், அந்தச் சூழ்நிலையில் இந்தியா தனது மொத்த எண்ணைய் இறக்குமதியில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்து வந்ததையும், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்ததையும் பின்னணியில் கொண்டே மேற்படி குண்டு வெடிப்பையும் அதைத் தொடர்ந்து இசுரேல் கூறிய குற்றச்சாட்டையும் காண வேண்டும். ஆரம்பத்தில் இசுரேல், ஈரான் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படையேதும் இல்லை என்று சொல்லி வந்த இந்தியா, அதன் பின் இசுரேல் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் தான் தனது நிலையை மாற்றியிருக்கிறது.

ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம்.  ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?

இதில் இந்திய ஊடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை பெற்ற ஷாருக்கானும் கூட தான் முசுலீம் என்பதற்காக தடுக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. ஆக முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.

நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு……

_____________________________________________

தமிழரசன்

முதல் பதிவு: வினவு

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் ஆறாம் பகுதி

23 மே

 

இந்த விவாதத்தின் ஆறாவது பகுதியான இது, கடையநல்லூர் டிஎன்டிஜே எனும் தளத்தில் வெளியான என்னைப் பற்றிய பதிவு ஒன்றின் மறுப்பாக வருகிறது. செங்கொடியினர் காஃபிர்களே என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது மின்னஞ்சல் மூலமாகவும் பல நூறு பேருக்கு அனுப்பபட்டிருக்கிறது. அந்தப் பதிவு என்னை காஃபிர் என்று அறிவிக்கவும், நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என்னை அடக்கக் கூடாது என்றும் அறிவிக்க ஜமாத்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டி அனைவரையும் கோருகிறது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது தான் உண்மை.

ஒருவரை முஸ்லீம் என்று இவர்கள் எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள்? அவர் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கிறரா? முஸ்லீம் பெற்றோர்களுக்கு பிறந்தவரா? முஸ்லீம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாரா? என்பதைக் கொண்டா? இதுதான் ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான தகுதி என்றால்; அட மூடநம்பிக்கையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் முல்லாக்களே, முதலில் உங்கள் மதத்தைப் பற்றியேனும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்குக் கூட எங்கள் மதத்தில் வழிகாட்டுதல் இருக்கிறது என்பவர்களே, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தால், இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால், இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டிருந்தால் ஒருவர் முஸ்லீமாகிவிடுவார் என்பதற்கு உங்கள் வேதத்திலி(குரான்)ருந்தோ, உபநிடதத்(ஹதீஸ்)திலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எந்த அடிப்படையில் என்னை முஸ்லீம் என்று கருதினீர்கள், இப்போது முஸ்லீம் அல்ல என்று அறிவிப்பதற்கு?

நான் எப்போதாவது என்னை முஸ்லீம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறேனா? இஸ்லாமியச் சடங்குகள் எதையேனும் செய்திருக்கிறேனா? என்னைத் தெரிந்தவர்களுக்கு வெகு நன்றாகத் தெரியும் நான் எப்போதும் முஸ்லீமாக இருந்ததில்லை என்று. ஆனால் இப்போது இவர்கள் கூறுகிறார்கள் \\\இப்படிப்பட்டவனை மார்க்க அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவன் என்று கருதமுடியாது. இவன் மதம் மாறிய முர்த்தத் ஆவான்///என்று. நான் மதம் மாறவும் இல்லை, முஸ்லீமாகவும் இல்லை. அறியாத வயதில் என்னுடைய பெற்றோரைக் கொண்டு நான் முஸ்லீம் என்று நீங்களாகவே கூறிக் கொண்டீர்கள். இப்போதும் நீங்களாகவே இவன் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்கிறீர்கள். நான் பிறந்தேன் வளர்ந்தேன், அறிகிறேன், சிந்திக்கிறேன், என் தேடலின் அடிப்படையில் என்னை வழி நடத்திக் கொள்கிறேன். இடையில் நீங்கள் யார் என்னை முஸ்லீம் என்றும் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்வதற்கு?

சமூகத்தையும் மதத்தையும் குழப்பிக் கொள்வது இஸ்லாமியர்களின் வாடிக்கை.நம்புபவர்கள் சமூகமும் மதமும் வேறு வேறல்ல என்று நம்பிக் கொள்ளுங்கள் நம்பாதவர்கள் மீது ஏன் உங்கள் நம்பிக்கையை திணிக்கிறீர்கள்? நான் மக்கள் மத்தியில் வாழ்கிறேன் என்பது சமூகம். நான் மண வாழ்வில் இருக்கிறேன், அதன் விளைவுகளை கொண்டிருக்கிறேன் என்பது சமூகம். ஆனால் உங்கள் மததின்படி நான் ஒழுகவில்லை என்பதற்காக என் திருமணத்தை முறிப்பதற்கும், யாரும் என்னோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கும் நீங்கள் யார்?

எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் இறை நம்பிக்கை கொண்டவனல்ல, ஒரு நாத்திகவாதி என்பதை முறைப்படி பெண் வீட்டாருக்கு உறுதியாக தெரிவித்திருக்கிறேன். திருமணத்திற்கு முதல் நாளே திருமணம் நடத்தி வைப்பவரை அணுகி நான் நாத்திகவாதி அதனால் நீங்கள் கூறும் மந்திரம் எதனையும் நான் திரும்பக் கூறமாட்டேன். தமிழில் நீங்கள் கேட்கும் ஒப்புதலை மட்டுமே தருவேன். வேறுஎதையும் நீங்கள் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று அவருடன் வாதம் செய்து சம்மதிக்கச் செய்திருக்கிறேன். (என்னிடம் இன்றிருக்கும் கொள்கை உறுதி அன்று இருந்திருக்கவில்லை என்பதால் சில சமரசங்களுக்கும் ஆட்பட்டிருக்கிறேன் என்பது வேறு விசயம்) நான் ஒரு முகம்மதியனல்லன் என்பதை என் மனைவிக்கு ஐயந்திரிபற புலப்படுத்தியிருக்கிறேன். சமூக உறவு தேவை எனும் அடிப்படையில் தான் என் திருமணம் நடந்ததேயன்றி இஸ்லாமிய உறவு தேவை எனும் அடிப்படையிலல்ல. இப்போது என் மத நடவடிக்கைகள் உங்கள் விருப்புக்குறியதாய் இல்லை என்று கூறிக் கொண்டு என் மண வாழ்வில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது எவர்?

நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். \\\இவனோ இவனது குடும்பத்தினரோ இறந்து விட்டால் முஸ்லிம்களின் எந்த மையவாடியிலும் அடக்கம் செய்யக் கூடாது/// நான் இறந்தால் முஸ்லீம்களின் மையவாடியில் என்னை அடக்கம் செய்யுங்கள் என்று யாரிடமும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மாறாக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு என்னுடையை முழு உடலையும் தானம் செய்திருக்கிறேன். நான் இறந்தபின் தோழர்கள் என் உடலை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அது குறித்து நீங்கள் எந்தக் கவலையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்கிறேன்.

இன்று நான் முஸ்லீம் அல்ல கூவித் திரியும் இவர்கள், நான் முஸ்லீம் அல்ல என்று என் செயல்களால் உணர்த்திய போது அதை மறுத்து என்னை அந்த மதத்துள் இருத்தி வைப்பதற்கு செய்த முயற்சிகள் எத்தனை? எத்தனை? (’இவர்கள்’ என்பதை பொதுத்தன்மையில் குறிப்பிட்டிருக்கிறேன்) என் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்ற போது இவர்கள் செய்த தடங்கல்கள் எத்தனை, ஜாதி மதம் கடந்தவர்கள் என சான்றிதழ் பதிவு செய்ய முயன்ற போது செய்த இடையூறுகள் எத்தனை எத்தனை. என்னுள் நான் எப்படி இருக்கிறேன் என்பது குறித்து கிஞ்சிற்றும் கவலையற்றவர்கள், என் வெளிச்செயல்கள் முஸ்லீம்களுக்குறியதாக இருக்க வேண்டும் என்பதில் காட்டிய தீவிரம் தான் என்னே. ஒரு நிகழ்வை எடுத்தக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். என்னுடைய திருமண தினத்தன்று காலை, அதுவரை நான்கைந்து நாட்களாக என்னுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என் நண்பர்கள் யாரையும் காணவில்லை. காத்திருந்தேன், நேரமாகிக் கொண்டிருக்கிறது, இனியும் தாமதிக்க முடியாது என்றாகி, நேரடியாக சென்று கேட்ட போது தான் விசயமே விளங்கியது. “நீ எங்களுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதால் தான் நாங்கள் உன் திருமணத்தில் கலந்து கொள்வோம்” என்றார்கள். “நீங்கள் கலந்து கொள்வதுதான் எனக்கு முக்கியமேயன்றி ஒரு மதத்தின் சடங்குகள் முக்கியமல்ல” என்று அவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசலில் தொழுதேன். தன்னை முஸ்லீம் என்று கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாம் என்பது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்திருந்தது, அதனால் தான் என்னால் நண்பர்களுக்காக தொழவும் முடிந்தது. என்னுடைய ஆழம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள், அடையாளம் குறித்தே கவலை கொண்டார்கள். இன்று அந்த அடையாளிகள் அறிவித்திருக்கிறார்கள் நான் முஸ்லீம் அல்ல என்று. முட்டாள்களா, நீங்கள் நினைத்தால் முஸ்லீம் என்று இருத்திக் கொள்வதற்கும், நினைத்தால் முஸ்லீம் அல்ல என்று விடுவிப்பதற்கும் நான் என்ன உங்கள் முகத்தில் வைத்திருக்கும் மீசையா நினைத்த போதெல்லாம் திருத்திக் கொள்வதற்கு?

