அப்பவெல்லாம் இது மாதிரியான வசதிகள் இல்லாத ஒரு வறுமையான சூழல் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தான் என் சின்ன வயசுக் காலம். நானும் சேர்ந்து எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பேரு. அரிசிச்சோறு அப்ப கொஞ்சம் அரிது…வீட்டில் தறி நெசவு வாப்பாவும் உம்மாவும் என் தாத்தா (அக்கா) வுமாக சேர்ந்து காலை நான்கு மணிக்கு மிதிக்க ஆரம்பிக்கும் பலகை சட்டக் சட்டக் என பின்னிரவு வரை ஒரு நாற்பது வாட்ஸ் பல்பு அந்தத் தறியில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் அதன் ஒளியிலும் தொடரும்…
வாங்கு சொல்லியாச்சா என்று அந்த மூமின்கள் வாழும் பகுதியில் அதிகாலையில் எழும் அந்தக்கேள்வியில் ஒளிந்திருப்பது தொழுகைக்கான ஆவல் அல்ல பாவு விரிச்சுக்கட்டவும் பாவ போடவும் தான்…
அந்தக் காக்குழியில் ( ஆள் நின்று தறியிழுக்கும் பள்ளம் ) வாப்பா வின் உள்ளமை இப்பவும் மனதில் பிரேமில் இட்ட படமாய் உள்ளது…கடின உழைப்பாளி கடும் கோபம வரும். எங்க அண்ணன் அலி தான் வீட்டில் ரண்டாவது அவனுக்கு நெறைய படிக்க ஆசை அதனால வாப்பாவும் அவனை படிக்க வைக்க அரும்பாடு பட்டார்… அலியண்ணன் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். நானும் தான் என்வகுப்பில் நல்ல படிக்கிறவன். ஆனால் வாப்பா ஆறாவதிலேயே என்னை பாவு முடியச்சொல்லி அனுப்பிவிட்டது.. அண்ணன் படிப்புக்கு நாம எல்லாரும் ஒத்தாசை பண்ணனும் அப்படின்னு சொல்லிரும்…..காலையில் சென்று நண்பனும் நானும் பாவுல ஆளுக்கு ஒரு புறமாக இருந்து சீவி முடியுவோம் இழைகளை. பாடல்கள் பாடிக் கொண்டும் படக்கதைகளைப் பேசிக்கொண்டும் சுமார் எட்டு மணி நேரம் குறுக்கு வளைச்சு நிமிரும்போது வலிக்கும்….கிடைக்கும் அந்த ஒன்னாரூவா காசு வலியை மறக்கச்செய்யும்… வரும்போதே வாப்பா வேற ஆபர் குடுப்பார் சில நேரம் சாப்பாடு போக மிதி நேரம் முழுக்க ராத்திரி பதினொரு மணி வரையில எல்லாம் முடியுவோம்…பெரும்பாலும் சோளக்காடியும் வெங்காயமும் தான்..
அண்ணனும் பெரிய பத்து முடிச்சு பியூசி யும் படிச்சிட்டு காலேஜில பெரிய என்ஜினியர் படிக்க சேந்து அப்ப அப்ப ஊருக்கு வரும் வந்தால் லைப்ரரி மற்றும் சங்கம் போல இடங்களில் தான் முழுக்க தங்கும்…எங்கள்ட்ட அவ்ளவா பேசாது நல்ல ட்ரஸ் பண்ணிட்டு எங்க கண்ணுலே வராம அப்படியே விடுமுறைய கழிச்சிட்டு திரும்ப போயிரும்… வாப்பாட்ட கேட்டதுக்கு…ஏல அவன் படிச்சவன் அவனுக்கு படிப்பு தான் முக்கியம்மின்னாரு
எங்க தரவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து எங்க எல்லோரையும் நல்லா விசாரிச்சிட்டு வாப்பா கூட எதோ ரகசியமா பேசிட்டு போனார்.. அவரு பெரிய பணக்காரர் அவர் வீடு பெரிய அரண்மனை மாதிரி கம்பியளிப் போட்டு கல்லுத் திண்ணையோட கம்பீரமா நிக்கும்…அவங்க வீட்டில் காலையில் நாஷ்டாப் பண்ணுபவர்கள்..
அவருக்கு கடையில போயி கலரு வாங்கி வந்து கொடுத்தேன்… வாப்பா சந்தோஷப்பட்டார்.. போனப் பெறவு அண்ணனுக்கு அவர் மகளை பேசி கல்யாணம் பண்ணப் போறதாச்சொன்னார் வாப்பா.
