Tag Archives: அல்லா

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே

25 ஜன

tntj appalam

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்கு நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.

முதலில் ஷிர்க் என்றால் என்ன? இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.

சரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும்? இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா? டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்பது முக்கியமான கேள்வி.

அண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா? அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா? இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.

இந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா? அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா?

விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா? அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா? இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்?

ஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அவர்கள் கூறுவது என்ன? ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தாயத்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை? டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா?

பொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன? தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.

சமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.

பரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

மேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.

இப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன? டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.

இன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா? அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா? முடியாது என்பதே யதார்த்தம்.

ஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும்? இது முக்கியமான கேள்வி அல்லவா?

இங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன? உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன? அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன? அதை எப்படி தீர்ப்பது? உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா? அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா? ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா? ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா? உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது?

ஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா? உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா? என்பது மட்டுமே கேள்வி.

நீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? உங்களின் பங்களிப்பு என்ன?

முகம்மதின் இரவுப் பயணம் .. .. ..?

9 ஆக

உம்மு ஹானி :   முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ தாலிபின் மகள். இவரது உண்மையான பெயர் ஃபகிதா. உம்முஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால்   அபூ தாலிப் மறுத்து, உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

                தாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன் கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன் யாரும் அறியாமல் எழுந்து உம் ஹனியின் வீட்டிற்குச் சென்றார். இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.

                கஅபாவில் படுத்திருந்த முஹம்மது நபியயை காணவில்லை என மக்கள் தேடிய பொழுது அவர் உம் ஹனியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், மக்காவின் கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம் மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு, அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம் வானம் வரை சென்ற தனது விண்வெளி  பயணத்தைப் பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,

தன்னுடைய அடியாரை ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…

(குர் ஆன் 17:1)

 புகாரி ஹதீஸ் 3207

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் சாறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…

(நெஞ்சைப்பிளந்து OPEN HEART SURGERY செய்து பாவம் நீக்கப்பட்ட கதையை இவர் சிறுவயதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார். பாவத்தை அறுவை சிகிச்சையால் நீக்க  முடியுமா? அறுவை சிகிச்சையால் பாவங்கள் நீக்கப்பட்டது முஹம்மது நபிக்கு மட்டுமே. சந்தேகமே இல்லை இவர் மிகப்புதுமையான இறைத்தூதர்தான்!)

இச்சம்பவத்தைப்பற்றி உம்முஹனி கூறுகையில்

From Ishaq: 184

“Umm (Hani), Abu Talib’s daughter, said: “The Apostle went on no journey except while he was in my house. He slept in my home that night after he prayed the final night prayer. A little before dawn he woke us, saying, ‘O Umm, I went to Jerusalem.’ He got up to go out and I grabbed hold of his robe and laid bare his belly. I pleaded, ‘O Muhammad, don’t tell the people about this for they will know you are lying and will mock you.’ He said, ‘By Allah, I will tell them.’ I told my negress slave, ‘Follow him and listen.’”

 

(அபூதாலிப்பின் மகள் உம்மு (ஹானி) கூறுவதாவது,

(அல்லாஹ்வின்) தூதர் என்வீட்டிலிருந்ததைத்தவிர எந்தப் பயணத்திற்கும் செல்லவில்லை. இரவு வணக்கத்திற்குப் பின் என் வீட்டில் உறங்கிவிட்டார். அதிகாலைக்கு சற்று முன்பாக எங்களை எழுப்பி, ” ஓ, உம்மு நான் ஜெருசலேமிற்கு சென்றிருந்தேன்” என்று கூறி, வெளியே செல்ல முயன்றவரை அவரது உடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினேன். “ஓ முஹம்மதே இதைப்பற்றி மக்களிடம் கூறாதீர், அவர்கள் நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி ஏளனம் செய்வார்கள் என்றேன். “அல்லாஹ்விற்காக, அவர்களிடம் நான் கூறுவேன்” என்றார். நான், என் நீக்ரோ அடிமையிடம், அவரை பின்தொடர்ந்து சென்று கவனிக்க கூறினேன்)

                தன்னுடைய பயண நினைவுகளில் மூழ்கியவாறு பள்ளியில் அமர்ந்திருந்த முஹம்மது நபியை காணும் அபூஜஹ்ல், “ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். நபி பதிலளிக்கையில், “ஆம். நேற்று இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்றார். தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், “ஜெருசலேமிற்கா?” என்றார் அபூஜஹ்ல்.

                முஹம்மதை ஒரு பொய்யர் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்ததாக நினைத்த அபூஜஹ்ல் முஹம்மது நபியிடம், “நான் மற்றவர்களையும் அழைத்து வருகிறேன் அவர்களிடமும் இதைக் கூற முடியுமா? என்றார். அதற்கு சிறிதும் தயக்கமின்றி “ஆம்” என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம் கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை  தீர்க்கும் வகையில், அங்கு எத்தனை கதவுகள் இருந்தது?, எத்தனை ஜன்னல்கள் இருந்தது? அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன? என்பது போன்ற பலவிதமான கேள்விகளை மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றி கேட்கின்றனர்.

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்

காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

Sahih Al-Bukhari HadithHadith 6.233

Narrated by Jabir bin Abdullah

The Prophet said, “When the Quraish disbelieved me (concerning my night journey), I stood up in Al-Hijr (the unroofed portion of the Ka’ba) and Allah displayed Bait-ul-Maqdis before me, and I started to inform them (Quraish) about its signs while looking at it.”

(நபி கூறுகிறார், குரைஷிகள் என்னை நம்பவில்லை, நான் அல் ஹிஜ்ர் (கஅபாவின் கூரையிடப்படாத பகுதி) முன் நின்று கொண்டிருந்தேன். அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என் முன்னே காண்பித்தான். நான் பார்த்த அடையாளங்களை அவர்களுக்கு கூறினேன்)

 

முஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

“(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.

“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.

“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Ishaq:183

“Upon hearing this many became renegades who had prayed and joined Islam. Many Muslims gave up their faith. Some went to Abu Bakr and said, ‘What do you think of your friend now? He alleges that he went to Jerusalem last night and prayed there and came back to Mecca.’

(இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர். சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில் ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும், உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்)

அவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மையே என்றார். அபூபக்கர், இதன் பிறகே  சித்தீக் (உண்மையே கூறுபவர்) என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார்.  ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க மறுத்து  சிலர் இஸ்லாமை விட்டு விலகினர். இச்சம்பவத்தின் பொழுது 70 – 80 பேர்களே இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

“மஸ்ஜித்” என்பது முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்பது சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்பது ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.

                இந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல் கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல் நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70 ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம் தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும் எண்கோண (Octagon)  வடிவ பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல் கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு  கட்டப்பட்டது. கிபி 1016 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும் கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம் குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.

இந்த வாததிற்கு ஆதாரம் இஸ்லாமிய வரலாற்றிலேயே இருக்கிறது. நபியின் மரணத்திற்குப் பிறகு, கலீபா உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சென்ற கலீபா உமர் தொழுகைக்கு நடத்த இடம் தேடுகிறார். அங்கு எந்த ஒரு பள்ளிவாசலும் இல்லாததால், கிருஸ்துவ பாதிரியார்  ஒருவர் தங்களது ஆலயத்தில் தொகை நடத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார். கிருஸ்துவ ஆலயத்தில் தொழுகை நடத்த விரும்பாத கலீபா உமர் கத்தாப் அவர்கள்,  குப்பைகூளத்துடன் காணப்பட்ட ஒரு திறந்த வெளியை சுத்தம் செய்து தொழுகை நடத்தியதாக வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது.  அந்த திறந்த வெளி எதுவென்றால் சுலைமான் நபி கட்டியதாக கூறப்படும் Solomon Templeஎன்ற யூதக் கோவில் இருந்த இடம்.  நிர்வாக காரணங்களுக்காக,  உமர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார். மக்களின் தேவைகளை விசாரித்து அறிகிறார். அவர் அங்கு புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணனிக்கிறார். அது “மஸ்ஜிதுல் உமர்” என்றழைக்கப்பட்டது.

இப்பொழுது என் மனதில் எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் நபி எங்கிருந்து மிஹ்ராஜ் பயணம் சென்றார்?

கிபி  622-623 ல் குர்ஆன் 17:1 கூறும் மஸ்ஜதுல்அக்ஸா எங்கே?

                மெக்கா நகரவாசிகள் முஹம்மது நபியின் இரவுப் பயணத்தைப் பற்றி குறுக்கு விசாரணை செய்கையில், அல்லாஹ், நபியின் கண்களில் பைத்துல் மக்தஸை தோன்றச் செய்ததாகவும், அதன் அடையாளங்களைப்பற்றி குறிப்பிட்டவுடன், அவர்கள் மறுத்துப் பேச முடியாமல் போனதாகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. இல்லாத ஒன்றை எப்படி காண்பிக்க முடியும்? முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் அறியாத ஒரு மஸ்ஜிதைக் குறித்து விசாரணை  செய்து எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்க முடியும்?

                இது இன்னொரு விவாதத்தையும் முன்வைக்கிறது. முஹம்மது அவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஹிஜ்ரத்திற்கு பிறகும் ஒன்றரை ஆண்டுகள் வரை பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக கொண்டு தொழுதார்கள். அதன் பிறகே நபியின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) கிப்லாவாக மற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

நபியே உம்முடைய முகம் (கிப்லா மாற்றக கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை திண்ணமாக நாம் திருப்பி விடுகிறோம். எனவே உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின்பால் திருப்புவீராக

(குர் ஆன் )

இல்லாத பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கிய ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் தொழுகை நடந்துள்ளதாகவும் பொருள் தருகிறது. பைத்துல் முகத்தஸ் எங்கே?

இந்த மஸ்ஜிதுல் அக்ஸா தெடர்பான இன்னொரு ஹதீஸையும் பார்ப்போம்

புகாரி ஹதீஸ் :3366,

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (நபி – ஸல் – அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் எது என்று கேட்டேன். அவர்கள், அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறை இல்லம் என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது என்று கேட்டேன். அவர்கள், (ஜெருஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். நான், இவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது என்று கேட்டேன். அவர்கள், நாற்பது ஆண்டுகள் (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுது விடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது என்று சொன்னார்கள்.

முஸ்லீம் ஹதீஸ் எண்: 808  அத்தியாயம்: 5, பாடம்: 5.01, 

அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)

“அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையாலயம் எது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறிவிட்டு, “உங்களைத் தொழுகை (நேரம்) வந்தடையும் இடத்தில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) அதுதான் (உங்களுக்கு) மஸ்ஜித்” என்று கூறினார்கள்.

இதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம் நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால் கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்)  கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள். முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளது.

நாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி  அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.

புகாரி ஹதீஸ் :  7517   

…”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…

Readislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…

…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார்.  அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER  ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா  ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.

யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின்  நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.

அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.

போலந்துக்காரர் கோபர் நிகஸ் (1473-1543) பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்?  இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட  கியார்டனோ புரூனோ (1548-1600) என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். டைகோ பிராகே (1546-1601) என்பவர் தனது 20 வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642), கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும், பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.

சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர், தங்களது தவறான கோட்பாட்களுக்கும், விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர். அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

பழைய வேதங்களின் நிலையும் குர் ஆனின் குழப்பமும்

சந்திரனும் பிளந்து விட்டது

போர்க்களத்தில் வானவர்கள் .. .. .. அல்லாவின் தகுதி?

பழைய வேதங்களின் நிலையும், குரானின் குழப்பமும்

1 நவ்

 

 

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …

(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.

(குர்ஆன் 2:75)

 

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

 

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.

(குர்ஆன் 15: 9)

                இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

 

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.

(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …

(குர்ஆன் 2: 4)

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

(குர்ஆன் 5:44)

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.

 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :

  • குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
  • குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய வேதங்கள்  ஆகும்
  • குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய      மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
  • முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக       அல்லாஹ்      தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர் ஆன் பாதுகாக்கப்பட்டு   இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

 

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

 

குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

அல்லது

அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ்,  பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தை வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும். 

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?

முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?

அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?

குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்.  இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.

ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.

ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)

ü “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106) 

முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

புகாரி ஹதீஸ்4095

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள்கூறியதாவது :

பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)

” நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள்  சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் “.

நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்?  ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.

புகாரி ஹதீஸ் : 4986          

வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது

…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …

 நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282)  விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில்  தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு (வாத்து, மாடு, ஒட்டகம், பூனை, நாய், முயல்) மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.

புகாரி ஹதீஸ் :        4987  

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில்  இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான்,  குர்ஆனை மீண்டும் தொகுக்க  அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,

(ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,)

Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:

حديث “اقتلوا نعثلا قتل الله نعثلا” تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة

The hadith “kill Nathal, may Allah kill Nathal” refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.

Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:

فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا

Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’

(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக்  கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்” என்பார்.)

ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத்  தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?

பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும்  திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?

எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா இருக்கிறது. 

முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி  பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?

சரி…  

அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி  பெற ஏவுவது எதற்காக?

ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.

(குர்ஆன் 17: 16)

 இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது.  தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம்.  சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா?  இதற்கு ஒரு வேதம் தேவையா?

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

கிருஸ்துவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

25 ஆக

இயேசு சிலுவை மரணத்தின் போது  கூறியதை கவனியுங்கள், 

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

(லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

(மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில்(The Trinity)  ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின்(The Trinity) மூன்று ஆளத்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மிகச் சாதாரண மனிதர்களே மரணத்தை மிகத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். உதாரணத்திற்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சதாம் ஹூஸைன் சிறிதும் அச்சமின்றி அமெரிக்காவின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவாறே தூக்குக் கையிற்றை நெருங்கியதை  நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  அனைத்தையும் அறிந்த கடவுள்  இப்படி பயந்து நடுங்கி புலம்பிக் கொண்டே மரணமடைவானா? மேலும், மரணமடைபவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று இஸ்லாம் கேட்கும் கேள்விகளில் எந்த தவறுமில்லை. இயேசு கடவுளாக இருக்க முடியாது  என்ற முஸ்லீம்களின் வாதமும் சரியாகவே தோன்றுகிறது. 

ஆள்மாறாட்டம் செய்தால் மட்டுமே  ஈஸா நபியைக் காப்பாற்ற முடியுமென்ற நிலைமை  அல்லாஹ் இல்லையே? ஆள் மாறாட்டத்தின் விளைவுகளைப் பார்க்கையில், ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  செயல் மாபெரும் குழப்பமாக உள்ளது என்ற கிருஸ்துவர்களின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும்  மறுக்க முடியாது. இயேசு சர்வவல்லமையுடைய கடவுள் என்பதும், அல்லாஹ் என்ற சர்வ வல்லமையுடைய இறைவன் தனது தூதரை ஆள்மாறாட்டம் செய்து காப்பாற்றினான் என்ற இந்த இருவாதங்களுமே  முட்டாள்த்தனமானவைகள் என்பது தெளிவாகிறது.

  சிலுவையில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை மட்டுமே, கிருத்துவமும்,  இஸ்லாமும் கூறும் செய்திகளிலிருந்து நாம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆள்மாறாட்டக் கதையை மேலும் சிறிது ஆய்வு செய்வோம். ஈஸா நபியின் உருவ அமைப்பிற்கு யூதாஸ் மாற்றப்பட்டான் என்ற பர்பனபாஸ் சுவிசேஷத்தின்  கருத்தை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். யூதாஸ் என்ன தவறு செய்தான்? முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்தான். அவனது துரோகச் செயலுக்கு  தண்டனையாகவே ஆள்மாறாட்டத்தில் அவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான்.

யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்கு, ஈஸா நபி மறைந்திருந்து “கொரில்லா” முறைத் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத புரட்சிப்படை தளபதி இல்லையே! ஈஸா நபி யூத மக்களுக்கும், யூத அதிகரிகளுக்கும் நன்கு அறிமுகமானவர். அவரிடம் எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொருவரும் அவரை நன்கு அறிவார்கள். தனது போதனைகளை எவ்வித ரகசியமுமின்றி வெளிப்படையாகவே செய்தார். அவர் தினமும் யூத கோவிலில், யூதமத குருமார்களுடனும், யூதமதச் சட்ட எழுத்தர்களுடனும், அங்கிருந்த மதவியாபாரிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர். ஈஸா நபியின் அற்புதங்கள் மூலமாகவும் அவரை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். ஈஸா நபியை கைது செய்ய அதிகாரிகள் வந்த போது, “நான் தினமும் இந்த கோவிலில் இருந்தவாறே உங்களுக்கு போதனை செய்தேன் அப்பொழுது என்னைக் கைது செய்ய உங்களது கரங்களை நீங்கள் உயர்த்தவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு திருடனைக்கைது செய்வதைப் போல இந்த நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறீர்கள் “ என்றார்.

எனவே யூதாஸ்  முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு,  முத்தம் செய்து காட்டிக் கொடுத்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வாதத்தற்காக அவன் ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்ததாகவும் அவனது துரோகத்திற்குப் பலனாக அவன் ஆள்மாறாட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும் வைத்துக் கொள்வோம்.

அதாவது, ஆள்மாறாட்டத்திற்குப் பிறகு, மறு வினாடியிலிருந்து யூதாஸ் என்றொருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. அதாவது யூதாஸின் உருவமும், குரலும் ஈஸா நபியைப்போல மாற்றப்பட்ட பிறகு யூதாஸின் உருவ அமைப்பில் ஒருவரும் அந்தப் பகுதியில் இல்லை. ஆனால், இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு யூதாஸ் மனவேதனையால் தற்கொலை செய்து கொண்டதாக பல ஆதாரங்கள் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

சிலுவையில் மரணமடைந்த இயேசு நாதரின் உடல் அதாவது, குர்ஆனின் மொழியில் சொல்வதென்றால் ஈஸா நபியைப்போன்ற தோற்றமுடைய(யூதாஸ் என்ற)வரின் உடல் என்ன ஆனது? அது எப்படி எழுந்து சென்றது?

இயேசு நாதர் கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்ததாகவும் சீடர்களுக்கு காட்சி தந்ததாகவும் கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தது யூதஸா? யூதாஸிற்கு அத்தகைய அற்புத சக்தி வழங்கப்பட்டிருந்ததா?

 இதைப் போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் எந்த பதிலும் இல்லை…!

பர்னபாஸ் சுவிசேஷம் இதற்கு பதிலைச் சொல்லுகிறது. சிலுவையில் மரணமடைந்த ஈஸா நபியைப் போன்ற தோற்றமுடைய( யூதாஸ் என்ற)வரின் அடக்கம் செய்யப்பட்ட உடலை, கடவுளுக்கு அதாவது அல்லாஹ்விற்குப் பயப்படாத ஈஸா நபியின் சீடர்களில் சிலர்,   கல்லறையிலிருந்து திருடி, மறைத்து, இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறி அனைவரையும் குழப்பத்திலாழ்த்தி நம்பவைத்ததாகக் குற்றம்சாட்டுகிறது.

Those disciples who did not fear God went by night [and] stole the body of Judas and hid it, spreading a report that Jesus was risen again; whence great confusion arose.

 (Gospel of Barnabas 218:1)

ஈஸா நபியை ஏற்றுக் கொண்ட மக்களை, “ஈஸா நபி மரணத்திற்குப் பின்னும் உயிர்த்தெழுந்தார்” என்ற பொய்ச் செய்தியின் மூலம் திசை திருப்பி அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி தவறி, கிருஸ்துவம் என்ற பொய்யான மதத்தை உருவாக்கிய ஈஸா நபியின் சீடர்களைப் பற்றி அல்லாஹ்விற்கு எதுவுமே தெரியவில்லை. பிணத்தை மறைத்து, பொய்யை இட்டுக் கட்டி பெரும் பாவத்தை நிகழ்த்திய, ஈஸா நபியின் சீடர்களைக் கண்ணியமானவர்கள் வெற்றியாளர்கள் என்று குர்ஆனில் கூறுகிறான். பர்னபாஸ் சுவிசேஷத்தை எழுதியவருக்குத் தெரிந்த செய்தி கூட அல்லாஹ்விற்குத் தெரியவில்லை. குர்ஆன் ஒரு முழுமையற்ற, தெளிவற்ற புத்தகம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

குழப்பம் இத்துடன் நிறைவடையவில்லை. ஈஸா நபியைப் போன்ற தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்ட அந்த ஒருவர் யார்? அவர் ஏன் அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கேள்விகளுக்கு, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் எந்தவிதமான  விளக்கமும் இல்லை. ஆனால் குர்ஆன் விரிவுரைகளில்  விளக்கம் காணப்படுகிறது.

 துரோகத்திற்கு தண்டனையாக யூதாஸின் குரலும் உருவமும் ஈஸா நபியைப் போல மற்றப்பட்டது என்ற விளக்கங்களை நம் இதுவரை பார்த்தோம்.  இனி வேறு விதமான செய்திகளையும் வாதங்களையும் பார்ப்போம்.

குர் ஆனின்4 :157-ம் வசனத்திற்கு இப்ன் அப்பாஸ் கூறும் விரிவுரை

(And because of their saying: We slew the Messiah Jesus son of Mary, Allah’s messenger) Allah destroyed their man Tatianos. (They slew him not nor crucified, but it appeared so unto them) Allah made Tatianos look like Jesus and so they killed him instead of him; (and lo! those who disagree concerning it) concerning his killing (are in doubt thereof) in doubt about his killing; (they have no knowledge thereof save pursuit of a conjecture) not even conjecture; (they slew him not for certain) i.e. certainly they did not kill him.

(ஈஸா நபியை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. டேஸியானோஸ் என்பவர் ஈஸா நபியின் உருவத்திற்கு ஒப்பாக்கப்பட்டார். அவரையே அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். )

தனது இதே கருத்தை இப்ன் அப்பாஸ் மற்றொரு விளக்கவுரையிலும் உறுதி செய்கிறார்.

(And they schemed) they, i.e. the Jews, planned to kill Jesus, (and Allah schemed (against them)) Allah wished to kill their man Tatianos: (and Allah is the best of schemers) the strongest of those who have a will; it is also said this means: the best of Makers. [Sura 3 aya 54 ; ibn Abbas]

கிருஸ்த்துவம் உருவானதைப்பற்றி கூறும் 61:14 ம் குர்ஆன் வசனத்திற்கு இப்ன் கதீர் கூறும் விரிவுரை

Imam Abu Ja`far bin Jarir Al-Tabari reported that Ibn `Abbas said, “When Allah decided to raise `Isa to heaven, `Isa went to his companions while drops of water were dripping from his head. At that time, there were twelve men at the house. `Isa said to them, `Some of you will disbelieve in me twelve times after having believed in me.’ He then asked, `Who among you volunteers that he be made to resemble me and be killed instead of me; he will be with me in my place (in Paradise).’ One of the youngest men present volunteered, but `Isa commanded him to sit down. `Isa repeated his statement and the young man again stood up and volunteered, and `Isa again told him to sit down. `Isa repeated the same statement and the young man volunteered. This time, `Isa said, `Then it will be you.’ The appearance of `Isa was cast upon that young man, while `Isa, peace be on him, was raised to heaven through an opening in the roof of the house. The Jews came looking for `Isa and arrested the one that appeared as him, killing him by crucifixion. Some of them disbelieved in `Isa twelve times, after they had believed in him.

They divided into three groups. One group, Al-Ya`qubiyyah (the Jacobites), said, `Allah remained with us as much as He willed and then ascended to heaven.’ Another group, An-Nasturiyyah (the Nestorians), said, `Allah’s son remained with us as much as Allah willed and He then rasied him up to heaven.’ A third group said, `Allah’s servant and Messenger remained with us as much as Allah willed and then Allah raised him up to Him.’ The last group was the Muslim group. The two disbelieving groups collaborated against the Muslim group and annihilate it. Islam remained unjustly concealed until Allah sent Muhammad,..

(இமாம் அபு ஜாஃபர் இபின் ஜரீர் அல்-தபரி அறிவிப்பதாக இப்ன் அப்பாஸ் கூறுவது, ஈஸாவை சொர்க்கத்திற்கு உயர்த்த முடிவு செய்த பொழுது, ஈஸா தன் தலையிலிருந்து (வியர்வை) நீர் துளிகள் சொட்டிய நிலையில் தனது சீடர்களிடம் சென்றார். அவ்வேளையில், பன்னிரண்டு பேர் அந்த வீட்டிலிருந்தனர். ஈஸா அவர்களிடம் கூறினார், பன்னிரண்டு முறை என்மீது விசுவாசம் கொண்ட பின்னரும் உங்களில் சிலருக்கு என் மீது விசுவாசமின்றிப் போகும் என்றார். பிறகு அவர் கேட்டார், என் உருவ அமைப்பிற்கு ஒப்பாக்கப்பட்டு எனக்கு பதிலாக (சிலுவையில்) கொல்லப்பட்டு; (மறுமையில்) என்னுடன், என்னுடைய இடத்தில் சொர்க்கத்திலிருப்பதற்கும் உங்களில் தன்னையே அர்பணிப்பதற்கு யார் இருக்கிறார் ? என்று கேட்டார். அவர்களில் இளைஞர் ஒருவர் தன்னை அர்பணிக்க முன்வந்தார். ஆனால் ஈஸா அவரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா தனது கோரிக்கையை மறுபடியும் கூற அதே இளைஞர் எழுந்து நின்றார். ஈஸா மறுபடியும் அந்த இளைஞரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா  மறுபடியும் கூற, மறுபடியும் அதே இளைஞர் எழுந்து நின்றார். இம்முறை ஈஸா, “அப்படியானால் அது நீர்தான்” என்றார். அந்த இளைஞரின் உருவ அமைப்பு ஈஸாவைப் போல மாற்றப்பட்டது. அந்த வீட்டின் கூரையிலிருந்த திறப்பு வழியாக ஈஸா வானுக்கு உயர்த்தப்பட்டார். ஈஸாவைத் தேடி வந்த யூதர்கள் அவரைப் போன்ற உருவ அமைப்பிற்கு மாற்றப்பட்ட அந்த இளைஞரை சிலுவையில் அறைந்து கொன்றனர். அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு முறை ஈஸாவின் மீது விசுவாசம் கொண்ட பின்னரும் அவர்களில் சிலருக்கு  விசுவாசமின்றிப் போனது.

அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவான, அல்-யாக்கூபிய்யாவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ் எங்களுடனே இருக்கிறான் என்றனர். மற்றொரு குழுவான, அந்-நஸ்தூரிய்யவினர் கூறினர் அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் மகன் தங்களுடனே இருப்பதாகக் கூறினர். மூன்றம் பிரிவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் அல்லாஹ்விடம் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் சேவகரும், தூதரும் தங்களுடனே இருப்பதாக கூறினர். இறுதியான குழுவினர் முஸ்லீம்கள். நம்பிக்கையற்ற இரு குழுக்களும் முஸ்லீம் குழுவை அழிப்பதற்காகக்கு எதிராக ஒன்றினைந்தனர். அல்லாஹ் முஹம்மதுவை அனுப்பும் வரை இஸ்லாம் அநியாயமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்தது…)

இப்ன் கதீர் கூறும் இந்தக் காட்சியை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

ஈஸா நபி தன் சீடர்களின் முன் நின்று கொண்டு கூறுகிறார், சொர்க்கத்திற்குவரும்படி எனக்கு அழைப்பு வந்திருக்கிறது, நான் அங்கு சென்று இன்பங்களில் திளைக்கப் போகிறேன். யூதர்கள் என்னைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எனவே எனக்கு பதிலாக  அடிகளையும், உதைகளையும், சவுக்கடிகளையும், கொடுமைகளையும், அவமானங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து கொடூரமான முறையில் சிலுவையில் மரணமடைய விரும்புபவர் உங்களில் யார் இருக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பாரா? இதுதான் தெய்வீகத் தன்மையா?

வேறொருவர் ஒப்பாக்கப்பட்டாமல் ஈஸா நபியை சொர்க்கத்திற்கு உயர்த்த முடியாதா? ஈஸாவிற்குப் பதிலாக வேறொருவர் ஒப்பாக்கப்பட்டால் மட்டுமே, அல்லாஹ்வால் அவரை(ஈஸா) சொர்க்கத்திற்கு உயர்த்த முடியும் என்று கூறுவது  சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

இப்ன் கதீர் கூறும் இந்த முட்டாள்தனத்தை,  வாதத்திற்காக உண்மையென்று வைத்துக் கொள்வோம். சிலுவையில் கொல்லப்பட்ட ஒருவரைத் தவிர மீதம் உள்ள பதினொரு சீடர்களுக்கும், ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டதும், சிலுவையில் கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பதையும் மிக நன்றாக எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிவார்கள். அபாண்டமான  பொய்ச் செய்திகளான இயேசு நாதரின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கூறி அவரது போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? இதற்காக அவரது சீடர்கள் உறவுகளையும், உடைமைகளையும் துறந்து பரதேசிகளாக சுற்றித் திரிந்தனர். பலர் கடுமையான அவமானங்களுக்கும்,  துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி கொடுமையான தண்டனைகளால் உயிரை விட்டனர் என்பது வரலாற்று செய்திகள்.

தெரிந்தே ஒரு பொய்யைத் திட்டமிட்டு பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

 சிலுவை மரணத்திற்குப்பின் ஈஸா/இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறுவது பகுத்தறிவிற்கு  ஏற்புடையது அல்ல! இயேசு உயிர்த்தெழுந்த கதை பர்னபாஸ் சவிசேஷம் கூறுவதைப் போல உண்டாக்கப்பட்டிருக்கலாம். குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதை அர்த்தமற்றது. அது அல்லாஹ்வை கையாலாகதவனாக சித்தரிக்கிறது.

பர்னபாஸ் சுவிசேஷத்துடனும் குர்ஆன் முரண்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  இயேசு நாதர் உயிர்தெழுந்த கதையும், குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதையும் அர்த்தமற்றது. இப்படியொரு நம்பிக்கை ஏன் உருவானது?

நித்தியானந்த சாமியாரின் லீலைகள் வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. அப்பொழும் அவர் மீது நம்பிக்கை கொண்ட சிலர், தங்களது குரு நேர்மையானவர், கண்ணியம் நிறைந்தவர் என்று கூறி, குற்றம் சுமத்திய  லெனின் கருப்பனைக்  குற்றவாளி என வாதிட்டவர்களையும் நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. இதை ஆள் மாறட்டம் என்று உறுதிபடக் கூறும் அவர்களது ஆரவாளர்களையும், அரசியல்வாதிகளையும், அறிவு ஜீவிகளையும்  நீங்கள்  இன்றும் பார்க்கலாம்.

இப்படியொரு (நஸ்தூரிய்யா – நெஸ்ட்ரோனிய) கிருஸ்துவர்களின் கூட்டம், முஹம்மது நபியின் காலத்தில் அன்று பாரசீகம், டமாஸ்கஸ் மற்றும் வட அரேபிய பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இவர்கள் ஈஸா/இயேசு மனித பண்புகளும் தெய்வீகத்தன்மையும் தனித்தனயே கொண்ட ஒரு மனிதரே என்றும் கடவுளால் மகனான தத்தெடுத்துக் கொள்ளப்பட்டவர் என்று நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை கிபி 428-431-ளில் நெஸ்டோரஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர்கள், கடவுளின் மகனைக் கொல்லவே முடியாது கடவுள் ஏதேனும் யூதரின் முகத்தை இயேசுவிற்கு ஒப்பாக மாற்றி அவனை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு சூழ்ச்சி செய்து தனது மகனைக் காப்பாற்றி விட்டார் என்று நம்பிவந்தனர். இந்தக்  கதை குர்ஆனையும் விட்டுவைக்கவில்லை.

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார்பொறுப்பு?

        குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே ! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின்  சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது” என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத “அறியாமையில்” இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்” என்ற முடிவிற்கு வரலாம்

முஹம்மது நபியின் கூற்றுப்படி,  ஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.  ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்ட)  சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான “ஷிர்க்” (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “ஈஸாநபியின்  போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய நபியை” புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவதுசம்பாதித்துஇருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும்  இஸ்லாமுக்குமாற்றவில்லை.

அல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி  தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், “இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்” என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.

குர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லை.  தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறான்.

        ஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

 இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை  பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி ” ஈஸாநபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான்.

இவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்” என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும்  வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது.? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்? அல்லாஹ்தான்.

ஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான்.  யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம்  நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.

குர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின்  இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  குர்ஆன் குழப்பமாக உள்ளது.

ஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

இவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு?) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா?

… வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

அல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,

முஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா?

 (குர்ஆன் 3:144)

முஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா?

        ஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார்,  மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் இறுதிப் பகுதி

25 ஜூலை

இந்த விவாதத்தின் கடைசிப் பகுதியாக காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் எந்தவித தயக்கமும் இன்றி ஈடுபடும் மதவாதிகளின் அடிப்படை குறித்து அலசலாம்.

 

ஒரு நடவடிக்கை அல்லது செயல் எந்த அடிப்படையில் ஒருவனால் மேற்கொள்ளப்படுகிறது? தன்னால் செய்யப்படும் செயல் தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் இருக்கும் போது மட்டுமே அதை செய்வதற்கான உந்துதல் அவனுக்கு கிடைக்கும். தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் எந்த வழியில் வருகிறது? ஒரு செயல், அதற்கான தூண்டுதல், விளைவு, எதிர்வினை போன்றவை தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவை இரண்டு வழிகளில் அடைகிறார்கள். 1. சரியா? தவறா? 2. சாதகமா? பாதகமா?

 

உலகின் பெரும்பாலான மக்கள் சாதகமானதா? பாதகமானதா? எனும் கோட்டில் நின்று தான் சிந்திக்கிறார்கள். தாம் செய்யப் போகும் ஒரு செயல் சரியானதா? தவறானதா? எனும் ஆய்வு அவர்களுக்குள் ஏற்படுவதில்லை. தவறானதாக இருந்தாலும் சாதகமானதாக இருந்தால் செய்துவிடுவதும், தாம் செய்வதையே சரி என வாதிடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. சரி என்று வாதிடுபவர்கள் அனைவரும் அது சரி என தெரிந்ததனால் வாதிடுபவர்கள் அல்லர். தவறு என்று தெரிந்து கொண்டே சரி என வாதிடுபவர்களே இங்கு அதிகம். இது ஏன்?

 

ஒன்று சரியா தவறா அல்லது சாதகமா பாதகமா எனும் முடிவு அந்தந்தப் பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிறக்கிறது. இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரியா தவறா? சாதகமா பாதகமா? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்கிறார்கள். தனக்கு சாதகமானது என்று ஒன்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கும் ஒருவரால் மெய்த்தன்மையில் அது பாதகமானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை தவறு என்று அவரால் தள்ள முடியாது. ஏனென்றால் அவரது கருத்துக்கு எதிராக அவரால் சிந்திக்க முடிவதில்லை. சிந்தனை கருத்து இரண்டுமே அனுபவங்களிலிருந்து அதாவது சமூகத்திலிருந்து தோன்றுபவை தான் எனும் போது ஏன் ஒருவரால் அவரின் சொந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க முடியாது? ஒரு பொருளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மீறி அதே பொருளைப் பற்றிய வேறு கருத்துகளும் இருக்கக் கூடும் எனும் நிலையைச் செரிக்க அவனால் முடிவதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு கருத்து அவனுள் நம்பிக்கையாக நிலை பெற்றிருக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிராக சிந்தனை செய்வது என்பது சாத்தியமற்றுப் போகிறது. இந்த நம்பிக்கையின் அடிக்கல்லில் எழுந்து நிற்பது தான் மதம். மதத்திற்கு எதிரான சிந்தனை குற்றமாகவும் பார்க்கப்படுவதால் மதத்துக்கு எதிரான சிந்தனைகள் எப்போதுமே இயல்பை மீறிய விசயமாகவே இருக்கிறது.

 

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடயேயுள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டால் யாரும் சட்டெனக் கூறுவது சிந்தனை என்பது தான். ஆனால் விலங்குகள் சிந்திப்பதில்லையா? சிந்திக்கின்றன. கழுதைப் புலிகள் கூட்டாக வேட்டையாடுகின்றனவே சிந்திக்காமல் சாத்தியமா? வேறென்ன வேறுபாடு, பகுத்தறிவா? விலங்குகளும் பகுத்தறிகின்றனவே. குறிப்பிட்ட செடியை மட்டும் உண்ணாமல் தவிர்க்கின்றன ஆடுகள். பகுத்தறியவில்லை என்றால் சாத்தியமா? மனிதர்களைப் போலவே விலங்குகளும் உழைக்கின்றன, உண்கின்றன, தாய்மை உணர்வு கொள்கின்றன. ஆனால் மனிதனைப் போல் விலங்குகளால் மீளாய்வு செய்ய முடிவதில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயல் சரியானதா? தவறானதா? தொடர்ந்து செய்யலாமா? கூடாதா? என்பன போன்ற சிந்தனைகள் அதாவது ஒன்றை ஐயப்படத் தெரியாது விலங்குகளுக்கு. அதாவது உயிர் வாழும் தன்மைக்கு பாதிப்பு நேரிடாதவரை தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்வதில்லை விலங்குகள். மனிதன் எந்த நிலையிலும் மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்பது தான் உண்மையேயன்றி; ஒவ்வொன்றையும் மீளாய்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையாக இருக்க முடியாது. தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அது சரியா தவறா? என உள்வசமாய் சிந்திக்காமல்; சூழலுக்கான தம்முடைய எதிர்வினை சரியானதா? என்பதை ஆராயாமல் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு எதிராய் இருக்கும் அத்தனையும் தவறாகவே இருக்கும் என்று எந்த மீளாய்வுக்கும் இடமில்லாமல் எந்த இடத்தில் முடிவு செய்கிறானோ அந்தப் புள்ளியிலிருந்து மூட நம்பிக்கை தொடங்குகிறது. அவன் அதை மூடநம்பிக்கை என்று வகைப்படுத்தவில்லை என்றாலும் கூட அதுவே நிஜம்.

 

ஆக, யாராக இருந்தாலும் அவர் தாம் செய்யும் செயல்களை – அது எந்த தத்துவத்தின் வழியில் வருவதாக இருந்தாலும், எந்த மதத்தின் அடிப்படையில் இருப்பதாக கொண்டாலும் – அதை மீளாய்வுக்கு உட்படுத்துகிறாரா? இல்லையா? என்பது மட்டுமே அவர் சரியான நிலைபாட்டில் இருக்கிறாரா என்பதை தெளிவதற்கான அளவுகோல். இப்போது கடையநால்லூர் நிகழ்வில் இதை பொருத்திப் பார்ப்போம். தோழர் துராப்ஷாவைத் தாக்கிய, தாக்க நினைத்த, தாக்கியதை சரி என்று எண்ணிய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கேட்கலாம், “உங்களிடம் இன்னும் நேர்மை உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருக்குமானால் தோழரை நீங்கள் தாக்கியது, தாக்க நினைத்தது, தாக்கப்பட்டதை சரி என்று எண்ணியது சரிதானா?” நீங்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போக விருப்பமில்லாதவர்களாயின் நீங்கள் மீளாய்வு செய்தே தீர வேண்டும்.