அவர்களது பதிவில் சில விவரப் பிழைகளும் இருக்கின்றன. இணையப் பரப்பில் செங்கொடி என அறியப்படும் நான் செங்கொடி, நல்லூர் முழக்கம் எனும் இரண்டு வலைத் தளங்களை நடத்தி வருகிறேன். இறையில்லா இஸ்லாம் எனும் தளம் என்னால் நடத்தப்படுவதல்ல, மட்டுமல்லாது எந்த இணையக் குழுவுக்கும் நான் தலைமை தாங்கவும் இல்லை. இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அது முழுமையாக என்னுடைய தேடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டு வருகிறது. அதில் இடம்பெறும் எதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன். அதுகுறித்து உங்கள் யாருக்கும் விமர்சனம் இருந்தால் தாராளமாக பதிவு செய்யலாம், விளக்கம் கூறுகிறேன். சுய விமர்சனம் செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். அதேநேரம் நல்லூர் முழக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரம்பத்தை நோக்கி எனும் தொடர் என்னால் எழுதப்படுவதல்ல, தஜ்ஜால் என்பவரால் எழுதப்படுகிறது. என்றாலும், அதன் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அது குறித்தும் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் பதிவு செய்யலாம். நண்பர் தஜ்ஜால் உங்களுக்கு தகுந்த விளக்கமளிப்பார். ஒரு விமர்சனம் எனும் அடிப்படையில் அதன் நிறை குறைகளை ஏற்றுக் கொள்வோமேயன்றி, காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம், தகுந்த முறையில் எதிர்கொள்வோம்.

 

முதல் பதிவு: செங்கொடி

கடையநல்லூரில் மின்வெட்டு குறித்த அரங்கக் கூட்டம்

16 மே

 

கடையநல்லூர் கடைவீதியில் இருக்கும் எம்.ஒய்.எம் நூலக அரங்கத்தில் கடந்த 27/04/2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மின்வெட்டு குறித்த அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் நாகராசன் கலந்து கொண்டு மின்வெட்டு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினார்.

 

மின்வெட்டு குறித்து அரசு திட்டமிட்டு பரப்பிவரும் பொய்ப் பரப்புரைகள், அதன் பின்னாலிருக்கும் அரசியல், மின் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது? அதற்கு யார் காரணம்? கூடங்குளம் அணு உலையை திறந்தால் மின்வெட்டு சரியாகிவிடுமா? போன்ற பல அம்சங்களை விரிவாகவும், புள்ளிவிபரங்களுடனும், தெளிவாகவும் விளக்கக் கூடியதாக தோழர் நாகராசனின் சிறப்புரை அமைந்திருந்தது. தோழரின் பேச்சை முழுமையாக கீழே இணைக்கப்பட்டிருக்கும் சுட்டியில் கேட்கலாம்.

 

பெருந்திரளான மக்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு அரங்கம் நிறைந்த கூட்டமாக நடந்தது. வழக்கமாக இது போன்ற கூட்டங்களில் இஷா தொழுகை நேரத்தில் கலைந்து சென்றுவிடும் மக்கள் கூட்டம் இந்த முறை தோழர் முழுமையாக பேசி முடிக்கும் வரை யாரும் கலைந்து செல்லாமல் இருந்து கேட்டது குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.

 

முழுமையான உரையைக் கேட்க இங்கு சொடுக்கவும்

 

 

சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!

14 மே

 

ஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல இதுவரை இரண்டு புரட்சிதாம்டே இருந்துச்சு. ஒண்ணு புரட்சித்தலைவர்-தலைவி வகையறா, ரெண்டாவது ” என் தங்கம், என்னுரிமை”ன்னு கல்யாண் ஜூவல்லரியில பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம். இப்போ இந்த கசுமாலங்களோட மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி!

ஞாயித்துக் கிழமையும் அதுவுமா எங்கூரு சலீம் பாய் கடையில பொட்டாட்டுக் (குறும்பாடு) கறியக் கூட எடுத்து திங்காம சினேகா அக்கா கல்யாணத்தை பத்தி சிவனே மவனேன்னு எழுதுதனே ஏம்லே? உழைச்சு பிழைக்கிற மக்கமாறு அன்னாடம் கஞ்சி குடிச்சு வாழுததுக்கு கூட வக்கு இல்லாத நாட்டுல இந்த சினிமாக்காரனோட கலியாணம், கருமாதியை நியூசு, வியூசு, மேட்டரு, ஹெட்டிங்கு, சென்சேஷன்னு செங்கோட்டை சாப்பாட்டுகடை மாஸ்டரு அடிக்கிற புரோட்டா மாறி பிச்சு உதறதானுகளே, என்னைக்காவது ரோசனை பண்ணியிருக்கியாலே?

