தொகுப்பு | திசெம்பர், 2010

80 லட்சம் கோடி: எங்கிருந்து கிளம்பின இந்த ஊழல்கள்?

31 டிசம்பர்

ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது… மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ… ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்… காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில ‘துளிகளை’ இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: ‘இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு’ (‘The spectrum scam has put ‘all other scams to shame!’.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 – 25,000 கோடி

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி – வங்கித் துறை கடன் ஊழல் – மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்… இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை – எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் ‘ஜுஜுபி’தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர – சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு – ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி… என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி… இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிரு பலிகிடாக்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, “இது எப்போ நடந்தது?” என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது… அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

*****************************************************

ஊழல் என்ற சொல்லைக் கேட்டு யாருக்கும் இப்போது தார்மீகக் கோபம் வருவதில்லை. ஏனென்றால் ஊழல் என்பது நம்மை அரிக்கும் ஒன்று என்பதே மக்களுக்கு மறந்து போனது. அந்த அளவுக்கு ஊழல்கள் ஈசல்களைப் போல் கிளம்பி வெளிவருகின்றன. ஊழலில் யார் முக்கிய குற்றவாளிகளோ, யார் இது போன்ற ஊழல்களினால் பலனடைகிறார்களோ அவர்கள் வெளியில் தெரிவதுமில்லை, அரசு அமைப்பின் அத்தனை சாரளங்களும் அவர்கள் மக்களின் கண்களின் மாட்டி விடாமல் தப்புவதற்கான அனைத்தையும் செய்கின்றன. ஊடகங்களும் உண்மைக்குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாதிருப்பதற்காக மாட்டிக்கொள்ள வைக்கப்படும் பலிகடாகளைச் சுற்றியே வட்டமிடுகின்றன. பின்னர் அவைகளை விட்டுவிட்டு வேறொன்றை வெளிச்சமிடுகின்றன. இப்படித்தான் மக்கள் மாயச் சுழலுக்குள் சுழற்றி மழுங்கடிக்கப்படுகிறார்கள். மக்கள் திருடப்படும் பணம் நம்முடைய சொந்த உழைப்பில் உருவான பணம் என்பதை உணர்வதுடன், இந்த ஊழல்கள் எங்கிருந்து கிளம்புகின்றன? எது இந்த ஊழல்களை பாதுகாக்கிறது என்பதையும் மக்கள் கண்டுணர்ந்து போராட முன்வர வேண்டும்.

கீழுள்ள கட்டுரை ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சுற்றி இருந்தாலும், ஊழல்களின் உண்மைக் குற்றவாளிகள் யார்? ஊழல்கள் எங்கிருந்து கிளம்புகின்றன? எந்த அமைப்பு அதைப் பாதுகாக்கிறது என்பன போன்ற விபரங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) வேண்டுகோள்

31 டிசம்பர்

மக்கள் பணி செய்வது சதி அல்ல !!
மக்கள் போராட்டங்களை ஆதரிப்பது தேசத் துரோகம் அல்ல !!

மக்கள் பணம் பல கோடி ரூபாய்களை கொள்ளையிட்டுக் குவித்து வரும் சுருட்டல் பேர்வழிகளே உண்மையான சதிகாரர்கள் !!

நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு விற்று வரும் கொள்ளைக் கும்பல்கள்தான் தேசத்துரோகிகள் !!
ஜனவரி 2 தொடங்கி ஒரு வார காலம் எதிர்ப்பு வாரமாகக் கடைப்பிடிப்பீர் !!

டாக்டர் பினாயக் சென், மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் நாராயண் சன்யால், வணிகரான பியுஷ் குகா ஆகியோர் தேசத்துரோகம் செய்த குற்றத்திற்காக ஆயுள்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர் ஆசித் சென்குப்தா எட்டாண்டு காலம் சிறை வாசம் விதிக்கப் பட்டுள்ளார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படியும் (IPC), சத்திஸ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டம் (CSPA), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகிய சட்டங்களின் கீழ் பொய்யான குற்றங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது. பத்திரிகை ஆசிரியர் ஆசித் சென்குப்தாவிற்கு அதே தேதியில் வேறு ஒரு நீதிபதி எட்டாண்டு தண்டனை வழங்கி உள்ளார். இவ்விரு தீர்புகளும் ஏற்கனவே அரங்கேறிய பாசிச அடக்குமுறை அநீதிகளின் தொடர்ச்சியாகும்.

தான் உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்திய அரசு மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யால், வணிகர் பியுஷ் குகா, மருத்துவர் பினாயக் சென் ஆகியோருக்கு வழங்கியுள்ள அநீதியான தீர்ப்பு வெட்கக்கேடான ஒன்று. பாசிசக் குற்றக் கும்பலான ‘சல்வா ஜ்டும்’ செய்து வரும் அட்டுழியங்களை வெளிக் கொண்டு வந்து மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதே பினாயக் செய்த குற்றம். 2007 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் பிணை வழங்கப்படாமல் சிறை வைக்கப்பட்டு இருந்த மருத்துவர் பிநாயக்கை ஆதரித்து அறிவாளிகள், நோபெல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலராலும் இந்த பொய் வழக்கு கண்டனம் செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு வழங்கிய தண்டனை பிற அறிவுலகத்தினருக்கு விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

உலகின் பல மொழிகளில் வெளியாகி வரும் ‘வெல்வதற்கோர் உலகம்’ (A WORLD TO WIN) என்ற சர்வதேசப் பத்திரிகையின் இந்திப் பதிப்பாசிரியரான ஆசித் சென்குப்தா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்திரிகைச் சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்டு இருக்கும் தண்டனை. மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்தார் என்பதே அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம்.

சமீபத்தில், முதல்வர் ராமன் சிங், மாநிலப் போலீஸ் துறைத் தலைவர் விஸ்வரஞ்சன், போலீஸ் ஐ.ஜி.யான லோங்கெ குமர், எஸ்.பி யான கல்லூரி ஆகியோர் கூட்டாக ‘தந்தேஸ்வரி மாதா ஆதிவாசி சுயாபிமான் மஞ்ச்’ என்ற பெயரில் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து உள்ளனர். பிரபல பத்திரிகையாளர்களான எஸ்.ஆர்.கே.பிள்ளை, அனில் சர்மா, யஸ்வந்த் ராய், மற்றும் காந்தியவாதியான இமான்சு குமார், ஜனநாயகவாதிகளான அருந்ததி ராய் போன்றோரைக் கொலை செய்யப் போவதாக துண்டறிக்கை மூலம் அறிவித்து உள்ளனர். இதுதான் இவர்கள் பீற்றிக் கொள்ளும் சட்டத்தின் ஆட்சி.

73 வயதான தோழர் நாராயண் சன்யால், 1968 ம் ஆண்டு முதல் புரட்சி இயக்கத்தில் இனைந்து செயல் பட்டு வருகிறார். இந்திய ஏழை மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக பொதுவுடைமை இயக்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நோயுற்றுத் தனிமை சிறைகளிலும், விசாரணைக் கொட்டடிகளிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி- மன்மோகன் சிங்- சிதம்பரம- ராமன் சிங் அமைத்துள்ள பயங்கரவாதக் கூட்டணி பல மாவோயிஸ்ட் தலைவர்களைப் படுகொலை செய்துள்ளது, மேலும் பலரை நீண்ட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தி கொட்டடிகளில் அடைத்து வைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக:

2010ம் ஆண்டு, ஜூலை மாதம் சத்திஸ்கர் நீதிமன்றம் கட்சியின் செயல்வீரர் மாலதி என்ற சாந்திப்ரியாவையும் சுரேந்திரா என்ற ஆதரவாளருக்கும் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உள்ளது. அவர்கள் செய்த குற்றம்: சட்டசபை உறுப்பினர்களுக்கு மாவோயிஸ்ட் கொள்கை விளக்க கம்பபியுட்டர் சி.டி. களை தபாலில் அனுப்பியது !!.

கட்சியின் தலைமை குழு உறுப்பினரான அமிதாப் பக்சியையும் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினரான கார்த்திக் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது. இந்த ஆண்டு, அக்டோபர் 29 ம் தேதியன்று, பாண்டுரங்க ரெட்டி என்ற தோழரை சந்திரபாபு நாயுடுவை தாக்கியதான வழக்கில் பொய்யான சாட்சிகள் அடிப்படையில் நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இதே போல, எமது தோழர்கள் பலர் முறையற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு செய்யாத குற்றங்களுக்கு கொடிய மரண தண்டனை உட்பட ஆயுள் தண்டனை போன்ற நீண்ட சிறை வாசங்களை அனுபவித்து வருகின்றனர்.