 

உங்களைச் சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளுக்கு நீங்கள் காது கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் கொதித்தெழுந்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்வை வளங்களை பறித்து உங்களை கடல் கடந்து ஓட வைத்திருக்கும் முதலாளித்துவத்தை நினைத்து நீங்கள் சினந்தது உண்டா? குறைந்தபட்சம் அதை புரிந்துகொள்ளவேனும் முயற்சித்ததுண்டா? உங்கள் கண் முன்னே லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த போது உங்கள் தார்மீகக் கோபம் எங்கே போனது? கல்வியை கை கழுவிவிட்டு மதுவை அரசுடமை ஆக்கி ஆறாய் ஓடச் செய்திருக்கும் இந்த அரசுக்கு எதிராக உங்கள் கைகள் உயர்ந்ததுண்டா? இன்றல்ல, இரண்டல்ல .. .. சமூகத்தில் நிகழும் பெரும்பாலான செயல்களும் ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. அவைகள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன? உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா?

 

ஆனால், ஆனால் கேவலம் மதத்துகு எதிராய் எழுதினான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அப்படியே நம்பி  தாக்கத் துணிந்தீர்களே! உங்கள் செயல் சரிதானா என சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் வந்ததுண்டா உங்களிடம்? என்றால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள்? கேள்வியை கேட்டு விட்டேன், பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.

 

முதல் பதிவு: செங்கொடி

கிருஸ்தவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான்

11 ஜூலை

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 21

(Answering Islam.com இணைதளத்தின் கட்டுரையைத் தழுவியது)

ஈஸா நபி (இயேசு) பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை  போதித்துவந்தார் என்று  குர்ஆன் சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார்.

 (குர்ஆன் 19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினான்.

(குர்ஆன் 19:24)

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

(குர்ஆன் 19:25)

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.

 (குர்ஆன் 19:26)

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

 (குர்ஆன் 19:30)

“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

(குர்ஆன் 19:31)

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

    (குர்ஆன் 19:32)

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.

(குர்ஆன் 19:33)

ஈஸா நபி தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லாஹ் தன்னை தன் அளவில் உயர்த்திக் கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்து வந்தார். குர் ஆனின்படி ஈஸா நபி  கொண்டுவந்த இஞ்ஜில் (பைபிள்) என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த நபிமார்கள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. ஈஸா நபி  அல்லாஹ்வின்  நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

(குர்ஆன் 42:13) 

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

 (குர்ஆன் 43:59)

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.

(குர்ஆன் 43:63)

நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

(குர்ஆன் 43:64)

ஆக, ஈஸா நபி  தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாஹ்விடம் எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் யூத மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டு போகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

        ஈஸா நபி  தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு அல்லது கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் குர் ஆன்,  ஈஸா நபியைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது :

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.

(குர்ஆன் 3:52)

“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.

(குர்ஆன் 5:111)

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

(குர்ஆன் 57:26)

ஈஸா நபி, “லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹிஎன்ற கலீமாவையே  போதித்தர்என்று  முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தக் கலீமா ஆதமை படைப்பதற்கு முன்பே உள்ளதாகும், அல்லாஹ்வின் அர்ஷில் எழுதப்பட்டிருந்த இந்த கலீமாவின் உதவியின் காரணமாகவே ஆதம் மன்னிக்கப்பட்டார் என்பதை முன்பு நான் கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவும். பர்னபாஸ் சுவிசேஷத்தின் 39-ம் அதிகாரத்தில் ஒளிரும் பிரகாசமான எழுத்துக்களைக் ஆதம் கண்டதாக கூறுகிறது. அதன் உட்பொருள்  இன்று முஸ்லீம்களால் கூறப்படும் கலீமாவைத் தவிரவேறில்லை.   ஈஸா நபி தினமும் ஐவேளை தொழுததாகவும் பர்னபாஸ் சுவிசேஷம் கூறுகிறது.

ஆகவே, ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொண்ட முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அல்லாஹ், அவர்களுக்கு செய்த உதவியால் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.

 ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியது போல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

இந்த வசனத்தின்படி “ஈஸா நபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. ஈஸா நபியின் போதனைகளை ஏற்றுக் கொண்டு “வெற்றியாளர்கள் ஆகிவிட்ட” இந்த முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

ஈஸா நபியின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக் கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இப்படிப்பட்ட முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை?

வாதத்திற்காக, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், ஈஸா நபியை கடவுளாக்கிய கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் முஸ்லீம்கள் கூறலாம்.

அல்லாஹ்வால் “வெற்றியாளர்கள்” என்று அறிவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை எவ்வித சிறு ஆதாரமுமின்றி அழிக்கமுடியுமா?

எந்த ஒரு நம்பிக்கையையோ, சமுதாயத்தையோ அவ்வாறு அழிக்கமுடியாது. உதாரணத்திற்கு, ஸ்பெயின் நாட்டிலிருந்து இஸ்லாம் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். அன்றைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள்,  முஸ்லீம்களை அதிகாரத்தையும், அடக்குமுறைகளைக் கொண்டும்  கிருஸ்துவமதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தனர். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமின் சுவடுகளை முற்றிலும் அகற்ற முடியவில்லையே?

முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட “தீன்இலாஹி” என்ற மதம் அவருக்குப்பின் ஒருவராலும்  பின்பற்றப்படவில்லை. அக்பரின் வாரிசுகள் கூட அவரது புதிய மதத்தை ஏற்கவில்லை. அக்பரின் மரணத்திற்குப் பிறகு “தீன்இலாஹி” முற்றிலும் அழிந்தது. ஆயினும் “தீன்இலாஹி” பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், ஆதாரங்கள் இன்றும் உள்ளது. மிக மிக பலவீனமான, அக்பரின் கற்பனையில் உருவான மதம் “தீன்இலாஹி”யின் குறிப்புகள் இருக்கையில், அல்லாஹ்வினால் அற்புதங்களுடன் அனுப்பப்பட்ட ஈஸா நபியின் போதனைகளின் அடிப்படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது,  முட்டாள்த்தனத்தின் உச்சம்…! ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை கிருஸ்துவர்கள் அழித்ததாகவோ, அல்லது அழிக்க முயற்சி செய்ததாகவோ எவ்விதமான வரலாற்று குறிப்புகளும் இல்லை. இது முஹம்மது நபியின் வெற்று வார்த்தைகளைத் தவிர வேறில்லை…!

எனவே, கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக  கூறுவது, அர்த்தமற்றது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் ஒரு “முஸ்லீம்-கிறிஸ்தவன்” இருந்ததாக ஒரு தகவலும் இல்லை.

ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது “இயேசுவின் மரணம்” பற்றிய விவரம் அந்த காலத்து சமுதாயத்தினருக்கு தெரிந்த விவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர். இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்து கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.  

உதாரணத்திற்கு : அப்போஸ்தர் பேதுரு “ரோம பேராயராக” நியமித்த “ரோம் கிளமண்ட் (Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய “இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்” பற்றி பலமுறை எழுதியுள்ளார். அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப் (Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார். இன்னும் பல “கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள் (Non-Christian Writings)” இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் “ஜோசபாஸ் (Josephus)” மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ் (Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சி செய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார். ஒரு கிரேக்க நகைச்சுவை (Satirist) எழுத்தாளர் “Lucian of Samosata” என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், “இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும்  அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே  அவர் சிலுவையில் அறையப்பட்டார்”. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது.

இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

ஈஸா நபியின் போதனைகள் என்ன ஆனது?

இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல “கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் போதனையை மாற்றி விட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் ஈஸா நபியின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்து விட்டார்கள்” என்று பதில் சொல்ல முடியாது.

 ஈஸா நபிக்கு என்ன நடந்தது என்று குர் ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

குர்ஆனின் கூற்றுப்படி, ஈஸா நபி சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக கொள்ளலாம். இருந்தாலும், ஈஸா நபி வானத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு ஏன் “ஒரு முஸ்லீம் கூட” இல்லை? அவர்களது நம்பிக்கை என்ன ஆனது ? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், ஈஸா நபியை பின்பற்றிய எல்லாரும் “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்  என்றும் அவர் மறுபடியும்  உயிரோடு எழுந்தார்” என்றும் நம்பினார்.

ஈஸா நபியைப் பின்பற்றியவர்களுக்கு, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார் ” என்ற நிகழ்ச்சியை உருவாக்கியது யார்? குர்ஆனின்  கூற்றுப்படி, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற எண்ணத்தை மனிதர்களிடையே  உருவாக்கியதே அல்லாஹ் தான்.

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்று விட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

குர்ஆனின்  இந்த வாதத்திற்கு வேறு ஆதாரம் ?

இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் பெயரில் எழுதப்பட்ட சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியைக் கூறுகிறது.

பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக  இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

        இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”

        இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த  யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவி கொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.

        படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”

(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)

“The Gospel of Barnabas”-பர்னபாஸ் என்ற சீடரால் எழுதப்பட்டதல்ல.  இது மிக பலவீனமான ஆதாரமாகும். இந்த சுவிசேஷம் கிபி 1585 ல் எழுதப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.  பர்னபாஸ் சுவிசேஷம் இட்டுக்கட்டி எழுப்பட்ட புத்தகமென்பதற்கு ஏராளமான ஆதரங்கள் இருக்கின்றன. பர்னபாஸ் எழுதிய கடிதங்கள்  இந்த சுவிசேஷத்திற்கு எதிரான செய்திகளைக் கூறுகிறது. இருப்பினும், குர்ஆன் கூறும் ஆள்மாறாட்டம் எவ்வாறு நிகழ்ததென்பதைக் அறிந்து கொள்வதற்காகவே இதையும் முன்வைக்கிறேன். )

அல்லாஹ்வால் நிகழ்தப்பட்ட ஆள்மாற்றத்தை, ஈஸா நபியின் (இயேசுவின்)  தாயாரான மரியம் அவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரும் தன்மகன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவே நம்பினர். அல்லாஹ்வால், ஈஸா நபி வானிற்கு உயர்த்தப்பட்டதாகக்  கொண்டு நாம் விவாத்தைத் தொடர்வோம்.

அதாவது, மனித உடலுடன் அவர் இரண்டாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டார். இது ஒருமுரண்பாடான செய்தியாகும். எந்த வகையான சொர்க்கத்தைப் (வானம்) பற்றி  முஹம்மது நபி கூறுகிறார் என்பது புரியவில்லை. சொர்க்கம் என்பது ஆன்மாக்கள் வாழும் பகுதியாக இருந்தால், ஈஸா நபி மனித உடலுடன் அங்கு எப்படி வாழ முடியும்? ஈஸா நபி, உணவு, உடை, இயற்கைத் தேவைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சராசரி மனிதர். பூமியை போன்ற ஒரு இடத்தில்தான் அவரது உடலால் வாழ முடியும். எனவே முஹம்மது நபிகூறும் சொர்க்கம் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த உலகமாகவே தோன்றுகிறது. இதன் அடிப்படையில் நோக்கினால், ஈஸா நபி மட்டுமே மிக நீண்ட காலமாக, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதராவர். அப்படியானால் அல்லாஹ்வும் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த  பகுதியில்தான் தனது இருக்கையை (அர்ஷ்) அமைத்து அமர்ந்து கொண்டிருக்கிறானா?.

ஈஸா நபியை எதற்காக  தன்அளவில் (வானத்திற்கு) உயர்த்திக் கொண்டான்?

ஈஸா நபியை, தீய யூதர்கள் மற்றும் ரோம ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து  காப்பாற்றுவதே மைய நோக்கமென்றால், தனது நேசத்திற்குரிய ஒரு நபியை அநியாயமாகக் கொடூரமான முறையில் கொல்லத் துணிந்தவர்களின் மனதை மாற்றியிருக்கலாம், அல்லது  மற்றவர்களையும் எச்சரிக்கும்  முறையில் அவர்களை தண்டிக்கலாம் அல்லது  யூத மற்றும் ரோம ஆட்சியார்களை ஏமாற்றாமல், ஈஸா நபியை  அப்படியே எல்லாருக்கும் முன்பாக எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் தன் அளவில் உயர்த்திக் கொள்ளலாம். மனிதர்கள் தங்களது இயலாமையின் காரணமாக எதிராளியை ஏமாற்றி தங்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யும் ஆள்மாறாட்ட வித்தையை சர்வவல்லமையுடைய அல்லாஹ்வும் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அல்லாஹ் “ஈஸா நபியை பாதுகாப்பாக” தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்து விட்டானே. ஆள்மாறாட்டம்  செய்ய வேண்டிய அவசியம் என்ன?

நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த ஆள்மாறாட்டத்தின் நோக்கம், ஈஸா நபியின்  எதிரிகள் ” ஈஸா நபியை  சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம்” என்று நம்பி ஏமாற வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. (இயேசுவின் தாயார் உட்பட ஒருவருமே அறியாத,   அல்லாஹ்வால் ரகசியமாகச் செய்யப்பட்ட ஆள்மாறட்ட நிகழ்ச்சியை பர்னபாஸ் மட்டும் எப்படி அறிந்து கொண்டார்?) சர்வ வல்லமையுடையவனாகிய அல்லாஹ்விற்கு, ஆள்மாறாட்டம் செய்துதான் தன்னுடைய தூதரைக் காப்பாற்ற முடியுமா? அப்படி ஒரு கட்டாயம் என்ன?

அல்லாஹ்வின் திட்டப்படி வானவர்களால், ஈஸா நபி காப்பாற்றி அழைத்துச் செல்லப்படுவதை  யூத ரோமானியப் படைவீரர்கள் அறிந்து, வானவர்களை வழிமறித்து ஈஸா நபியை திரும்பவும் பூமிக்கு கொண்டுவந்து சிலுவையில் அடித்து கொன்று விடுவார்களோ  என்று அல்லாஹ் அஞ்சியிருக்க வேண்டும். எனவே படையாட்களின் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பி ஏமாற்றி ஈஸா நபியைக் காப்ற்றியிருக்கிறான் என்ற காரணத்தைத்தவிர வேறு எதுவுமில்லை.

 குர்ஆனின் கூற்றில் மறைந்துள்ள முட்டாள்தனத்தை உங்களால் அறிய முடிகிறதா?

எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் ஈஸா நபியைத்  தன் அளவில் உயர்த்தி எடுத்துக் கொண்டிருந்தால், இப்படி பல மக்களை ஏமாற வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாஹ்வின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று குர்ஆன் நம்மை நம்பச் சொல்கிறது. 

ஈஸா நபியை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், ஈஸா நபியின் சீடர்கள் உட்பட அனைவரும் அல்லாஹவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் ஆறாம் பகுதி

23 மே

 

இந்த விவாதத்தின் ஆறாவது பகுதியான இது, கடையநல்லூர் டிஎன்டிஜே எனும் தளத்தில் வெளியான என்னைப் பற்றிய பதிவு ஒன்றின் மறுப்பாக வருகிறது. செங்கொடியினர் காஃபிர்களே என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது மின்னஞ்சல் மூலமாகவும் பல நூறு பேருக்கு அனுப்பபட்டிருக்கிறது. அந்தப் பதிவு என்னை காஃபிர் என்று அறிவிக்கவும், நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என்னை அடக்கக் கூடாது என்றும் அறிவிக்க ஜமாத்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டி அனைவரையும் கோருகிறது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது தான் உண்மை.

ஒருவரை முஸ்லீம் என்று இவர்கள் எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள்? அவர் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கிறரா? முஸ்லீம் பெற்றோர்களுக்கு பிறந்தவரா? முஸ்லீம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாரா? என்பதைக் கொண்டா? இதுதான் ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான தகுதி என்றால்; அட மூடநம்பிக்கையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் முல்லாக்களே, முதலில் உங்கள் மதத்தைப் பற்றியேனும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்குக் கூட எங்கள் மதத்தில் வழிகாட்டுதல் இருக்கிறது என்பவர்களே, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தால், இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால், இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டிருந்தால் ஒருவர் முஸ்லீமாகிவிடுவார் என்பதற்கு உங்கள் வேதத்திலி(குரான்)ருந்தோ, உபநிடதத்(ஹதீஸ்)திலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எந்த அடிப்படையில் என்னை முஸ்லீம் என்று கருதினீர்கள், இப்போது முஸ்லீம் அல்ல என்று அறிவிப்பதற்கு?

நான் எப்போதாவது என்னை முஸ்லீம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறேனா? இஸ்லாமியச் சடங்குகள் எதையேனும் செய்திருக்கிறேனா? என்னைத் தெரிந்தவர்களுக்கு வெகு நன்றாகத் தெரியும் நான் எப்போதும் முஸ்லீமாக இருந்ததில்லை என்று. ஆனால் இப்போது இவர்கள் கூறுகிறார்கள் \\\இப்படிப்பட்டவனை மார்க்க அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவன் என்று கருதமுடியாது. இவன் மதம் மாறிய முர்த்தத் ஆவான்///என்று. நான் மதம் மாறவும் இல்லை, முஸ்லீமாகவும் இல்லை. அறியாத வயதில் என்னுடைய பெற்றோரைக் கொண்டு நான் முஸ்லீம் என்று நீங்களாகவே கூறிக் கொண்டீர்கள். இப்போதும் நீங்களாகவே இவன் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்கிறீர்கள். நான் பிறந்தேன் வளர்ந்தேன், அறிகிறேன், சிந்திக்கிறேன், என் தேடலின் அடிப்படையில் என்னை வழி நடத்திக் கொள்கிறேன். இடையில் நீங்கள் யார் என்னை முஸ்லீம் என்றும் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்வதற்கு?

சமூகத்தையும் மதத்தையும் குழப்பிக் கொள்வது இஸ்லாமியர்களின் வாடிக்கை.நம்புபவர்கள் சமூகமும் மதமும் வேறு வேறல்ல என்று நம்பிக் கொள்ளுங்கள் நம்பாதவர்கள் மீது ஏன் உங்கள் நம்பிக்கையை திணிக்கிறீர்கள்? நான் மக்கள் மத்தியில் வாழ்கிறேன் என்பது சமூகம். நான் மண வாழ்வில் இருக்கிறேன், அதன் விளைவுகளை கொண்டிருக்கிறேன் என்பது சமூகம். ஆனால் உங்கள் மததின்படி நான் ஒழுகவில்லை என்பதற்காக என் திருமணத்தை முறிப்பதற்கும், யாரும் என்னோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கும் நீங்கள் யார்?

எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் இறை நம்பிக்கை கொண்டவனல்ல, ஒரு நாத்திகவாதி என்பதை முறைப்படி பெண் வீட்டாருக்கு உறுதியாக தெரிவித்திருக்கிறேன். திருமணத்திற்கு முதல் நாளே திருமணம் நடத்தி வைப்பவரை அணுகி நான் நாத்திகவாதி அதனால் நீங்கள் கூறும் மந்திரம் எதனையும் நான் திரும்பக் கூறமாட்டேன். தமிழில் நீங்கள் கேட்கும் ஒப்புதலை மட்டுமே தருவேன். வேறுஎதையும் நீங்கள் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று அவருடன் வாதம் செய்து சம்மதிக்கச் செய்திருக்கிறேன். (என்னிடம் இன்றிருக்கும் கொள்கை உறுதி அன்று இருந்திருக்கவில்லை என்பதால் சில சமரசங்களுக்கும் ஆட்பட்டிருக்கிறேன் என்பது வேறு விசயம்) நான் ஒரு முகம்மதியனல்லன் என்பதை என் மனைவிக்கு ஐயந்திரிபற புலப்படுத்தியிருக்கிறேன். சமூக உறவு தேவை எனும் அடிப்படையில் தான் என் திருமணம் நடந்ததேயன்றி இஸ்லாமிய உறவு தேவை எனும் அடிப்படையிலல்ல. இப்போது என் மத நடவடிக்கைகள் உங்கள் விருப்புக்குறியதாய் இல்லை என்று கூறிக் கொண்டு என் மண வாழ்வில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது எவர்?

நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். \\\இவனோ இவனது குடும்பத்தினரோ இறந்து விட்டால் முஸ்லிம்களின் எந்த மையவாடியிலும் அடக்கம் செய்யக் கூடாது/// நான் இறந்தால் முஸ்லீம்களின் மையவாடியில் என்னை அடக்கம் செய்யுங்கள் என்று யாரிடமும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மாறாக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு என்னுடையை முழு உடலையும் தானம் செய்திருக்கிறேன். நான் இறந்தபின் தோழர்கள் என் உடலை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அது குறித்து நீங்கள் எந்தக் கவலையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்கிறேன்.

இன்று நான் முஸ்லீம் அல்ல கூவித் திரியும் இவர்கள், நான் முஸ்லீம் அல்ல என்று என் செயல்களால் உணர்த்திய போது அதை மறுத்து என்னை அந்த மதத்துள் இருத்தி வைப்பதற்கு செய்த முயற்சிகள் எத்தனை? எத்தனை? (’இவர்கள்’ என்பதை பொதுத்தன்மையில் குறிப்பிட்டிருக்கிறேன்) என் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்ற போது இவர்கள் செய்த தடங்கல்கள் எத்தனை, ஜாதி மதம் கடந்தவர்கள் என சான்றிதழ் பதிவு செய்ய முயன்ற போது செய்த இடையூறுகள் எத்தனை எத்தனை. என்னுள் நான் எப்படி இருக்கிறேன் என்பது குறித்து கிஞ்சிற்றும் கவலையற்றவர்கள், என் வெளிச்செயல்கள் முஸ்லீம்களுக்குறியதாக இருக்க வேண்டும் என்பதில் காட்டிய தீவிரம் தான் என்னே. ஒரு நிகழ்வை எடுத்தக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். என்னுடைய திருமண தினத்தன்று காலை, அதுவரை நான்கைந்து நாட்களாக என்னுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என் நண்பர்கள் யாரையும் காணவில்லை. காத்திருந்தேன், நேரமாகிக் கொண்டிருக்கிறது, இனியும் தாமதிக்க முடியாது என்றாகி, நேரடியாக சென்று கேட்ட போது தான் விசயமே விளங்கியது. “நீ எங்களுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதால் தான் நாங்கள் உன் திருமணத்தில் கலந்து கொள்வோம்” என்றார்கள். “நீங்கள் கலந்து கொள்வதுதான் எனக்கு முக்கியமேயன்றி ஒரு மதத்தின் சடங்குகள் முக்கியமல்ல” என்று அவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசலில் தொழுதேன். தன்னை முஸ்லீம் என்று கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாம் என்பது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்திருந்தது, அதனால் தான் என்னால் நண்பர்களுக்காக தொழவும் முடிந்தது. என்னுடைய ஆழம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள், அடையாளம் குறித்தே கவலை கொண்டார்கள். இன்று அந்த அடையாளிகள் அறிவித்திருக்கிறார்கள் நான் முஸ்லீம் அல்ல என்று. முட்டாள்களா, நீங்கள் நினைத்தால் முஸ்லீம் என்று இருத்திக் கொள்வதற்கும், நினைத்தால் முஸ்லீம் அல்ல என்று விடுவிப்பதற்கும் நான் என்ன உங்கள் முகத்தில் வைத்திருக்கும் மீசையா நினைத்த போதெல்லாம் திருத்திக் கொள்வதற்கு?

அவர்களது பதிவில் சில விவரப் பிழைகளும் இருக்கின்றன. இணையப் பரப்பில் செங்கொடி என அறியப்படும் நான் செங்கொடி, நல்லூர் முழக்கம் எனும் இரண்டு வலைத் தளங்களை நடத்தி வருகிறேன். இறையில்லா இஸ்லாம் எனும் தளம் என்னால் நடத்தப்படுவதல்ல, மட்டுமல்லாது எந்த இணையக் குழுவுக்கும் நான் தலைமை தாங்கவும் இல்லை. இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அது முழுமையாக என்னுடைய தேடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டு வருகிறது. அதில் இடம்பெறும் எதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன். அதுகுறித்து உங்கள் யாருக்கும் விமர்சனம் இருந்தால் தாராளமாக பதிவு செய்யலாம், விளக்கம் கூறுகிறேன். சுய விமர்சனம் செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். அதேநேரம் நல்லூர் முழக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரம்பத்தை நோக்கி எனும் தொடர் என்னால் எழுதப்படுவதல்ல, தஜ்ஜால் என்பவரால் எழுதப்படுகிறது. என்றாலும், அதன் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அது குறித்தும் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் பதிவு செய்யலாம். நண்பர் தஜ்ஜால் உங்களுக்கு தகுந்த விளக்கமளிப்பார். ஒரு விமர்சனம் எனும் அடிப்படையில் அதன் நிறை குறைகளை ஏற்றுக் கொள்வோமேயன்றி, காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம், தகுந்த முறையில் எதிர்கொள்வோம்.

 

முதல் பதிவு: செங்கொடி

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் குறித்து…

9 ஏப்

இந்த விவாதத்தின் நான்காவது பகுதியாக மக்களின் மனோநிலை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவரை ஆதரவு நிலைகளை விமர்சித்திருக்கிறோம். அதாவது கடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தை அது சரியானது தான் என ஆதரித்து நிற்பவர்களை பார்த்தோம். இப்போது அதற்கு மாற்றமான நிலையில் இருப்பவர்கள், தெளிவாகச் சொன்னால் அது காட்டுமிராண்டித்தனம் தான் எனக் கூறும் எங்களை எதிர்க்காமல் அமைதிகாக்கும் எங்களின் நலம் விரும்பிகளின் மனோநிலையையும் அலசிப்பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

 

பெரும்பான்மையாக எங்களின் உறவினர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள் இந்த மனோநிலையில் இருக்கிறார்கள்.  இது அவர்கள் மீதான விமர்சனம் அல்ல. என்றாலும், அவர்கள் உளக்கிடக்கையின் தன்மையை, அது என்ன விதத்தில் பிறரிடத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையிருக்கிறது எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது.