வாப்பா வுக்கு தலை கால புரியாத சந்தோசம். அதுக்குப் பிறகு சம்பந்த வீட்டிலிருந்து அரிசி தேங்காய் எண்ணெய் பலகாரங்கள் என எங்களுக்கு எப்பவும் மகிழ்வு தான்,,,,
அண்ணனுக்கு படிக்க வாப்பா கடன் வாங்கிய வகையில் நிறைய பாக்கி இருந்தது அத்துடன் கல்யாணத்துக்கும் சேர்த்து கொஞ்சம் கடனாக வாங்கி சோடனைக் காரில் அண்ணன் ஏறி வந்து நாலு சங்கம் பைத்து படிச்சு ஆட்டிறைச்சியுடன் அருமையாக கல்யாணம் நடந்தது…
ஆக அண்ணனும் மதினியும் இரண்டு நாள் சேர்ந்து எங்க வீட்டில இருந்தது தான் நான் கடசியப் பாத்தது அதுக்குப் பிறகு அவன் முழுக்க மாமனார் வீட்டில் தான் இருந்தான்…
இப்ப அண்ணனுடைய மக்கள் நல்ல படிப்பு படிச்சு ஒசந்த நெலையில இருக்காங்க… நான் பெருமையா எப்பவும் சொல்வேன் அவன் என் கூடப்பெறந்தவன்னு… ஆனா அண்ணனுக்கு எங்கள தன்னுடைய உறவுன்னு சொல்ல கஷ்டமாத்தான் இருக்கும்… எங்கேயாவது கண்டால் என்னடே அப்படின்னு ஒரு கேள்வி…
அண்ணனின் வாழ்க்கையும் அவனது மேன்மையும் அவனது உயர்வும் பட்டினியாய் நாங்கள் ராப்பகலாய் அவனுக்காகப் பட்ட பாடும் எங்களின் ரத்தம் நெற்றி வியர்வையாய் நிலம் பார்த்தது தான்…
போன வாரம் வாப்பா மௌத்தாயிடுச்சு அண்ணன்தான் வந்து நின்னு எல்லா காரியமும் முன் நின்னு செய்தார்……… மையத்து சிலவுக்கு அவரும் காசு பங்கு தருவதாக சொன்னார் அட வேண்டாமே….
வாப்ப வின் மௌத்துக்கு மதினி வந்து விட்டுப் போய் விட்டார்கள் அண்ணனின் மக்கள் யாருமே வரவில்லை…அவர்களுக்கு படிப்பு முக்கியம் ….
அவங்க படிச்சவங்க பணக்காரங்க …
போன வாரம் சாயாக்கடையில எனது ஆறாவது வகுப்பில் பாடம் எடுத்த பழைய முத்தையா சார்வாளைப் பாத்தேன் …
என்னடே எப்படியிருக்க
அப்படியே உன்காலத்த கழிச்சிட்டியப்பா அடிமையாக் கெடந்து…
என் வகுப்பில ஒன்ன மாதிரி அறிவுள்ள பையனை நான் பாத்ததில்லையப்பா… நாலு எழுத்து படிக்காம ஒரு ஜென்மம் முழுசையும் கடத்திட்டியப்பா…
உங்க அண்ணன் அலிய விட நீ ரண்டு மடங்கு கெட்டிக் காரன்லடே…. போச்சப்பா உன்காலமும் இப்ப எவளவு நாளைக்கு லீவு?
எங்க சவுதியாப்பா?
வலிச்சது கொஞ்சம்…
வெள்ளை மனசு ஒன்னு சொல்லியதைக் கேட்டு இங்கு எழுத்தாக்கும் நேரத்திலும் என் கண்ணில் நீர்த்திரை…
கல்வி ஒருவனுக்கு உறவுகளை போற்றும் பண்பை ஒழுக்கத்தை அவனது அறிவை வளர்க்க உதவ வேண்டும்… அவ்விதம் இல்லையெனில் அவன் கற்ற கல்வியின் பயன் தான் என்ன…உறவுகளை மறப்பதற்கும் உயரத்தில் இருந்து திமிராய் நடப்பதற்கும் தான் இந்த தம்பிகள் அண்ணன்களின் உயர்வுக்கு உரமானார்களா…
முதல் பதிவு: ஆழ்கடலின் மனவோட்டங்கள்