மூத்த தோழர்களான கோபத் காந்தி, சுசில் ராய் போன்றோர் சிறைகளில் கொடிய நோயுடனும் முதுமையுடனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தோழர்கள். சோபா, பட்டிப்பவன் ஹல்தார், பிரமோத் மிஸ்ரா, விஜய், அசுதோஷ், பால்ராஜ், சிந்தன், பீமன், பிதான், சந்தி, சர்க்கார், பாலகணேஷ், ஜித்தேன் மாரண்டி போன்றோர் பொய் வழக்குகளில் பல ஆண்டுகளாக தண்டனை இன்றியே சிறையில் இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில், தோழர் சொப்பன் தாஸ் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் கைதாகி மருத்துவ வசதி வழங்கப் படாமல் சிறையிலே கொல்லப்பட்டார்.

மத்திய அரசு, டாட்டா, ஜிந்தால், எஸ்ஸார், மிட்டல், போன்ற நிறுவனங்களுக்காக செயல்பட்டு மாவோயிஸ்டு இயக்கத்தை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் எதிரியாக அறிவித்து உள்ளது. கடந்த, 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ (Operation Green Hunt) என்ற பெயரில் மிகப் பெரும் ராணுவ தாக்குதலை பழங்குடியினர் வாழும் ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் நடத்தி வருகிறது.

இந்த அரசும் நீதி மன்றங்களும் தரகர்கள், ஊழலில் திளைத்து வரும் அரசியல் வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் இந்தியப் பணத்தை கொள்ளையிட்டு சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வருவதை ஏன் தேசத் துரோகம் என்று சொல்லி நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் ?

ஏழைகளுக்காகவும் பழங்குடியினருக்காகவும், விவசாயிகளுக்காவும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களையும், பொதுவுடமைப் புரட்சியாளர்களையும் தேசத் துரோக வழக்குகளைப் பயன்படுத்தி சித்திரவதை செய்து வருகின்றனர்.

மத்திய மாநில அரசுகளின் தாக்குதல் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் துணையோடும் ஆசிர்வாதத்தோடும் நடத்தப்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளை மட்டுமே தாக்குகிறோம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் தேசிய இனப்போராளிகளையும் ஒடுக்கி வருவது கண்கூடு.

எனவே, எமது கட்சி அனைத்துப் பிரிவினரையும் ஒற்றுமையுடன் இருந்து இந்த தாக்குதலை எதிர் கொள்ள அழைப்பு விடுக்கிறது.

இதே எதிர்ப்புரட்சி நீதிமன்றங்கள் இதுவரை ஹிந்து தீவிரவாதிகள் நடத்திய அஜ்மீர் தர்க்கா தாக்குதல், 175,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல, ஆதர்ஷ் கட்டிட ஊழல் போன்ற பெரும் வழக்குகளை ஏன் விசாரிக்காமல் மௌனமாக இருந்து வருகிறது?

அதே வேளையில், புரட்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காஷ்மீரிகள் விவசாயிகள் இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளை விசாரிப்பதாகச் சொல்லி அதிக பட்சத்தண்டனைகளை வழங்கி வருகிறது.

எமது கட்சி, அனைத்து விதமான கொடுங்கோல் சட்டங்களையும் நீக்கி ஜனநாயக உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டி அனைத்துப் பிரிவினரும் போராட வருமாறு கேட்டுக் கொள்கிறது.

எமது இயக்கம், சர்வதேசத் தொழிலாளர் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் கடந்த காலத்தில் மக்கள் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து அரும்பணி ஆற்றி இருக்கின்றன. இப்போதும் அதே பணியை விரைந்து முன்னெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது.

மருத்துவர் பினாயக் சென் உள்ளிட்ட மனித உரிமைப்போராளிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என இதன் மூலம் அறைகூவல் விடுக்கிறது.

எதிர்வரும் ஜனவரி 2ம் தேதி முதலான ஒரு வார காலம் ஆர்வலர்கள் அனைவரும் நமது எதிர்ப்பு வாரத்தை கடைப்பிடிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது. இந்த எதிர்ப்பு வாரம் கடையடைப்போ அல்லது ரயில் பஸ் மறியல் நடவடிக்கைகளோ அல்ல. மாறாக, தனி நபர்கள், இயக்கங்கள், ஆர்வலர்கள், அரங்கக் கூட்டங்கள் மூலம், பத்திரிகையாளர் சந்திப்புகள், கொடும்பாவி எரிப்புகள், கையெழுத்து இயக்கங்கள், பேரணிகள், கருப்பு கொடி ஊர்வலங்கள் நடத்தி அதன் மூலம் சத்தியமான சட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.

எமது கட்சியின் உறுப்பினர்கள், பணியாளர்கள், மக்கள் விடுதலைப் படையினர், கட்சியுடன் இணைந்த மக்கள் திரள் இயக்கங்கள் சாத்தியமான அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளையும் நடத்தி மக்களை அணி திரட்ட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்,

அபய்,

அதிகாரப் பூர்வ பேச்சாளர் .
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

29 டிசம்பர்

உங்களின் கவனத்திற்கு: 26.12.2010 அன்று சென்னையில் நடந்த கீழைக்காற்றின் நூல் அறிமுக விழாவில் தோழர் மருதையன் பேசிய உரையை இங்கு வெளியிடுகிறோம். சுமார் 6000 வார்த்தைகள் கொண்ட இந்த நெடிய கட்டுரை வாசிப்பு குறித்த முக்கியமான பிரச்சினைகளை சமூக நோக்கத்துடன் விரிந்தும், ஆழமாகவும், ஆராய்கிறது. வழக்கமான இணைய வாசிப்பு பாணியில் அல்லாமல் சற்று தங்கி நின்று நிதானித்து படியுங்கள். அதென்ன இணைய வாசிப்பு என்ற கேள்வி இருந்தால் அதற்கான விடைதான் இந்த கட்டுரை

தோழமையுடன்
வினவு

காலத்தின் கசப்பை முறியடித்த கீழைக்காற்றின் வரலாறு!

தோழர்களே, இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை என்றெல்லாம் போடுவதில்லை. பொதுவாக நூலை வெளியிட்டுப் பேசுவார்கள். இங்கு சிறப்புரை என்று போட்டிருக்கிறார்கள். இது எனக்கு வாய்த்த சிறப்பு ஒரு சுமை. மற்றவர்களைப் போல் இயல்பாக ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலே பேச இயலாமல் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க வேண்டியச் சூழலில் இந்த மேடையில் நிற்கும் நிலை. அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்தக் கூட்டம், வழமையான கூட்டங்களைப் போல் இல்லாமல் மாலை நேரத்தில் ஒரு நான்கைந்து பேர் அருகருகே அமர்ந்து கலந்துரையாடுதுவது போன்றச் சூழலையும் மனநிலையையும் ஏற்படுத்துவதால் அந்த வகையிலேயே இங்கே பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

கீழைக்காற்று வெளியீட்டகம் பற்றி தோழர் துரை.சண்முகம் தன் தலைமை உரையில் சுருக்கமாகச் சொன்னார். கீழைக்காற்று வெளியீட்டகம் தொடங்கிய காலம் என்பது மிக முக்கியமானது. ரஷ்யாவிலே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே போலி சோசியலிசத்தின் வீழ்ச்சி – “கம்யூனிசம் இறுதியாகத் தோற்று விட்டது, முதலாளித்துவம் வென்று விட்டது, இது தான் நாகரீகத்தின் முடிவு, சித்தாந்தங்களின் முடிவு” என்றெல்லாம் மேற்கத்திய அறிவுத்துறையினர் பேசிக்கொண்டிருந்த காலம்.