 

இந்தப் பிரச்சனையை நாங்கள் அணுவதற்கும் பிறர் அணுவதற்கும் உள்ள பாரிய வேறுபாடு காணும் உரைகல்லில் இருக்கிறது. அது சரியா? தவறா? எனும் அடிப்படையிலிருந்து நாங்கள் அணுகுகிறோம். பிறரோ, அது சாதகமானதா? பாதகமானதா? எனும் அடிப்படையிலிருந்து அணுகுகிறார்கள்.  அதனால் தான் தற்போதைய நிலை எங்களுக்கு பாதகமானது என்பதால் வருந்துகிறார்கள், ஆலோசனைகள் கூறுகிறார்கள், எச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துகிறார்கள்.

 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுவது அவசியம்.  எங்களின் தற்போதைய நிலை, அதாவது பிறந்து வாழ்ந்த ஊரிலிருந்து தனிமைப் பட்டிருப்பது, ஊராரின் புரிதலற்ற தண்டனைகளுக்கு ஆட்பட்டு நிற்பது போன்றவை எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக எந்த விதத்திலும் நாங்கள் கருதுவதில்லை. வாழ்க்கை எனும் சாலையில் ஏற்படும் திருப்பங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் அவ்வளவு தான். எங்கும், எப்படியும் எங்களால் வாழ முடியும். ஏனென்றால் அடிப்படையில் நாங்கள் சர்வதேசியவாதிகள். அதனால் தான் எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் நடந்தது தவறானது என்று எங்களால் உறுதியாக நிற்க முடிகிறது.

 

ஆனால் எங்களின் நலம் விரும்பிகள் இதை இவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை. இப்படி ஆகிவிட்டதே என்று கைசேதப் படுகிறார்கள். எந்த வகையிலாது இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் நடந்தது சரியா? தவறா? எனும் கேள்விக்குள் அவர்களால் புகுந்து செல்ல முடியவில்லை. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த அவலம் ஏன் நேர்ந்தது?, அப்படி நேர்ந்ததற்கான கூறு தங்களுக்குள் இருக்கிறதா? எனும் சிந்தனைக்கு அவர்களால் வர முடியவில்லை. ஆம். அந்தக் கூறு எங்களுக்கு நெருக்கமானவர்களான இவர்களிடமும் இருக்கிறது.

 

தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த பாதிப்பு எனும் தளத்தின் மேல்தான் இவர்களுடைய எங்களுக்கான ஆதரவு நின்று கொண்டிருக்கிறது. நெருக்கமானவர்களாக இல்லை என்றால் இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போடு என்று கூறியிருக்கக் கூடும். “எங்கள் உயிரிலும் மேலான நபிகளை கேவலப்படுத்திய இவனை கொன்றாலும் தப்பில்லை” என்று பின்னூட்டம் எழுதியவரின் உறவினர் ஒருவர் இப்படி இருந்திருந்தால் நிச்சயமாக அப்படி ஒரு பின்னூட்டத்தை அவரால் எழுதியிருக்க முடியாது. கைசேதப்பட்டிருக்கவும் கூடும். இதில் இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. அவர்களின் கருத்தியலில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லாதது தான் காரணம். கருத்தியல் ரீதியாக இருவருமே ஒரே நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தாம், நடைமுறையில் மட்டுமே சற்று வேறுபாடு. இதுவும் ஒருவகையில் சுயநலம் தான்.

 

அடுத்து எங்களின் நலம் விரும்பிகள் முன்வைக்கும் ஓரிரு அறிவுரைகளையும் பார்த்துவிடலாம். ஊரொடு ஒட்ட ஒழுகல் என்பது ஏற்றுக் கொள்ளத் தகாததா?

“உலகத்தொடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

கல்லார் அறிவி லாதார்” என்பது திருக்குறள். இதுமட்டுமன்றி பல்வேறு பழமொழிகளும், சொலவடைகளும் ’உலகொடு ஒட்டி ஒழுகலுக்கு’ மாறாக செயல்பட வேண்டாம் என வலியுறுத்துவதாக இருக்கின்றன. அதேநேரம் இதற்கு எதிரான நிலை கொண்ட பழமொழிகளும், சொலவடைகளும், வழக்காறுகளும் இருக்கவே செய்கின்றன.

“சொல்லுக சொல்லை பிரிதொருசொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு”

”எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” இவைகளும் திருக்குறள் தாம். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

 

எந்த ஓர் அனுபவக் குறிப்பையும் அநீதிக்கு ஆதரவாக ஒருபோதும் கொள்ளக் கூடாது. கடையநல்லூரில் நடந்தது அநீதியா? இல்லையா? என்ற பார்வையிலிருந்து இதை அணுகுவது தான் சரியானதாக இருக்க முடியும். அந்தக் கேள்விக்குள் நுழையாமலேயே ஊரே அப்படித்தான் ஒழுகுகிறது எனவே நீயும் அப்படியே ஒழுகு என்பது பக்கப்பட்டை கட்டிய பார்வையாக மட்டுமே இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவனின் கோணத்தை மறுக்கும் அராஜகப் போக்கவும் அது இருக்கும் என்பதையும் உணர வேண்டும். சரி, ”இந்த உலகொடு ஒட்ட ஒழுகல்” என்பதை இவர்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்களா? எண்பதின் முற்பகுதிகளில் தர்கா கலாச்சாரமே ஒட்ட ஒழுகலாக இருந்தது. அதை ஏன் இவர்கள் மறுத்தார்கள்? ஆக ஒட்ட ஒழுகல் என்பதைத் தாண்டி சரியா? தவறா? எனும் பார்வையும் அவர்களுக்கு இருந்திருக்கிறது(அது சரியான பார்வையா என்பது வேறு விசயம்). அந்த பார்வையைக் கொண்டுதான் உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறையாக இருந்த தர்கா கலாச்சாரத்தை ஒழித்தார்கள். அந்த அளவுகோலை ஏன் இந்த விசயத்தில் பயன்படுத்த மறுக்கிறார்கள்? ஏனென்றால் இது அவர்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருக்கிறது. அவர்களின் கருத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அதேவேளை நீ செய்தது தவறு என்று உறுதியாக நின்று சுட்டிக் காட்டவும் முடியவில்லை. அதனால் தான் அவர்களுக்கு ‘ஒட்ட ஒழுகல்’ எனும் முக்காடு தேவைப்படுகிறது. நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

 

என்ன தான் நீ கூறுவது சரியாக இருந்தாலும் ஊரே எதிர்த்து நிற்கும் போது அதற்கு பணிவது தானே சரியான அணுகுமுறை? இல்லை. தனக்கு ஏற்பில்லாத ஒன்றை ஊர் ஏற்று நிற்கிறது என்பதற்காக சரியான நிலைப்பாட்டை விட்டு மாறுவது பிழைப்புவாத அணுகுமுறை. ஊரே ஏற்று நிற்கும் ஒன்றை கருத்தியல் ரீதியாக தவறு என்று உணரும் போது அணுக்கமான செயலுத்திகள் மூலம் அதை ஊருக்கு புரியவைக்க முயலலாம், அதில் தவறில்லை. இந்த அணுக்கத்தை நான் எழுதும் தொடர் நெடுக நீங்கள் காணலாம். ஆனால், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதை பிழைப்புவாதிகள் மட்டுமே செய்யமுடியும். சரி, இந்த ஊரே எதிர்த்து நிற்கிறது என்பதை எல்லாவற்றுக்கும் இவர்கள் பயன்படுத்துவார்களா? இன்று ஈரான் விசயத்தில் அமெரிக்கா எடுத்து வரும் அராஜக, மேலாதிக்க நடவடிக்கைகள் அனைவரும் அறிந்தது தான். ஊரே எதிர்த்து நிற்கிறது எனும் அளவுகோலை பயன்படுத்தி அமெரிக்கவிடம் பணிந்து போக முயலுங்கள் என்று ஈரானிடம் இவர்கள் கூறுவார்களா? இன்று ஈரான் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வெகுசில நாடுகள் கூட எதிர் அரசியல் நிலைப்பாட்டில் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களை மனதில் கொண்டே ஆதரவு நிலை எடுத்திருக்கின்றன. ஐநா அமைப்பு தொடங்கி பன்னாட்டு நிதியியல் அமைப்புகள் ஈறாக ஈரானை எதிர்க்கின்றன. இந்த பலத்துடன் ஒப்பிட்டால் ஈரானும் அதற்கான ஆதரவும் ஒன்றுமே இல்லை. இந்த நிலையில் ஈரான் குறித்த இவர்களின் மதிப்பீடு என்ன? உலகமே எதிர்த்து நிற்பதால் அமெரிக்காவிடம் பணிந்து போக வேண்டும் என்று விரும்புவார்களா? ஊரே எதிர்த்து நின்றாலும் ஈரானுக்கு ஆதரவான தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரென்ன உலகமே எதிர்த்து நின்றாலும் ஈரான் விசயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் அளவுகோல் கடையநல்லூர் விசயத்தில் ஏன் பயன்படாது? நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

 

அடுத்து, என்னை சற்றே வருத்தம் கொள்ள வைத்த ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர், என் கையை பிடித்து முதன் முதலில் ‘அ’ எழுத சொல்லித்தந்தவர், என்னுடைய கருத்தியல் வளர்ச்சியின் ஒவ்வொரு அலகையும் அருகிருந்து கவனித்தவர், சில போதுகளில் உற்சாகம் தந்தவர் அண்மையில் என்னுடைய தாயாரை அழைத்து, “நீ ஒழுங்காக வளர்க்காததால் தான் அவன் இப்படி ஆகி விட்டான்” என்று திட்டியிருக்கிறார். அதிர்ச்சியாக இருந்தது. இன்று நான் கொண்டிருக்கும் கொள்கை உறுதி, சமூகத்தின் மீதான பற்றார்வம் போன்றவை எல்லாம் வெறும் வளர்ப்பில் நேர்ந்த பிழை தானா? என்னை சிறு வயதிலேயே அடித்து ஒடுக்கி ஊரோடு ஒட்ட வளர்த்திருந்தால் நான் இன்று மனிதனாகி இருந்திருப்பேனா? நான் மனிதனா இல்லையா என்பதை கேவலம் ஒரு மதத்தின் நடத்தைகளா தீர்மானிப்பது? என்னிடம் பேசும் போது நேரடியாக என்னை விமர்சிக்காமல் என்னின் பாதிப்புகள் குறித்து மட்டுமே பேசியதை என்மீதான பாசம் என்றுதான் இப்போதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் தாயாரிடம் பேசும்போது நீங்கள் வேறு முகம் காட்டியிருக்கிறீர்களே. எது உங்கள் மெய்முகம் என்பதை அடையாளம் காட்ட நீங்கள் உதவினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் என்னை அருகிருந்து கவனித்து வந்திருக்கும் நீங்கள் இதை வளப்புக் கோளாறு என்று எண்ணியிருக்கிறீர்கள் என்றால்; இதுவரை நான் பார்த்த நீங்கள் திடீரென்று நான் பார்க்காத நீங்களாய் மாறியிருக்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.

 

தெளிவாக ஒன்றைக் கூறவிடலாம். நாங்கள் விமர்சனம் சுயவிமர்சனத்தை மூச்சாக கொண்டிருப்பவர்கள். எங்களை மாற்ற வேண்டும் என எண்ணினால் அது வெகு எளிது. நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்படு தவறானது என்பதை உணர்த்திவிட்டால் போதுமானது. தவறான நிலைப்பாட்டில் நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்புவதில்லை. மாறாக,  சமுகரீதியான பார்வைக்கு அப்பாற்பட்டு எங்களை மாற்ற நினைத்தால் அது வெகு கடினம். ஊரல்ல, உலகமே எதிர்த்தாலும் பிழைப்புவாதியாய், காரியவாதியாய் நாங்கள் சுருங்க முடியாது. இதை நாங்கள் பெருமையாகவே அறிவித்துக் கொள்கிறோம்.வெறுமனே உங்கள் உறவினர்கள் மட்டுமல்ல, நாங்கள் கம்யூனிஸ்டுகள்.

 

முதல் பதிவு: செங்கொடி

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதம் தொடர்கிறது

23 மார்ச்

இதன் முந்தைய பகுதிகளை படிக்க

 

இந்த விவாதத்தின் மூன்றாவது பகுதியாக சில இணைய மத பரப்புரையாளர்களின் பொய்யும் புனைச் சுருட்டுகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலில் மனிதாபிமானி என்ற பெயரில் வேறு ஏதோ ஒன்றின் அபிமானியாக இருக்கும் பதிவைப் பார்க்கலாம். அந்த பதிவை படிக்க இங்கு சொடுக்குங்கள்.