பிச்சுப் போட்ட புரோட்டாவ தின்னா அடுத்த நாளு ஆய் போவியா, இல்ல அமுதத்த கக்குவியா? சினேகா அக்கா கல்யாண மேட்டரு மாதிரி உசிலம்பட்டியில பேச்சியம்மாளுக்கும், மதுரை வீரனுக்கும் கண்ணாலம்னு ஒரு சேதிய, அவுத்து வுட்டா உச்சி மோந்து படிப்பியா இல்ல, வேற வேலவெட்டி இல்லயான்னு ஒதுக்கிவிட்டு போவியா?

தம்பி பிரசன்னாவுக்கும், அக்கா சினேகாவுக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்ட பிறகு வயிறெறிஞ்ச பயலுவள வுடுங்க, மத்த பயலுவளும் நமக்கு சினேகா மாதிரி ஒரு மனைவி அமையலேன்னு ஃபீல் பண்ணுறதயும் வுடுங்க, மொத்தமாப் பாத்தா அல்லாரும் அந்த தம்பதிமாரை மனசாரா வாழ்த்திருப்பீக! நானு இந்தக் கல்யாணத்தை இப்புடி கலாய்க்கிறதப் பாத்து அவுகளெக்கெல்லாம் பெரிசா கோபம் வருமுன்னு எனக்கு தெரியுமுடே! மவுசுல ஸ்க்ரோல் பண்ணியே கண்ணீரு வுடுற இந்த ஃபீல் பார்ட்டிங்களுக்கு, இது ஒரு சினிமா பீர் பார்ட்டின்னு உரைக்கிற மேறி எழுதணாத்தாம்லே என்னோட வெப்ராளம் (ஆற்றாமை) அடங்கும்.

ஏலேய் போக்கத்த பயலுகளா, நீங்க நினைக்கிற மாதிரி இந்தக் கல்யாணம் ஒரு எளஞ்ஜோடிங்க கல்யாணம் காட்சின்னு ஆரம்பிக்கிற புதுசான வாழ்க்கை  இல்லேலே, இது பக்கா பிசினஸ். இல்லேன்னா ஒரு புது சினிமான்னும் சொல்லலாம். ஒரு சினிமாக்குண்டான பட்ஜெட், பிசினெஸ், காஸ்ட்யூம், பி.ஆர்.வோ, ஸ்பான்சரு, திரைக்கதை, டிவிஸ்ட்டுன்னு அத்தனை ஐட்டங்களும் இதுல உண்டுன்னு சொன்னா நம்புவியாலே?

இந்தத் தம்பியும் நம்ம அக்காவும் அவுகளோட கல்யாணத்த டி.வியில ஒளிபரப்பதுக்கு எம்புட்டு துட்டு வாங்குனாகன்னு தெரியுமாடே? மூணு கோடி ரூபாய்னு சொல்லுதாக. இது பொய்யுன்னு புலம்புற மல்லு வேட்டி மைனருங்க அல்லாப் பத்தரிகையையும் புரட்டி பாருங்கடே, “லம்பான அமவுண்டுக்கு திருமண ஒளிபரப்பை வித்துட்டாங்கன்னு” கொட்டை எழுத்துல நியூஸ் போட்டுருக்கான்.

இதுக்கு காஸ்ட்லி கல்வி முதலாளி பச்சமத்துவோட புதிய தலைமுறையும், கிழட்டு நரி முர்டோச்சோட விஜய் டி.வியும் போட்டி போட்டானுகளாம். கடைசியில முர்டோச் மூணு கோடிக்கு ஏலத்துல ஜெயிச்சுருக்கான். இந்தப் பயபுள்ளதான் ஏற்கனவே பிரபலமாருங்க கல்யாணத்தை விஜயில “நம்ம வீட்டு கல்யாணம்” னு காட்டி காசு சுருட்டுறதுல சீப்பான எக்ஸ்பர்ட்டு!