இங்கே தமிழகத்தை பொறுத்த வரையிலே உங்களுக்குத் தெரியும் NCBH  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பது ஒரு இடதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் அரசியல் முற்போக்கான விஷயங்கள் ஆகியவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு, 70களில் 80களில் இளைஞர்களுக்கு வாய்த்த ஒரு வரப் பிரசாதமாக இருந்தது. 10காசு 15காசு 25காசு 50காசுக்கெல்லாம் புத்தகங்கள் கிடைக்கும். அதன் பொருள் எல்லாக் கடைகளிலும் அந்த விலைக்குப் புத்தகங்கள் கிடைக்கும் என்பதல்ல. ரஷ்யாவிலே மலிவு விலைக்கு அச்சிடப்பட்டு இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அதை எண்ணிறந்த இளைஞர்கள், ஒரு வகையிலே சொன்னால் “நாலணாவிற்கு ஒரு புக் கிடைக்குது அது என்ன என்றுதான் வாங்கிப் பார்ப்போமே” என்றும், “யாரு நாலணாவிற்கு புக் விற்கிறார்கள்? 15காசு 20காசுக்கு யார் புக் விற்கிறார்கள்?” என்றும் வாங்கினார்கள். அரசியல் நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கதைகள், அறிவியல் நூல்கள் இப்படிப் பல நேர்மறையான, சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்கள் அப்போது தமிழகமெங்கும் பல இடங்களில் விற்பனைக்கிருந்தன. அதை நான் இத்தகைய முற்போக்கு நூல்களைப் படிக்கத் துவங்கிய காலம் என்று சொல்லலாம்.

தனிப்பட்ட முறையிலே அனுபவப் பகிர்தலாக – 70களின் இறுதியில் அல்லது 80பதுகளின் துவக்கத்திலே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கடன் ஏற்பாடு செய்து கொண்டு ஒரு 150-200ரூ எடுத்துக் கொண்டு NCBH சென்றால் ஒரு சைக்கிள் கேரியரில் இருபுறமும் நிறையக்  கட்டிக் கொண்டுவரும் அளவிற்கு புத்தகம் வாங்கலாம். அப்படிப் புத்தகங்களைப் வாங்கிக் கொண்டு வந்து லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியவற்றை அது என்ன ஏன் என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிப்பது.

அப்படி நான் மட்டுமல்ல, பரவலாக இடது சாரி இயக்கம், பெரியார் இயக்கங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் என்னைப் போல NCBHஐ நூல்கள் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் இந்த ரஷ்ய, கிழக்கு ஐரோப்பியத் தோல்விகளையும் பின்னடைவுகளையும் ஒட்டி, இங்கேயும் ஏற்பட்ட இடது சாரி இயக்கங்களின் பின்னடைவு, சீரழிவு ஆகியவற்றையும் சேர்த்து அவர்கள் கடையைக் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

NCBH-ல் இனி இடதுசாரிப் புத்தகங்கள் கிடைக்காது என்றானது. சோவியத் ரஷ்யா இந்த நூல்களை வெளியிடுவதையும் நிறுத்திக் கொண்டது. சீனத்தில் இருந்து நூல்கள் அதிகமாக வராது, மிகக் குறைவாகத்தான் வரும். அதற்கு நிறைய மிரட்டல்கள் உருட்டல்கள் உண்டு.

அந்த காலம் பற்றி உங்களுக்குத் தெரியும் – தர்மபுரி வட ஆற்காட்டிலே கடுமையான போலி மோதல்கள் கொலைகள் நடந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம். அப்போது புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றால் கிளம்பி சென்னைக்கு வருவோம். தஞ்சையிலே NCBH கடையிலே வாங்குவோம். சென்னையிலே NCBH, சென்னை புக் ஹவுஸ், க்ரியா போன்ற கடைகளில் தேடித் தேடி புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவோம்.

நான் சொன்ன, உலகம் தழுவிய அளவிலே ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி, “இடது சாரி கருத்துக்களுக்குப் பின்னடைவு, இதை இனி யாரும் வாசிக்க மாட்டார்கள், இதெல்லாம் எடுபடாது” என்ற பிரச்சாரம் உலகம் தழுவிய அளவிலே நடத்தப்பட்ட போது, அதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக தோழர்கள் கீழைக்காற்று என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மார்க்சிய லெனினியக் கருத்துக்களையோ, அல்லது பெரியார் அம்பேத்காரின் சாதி மறுப்புக் கருத்துக்களையோ, ஜனநாயக பூர்வமாக இந்தச் சமூகத்தில் பார்க்கின்ற கருத்துக்களையோ படிக்கக் கூடிய வாசகர்களுக்கு ஒரே இடத்தில் எல்லா நூல்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

இந்தக் கருத்துக்கள் எல்லாம் மக்களிடம் போனால் தானே இயக்கத்தைக் கட்டமைக்க முடியும். இந்தக் கருத்துக்களை எல்லாம் கொண்டு செல்வதற்கு யாரும் இல்லை. தோழர் சொன்னதைப் போல வணிகர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் எவ்வளவு முற்போக்கு உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் தொழில் ரீதியாக அவர்களால் நட்டமில்லாமல் நடத்த முடியாது. லாபம் கிடைக்காதென்றால் இதிலெல்லாம் இறங்க முடியாது. நட்டம் வந்தாலும் இழப்பு வந்தாலும் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று யார் சிந்திக்க முடியுமென்றால் யாருக்கு சமூக மாற்றத்தில் அக்கறை இருக்கிறதோ, யார் தங்களுடைய சொந்த வாழ்க்கையை இழப்பதற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த மாதிரி தோழர்கள் தான் இந்த மாதிரி நிறுவனத்தை நடத்த வேண்டும். இது தேவை. இப்படி ஒரு கருத்துத் தளத்தை உருவாக்கினால் தான் பல இளைஞர்களை எதிர்காலத்தில் ஈர்க்க முடியும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு துவக்கப் பட்டது கீழைக்காற்று.

தோழர் தமிழேந்தி சொன்னது போல ஆரம்ப காலத்தில் அது ஒரு வாங்கி விற்கும் கடையாகத்தான் இருந்தது. சொந்தப் பதிப்புகள் மிக மிகக் குறைவு. அது என்.சி.பி.ஹெச்  புத்தகங்களாக இருக்கட்டும் அல்லது வேறு கடைகளின் புத்தகங்களாக இருக்கட்டும்; தோழர் துரை. சண்முகம் தேடித் தேடி தேனீ போலச் சேகரித்து வந்து இங்கே வைப்பார். இங்கே வருபவர்களுக்கு சாத்தியமான அளவுக்கு எல்லா நூல்களுமே இங்கே கிடைக்க வேண்டும் என்று அந்த நூல்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்து, இன்றைக்கு முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி என்று கீழைக்கற்றைப் பற்றி போட்டிருக்கிறார்களே, அந்த முகவரி கடும் உழைப்பினால் நம்மிடையே உருவாக்கப் பட்டது.

இன்று உண்மையிலேயே முற்போக்கு நூல்களுக்கான ஒரு முகவரியாக இருக்கிறது. கீழைக்காற்று அப்படி நிலை நிறுத்தப்பட்டப் பிறகுதான் அதைச் சார்ந்த அரசியல் இயக்கங்கள் ம.க.இ.க. போன்ற அமைப்புகள் களத்திலே செயல்படத் தொடங்கிய பிறகுதான் இதெல்லாம் முடிந்துவிட்டது என்று கருதிய வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கும் கூட “பரவாயில்லையே, இன்னும் இதற்கு எதிர்காலம் இருக்கிறதே” என்ற நம்பிக்கை வந்தது. தங்கள் புத்தகங்கள் இந்தக் கடையில் விற்கிறதே, ஏன் தங்கள் கடையில் விற்பதில்லை என்று வியந்தனர். இதெல்லாம் நேரில் தெரிந்த விஷயங்கள்.

ஏனென்றால் அந்தப் புத்தகத்தைப் படித்து யார் பயன்படுத்த முடியுமோ அவர்கள் இந்தக் கடைக்கு வருகிறார்கள்; அவர்களின் கடைக்கு போவதில்லை. இது யதார்த்தம்; தற்புகழ்ச்சியல்ல. இப்படி உருவாக்கப்பட்டது ஒரு ஜனநாயஜ பூர்வமான அரங்கமாக இருக்கிறது. நீங்கள் அங்கே விற்கும் புத்தகங்களைப் பார்த்திருக்கலாம். கீழைக்காற்று துரை.சண்முகம் ம.க.இ.க. தோழர் என்பதால் இந்தச் சார்புடைய வெளியீடுகள் மட்டும் கிடைக்கும் என்பதில்லாமல், மற்ற நூல்களும், ம.க.இ.க.வை விமர்சனம் செய்கின்ற மிகக் கடுமையாகத் தாக்குகின்ற நூல்களும் பத்திரிக்கைகளும் எல்லாக் கருத்துக்களுக்குமான இடமாக இங்கே விற்கப்படுகின்றன. எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. NCBH உள்ளிட்டு பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்ந்த கடைகள் அவர்களை விமர்சித்து வரும் நூல்களையோ, பத்திரிக்கைகளையோ வைத்திருப்பதில்லை. “நூறு பூக்கள் மலரட்டும்” என்று மாவோ சொன்னாரே அதன் இலக்கணமாக கீழைக்காற்று வெளியீட்டகம் நடத்தி வருகிறது.