 

வினவு கட்டுரையில் தோழர் துராப்ஷா மன்னிப்பு கேட்டார். அதாவது மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.மட்டுமல்லாது பின்னூட்ட விவாதங்களிலும் அவரிடமிருந்து எப்படி மன்னிப்பு பெறப்பட்டது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் எதையோ மறைத்து விட்டதாய் விளம்புகிறார்கள். எதையும் மறைக்காத நிலையிலேயே மறைத்து விட்டதாய் புழுகியவர்கள், தங்கள் பதிவில் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் எழுதினார்களா? \\\ இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது /// வெறுமனே இறை நிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரா? ”உன்னுடைய எந்த விளக்கமும் தேவையில்லை. மன்னிப்பு கேட்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையும் உன் வாயிலிருந்து வெளிவரக் கூடாது” என்று குடும்பத்தாரால் மிரட்டப்படவில்லையா? வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்து மன்னிப்பைக் கேட்கவந்தால் அதையும் கூட கேட்கவிடாமல் தாக்குதல் தொடுக்கப்படவில்லையா? பொய்யாக என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் ஏற்கனவே எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கப்படவில்லையா? இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ’அறிவிக்கப்பட்டார்’ என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து சென்றது ஏன்? அல்லது எந்த அயோக்கியர்களைக் காப்பாற்ற?

 

தோழர் துராப்ஷா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கட்டுரையை முகநூலில் அவர் பகிர்ந்தது காரணமல்ல, அரசியல் ரீதியாக அவர் செயல்பட்டதின் எதிர்விளைவு தான் என்பதை தெளிவாகவே நிருவியிருக்கிறேன். கேள்விகள் எழுப்பப்பட்டால் இன்னும் விரிவாக நிரூபிக்க காத்திருக்கிறேன். ஆனால் இந்த அபிமானிகளோ காழ்ப்புணர்வு எனும் ஒற்றைச் சொல்லில் கடந்து செல்கிறார்கள். முகநூலில் பகிர்ந்தது தான் காரணம் என்றால், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அறியப்பட்டபோதே ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இன்றும் கடையநல்லூரில் எத்தனையோ இளைஞர்கள் நாத்திக கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளை பேசிவருகிறார்கள். ஏன் மேடைகளில் கூட முழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லையே. இவ்வாறிருக்க தோழர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட மர்மம் என்ன? அதுவும் முதலில் அவரது கடையில் வாங்காதீர்கள் என்று பள்ளிவாசலில் அறிவிப்பு அது செல்லுபடியாகவில்லை என்றதும் கடையில் குழப்பம் செய்து காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் தோழரின் விளக்கங்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றதும் ஜமாத்தார்கள் உலாமாக்கள் மூலம் நடவடிக்கை. இது ஏன்? பதில் கூற முன்வருவார்களா அபிமானிகள்?

 

அடுத்து போட்டி மனப்பான்மையால் வெளிப்பட்ட அரசியல் குறித்தும் எழுதப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில் இதை முட்டாள்தனமானது என்று கூறியிருக்கிறார்கள் அபிமானிகள். கூடவே, புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்கள். \\\ இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா?  /// இந்தக் கேள்விக்கும், போட்டி அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?அந்த ஊரில் போட்டி அரசியல் தான் நிலவில் இருக்கிறது என்பதற்கு கட்டுரையிலேயே எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டிருக்கிறது மறுக்க முடியுமா அபிமானிகளால்? நடந்தது போட்டி அரசியல், அதனை அறுவடையும் செய்து கொண்டார்கள். இப்போது சேர்ந்ததை மறுப்பதால் யாருக்கு லாபம். லாபம் இருக்கிறது என்றால் அதையும் செய்வார்கள். பதில் எழுத அபிமானிகள் தயார் என்றால் முன்னிலும் அதிகமாக விளக்க நானும் ஆயத்தமாக இருக்கிறேன்.

 

அதுசரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது எழுதாமல் இப்போது ஏன் எழுதுகிறோம். இதற்கு ஏற்கனவே பதில் எழுதப்பட்டிருக்கிறது. தோழரை, தோழரின் குடும்பத்தினரை, தோழரின் உடமைகளை காக்கும் கடமை எங்களுக்கு இருந்தது. அப்போதே எழுதியிருந்தால் கொலைக்கும் அஞ்சியிருக்க மாட்டார்களே இந்த பயங்கரவாதிகள்?

 

இந்த இடத்தில் இன்னொரு விளக்கமளிக்க வேண்டியதும் தேவையாகிறது. அபிமானிகளின் பதிவு வெளிவந்த நேரத்தில் அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன். ஆனால் அது வெளியாகவே இல்லை. வினவில் வெளிவந்த அந்த பின்னூட்டம் இங்கே. வழக்கமாக இது போன்ற பின்னூட்டங்களை நான் சான்றுகளுக்காக படமெடுத்து வைப்பது வழக்கம். அன்றிருந்த சூழலில் இதை படமெடுக்க மறந்துவிட்டேன். அப்படி படமெடுத்து வைத்திருந்தால் இன்று இவர்களின் கள்ளத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டேன். இதையே சாக்காக வைத்து அதில் எழுப்பபட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார்கள் இந்த அபிமானிகள். அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் \\\ எவ்வளவு குரூர மாணவனிடம் வேண்டும் என்றாலும் மோதலாம். ஆனால் பொய்யர்களிடம் மோதி வென்றோ அல்லது தோற்றோ ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஆகவே, விடு ஜூட்……. /// இவர்களின் சான்றிதழ்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், இவர்களிடம் பதில் வாங்க வேண்டும் எனும் ஆவலிருப்பதாலும் ஒரு வாதத்திற்காக நான் அவர்கள் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்றே கொள்வோம், கேள்விகளுக்கு பதில் கூறத் தயாரா இந்த அபிமானிகள்? (அந்தப் பதிவை எழுதிய அபிமானிகளுள் ஒருவர் இதுபோன்றே முன்பு என்னுடைய பின்னூட்டத்தை தடுத்துவைத்து தகிடுதத்தங்கள் புரிந்தார். அது இப்போது பேசப்படும் விசயங்களுக்கு வெளியிலுள்ள விசயம் என்றாலும் ஒரு தகவலுக்காக அந்த பதிவை இங்கே சொடுக்கி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்)  துணிவு உள்ளவர்கள் பதில் கூறட்டும். பார்க்கலாம் அவர்களின் நேர்மையை.

 

அடுத்து ஷேக்தாவூத் எனும் ஜோக் தாவூத் என்பவர் தொடர்பில்லாத வேறொரு விடயத்தோடு முடிந்திருக்கிறார். நாங்கள் கூறிய புகார் பொய்யானதல்ல என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட இஸ்லாமியரை உள்ளே தள்ளியிருக்கிறோம் என்பதே சான்று. இணையத்தில் அவதூற்றை கழிந்தவர்கள் அது உண்மை என நம்பினால் எங்கள் தோழர் மீது காவல் துறையில் புகார் அளிக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார். திராணி இருக்கிறதா இவர்களுக்கு? நேரடி நேரடி என்று பீலா விடும் எவரும் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டு கூறியிருக்கிறேன். அறிவு நாணயம் இருப்பவர்கள் எதிர் கொள்ளலாம்.

 

அடுத்து ஜிட்டிஜன் என்பவர் ஜோக் என்றும் பயங்கரவாதம் என்று ஏதேதோ எழுதியிருக்கிறார். அதை படித்து பொருள் புரிந்து கூறுபவர்களுக்கு பரிசு வழங்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு குழப்பம். எதை ஜோக் என்கிறார்? எப்படி பயங்கரவாதம் என்கிறார்? அவருக்கே புரிந்திருந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஏன் போலீஸுக்கு போகவில்லை என்று. அவர் முகத்தில் படியும் கரியை எப்படி துடைத்துக் கொள்வார் என்று விளக்கினால், போலீசுக்கு போகக்கூடாது என்று குடும்பத்தார்கள் மிரட்டியதால் தான் போகவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார். இது மட்டுமல்லாது, சங்கர்லால் போல துப்பறிந்து ஒரு விசயத்தையும் எழுதியிருக்கிறார். நடந்த நிகழ்வு அன்றே எனக்கு தெரியும் என்பதும், வினவு கட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை தான் ’பத்திக்கிச்சு’ என்று எழுதியிருப்பதும் எப்படி எந்த விதத்தில் முரண்படுகிறது? இது எப்படி பொய்யாகும் விளக்க முடியுமா? உளறல் என்பதற்கான மெய்ப்பொருள் வேண்டும் என யாராவது தேடினால் இவரின் இந்த கண்டுபிடிப்பை பரிந்துரை செய்யலாம்.

 

அடுத்து அப்துல்லா என்பவர், அமைதியான ஊரை, கண்ணியமான மக்களின் கூட்டமைப்பை என்று உருகியிருக்கிறார். ஆனால் எது அமைதி? கண்ணியம் எங்கிருக்கிறது என்பதை மட்டும் பரிசீலனை செய்ய மறுக்கிறார். ஒரு கருத்தை ஆதரிப்பதும் ஒதுங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் எதை பொய் என்று கருதுகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தலாமே. அப்போதல்லவா தெரியும் எது பொய் எது உண்மை என்று. ஒதுங்கி ஓடினால் உண்மைகளை உணர முடியாது.

 

அபிமானிகளின் இந்த பதிவில் தங்கள் கருத்துகளை பின்னூட்டிய கார்பன் கூட்டாளி, ஷேக்தாவூத், முகம்மத் ஆஷிக், சிராஜ், சுவனப் பிரியன், அப்துல்லா ஆகியோர் என்னுடைய இந்த எதிர்வினை குறித்த பதில்களை தந்தாக வேண்டும். அப்படி அவர்கள் பதில் தராத பட்சத்தில் எந்த சிந்தனையுமற்ற மூடநம்பிக்கை மதவாதிகள் என்றே கருதப்படுவார்கள்.  ஏனென்றால், அநீதி என்று தெரிந்து கொண்டே அதை ஆதரிப்பவன் மூடநம்பிக்கை கொண்டவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா? எனக்கு ஹைதர் அலி என்றொரு நண்பர் உண்டு, அவர் என் கருத்துகளின் நண்பர் இல்லை என்றபோதிலும் எதிரி இல்லை என்பதையும் உணர்த்தியவர். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஆனால் இதுவரை அவர் மௌனமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கருத்தை பதிய வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

 

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் தளம் கடையநல்லூர்.ஆர்க். கடையநல்லூர் தளங்களிலேயே அதிகம் கவனம் பெறும் தளம். என்னுடைய மாற்றுக் கருத்துகளையும் ஓர் எல்லை வரை அனுமதித்தார்கள் எனும் வகையில் குறிப்பிடத்தக்கதாய் இருந்தாலும், இந்த விசயத்தில் தொடக்கத்திலிருந்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அப்பட்டமாக குறுகிய மதவெறியை கொண்டதாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் நடந்த அநீதியை மறைத்து அதை மதவாத நோக்கில் சரிக்கட்டும் விதமாகவே அமைந்திருந்தது. மட்டுமல்லாது கடையநல்லூரைச் சேர்ந்த பலர் மதக் கொழுப்பு வழிந்தோட இட்ட பின்னூட்டங்களையெல்லாம் பல நாட்களாக வைத்திருந்துவிட்டு வினவில் அது குறித்த கட்டுரை வெளிவந்த பின்னர் கள்ளத்தனமாக அந்த பின்னூட்டங்களை நீக்கி விட்டார்கள். இது அவர்களின் நேர்மையற்ற போக்கிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு. இதன் பின்னரும் கூட என்னைப்பற்றிய செய்திகளை கிசுகிசுக்களாக வெளியிடுவதில் முனைப்பு காட்டினார்கள். அவற்றில் ஒன்றிரண்டிற்கு நான் பதில் எழுதியதும், நான் அவ்வாறு பதில் எழுதக் கூடாது என்பதற்காகவே தங்கள் தளத்தில் முகநூல் கணக்கில் பின்னூட்டமிடும் வசதியையே நீக்கிவிட்டார்கள். இது அவர்களின் காழ்ப்புணர்வை வெளிப்படுவதாகாதா? அது மட்டுமன்றி என்னை குறிவைத்து எழுதப்பட்ட பதிவுகளுக்கு நான் மறுப்பு எழுதி அனுப்பியபோது அதை வெளியிட மறுக்கிறார்கள், இது இந்திய அவதூறு சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை பெறத்தக்க குற்றம் எனும் அறிதல் கூட இல்லாமல். இவைகளெல்லாம் நேர்மைக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டும் கருவிகள்.

 

கடைசியாக ஒரு பெரியவர். கவிஞர், கவியரங்குகளிலும், பொது மேடைகளிலும் தன் கவிதைகளை வாசித்தவர். கடல்கடந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பு கொண்டிருப்பவர். ஆனால் அவருடைய எழுத்தின் ஆளுமையை தெரிந்து கொள்ள இதை படித்துப் பாருங்கள். \\\ USING YOUR RIGHTS YOU HAVE NO RIGHT TO SAY YOUR FATHER AND MOTHER AS BASTARD,. SIMILARLY YOU HAVE NO RIGHT TO EXPRESS ABUSES AGAINST A RELIGION.IF YOU TAKE THE RIGHTS IN YOUR HAND I CAN CALL YOUR WIFE AND MOTHER AS PROSTITUTE. IF I SAY THIS YOUR BLOOD WILL BE BOILING. ISNT ? OUR RELIGION ISLAM IS MORE THAN OUR SOUL, MOTHER AND WIFE. IF YOU ABUSE OUR BLOOD WILL BOIL. IT IS QUIET NATURE. YOU CAN NOT SAY IT AS BRUTAL AND BARBARISM./// இது கடையநல்லூர் பிரச்சனை குறித்து கூகுள் பிளஸில் அவர் எழுதியது. இவர் வேறு யாருமில்லை. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே என்று என்னுடன் விவாதிக்க வந்து விட்டு முடியாமல் பாதியிலேயே ஓடிப் போனவர். ஐயா ரத்தம் கொதிக்கும் அளவுக்கு என்ன எழுதப்பட்டிருந்தது என்று பலமுறை கேட்டாயிற்று. பதில் கூறுவதற்கு நாதியில்லை. ஆனால் இவர்கள் ரத்தம் மட்டும் கொதித்துக் கொண்டே இருக்குமாம். போங்கையா நீங்களும் உங்கள் ரத்தக் கொதிப்பும். சீக்கிரமாக மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆண்டவன் உங்களுக்கு எழுதிய தேதி சீக்கிரமே வந்துவிடப் போகிறது.