ஏலேய் உடம்ப வித்து பிழைக்குற பொம்பளைங்களை விபச்சாரின்னு யோக்கியனாட்டாம் பேசுத பயபுள்ளங்ககிட்ட ஒண்ணு கேக்கேன். அது விபச்சாரம்னா இப்புடி கல்யாணத்தை காசுக்காக டெலிகாஸ்ட்டு பண்ணுன்னு விக்கிறதுக்குப் பேரு என்னடே? அது பாடி விபச்சாரம்ணா, இது டெலிகாஸ்ட்டு விபச்சாரம்ணு சொல்லலாம்லா? மதுரை ஆதீனமாக முடியோட முடிசூட்டியிருக்கிற நித்தியானந்தா, ரஞ்சிதாவோட சல்லாபம் போட்டபோது அடுத்தவங்க படுக்கையறையை எட்டிப் பாக்கது தர்மமான்னு நம்ப பிசினஸ் பாய் மனுஷ்ய புத்திரன்ல இருந்து, த.மு.எ.க.ச தமிழ்ச் செல்வன் வரைக்கும் நெம்ப ஃபீல் பண்ணிணாக. ஏலேய் அதே மாதிரி தனிப்பட்ட கல்யாணத்தை ஊரு பூறா பாக்கதுக்கு ரேட் போட்டு விக்கானே, இது மட்டும் தர்மமாலே? ரஞ்சி எபிசோடுல சன் டி.விக்காரன் செலவில்லாம சுருட்டுனான், இங்க அக்கா எபிசோடுல கொஞ்சம் முதலீடு போட்டு சுருட்டுறான், அம்புட்டுதாம்டே வித்தியாசம்!

இன்னைக்கு கல்யாணத்த வித்து பணம் பண்ணுறவன் நாளைக்கு காது குத்து, மொட்டை, பூணூல் கல்யாணம், புது வீடு, பொறந்த நாளுன்னு அல்லாத்தையும் விப்பானுகல்லா?

நாட்டுல ஆயிரத்தெட்டு அநீதிங்க நடக்கையில, இப்புடி சினிமாக்காரனோட கல்யாணம், கருமாதியக் காண்பிச்சு உன் டேஸ்ட்ட வேஸ்ட்டு பண்ணி, நேரத்தையும் ஸ்வாகா செஞ்சு, குப்பைங்களை பொழுது போக்குண்ணு மூளையில திணிக்கிறானே, எந்த பயலுக்காவது சொரணை இருக்கா?

சரி அத்தோட வுடாம நாளைக்கே தேனிலவையும் டெலிகாஸ்ட்டு பண்ணுடான்னு விக்க மாட்டானுகளா என்ன? அமெரிக்காவுல இப்புடி புதுமணத் தம்பதிமாரு இணையத்துல முதலிரவை காட்டி காசு பாக்கையில நாளன்னைக்கு நம்ம தமிழ் சினிமா பயலுக செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்? ஏற்கனவே ஸ்டார் வேல்யூ வெளம்பரத்துக்காக தம்பி சிம்பு, நயனுக்கு முத்தா கொடுத்து அதை ஃபீரியா யூ டியூபுல ஓடவிட்ட கதை ஞாபகமிருக்குல்லா? அது மேறி படத்துல நடிக்கிறதை படுக்கையில செஞ்சு காமிச்சு அதுக்கு தேனிலவு லைவ்வுன்னு போட்டா உன்ன மாறி போக்கத்த பயலுவ ஜொள்ளு வடிய பாக்க மாட்டீகளா என்ன? உட்டா நாளைக்கே அக்கா சினேகா வூட்டு கோழி முட்டயை போடுறதையம் ரியாலிட்டி ஷோன்னு போட்டு அதுக்கு நாலஞ்சு ஸ்பான்சர பிடிச்சு நாலரைக்கோடி தமிழருமாருங்கள பாக்க வச்சு பேசவும் வைப்பான்.

வழக்கு எண், சினேகா திருமணம் இரண்டையும் ஏலத்துல எடுத்தவன் விஜய் டி.விங்குறதாலா படத்தோட சினிமா நிருபர்களுக்கான ஷோவ ஐஞ்சு நாள் முன்னாடி  வச்சுட்டானாம். படம் பாக்க வந்த நிருபருங்கிட்ட கல்யாண அழைப்பிதழ் கொடுத்து உறுதி செஞ்சுகிட்டான்.வெள்ளிக்கிழமை சினிமா நிருபருங்கள உள்ளிட்டு ஊரு உலகம் முழுக்க சினேகா அக்கா திருமணத்தை மட்டும் பேசணும்கிறதுதான் விஜய் டிவியோட பிளான். இதுல அண்ணன் பாலாஜி சக்திவேலுக்கு வருத்தம் இருந்தாலும் விஜய் டி.விய பகைச்சுக்க முடியாதுல்லா. என்ன இருந்தாலும் அவன்தான படியளக்குற எசமான்!