அது இன்றைக்கு இப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை இங்கே சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறது. தோழர் துரை.சண்முகம் “இதுதான் கீழைக்காற்றின் முதல் புத்தக வெளியீட்டு விழா” என்று சொன்னதும் கொஞ்சம் துணுக்குற்றது போல் இருந்தது. இத்தனை நாள் இதை இப்படி நாம் யோசிக்கவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. அதைப் பற்றிப் பரவாயில்லை. ஆனால், இத்தனை காலம் உழைத்த உழைப்பிற்கு இதை இன்னும் கொஞ்சம் முன்னாலேயே செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

கீழைக்காற்று நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் உழைப்பு என்பது மிகவும் கடுமையானது. அவர் சொன்னது போல சும்மா கடையில் அமர்ந்திருப்பது அல்ல. தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் கூட்டங்கள் நடக்கின்றனவோ, என்ன அரசியல் கூட்டமாக இருந்தாலும், பெரியார் இயக்கம், அம்பேத்கார் இயக்கம், சி‌பி‌ஐ, சி‌பி‌எம் எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்கே போய் கடை போடுவது. அங்கே பல பிரச்சனைகள் வரும். இது ம.க.இ.க சார்பு இயக்கம் என்று அடையாளம் கண்டுகொண்டு “எங்களை விமர்சிக்கும் நீ இங்கே கடை போடக் கூடாது” என்பார்கள். இல்லை, இது பொதுவான கடை என்றால் நம்ப மாட்டார்கள்.

ஒன்றிரண்டு தோழர்கள் இது போன்ற இடங்களில் அமர்ந்து கொண்டு அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி எதிர்கொண்டு போராடி இதை நிலை நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த நிறுவனத்திற்கு கொஞ்சம் முன்னாலேயே இப்படி ஒரு வெளியீட்டு விழாவை நடத்தும் யோசனை சொல்லத் தவறியிருக்கிறோம் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. எனினும் தாமதித்தேனும் மிகச் சிறப்பாக நடக்கின்ற இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஓவியர் மருதுவின் ஓவியத்தை இரசிப்பதற்கு வரலாறு படித்திருக்க வேண்டும்!

ஒரு தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். “படித்து முடித்த பின்” என்று. ஓவியர் மருது அவர்கள் பேசும் போது விடுதலைப் போரின் வீர மரபுக்காக புதிய கலாச்சாரம் இதழிலே வெளி வந்துள்ள ஓவியங்கள், அவரதைப் பற்றிச் சிந்தித்த முறை இதெல்லாம் பற்றி விளக்கிச் சொன்னார். அதிலிருந்து இரண்டு ஓவியங்களை எடுத்துக் கொள்வோம். பெரிய மருது அமர்ந்திருக்கிறார் பக்கத்தில் சின்ன மருது நிற்கிறார். நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சின்ன மருது நிற்கின்ற ஒரு தோற்றம் அண்ணனுக்குப் பணிந்து கையைக் கட்டிக்கொண்டு சற்று தலை குனிந்து கண்களை மேலே ஏற்றி இது சின்ன மருதுவினுடைய பாத்திரம். சின்ன மருதுவின் ஓவியத்தை குதிரை மேல் வரும் போலப் போடலாம். பொதுவாக வீரனென்றால் எப்படிப் போட வேண்டுமென்ற இலக்கணங்கள், சினிமாத்தனமான இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணப்படி போடலாம்.

ஆனால் அந்தக் கோடுகளின், ஓவியத்தின் வலிமை என்னவென்றால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்த வீரனின் வரலாற்றை, அந்த தனி மனிதனின் ஆளுமையை, அந்தக் கோடுகள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதற்கு சின்ன மருதுவின் எழுத்தைப் படித்திருக்க வேண்டும். அந்தக் கோடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சின்ன மருதுவின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இவன் இப்படித்தான் இருந்திருக்க முடியும். இதுதான் இந்தப் பாத்திரத்தின் சாரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதிகளை கேலிச் சித்திரம் போடும் போது அவர்கள் வழுக்கைத் தலை என்றால் தலையைப் பெரிதாகப் போடுவார்கள். மன்மோகன் சிங் என்றால் முண்டாசைப் பெரிதாகப் போடுவார்கள். மூக்கு நீளம் என்றால் மூக்கைப் பெரிதாகப் போடுவார்கள். அந்த மனிதருடைய உடற்கூறில் எது துருத்திக் கொண்டு இருக்கிறதோ, முக்கியமானதோ அதற்கு மிகை முக்கியத்துவம் கொடுத்து வரைவதென்று கேலிச் சித்திரக்காரர்கள் ஒரு இலக்கணம் சொல்லுவார்கள். அது வேறு. அது பொருளற்றது. இது அந்த மனிதனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை, வாழ்க்கையை அவன் வாழ்ந்த காலத்தை அந்தக் களத்தில் வைத்து விளக்குவது.

அதே போல கட்டபொம்மனின் ஓவியம். கட்டபொம்மன் என்றால் சினிமாக் கட்டபொம்மன் தெரியும். நான் கூட அதை ஒரு மிகை நடிப்பென்று நினைத்ததுண்டு. சிவாஜியின் நடிப்பில் மிகை நடிப்பு உண்டுதான். ஆனால் தூக்குமேடைக்கு செல்லும் காட்சியில் – பானர்மேன் எழுதிய அந்தக் குறிப்புகளிலேயே இது உண்டு, அந்தப் படத்திலேயும் தூக்கு மேடை வசனமாகவும் வரும் – “நான் அங்கேயே போரிட்டு மடிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஒளிந்ததற்கு எனக்கு இந்த நிலை தேவைதான்” என்று கட்டபொம்மன் சொல்வதாக. மருது வரைந்திருக்கும் ஓவியத்தில் அது இருக்கிறது.

அதாவது ஒரு இகழ்ச்சியும் வெறுப்பும் தான் மீதே உள்ள கடுங்கோபமும் கொண்ட நிலையிலே நிற்கின்ற கட்டபொம்மன். ஒரு அவமானம் அது. போரிட்டு மடியாமல் தூக்கிலே சாக வேண்டி இருக்கிறதே என்ற இழிவு. தலைக்குனிவு. அந்தத் தலைக்குனிவிற்கு ஆட்படுகின்ற ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் அந்த இடத்திலே எப்படி நடந்து கொள்வானோ அப்படி இருக்கிறது அந்த ஓவியம் – அவன் தூக்குக் கயிற்றை முத்தமிடுகிறேன், சிரிக்கிறேன் என்றெல்லாம் இருக்க முடியாது.

இந்த ஓவியத்திற்கு என்ன முக்கியத்துவம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நன்றாக வரைந்திருக்கிறார் என்று எதை வைத்து சொல்வது? பெரியாரை நன்றாக வரைந்திருக்கிறார் அல்லது பகத்சிங்கை நன்றாக வரைந்திருக்கிறார் என்று சொல்கிறோம். நன்றாக வரைதல் என்றால் என்ன? ஓவியம் சிறப்பாக இருக்கிறது, பொருத்தமாக இருக்கிறது, அழகியல் நேர்த்தியுடன் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றால் எதைப்பற்றி நீங்கள் கருத்து சொல்கிறீர்களோ, அந்த மனிதனைப் பற்றி, அந்த வரலாற்றைப் பற்றி, உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படித்திருக்க வேண்டும். அதைப் பற்றி புரிதல் இருக்க வேண்டும்.

