Tag Archives: மாநாடு

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே

25 ஜன

tntj appalam

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்கு நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.

முதலில் ஷிர்க் என்றால் என்ன? இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.

சரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும்? இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா? டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்பது முக்கியமான கேள்வி.

அண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா? அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா? இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.

இந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா? அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா?

விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா? அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா? இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்?

ஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அவர்கள் கூறுவது என்ன? ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தாயத்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை? டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா?

பொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன? தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.

சமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.

பரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

மேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.

இப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன? டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.

இன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா? அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா? முடியாது என்பதே யதார்த்தம்.

ஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும்? இது முக்கியமான கேள்வி அல்லவா?

இங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன? உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன? அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன? அதை எப்படி தீர்ப்பது? உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா? அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா? ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா? ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா? உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது?

ஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா? உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா? என்பது மட்டுமே கேள்வி.

நீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? உங்களின் பங்களிப்பு என்ன?

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

13 ஜூலை

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!

 நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

 

அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,

 

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,

 

எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.

 

பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.

 

கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

 

இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.

 

மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.

 

மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.

 

எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.

 

எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.

 

ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

 

எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

 

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.

 

இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.

 

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.

 

தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

 

இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

 

இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.

 

எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!

 

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!

 

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

 

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

 

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே தவறாமல் கலந்து கொள்வீர், கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகளில் 

 

கடலூர் ஜூலை 15ல்

சென்னை ஜூலை 17ல்

திருச்சி ஜூலை 19ல்

விழுப்புரம் ஜூலை 22ல்