அடுத்து அக்கா கல்யாண டெலிகாஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி லைட்டிங், கலரு எல்லாம் ஒரு ஆர்ட் டைரக்டரை வைச்சு போட்டிருக்கான். இது போக நகைங்க, ஆடைகளுக்கு ஸ்பான்சரு சரவணா ஸ்டோராம். ஏலேய் இது கல்யாணம் இல்ல, அது பேருல நடக்குற ஷூட்டிங்குன்னு இப்பவாச்சும் ஒத்துக்கிவியாலே?

பெறவு சினேகா, பிரசன்னாவோட பி.ஆர்.ஓவாக இருக்குறவரை வைச்சு தினசரி ஒரு நியூஸ் வரமாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கான் விஜய் டி.வி. அந்த நியூசு எல்லாம் தினத்தந்தியிலிருந்து, ஜூ.வி, ஆ.வி, குமுதம் அப்புறம் நம்மோட இணையத் தந்தியான தட்ஸ்தமிழ் வரைக்கும் பத்தி பத்தியா போட்டு மந்தை மந்தையா மேய வுட்டுறுக்காணுவ. நியூஸ் வரவர மக்கமாருகிட்ட மவுத் டாக் வளர வளர நாளைக்கு விஜய் டி.வி கண்ணாலத்தை காட்டும் போது டி.ஆர்.பி ரேட்டிங்கு எகிறுமுல்லா?

“சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்” கல்யாணம் நடக்குதுன்னு அந்த மண்டபத்த கூட ஒரு நியூசாக போட்டுருக்கானுக. மத்தபடி புன்னகை இளவரசியோட கல்யாணம் புரட்சித் தலைவி கட்சியோட பொதுக்குழு நடக்குற மண்டபத்துல நடந்துச்சுன்னு ஒரு பயலும் போடல. ஏன்னா ரெண்டுமே நாடகம்தாங்குற சங்கதி மக்களுக்கு தெரிஞ்சிருமுல்லா?

அது கூட பரவாயில்ல, சினேகா அக்கா திருமண அழைப்பிதழ எடுத்துக்கிணு குடும்பத்தோட புரட்சித் தலைவியையும், கலைஞரையும் பாத்ததா ஒரு நியூஸ் போட்டுக்காணுக. ஏம்லே இன்விட்டேஷன் கொடுக்குறதுக்கு குடும்பத்தோட போகாமா வீட்டு நாயைக் இட்டுக்கினா போவாக? இதெல்லாம் ஒரு நியூசுன்னு நீ படிப்பேன்கிற நம்பிக்கையில போடுதாம்லே. கல்யாணத்தன்னைக்கு புரட்சி வரலை, தமிழினத் தலைவர் மட்டும் நம்பர் 2 குடும்பத்தோட வந்து ஆசிர்வதிக்கிறாரு. நம்பர் 1க்கும், 2க்கும் நாந்தான் கல்யாணத்துக்கு வருவேன்னு சண்டை நடந்துச்சான்னு தெரியல. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வருடத்தில பெருசுக்குத்தான் சினேகா கல்யாணம் மாறி எவ்ளோ கமிட்மெண்ட்ஸ்.

பெறவு நலங்கு, மொகந்தி நிகழ்ச்சிங்க, நடிகமாருக்கு தனி ‘பார்ட்டி’ன்னு கூட நியூஸுங்க பன்னிக்குட்டி மாதிரி அணிவகுக்குதுங்க. பார்ட்டியில எத்தனை லிட்டர் காக்டெயிலு ஓடுச்சுன்னு நிருபக்கமாரு நீயூஸ் போடல. அவனே இப்படி சினிமாக்காரவுக பார்ட்டிக்கு போய்த்தான் தாகத்தை தணிச்சுக்கிடுதான். அப்பாலிகா சினேகா அக்கா, பிரசன்னாவோட தனிக்குடித்தனம் போவாகளா, இல்லை கூட்டுக் குடும்பமா, கலியாணத்துக்குப் பிறகு நடிப்பாகளா, சமையல் பண்ணுவாகளான்னு ஒண்ணு விடல. இவ்ளோ நியூஸ் போட்டவனுக கல்யாணத்துக்கு முன்ன புன்னகைச்ச மாதிரி கல்யாணத்துக்கு பின்னயும் அக்கா சிரிப்பாகளான்னு போடவே இல்லை? என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமுல்லா?

 

 

கல்யாணத்தன்னைக்கு ரெண்டு பேரும் ஏழு இலட்சம் ரூபாய் பணத்துல பெங்களூரு டிசைனர் உடைங்கள போட்டத அறிவாளி பத்திரிகை தினமணிக்காரன் நியூசா போட்டுறுக்கான். அதுல உள்ள முக்கியமான நியூஸ் எதுன்னா தம்பி பிரசன்னா அக்காவுக்கு ரெண்டு வாட்டி தாலி கட்டுனாராம். இந்த ரெண்டு வாட்டிக்கும் அக்கா ரெண்டு பட்டுப்புடவைங்களை காஞ்சிபுரத்துல சொல்லி 25 இலட்சத்துல செய்ஞ்சாங்களாம்.