படிப்பது என்றால் சும்மா படிப்பது என்று அல்ல. ஒரு ரசனை வேண்டுமென்றால் அதற்கு பின்புலத்திலே அறிவு வேண்டும். மார்க்ஸ் ஒரு இடத்தில் அழகாக எழுதுவார். “The most profound music is merely a sound to unmusical ears.”-   “மிகச் சிறந்த இசையாகவே இருந்தாலும் இசைக்காதுகள் இல்லையென்றால் அவர்களுக்கு அது வெறும் ஒலி தான்”. இசையை ரசிக்கக்கூடிய காதாக இல்லையென்றால் அது வெறும் சத்தம்தான். இசையை எப்படி ரசிப்பது? அதை ஒரு பயிற்சியின் மூலம் தான், உழைப்பின் மூலம் தான், படிப்பதன் மூலம் தான் பெற முடியும். படித்து முடித்த பின் என்ற தலைப்பை விட இன்றையச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பு வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!

ஏனென்றால் “படித்து முடித்தப் பின்” என்றால் – சில நாட்களில் புத்தகக் கண்காட்சி நடக்கப் போகிறது அந்தக் கடைகளைப் போய் பாருங்கள். எங்கே கூட்டம் அலை மோதுகிறதென்று. நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். அந்தப் பிள்ளையை ஆய கலைகள் அறுபத்து நான்கிலேயும் அதற்குள்ளே தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது ஆய கலைகள் புதிதாக வேறு அறுபத்து நான்கு உள்ளன. பழையவை அல்ல. கம்ப்யூட்டர், இங்கிலீஷ், ஃபிரெஞ்சு மொழி என்று பல கற்றுக் கொள்ளவேண்டும் இதுக்கான ஒலித்தகடுகள், வீடியோக்கள் இதையெல்லாம் வாங்கி எதற்கு தயார் செய்கிறார்கள்?

பிள்ளையை விளையாட விடாமல் “படி படி” என்று கொல்கிறார்கள். இதையெல்லாம் பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பார்க்கிறோம். நாமும் இங்கே படிக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். பின் என்ன பிரச்சனை? எதற்குப் படிக்கச் சொல்கிறார்கள் என்றால் படித்து முடித்த பின் வேலை. படித்து முடிக்கவே வேண்டாம். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை. முன்னாலேயே வேலை கிடைக்க வேண்டும். வேலைக்குப் போவதற்காக, நல்ல வேலைக்குப் போவதற்காக,  அமெரிக்கா போவதற்காக, பொருளீட்டுவதை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக, ஒரு வாழ்க்கை தகுதியைப் பேணிக் கொள்வதற்காகப் படி படி என்று சொல்கிறார்கள்.

படிப்பு என்பதைப் பற்றிய பார்வை பெற்றோர்களிடம் இப்படி இருக்கிறது. இது படிப்பு அல்ல. இதை நான் நிராகரிப்பதற்காகச் சொல்லவில்லை. இப்போது இந்தக் காய்ச்சல் என்பது பத்தாம் வகுப்பிலிருந்தே தொடங்குகிறது. இது முன்னர் கிடையாது. பிள்ளைக்குப் பத்தாவது பரீட்சை என்றால் பெற்றோர் எங்கும் போவதில்லை. தாயும் சரி தந்தையும் சரி கூடவே இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏனென்றால் போட்டி மிகுந்த உலகம். இதில் மதிப்பெண் வாங்கி வந்தால் தான் உண்டு. அரசுக் கல்லூரிகளில் ஒரு சீட்  கிடைக்க இவ்வளவு மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் சுயநிதிக் கல்லூரிகளுக்குச் சென்று பணம் கட்ட முடியாது. அரசுக் கல்லூரிகளில் வாங்க 98 மதிப்பெண் வேண்டுமென்றால் 97.5 வாங்கினாலும் போயிற்று, சீட் கிடைக்காது. அப்படி விரல் நுனியில் பையனை நெருக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

மரு.ருத்ரன் சொல்லுவார் இதனாலேயே பிள்ளைகள் மனநோய்களுக்கு, மன அழுத்தங்களுக்கு, பதட்டங்களுக்கு சிறிய வயதிலேயே ஆட்படுகிறார்கள் என்று. அப்படித் தள்ளுகிறார்கள் பெற்றோர்கள். ஏன்? பிள்ளைகள் நலத்தின் பொருட்டுத்தான் செய்கிறார்கள். பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் என்று தான் செய்கிறார்கள். அப்படி படித்து முடித்து செய்கின்ற பணி என்னவென்றால் ஒரு முதலாளியினுடைய தொழிற்சாலை இயந்திரத்தின் போல்ட் நட்டாகவோ, அல்லது ஒரு வர்த்தக இயந்திரத்தின் உப உறுப்பாகவோ அல்லது ஒரு விளம்பர இயந்திரத்தின் பகுதியாகவோ வேலை செய்யப் படிக்கிறார்கள். அங்கே ஆக்கபூர்வமானது எதுவும் இல்லை. அவன் சொல்வதைச் செய்வதற்கு முன்னாலேயே தயார் செய்து கொண்டு போகிறோம்.

இயந்திரத்தை முதலாளி கைக்காசு போட்டு வாங்குகிறான். ஆனால் இயந்திரத்தின் உப உறுப்புகளாகச் செல்லக் கூடியவர்கள் அது ஐ‌டி துறை ஊழியர்களாக இருக்கட்டும் வேறு யாருமாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் சொந்தச் செலவில் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்கள். ஒரு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கு செல்வாக்கில்லை. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படிப்பு வேண்டாம் மல்டிமீடியா படித்தால் அதிக சம்பளம் வாங்கலாம். இன்ஸ்டிட்யூட்டில் ஒரு வருடம் படித்தால் நல்ல சம்பளம்.

இந்தச் சந்தையிலே மலிவு விலையிலே இந்த உப உறுப்புகளை வாங்குவதற்காக இதை மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலையை முதலாளித்துவம் பயிற்றுவிக்கிறது. அந்த முதலாளித்துவத்தின் சாட்டைக் குச்சிக்கு ஆடும் விலங்குகளைப் போலப் புத்தகக் கண்காட்சியில் கூட்டம் சேர்கிறது. இதை விட்டால் பக்தி நூல்கள், அதற்குப் பின்னர் நிறைய குருமார்கள் இருக்கவே இருக்கிறார்கள். வாழ்க்கையில் பதட்டத்தைத் தணிக்க என்று அவர்களுடைய நூல்கள். முதலில் நுழைந்தவுடன் பதட்டத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது பின்னர் கொஞ்சம் தள்ளிப் போய் பதட்டத்தை எப்படித் தணிப்பது இப்படி நூல்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். இப்படித்தான் இன்றைய கல்வி என்பது இருக்கிறது. இந்தக் கல்வி மூலம் ஓவியர் மருதுவின் ஓவியத்தை – 5000, 10000, 20000க்குக் கூடப் புத்தகங்கள் வாங்கிப் படித்தாலும் – ரசிக்க முடியுமா? சாத்தியமில்லை. அவர்களுக்கு இது தெரியாது.

நாட்டுப்பற்றும், துரோகமும் வரலாற்றறிவு இன்றி புரியாது!

மருது, கட்டபொம்மன் போன்றவர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்தார்கள் என்பது நம்முடைய பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் கல்லூரியிலே படித்து வந்திருக்கிற இளைஞர்களுக்கும் தெரியாது. யாரும் படித்ததில்லை. சொல்லப் போனால் புதிய கலாச்சாரம் இந்த சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு முன்னால் எனக்கும் கூட இவ்வளவு விவரங்கள் தெரியாது. இந்த மண்ணினுடைய பெருமை மிக்க வரலாறு என்பது, இந்த மண்ணினுடைய மிகச் சிறந்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை – தயவு செய்து இந்த நூலில் நீங்கள் திப்பு சுல்தானுடைய வரலாற்றையோ, சின்ன மருதுவினுடைய பிரகடனத்தையோ, ஊமைத்துரையின் போராட்டத்தையோ படித்துப் பார்த்தால் கண்ணீர் வரும். 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் இது தெரியாமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு ஒரு தக்கை மனிதர்கள்  கூட்டம் உருவாக்கப்படுகிறது. ‌இந்தத் தக்கை மனிதர்களுக்கு இதை எப்படி ரசிக்க முடியும்? சமீபத்தில் ஒரு தோழர் சொன்னார். அதுவும் இப்போது புதிய தகவல். இந்தப் பத்திரிக்கை கொண்டு வரும் போது எனக்குத் தெரியாது. இந்தியாவில் மன்னர் மானியம் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப் பட்டது. ஆனால் ஆற்காட்டு நவாபிற்கு மட்டும் மானியம் ஒழிக்கப் படவில்லையாம். அவர்கள் வெப் சைட்டில் போட்டிருக்கிறார்கள். ஆற்காடு நவாபிற்கு மட்டும் மன்னர் மானியத்தில் இருந்து விலக்கு தரப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டையில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. அமீர் மஹால் என்று பெயர். அதில் 600 பணியாளர்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறது. மத்திய பராமரிப்புத் துறை CPWD அதைப் பராமரிக்கிறது. மாநில அரசிலுள்ள அமைச்சர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அந்தஸ்தும் ஆற்காடு இளவரசருக்கு உண்டு சுழல் விளக்கு உட்பட. பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் அவரை அழைக்க வேண்டும். ப்ரோடோகாலில் அதற்கிடம் உண்டு.