 

ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை  என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். வந்த சிலரும் கூட பேசவேண்டியதைப் பேசாமல் காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்தை மட்டும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வார்கள். என்றால் அதன் பொருள் என்ன? தாங்கள் மத வெறி பிடித்தவர்கள் என்பதையும், கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தான். ஆனால் இது ஆவணமாக பாதுகாக்கப்படப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும் யாரும் உங்கள் மதவெறியின் மீதும் நேர்மையின்மையின் மீதும் காரி உமிழ்வார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

 

பின் குறிப்பு: இந்தப்பதிவு இத்துடம் முடிவடைவதைப் போன்ற தோற்றம் வந்திருக்கிறது என்றாலும் முடிந்துவிடவில்லை. இதில் இன்னும் பல விசயங்கள் பேசப்பட வேண்டியதிருக்கிறது என்பதால் தொடரும்.

விதியா? மதியா? என்னதான் கூறுகிறது குர் ஆன்

28 ஜன

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 20

 

உலகில் தொடர்ந்து கெண்டிருக்கும் குழப்பங்களுக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாடு, மதம், மொழி, நிறம், இனம், பொருளாதாரம் எனவும் இவற்றிற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. இந்த பிரிவினைகள் ஏன்?   இவ்வினாவிற்கு, 

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; (அவ்வாறு) தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த பிறகும், தங்களுக்கிடையே இருந்த பொறாமையினால் அ(வ்வேதத்)தைக் கொடுக்கப்பட்டவர்களேயன்றி (வேற எவரும்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை; ஆயினும் சத்தியத்தில் நின்றும் எதில் அவர்கள் மாறுட்டிருந்தனரோ அ(ந்த சத்தயத்)தின் பால் முஃமின்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு நேர்வழி காட்டினான். அல்லாஹ் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.

(குர்ஆன் 2:213)

  மனிதன் பல சமுதாயங்களாக பிரிந்ததற்கு அவனது பொறாமை குணம் மட்டுமே காரணம். எனவே இறுதியாக மீண்டும் தூதுவர்களையும், வேதங்களையும் மனிதர்களிடையே அனுப்பி, பிளவுபட்ட சமுதாயத்தை இணைக்க நாடுவதாக கூறுகிறான். இங்கு அல்லாஹ் குறிப்பிடும் சமுதாயம்,  முஹம்மது நபிக்கு கட்டுப்பட்டு வாழும் கூட்டத்தையே குறிக்கிறது.

தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் வேதத்தைக்கொண்டும், இன்னும் மனிதர்களுக்கு அவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டதை நீர் விளக்குவதற்காக திக்ரை உம்பால் இறக்கி வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாகி விடலாம்.

(குர்ஆன் 16:44)

மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும், முஃமீனான கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டியாகவும், ரஹ்மத்தாக இருப்பதற்காக தவிர வேதத்தை உம்மீது நாம் இறக்கவில்லை.

(குர்ஆன் 16:64)

அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் திட்டமாக நாம் தெளிவாக்கியுள்ளோம்…

(குர்ஆன் 17:41)

(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை…

(குர்ஆன் 2:272)

 (இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பநதமும் இல்லை; …

(குர்ஆன் 2:256)

இதில் எவ்வித நிர்பந்தமும் இல்லையென மென்மையாகக் கூறிய அல்லாஹ், வழியைத் தேர்தெடுக்கும்  வாய்ப்பை மனிதனுக்கு வழங்கி, பொறுப்பிலிருந்து விலகியவன், குர்ஆனின் மற்றொரு பகுதியில் கூறுவதை கவனியுங்கள்,

…நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவட்டது எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ அவர் (அறுந்து) போகாத உள்ள கயிற்றின் உறுதியான முடிச்சை திட்டமாக பற்றி பிடித்துக் கொண்டார்…

(குர்ஆன் 2:256)

அன்றியும் எவரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை தேடுவாரானால் அவரிடமிருந்து அது ஏற்கப்படவே மாட்டாது; இன்னும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

(குர்ஆன் 3:85)

இஸ்லாம் மட்டுமே நேர்வழி. எனவே, அதைத் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கூறுகிறான். அவ்வாறு ஒரு மனிதன் நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதும்  தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் என வலியுறுத்தி மீண்டும் குழப்ப நாயனாகிறான். குர்ஆனில் பல வசனங்களில் “அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்” என்ற வாக்கியத்துடன் முடிவுறுவதை எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே மனிதன் நேர்வழியில் செல்வது அல்லாஹ்வின் நாட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

…அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்

(குர்ஆன் 2:272)

…அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியின் மீது ஒன்று சேர்த்து விடுவான் ஆகையால் அறியாதவர்களில் உள்ளவராக திண்ணமாக நீர்ஆகிவிடவேண்டாம்

(குர்ஆன் 6:35)

தான் நாடுபவரை தன் ரஹ்மத்தில் புகச் செய்வான்.

(குர்ஆன் 76:31)

நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமமேயாகும் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளமாட்டார்கள்.

(குர்ஆன் 2:6)

…வழியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்; – அல்லாஹ் எவரை வழி தவறச் செய்கிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் எவருமில்லை.

(குர்ஆன் 13:33)

…அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்…

(குர்ஆன் 14:04)

அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்.

 (குர்ஆன் 76:30)

உம்முடைய ரப்பு நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்.

(குர்ஆன் 11:118)

வழி தவறச் செய்தது மட்டுமல்லாமல், மனிதன் நேர்வழியை அடைவதும் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட மனிதனை திரும்ப நேர்வழியில் செலுத்த யாராலும் இயலாது. அல்லாஹ்வின்  இந்த நிலையை மெய்பிக்க மேலும் சில குர்ஆன் வசனங்களை காண்போம்.

அல்லாஹ் அவர்களின் இதயங்களின் மீதும் அவர்களின் செவிப்புலன்களின் மீதும் முத்திரை வைத்து விட்டான் இன்னும் அவர்களின் பார்வைகளின் மீது திரையிருக்கிறது. மேலும் மகத்தான வேதனையுண்டு.

(குர்ஆன் 2:7)

அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால்  ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம்; (இவ்வாறே) நாம் அவர்களை மூடி விட்டோம், எனவே அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(குர்ஆன் 36: 9)

…அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையட்டு விட்டான்

(குர்ஆன் 47:16)

அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களை சபித்து அவர்களை செவிடாக்கி அவர்களுடைய பார்வைகளையும் குருடாகவும் ஆக்கிவிட்டான்

(குர்ஆன் 47:23)

ஆனால்  அல்லாஹ்வால், தடுக்கப்பட்டவர்  -களையும், முடமாக்கியவர்களையும் இஸ்லாமெனும் பாதையில் மனிதர்களை  ஒன்றினைய அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. “நீர் அச்சமூட்டி எச்சரிப்பவர்” என அல்லாஹ்வினால் வர்ணிக்கப்பட்ட தன் தூதரிடம், தான் கூறும் வழியை அவ்வாறு பின்பற்ற இயலாத, தன்னால் முடமாக்கப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்ள உத்தரவிடுகிறான்.

ஃபித்னா நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்காகே ஆகும்வரை அவர்களிடம் போர் புரியுங்கள்

(குர்ஆன் 2:193)

நிச்சயமாக எவர்கள் நம்முடைய வேத வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் புகச் செய்வோம்; (அதில்) அவர்களுடை தோல்கள் கரிந்து விடும் போதெல்லாம் வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக அவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம்.

(குர்ஆன் 4:56)

உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்துங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்குமேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்…

(குர்ஆன் 8:12)

எந்த நபிக்கும் (விஷமங்களை தடுக்க) பூமியில் இரத்தத்தை ஓட்டுகின்றவரை (கொல்லாமல்) சிறைப்பிடித்து அவரிடத்தில் இருப்பது தகுமல்ல; உலகத்தின் (சொற்ப) நன்மையை விரும்புகிறீர்கள்.

(குர்ஆன் 8:67)

(போரிடுதல் தடைசெய்யப்பட்ட) புனிதமான மாதங்கள் சென்று விட்டால் முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)களை – அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள் (அவர்கள்)  நடமாடும் பாதைகளையெல்லாம் அவர்களுக்காக நீங்கள் நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.

(குர்ஆன் 22:9)

இவ்வாறாக அல்லாஹ்வினால் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டவர்கள் யார்? ஏன் அவ்வாறு தடுக்கப்பட்டார்கள்?

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிருகங்களில் கெட்டது (அல்லாஹ்வை) நிராகரித்தார்களே அத்தகையோராவர் எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

(குர்ஆன் 8:55)

எனவே எவனொருவன்-அவனுடைய தீய செயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை) அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்.

(குர்ஆன் 35:8)

எந்த ஒரு மனிதனும் சுயமாக செயல்பட எவ்விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. அனைத்தும் அல்லாஹ் இறுதி  செய்த விதிப்படியே நடக்கிறது.

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

(குர்ஆன் 57:22)

அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக உறுதியாகி விட்டது எனவே அவர்கள்  ஈமான்  கொள்ளமாட்டார்கள்.

(குர்ஆன் 36:7)

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.

(குர்ஆன் 54:49)

புஹாரி ஹதீஸ்       : 3332         

உண்மையே  பேசுபவரும்,  உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாட்களில்) அந்தக் கரு (அட்டைப்போன்று கருப்பையின் சுவரைப்பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகின்றது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப் பட்டசக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறி விடுகின்றது. பிறகு அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான் (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுத்தப்படுகின்றது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகின்றது. இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் விதியின் வலிமையைக் கூறுகிறது. பகுத்தறிவு  ஏற்கவில்லையென்றாலும் கட்டயமாக நம்பியே தீரவேண்டும். விதியை மறுப்பவர்களை  கடுமையாக எச்சரிக்கும் ஹதீஸ் ஒன்றைப்  பார்ப்போம்.

முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01

…(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: “அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, “ஆனால், அவர்கள் ‘விதி’ என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்” என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறி விடுங்கள்)”.

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:…

குர்ஆனும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறது. உலகின் ஒவ்வொரு நிகழ்வும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. விதியை உண்மையான முஸ்லீம்களால் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. அது ஈமானின் (நம்பிக்கை) ஒரு பகுதியாகும்

முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01

…அடுத்து அவர், “ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்” என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார். …

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள்.

அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின்   ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால்,  மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்ன?  மனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை? மனிதர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற பாதையில் செல்ல, அல்லாஹ் ஒருபொழுதும் விரும்பவில்லை.  காரணம், நரகத்தை நிரப்புதல் மட்டுமே அல்லாஹ்வின் குறிக்கோள்.

நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி  விட்டது.

(குர்ஆன் 32:13)

(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான். (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.

(குர்ஆன் 11:119)

நரகத்தை நோக்கி, நீ நிரம்பி விட்டாயா? என்று நாம் கேட்கும் நாளில், இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது கூறும்.

(குர்ஆன் 50:30)

மறுமையின் மிக மிக முக்கியமான கேள்வி மார்க்கத்தைக்  குறித்ததே. அப்படியானால் தீர்ப்பு நாளின் விசாரணை வேடிக்கையாக தோன்றவில்லையா? (தீர்ப்பு நாளின் வேடிக்கைகளை இத்தொடரின் இறுதியில் விரிவாகக் காணலாம்.) ஒருவர் இஸ்லாமை ஏற்பதும், மறுப்பதும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. எனவே இஸ்லாம் என்ற பாதையை தேர்ந்தெடுக்கத்தவறியவர்கள் தங்களது பாதை மாறிய பயணங்களுக்காக அல்லாஹ்வின் விதியின் மீது குற்றம் கூற முடியாது காரணம்,

துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்.

(குர்ஆன் 42:30)

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (,உனக்குத் தரப்பட்டுள்ள தீர்மானிக்கும் அறிவு குறை பாட்டால்தான்) வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் – அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.

(குர்ஆன் 4:79)

(இப்பகுதியை மீண்டும் படித்தால் ஒருவேளை தெளிவான முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்…கி…க…வி…#@#?@&?!!?) விதி குறித்து இவ்வளவு தெளிவாக குழப்பும் குர் ஆன் தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்க வந்த மனிதக் கரங்களால் கரைபடியாத ஒரே வேதமாம். யாராவது தலை சுற்றி மயங்கி விழுந்தால் கம்பனி பொறுப்பல்ல.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்