சரி, எதுக்குடே ரெண்டு தபா தாலி கட்டணும்? தம்பி வந்து தெலுங்கு பாப்பார சாதியாம். அக்கா நாயுடு சாதியாம். அதுனால மொதவாட்டி நாயுடு ஸ்டைல தாலி கட்டுன தம்பி, அரைமணி நேர கேப்புல பாப்பார முறைப்படி ரெண்டாவது தாலி கட்டுனாராம். காதல் கல்யாணம், கலப்புத் திருமணம்னு சொல்லிட்டு தாலியக் கட்டுறுதுல கூட சாதிய வுடமாட்டானுகளாம். ரெண்டு சாதியுமே ‘மேல்சாதி’ங்குறதுன்னால ரெண்டு சாதிக்காறவுனகளும் ஒருத்தருக்கொருத்தரு வுட்டுக்க கொடுக்க மாட்டான்.

சரிலே நாளைக்கு அக்கா சினேகாவுக்கு ஒரு குழந்தை பொறந்து, வளந்து ஆளாயி, ஐயங்காரு – ரெட்டி காம்பினேஷன்ல ஒரு வாரிசை கல்யாணம் பண்றதா வச்சுக்குவோம். கூட்டிப்பாத்தா இங்கன நாலு சாதி வருது. அந்தப்படிக்கு நாளைக்கு சினேகா அக்கா குழந்தை நாலுவாட்டி தாலி கட்டுமா?

இதுல சினேகா அக்கா, “ஆட்டோகிராப்” படத்துல வெள்ளையும் சொள்ளையுமாக “ஒவ்வொரு பூக்களுமே”ன்னு பாட்டுப்பாடி இளைஞர்களுக்கு அட்வைசு சொல்ற பார்ட்டி. இயக்குநர் சேரன் சொல்லிக்கொடுத்ததை அக்கா நடிச்சாகன்னு கூட விவரமில்லாத நாட்டுல இந்த இமேஜை உண்மைன்னு நம்பி பல பள்ளிக்கூடத்துக்காரனுக அக்காவ கூப்பிட்டு பள்ளி விழாக்களை நடத்துறானுக. இந்தக் கொடுமையை என்னண்ணு சொல்ல?

இந்த ஆண்டு பிப்ரவரி மாசம், ” சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியதாவது,”ன்னு ஒரு நியூச பாத்தேன். அதுல அக்கா ஆசிரியை உமா மகேஸ்வரி கொலையப் பத்தியெல்லாம் நெம்ப ஃபீல் பண்ணி பேசியிருக்காக. இப்புடி ஊரு உலகத்துக்கு அட்வசு பண்ணுற அக்கா தான் கல்யாணத்துல ஊரு உலகம் மெச்சுற மாதிரி நடந்திருக்கணும்லா? தம்பி பிரசன்னாவும் லயோலா காலேஜூல படிச்சு கொஞ்சம் நஞ்சம் ‘முற்போக்கு’ விசயமெல்லாம் பேசுற ஆளுதான். ஆனா ரெண்டு பயபுள்ளைகளும் இப்புடி சாதிய வுட்டுக்கொடுக்கமாட்டாகன்னா அப்பறும் எதுக்குடே ஊரு உலகத்துக்கு நியாயத்தை கத்துக் கொடுக்கீக?

சரி, இப்புடி ரெண்டு தபா தாலி கட்டுனா சட்டப்படி எதுடே செல்லும்? நம்ப தோஸ்த்து லாயருகிட்ட கேட்டா சட்டமே இப்படி ஒரு சிச்சிவேஷனை சந்திச்சதில்லைங்குறாரு. அதாவது இந்து திருமண சட்டப்படி அக்னியை சுத்தி வந்தா கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனா மேறியாம். அப்படின்னா இங்கன தம்பியும், அக்காவும் ரெண்டு தபா அக்னியை சுத்தி வந்து ரெண்டு தபா தாலி கட்டியிருக்காக. முத தபாதான் சட்டப்படி செல்லும்ணா நாயுடுக்காரன் கல்யாணம்தான் லீகலுக்குள்ள வரும். இது தெரிஞ்சா பார்ப்பானுங்க துள்ளிக் குதிப்பானுங்க. அடுத்து ஒரு பெண்ணுக்கு ரெண்டாவது தபா தாலி கட்டுறதா இருந்தா முத கல்யாணத்தை விவாகரத்து செஞ்சிருக்கணும். அப்போ முதல்ல தாலியக் கட்டி விவாகரத்து செய்ஞ்சிட்டு ரெண்டாவது தபா கட்டுனாத்தான் தெலுங்கு பாப்பார முறை திருமணம் செல்லும். அப்போ நாயுடுக்காரன் திருமணம் அதோகதி.