யார் இந்த ஆற்காட்டு நவாப்? திப்பு சுல்தான் முதல் மருது, கட்டபொம்மன் என்று தென்னிந்தியாவின் விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் நசுக்குவதற்கு துணை நின்ற துரோகி. துரோகத்தின் வரலாறு தான் ஆற்காட்டு நவாபின் வரலாறு. அந்தத் துரோகத்திற்கு வெள்ளையர் கொடுத்த சிறப்புப் பரிசு அது. 1870-இல் வட இந்தியச் சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு வெள்ளைக்காரன் ஆற்காட்டு “நவாப்” என்றெல்லாம் டெல்லி பாதுஷா கொடுக்கும் பட்டத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதை எடுத்துவிட்டு மேற்கத்திய மரபில் Prince Of Arcot ஆற்காட்டு இளவரசர் என்று பேரை மாற்றச் செய்தான். அதே போல விஜயரகுநாதத் தொண்டைமான் என்று பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு விவரம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது. இப்போது அந்த ஆற்காடு இளவரசனுடைய வாரிசை ஏதும் செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் ஒருபக்கம் இப்படி ஒரு இளவரசர் அந்தஸ்து கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மருதுவிற்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். அந்தப் பக்கம் கட்டபொம்மனுக்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். ஒருவேளை அந்த விழாக்களிலும் முதல் வரிசையில் ஆற்காட்டு நவாப் உட்கார்ந்திருப்பார். இது என்ன கேலிக் கூத்து? இந்த கேலிக்கூத்துப் பற்றி நமக்குத் தெரியாது. இப்படி இந்த மண்ணினுடைய வரலாறு கூடத் தெரியாமல், படிக்க விரும்பாமல் சரியாகச் சொன்னால் படிக்க முடியாமல் இருக்கக் கூடிய ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சி உருவாக்கும் ஊனமுற்ற டிஜிட்டல் மூளை!

அதனால் தான் முன்பொருமுறை “படித்து முடித்தப் பின்” என்றில்லாமல் “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பை வைத்திருக்கலாம் என்று சொன்னேன். ஏனெனில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது. இது கீழைக்காற்றுக்கும் ம.க.இ.க. என்ற அமைப்பிற்கும் மட்டும் பிரச்சனை அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. படிக்க முடியாது என்ற சூழலை நோக்கி இளைய தலைமுறை உருவாக்கப்படுகிறது. இதில் நகர்ப்புறம், நாட்டுப்புறம் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. கலைஞர் டிவி கிராமத்திலும்தான் தெரிகிறது.

அமர்ந்து படிக்க முடியாது என்றால் வேறு என்ன செய்ய முடியும்? தொலைக்காட்சி பார்க்கலாம். அதில் ஒரு நொடிக்கொரு முறை மாறுகின்ற ஃபிரேம், காட்சிகள் மாறி மாறிப் போகின்றன. அது மாறுவது போதாது என்று ரிமோட்டில் வேறு மாற்றி மாற்றிப் பார்க்கின்றனர். இன்னும் வேகமாகப் பார்க்க வேண்டுமாம். பல சேனல்கள் மாற்றுகிறார்கள். இப்படித்தான் பாட்டுக் கேட்கிறார்கள், நியூஸ் பார்க்கிறார்கள், வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியில் என்ன வருகிறது என்பதற்கெல்லாம் நான் இப்போது போகவில்லை. இது பார்க்கும் முறை மட்டுமே.

மனிதர்கள் என்றாலும் இது ஒரு பௌதீக உடல். நடப்பதென்றால் அதில ஒரு தாள லயம் (ரிதம்) இருக்கும். இப்படித்தான் நடக்க முடியும்; ஓடுவதென்றால் இப்படித்தான் இருக்க முடியும். அது போல சிந்திப்பதென்றால் அதற்கென்று ஒரு வழிமுறை (பிராசஸ்) இருக்கிறது. இப்படித் தொலைக்காட்சி பார்த்து என்ன சிந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள், அப்போது மூளைக்குள் என்ன நடக்கிறது என்று.

நீங்கள் சன் டிவியிலிருந்து CNN IBN, NDTV, TIMES NOW  என்று எந்த டிவியானாலும் பாருங்கள். சீரியசாக நியூஸ் பார்ப்பவர்களுக்கே சொல்கிறேன். அவர்கள் ஒரு செய்தியைச் சொல்லும் முறையைப் பாருங்கள். காட்சிகள் எப்படி மாறுகின்றன? TIMES NOWவில் ஒரு செய்தி காண்பிக்கிறார்கள் இதோ ஸ்பெக்ட்ரம் ராஜா என்று ஒரு வட்டம் போடுகிறார்கள், ஜும் செய்து பெரிதாக்கிக் காட்டுகிறார்கள் பின்னால் ஒரு இசை வருகிறது- பயங்கரமான திகில் இசை, பின்னர் அதை விவரிக்கிறார்கள்.. இப்படிப் போகிறது. ஒவ்வொரு சானலிலும் வெவ்வேறு விதமாகப் பார்த்தாலும் இப்படித்தான் காட்டுகிறார்கள்.

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுமார் ஒரு மாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மாதமாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஸ்பெக்ட்ரம் செய்திகளைப் பார்க்கின்றவர் உங்களிலேயே பல பேர் இருக்கலாம். அதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு என்ன தெரியும்? 176000 கோடி ரூபாய் ஊழல். யார் செய்தது? ராஜா. அது கருணாநிதி குடும்பத்திற்குப் போயிருக்கும். சரி அப்புறம் அதற்கு மேல்? அப்பறம் ஏதோ டாடாவோட ஃபோன்ல பேசியிருக்கார்கள் என்று தெரியும். இது தான் CNN IBN  பார்க்கிறவனுக்கும் தெரியும், TIMES NOW பார்க்கிறவனுக்கும் தெரியும். இது தான் கிராமத்தில் தினத்தந்தி படிப்பவனுக்கும் தெரியும். உனக்கென்ன வேறு பிரத்யேக அறிவு இருக்கிறது இப்போது?

வேகமாக மாறக்கூடிய ஃபிரேமில் சொல்லக் கூடிய ஒரு வரி, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்து சொல்லக்கூடிய ஒரு வரி ராஜா ராஜா ராஜா. ஸ்பெக்ட்ரம் டாடா என்று சொல்லவேண்டும். ஏன் ராஜா என்கிறார்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கியமாக ஆதாயம் அடைந்தது யார்?  ஆதாயம் அடைந்தது டாடா, அனில் அம்பானி, மிட்டல் – அவர்களல்லவா குற்றவாளிகள்? இதைப் பத்திரிக்கை படித்தாலே தெரிந்து கொள்வது கடினம். தொலைக்காட்சியில் இப்படித் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தக் காலத்தில் நம் பாட்டன்மார்கள் எம்‌ஜி‌ஆர் என்றால் ஹீரோ நம்பியார் என்றால் வில்லன் என்று நினைத்திருந்தார்களே அந்த அறிவு தான் இருக்கிறது.

