பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கல்லூரி முன் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் காலேஜ் இயங்கி வருகிறது. அதில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரசேட் என்பவரின் மகன் அரவிந்த் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
சுமாராக படிக்கும் அரவிந்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று துறைத் தலைவர் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் 2 நாளாக கல்லூரிக்குச் செல்லாத அரவிந்த் நேற்று இரவு தூங்கும் போது விஷம் குடித்து விட்டு தூங்கி விட்டார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் எழுந்திராத அவர் இறந்ததை அறிந்த கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக கல்லூரி முன்பு கூடிவிட்டனர்.
தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் தாங்களு்ம் கல்லூரி ஆசிரியர்களால் நிறைய துன்பங்கள் அனுபவிப்பதாகவும், அடக்கு முறையை கல்லூரி நிர்வாகம் கைவிடாவிட்டால் அரவிந்த் எடுத்த முடிவை தான் மற்ற மாணவர்களும் எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.
ஆனால் அரவிந்தின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகமும் அரவிந்த் உடல் நல உலைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
***********************************************************
மணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது நமது கல்வி முறையின் அவலங்களைக் காட்டும் கண்ணாடி. கல்வி என்பது வாழ்வை புரிந்துகொள்ள உதவும் கருவியாக இருக்கவேண்டும். வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளை நேரிய முறையில் ஆய்வு செய்வதற்கு கற்றுத்தரும் களமாக இருக்கவேண்டும். ஆனால் மதிப்பெண்களை துரத்திக்கொண்டு ஓடும் குதிரைகளைப் போல் நாம் மாணவர்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதிக மதிப்பெண்களை எடுக்கும் தகுதி இல்லையென்றால் வாழும் தகுதி இருக்கிறதா எனும் ஐயப்பாட்டின் எல்லையில் கொண்டுவந்து மாணவர்களை நிறுத்தியிருக்கிறோம். இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் விதிவிலக்கல்ல. அதனால் தான் மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து மதிப்பெண்களாக துப்பவைப்பதற்கு எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லத்தயாராக இருக்கிறார்கள்.
அதேநேரம் இதுபோல் ஒரு நிகழ்வு நிகழ்ந்தபின் அங்கலாய்ப்பதும், நாங்களும் இதுபோல் கல்லூரி நிர்வாகத்தினரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என குழு சேர்வதையும் தவிர்த்து மாணவர்கள் தங்கள் நிலமைகளை உணர முற்படவேண்டும். அவைகளை எதிர்ப்பதற்காக அணிதிரள வேண்டும்.
போராட்டம் என்றதும் கல்லூரிக்கு விடுமுறைவிட்டு ஹாஸ்டலை அடைப்பது வழமையாக இருக்கும் நடைமுறை. இதை மாணவர்கள் ஒருங்கிணைவதன் மூலமே முறியடிக்க முடியும். போராடுவது ஒன்றும் தவறல்ல. உணருங்கள் ஒன்றினையுங்கள் போராடுங்கள். ஏனென்றால் போராட்டம் என்றால் மகிழ்ச்சி என்று பொருள்.