ஆக ரெண்டு வாட்டிதாலி கட்டுனதால விசயம் முடியல. நாயுடுக்காரனுவகளும், பாப்பானுகளும் நல்லா யோசிச்சு ஃபைசல் பண்ணி ஒரு முடிவுக்கு வாங்கடே. உங்க சாதித் திமிரை ஆய்வு பண்ணுணா கல்யாணத்தன்னைக்கே விவாகரத்த பேச வேண்டியிருக்குதுல்லா? சினேகா அக்கா கல்யாணம் காச்சியுமா இருக்கிறச்சே காளமேகம் இப்புடி அபஸகுனமாக விவாகரத்து பேசுறானேன்னு எம்மேல பாயாதீக? நானா ரெண்டு தபா தாலி கட்டச் சொன்னேன்?

மக்கா, உழைக்குற மக்கள் பல பேரு சாதியக் கடாசிட்டு கல்யாணம் பண்ணியிருக்காக. அங்க இல்லாம் இப்புடி இரட்டைத்தாலிங்குற கேவலம்லாம் இல்லடே. ஆனா ரெண்டு சினிமா வி.ஐ.பிங்க அதுவும் ஊரு உலகத்துக்கு தன்னோட கல்யாணத்த வித்து பாக்கச் சொன்னவன், இப்புடி ரெண்டு தாலி கட்டுற கேவலத்தை, சாதித் திமிரை வுடமுடியாதுன்னு பெருமையா பேசுறானே அதுதாம்லே மகா கேவலம். அந்தக் கேவலத்தை டி.வியில வேற காட்டுறான்னா பாக்குறவன் கேனயன்னுதானடே நெனைப்பு! இதுல நாளைக்கே சாதி மாறிக் கல்யாணம் பண்ணுறவனெல்லாம் இதே மாதிரி ரெட்டைத்தாலி கட்டணும்னு ஒரு புது சடங்கை இந்தக் கசுமாலங்க ஆரம்பிச்சு வச்சுருக்கானுவ. ஒரு தாலியவே விடணும்னு நம்ம தோழருங்க போராடிக்கிட்டிருக்கிற நாட்டுல இனி காதல் திருமணம்னா ரெண்டு தாலின்னா, அதைக் கட்டுறவ லோடு அடிக்கிற மாடா, இல்ல மனுஷியா?

தம்பி பிரசன்னாவும், சினேகா அக்காவும் அவ்வளவா மார்கெட் இல்லாத நடிகருங்கன்னாலும் ஐஞ்சாறு படத்துல நடிச்சுக் கிடைக்கிற காச ஒரே வாட்டி லம்பா மூணு கோடிக்கு வுத்து சுருட்டிட்டிங்கல்லா. இதுல கல்யாணத்துக்க்காக அக்கா பண்ருட்டியில இருக்கிற திருமண மண்டபத்தை வுத்துட்டாகளான்னு நொம்ப ஃபீல் பண்ணி பத்திரிகைகாரனுவ எழுறான். ஏலேய் போக்கத்த மூதிகளா, நடிகைங்க மார்கெட் இல்லேன்னாலும் வளைகுடா நாடுகளுக்கு போய் கலை நிகழ்ச்சி நடத்தி சம்பாதிக்கிறது உங்களுக்குத் தெரியும்தானடே, பெறவு என்ன ஃபீலிங்கு?

இனி, என்ன? விஜய் டீ.விக்காரன் நம்ம வீட்டு கல்யாணம்கிற தொடருல சினேகா அக்கா கல்யாணத்தை போட்டு, அவுக எப்புடி சந்திச்சாக, யாரு புரபோசல் பண்ணுணாக, வீட்டு எதிர்ப்பை எப்படி சமாளிச்சாக, ரெட்டைத் தாலி எப்புடி கண்டுபிடிச்சாகன்னு நாலஞ்சு வாரம் ஓட்டுவான்.

மக்களே, தமிழ்நாட்டுல இந்த ரெண்டு, மூணு மாசத்துல ஐஞ்சாறு கவுரவக் கொலைங்க நடந்திருக்கு. அந்தக் கொலையில இருக்குற சாதி வெறிக்கும், இந்த இரட்டைத் தாலியில இருக்கிற சாதி வெறிக்கும் என்னடே வித்தியாசம்? அதயும் ஒரு டி.விக்காரன் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டப் போறாம்னா, நாமல்லாம் சுரணையுள்ள பயபுள்ளைகளா, பீயத் தின்னுற பன்னிகளா?

______________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி

______________________________________________________

 

முதல் பதிவு: வினவு