படிக்காதவனுக்கும் ரேகை உருட்டுபவனுக்கு இருக்கும் அறிவுதான் இருக்கிறது. தொலைக்காட்சியில் மாறுகின்ற ஃபிரேமை ஒட்டிச் சொல்லப்படுகின்ற காட்சிகளில் உள்ள ஒன்றிரண்டு வரிகள், அதற்குப்பின் ஒரு தொலைக்காட்சி நிருபர் அந்தக் களத்திலே நின்று கொண்டு மூச்சு விடாமல் பேசுவார். ஒரு வார்த்தை புரியாது. லொட லொடவென்று தகர டப்பாவில் கோலிக்குண்டு உருட்டுவது போல பேசுகிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஏதோ பரபரப்பா சொல்கிறார்களாம். அதில் ஒரு பரபரப்புச் செய்தியும் இருக்காது. இதைத் தான் எல்லாரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் விஷயமில்லை என்பது ஒரு புறம். ஆனால் இதன் காரணமாக அதன் மூளையின் ஆற்றல் அழிகிறது.

உடலுழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பும் குறைவதால் வரும் விளைவுகள்!

நான் மரு.ருத்ரனிடம் இருந்து ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன். ID என்ற புத்தகம் சூசன் கிரீன்ஃபீல்ட் என்ற நியூரோ சைக்காலஜிஸ்ட் எழுதியது. அந்த நூல் இதைத்தான் முக்கியமாகக் கையாள்கிறது. 21-ம் நூற்றாண்டு, அதற்குப் பிறகு இளைஞர்கள், படிக்கும் முறை எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பேசுகிறது. அது ஒரு மிகப் பெரிய மூளை ஊனத்திற்கு இந்தச் சமூகம் ஆட்படப் போகிறது என்று சொல்கிறது. இதை எப்படிப் புரியவைப்பது?

நாம் நம் பெற்றோர் தலைமுறையை விடக் குறைவாக நடக்கிறோம். அவர்களை விடக் குறைவாக உழைக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை மாறி விட்டது. சுற்றுச்சூழல் மாறிவிட்டது. இதன் காரணமாக பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. டாக்டர்கள் வாக்கிங் போக உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று பல பிரச்சனைகள். இதற்கெல்லாம் 40-50 வகைப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் குறிப்பாக ஆராய்ந்து சொல்கிறார்கள். இப்படி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் கருத்தியல் ரீதியாக ஒரு தாக்குதல் மூளைக்கு வருகிறதே இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்றா நினைக்கிறீர்கள்?

நான் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தைச் சொல்லவில்லை. மூளை என்ற பருப்பொருளே காலப் போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நான் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும். நான் குமாஸ்தாவாக எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால் இந்தக் கை இப்படித்தான் இருக்கும். உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்தத் தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதை பார்க்கும் போது என்ன செய்கிறார்கள்? இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பதல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது.

அவர்கள் முற்போக்காக புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச் செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்களிடம் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறித்து எழுதிக் கொடுக்க முடியுமா? கேட்டுப் பாருங்கள். இல்லை, நம்மாலேயே விருப்பமான ஒரு விஷயம் குறித்து முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை? படித்திருக்கிறோம், எழுத்தறிவு இருக்கிறது, ஏன் முடியவில்லை?

அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று சரக்கில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி இரண்டு பக்கம் எழுதிக் கொடுக்கச் சொன்னால் எத்தனை பேர் எழுதித் தர முடியும்? இரண்டாவது அப்படி முனைந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து விட்டோம். கிருபானந்த வாரியார் வந்து உட்கார்ந்தால் அப்படியே சிஸ்டத்திலிருந்து வருவது போல வடமொழி சுலோகங்கள், இலக்கியம் எல்லாம் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவும் மனப்பாடம். அப்படி ஒரு நினைவாற்றல். அது பழைய கல்வி முறையின் அங்கமாக இருந்தது.

அச்சுக் கலை வந்த பிறகு அப்படி மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய தேவை போய்விட்டது. இப்போது கணினி வந்து விட்டது. வாய்ப்பாடு தேவை இல்லை கால்குலேட்டர் இருக்கிறது. தேவையான விஷயங்களை கணினி மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நினைவில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்று நிலை என்ன செய்கிறது? அந்த ஆற்றல்களை நம்மிடமிருந்து மெல்ல மெல்ல வெளியே கொண்டு வருகிறது. முன்பு கிராமத்தில் சாமான் வாங்கினால் “நாலு பத்து நாப்பது என்று சொல்ல வேண்டியது தானே அதற்கெதற்கு கால்குலேட்டர்” என்று கிண்டல் செய்வார்கள். “இது கூடத் தெரியவில்லையா” என்று கேலி செய்வார்கள். இந்த ஆற்றல்களை இழப்பது போல நாம் சிந்திக்கும் திறனையும் இழக்கிறோம்.

இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன.

காட்சி பார்த்து கருத்து வராது, குழந்தைகளான பெரியவர்கள்!

இப்படி வளர்க்கப்படுபவர்களால் கருத்தியல் (concept) ரீதியாகச் சிந்திக்க முடியாது. 2-3 வயதுக் குழந்தைகளால் எப்படி கருத்தியல் ரீதியில் சிந்தித்துப் பேச முடியாதோ அது போல் ஆகிறார்கள். குழந்தைகளால் “எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல முடியாது. அவர்களால் படிமங்களால் தான் சொல்ல முடியும். சுடும் என்றோ, வலிக்கிறது என்றோ சொல்லத் தெரியாத குழந்தை காலப்போக்கில் கருத்தியல் ரீதியாகக் கற்றுக்கொள்கிறது. அதற்கு முன் அந்த அனுபவத்தைத் தான் அந்தக் குழந்தை பேசுகிறது. ஏனென்றால் அதன் அறிவு காட்சிப் படிமங்களில் இருக்கிறது, அனுபவத்தில் இருக்கிறது. கருத்தியல் ரீதியான ஆற்றலே அந்தக் குழந்தையிடம் இல்லை. பின்தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தையைப் போல இந்தத் தொலைக்காட்சிப் படிமங்களைப் பார்த்துப் பார்த்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஜனநாயகம் என்றால் என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்று விவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. இவ்வாறு சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.

உழைக்கும் மிருகங்கள் என்று சொல்லும் போது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்தே சொல்லுகிறேன். மூளை உழைப்பிலும் அவனுக்குத் தேவையானப் பணியை செய்ய முடிந்த இயந்திரத்தின் உப உறுப்புகள் மட்டும்தான் தேவை. அவன் உட்கார்ந்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கத் துவங்கினால் அது பிரச்சினை.

பல புதிய விஷயங்கள் மொழி வழக்கில் வந்திருக்கின்றன. நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இவர்கள் பேசுவதைப் பார்த்தீர்களேயானால் சில ஆங்கில வார்த்தைகள் புலப்படும். நாம் சந்தோஷமாக இருந்தோம், ஜாலியாக இருந்தோம் என்று சொல்வதை இவர்கள் We had fun என்று சொல்லுவார்கள். இது மேற்கத்திய மொழி.  இந்த மொழியில் என்ன பொருள் வருகிறதென்றால் அந்தக் கண நேர மகிழ்ச்சி என்பதுதான்.

மாடு போல ஒரு வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடும் மகிழ்ச்சி அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி போன்றது. மகிழ்ச்சி என்பதன் முழுமையான பொருள்- அது ஒவ்வொருவருக்கும் வேறாகவே இருக்கட்டும், சுற்றுலா செல்லுவது மகிழ்ச்சியா? கோவிலுக்குப் போவது மகிழ்ச்சியா? அப்படியே இருக்கட்டும். ஆனால் இவர்கள் மகிழ்ச்சி ஒரு முழுமையான பொருளில் இருக்கிறதா?

உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!

உண்மையில் மகிழ்ச்சி என்பதைப் பார்க்காத ஒரு பாப்கார்ன் தலைமுறை உருவாக்கப் படுகிறது. மகிழ்ச்சியின் முழுமையைப் பற்றி ஒருவன் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் ஒரு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருப்பவன் கூட கம்யூனிஸ்ட்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிற்போக்குவாதியாக வறட்டு கௌரவம் பார்ப்பவனாக இருக்கட்டும். அவன் அந்த விழுமியங்களைப் பற்றி வாழக் கூடியவனாக இருக்கிறான். அப்படி இருக்கக் கூடியவனோடு மோதி, சாதி, வறட்டு கௌரவம் போன்ற விஷயங்களில் போராடி இதற்கு மாற்ற முடியும்.

ஆனால் இந்த பாப்கார்ன் தலைமுறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க்கப் படுகிறது. அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. சிலர் “புதிய கலாச்சாரம்” பத்திரிகை ரொம்ப சீரியசாக இருக்கிறது, லைட்டாக இல்லை என்று சொல்லுவார்கள். லைட்டாக என்றால் அதைப் பார்த்த உடனேயே புரிந்துவிட வேண்டும். ஒரு புத்தகத்தில் பக்கம் நிறைய எழுத்து இருந்தாலே பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

நான் இணையத்தில் ஒரு வலைப்பூ பார்த்தேன் 11 seconds blog என்று பெயர். 11செகண்டில் அதில் இருப்பதைப் படிக்க முடியுமென்றால் எத்தனை வரி இருக்க முடியும்? ட்விட்டர், SMS என்று பரிமாறிக் கொள்ளலாம். இவையெல்லாம் வடிவம் என்று நினைக்கிறோம். இல்லை. இணையத்தில் படிக்கக் கூடியவர்களுக்கோ புத்தகமாகப் படிக்கக் கூடியவர்களுக்கோ அந்த நாலு வரிக்கு மேல் கண் நிற்க மாட்டேன் என்கிறது. அந்த ஆற்றலை இழந்து வருகிறோம். பாரிய விஷயம் இது!

அதே நேரம் 10வதிலிருந்து தொடங்கி இன்ஜினியரிங் வரை உயிரைக் கொடுத்து படிக்கிறார்கள். தொழிலுக்காக, வாழ்க்கைக்காக, வருவாய்க்காக என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் படிக்கிறார்கள். ஆனால் அதற்கப்பாற்பட்ட சமூகம் குறித்த இலக்கியம், அது என்னவாவது இருக்கட்டும்- வைரமுத்து கவிதைகள் கூடப் படிப்பதில்லை. வைரமுத்து 6000 பாட்டு எழுதியிருக்காராம் அதில் 1000த்தைப்  புத்தகங்களாகப் போட்டிருக்கிறாராம். இன்று ஹிந்து பத்திரிக்கையில் ஒரு பெண் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இப்படித் துவங்குகிறது: போன தலைமுறையைச் சேர்ந்த Tamil speaking youth காதலிப்பதென்றால் வைரமுத்து இல்லாமல் காதலித்து இருக்க முடியாது. எதற்கு Tamil speaking youth என்று எழுதவேண்டும். Tamil youth என்று எழுதினால் போதாதா? தமிழ் பேசும் இளைஞர்கள் என்று ஏன் எழுத வேண்டும்? தமிழ் இளைஞர்கள் என்று எழுதினால் போதாதா? அதற்கு ஹிந்துவிற்கு பிரச்சினை இருக்கக்கூடும்.

பிறகு யோசித்துப் பார்த்தால் சரி என்றே தோன்றுகிறது. தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் எத்தனை பேர்? வைரமுத்து கவிதையைப் படிப்பவனோ ரசிப்பவனோ எத்தனை பேர்? தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் குறைவாகிக் கொண்டே வருகிறார்கள். இப்படி சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் ஆகி வருகின்றோம்.

இடையே புத்தகக் கண்காட்சி முன்னிட்டு நடக்கும் பல புத்தக வெளியீட்டு விழாக்களில் பலர் பேசக் கூடும். தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு “நாம் பழையவற்றைப் படிக்க வேண்டும், பாரதியார் படிக்கவேண்டும், கம்பராமாயணம் படிக்க வேண்டும், நம்முடைய இலக்கியச் செல்வங்களைப் படிக்கவேண்டும், மரபைப் படிக்க வேண்டும்” என்றெல்லாம் நிறைய உபதேசங்கள் கொடுக்கப்படும். அது அல்ல நான் சொல்வது. பொதுவாகப் படிப்பது இதற்கு தீர்வு அல்ல. அல்லது இது வெறும் தொழில் நுட்பத்தின் தாக்குதல் அல்ல. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!

இது முதலாளித்துவத்தின் தாக்குதல். அதைப் புரிந்து கொள்வதற்கு அதனை முறியடிப்பதற்கு அதிலிருந்து விலகி நின்று தற்காத்துக் கொள்வதற்கு ஆற்றல் தருபவற்றைப் படிக்க வேண்டும். படிக்காதவரையிலே இதிலிருந்து விடுபட முடியாது. புரட்சி செய்வதற்காக நான் படிக்கச் சொல்லவில்லை. புரட்சி என்று தனியாக ஒன்றுமில்லை. நாம் அறியாமையினால் இப்படி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகள் ஏன் எப்படி மாறுகின்றனர் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை.

இளைஞர்கள் மனநல மருத்துவம் நாடி வருவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மன அழுத்தத்திற்கான மருந்துகளை நம்மூரில் சாரிடான், ஆஸ்பிரின் வாங்குவது போல அங்கே விற்பனைக்கு அனுமதித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கிறது அந்தப் பிரச்சனை. ஏன், எதனால் இது? இங்கும் அது அதிகரித்து வருகிறது. 40000-50000ரூ சம்பளம் கொடுக்கக்கூடிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒரு யோகா டீச்சர். எல்லோரும் பிராணாயாமம் செய்கிறார்கள். வேலை நடக்க ஊழியன் உயிரோடிருக்க கம்பெனி செலவில் இது நடத்தப்படுகிறது. கம்பனி செலவில் அவனைப் பேண வேண்டியிருக்கிறது. காலையில் அடித்து ரிப்பேர் செய்துவிட்டு மாலையில் இது. எதற்காக இது நடக்கிறது? இது முதலாளித்துவத்தின் தாக்குதல் என்று புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே ஏதாவது ஒன்றைப் படியுங்கள் என்று பேசுவதற்கு அல்ல இங்கே வந்தது.

நோக்கமற்ற இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!

அந்தக் காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today  வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார். அப்போது எனக்குப் புரியவில்லை. நாம் சீரியசாகத் தானே படிக்கிறோம். இதிலென்ன pleasure என்று நினைத்தேன். உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு. அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாதக் கூட்டம் இருக்கிறது.

அவர்கள் தான் இந்தக் கூட்டங்களை எல்லாம் நடத்துவது. சங்கீத சீசனில் ம்யூசிக் அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்கள் இல்லையா அது போல ஜெயமோகன் புத்தகம் போட்டால் ஒரு கோஷ்டி வரும். கூட்டம் கூட்டி, அவர் இலக்கியத்தைப் பற்றி விதந்து பேசுவார், அதை ததாரினானாவிற்கு தலையாட்டுவது போல தலையாட்டி ரசிப்பதில் ஒரு சுவை. அப்பறம் படிக்கும் பழக்கமே குறைந்து போய்விட்டது, நம் கலாச்சாரம் என்னவாகும் என்று தெரியவில்லை, புத்தகங்கள் கேரளாவில் நிறைய விற்கிறது, இங்கே விற்க மாட்டேன் என்கிறது, இலக்கியம் அங்கே வளர்கிறது இங்கே வளரவில்லை இந்த மாதிரி கவலைகளைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போய் விடுவார்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனதையில் கிழடு தட்டிப் போனவர்கள்.

அந்தப் படிப்பு அல்ல நான் சொல்வது. நான் pleasureக்காக ரசிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இன்பத்தை நுகர்வது என்பது மனிதனுடைய பண்புகளில் ஒன்று. ஆனால் இன்ப நாட்டத்தின் பின் ஓடுவது. அதற்காகப் படிப்பது. அது சொறிந்து விடுவது போல் உள்ளது, இன்பமாக இருக்கிறது என்பதற்காகப் படிப்பது என்பது பொருளற்றது. முக்கியமாக நோக்கமற்றது. நோக்கமில்லாமல் படிக்கின்ற எதுவும் மூளையில் தங்காது.

மூளை எதை வைத்துக் கொள்கிறது? எது நடைமுறைக்குத் தேவையோ அதை வைத்துக் கொள்கிறது. நடைமுறை என்றால் வேலை என்று மட்டும் சொல்லவில்லை. நாளை நீங்கள் பேச வேண்டுமென்று படித்தால், படிப்பதை வைத்துக் கொண்டு நாளை எழுத வேண்டுமென்றால், படிப்பதை வைத்துக் கொண்டு ஒருவருடைய பிரச்சினைக்குத் தீர்வு சொல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் படிப்பது ஒரு தத்துவஞானமோ, இலக்கியமோ, அழகியல் குறித்த கட்டுரையோ, ஓவியமோ, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் படிப்பதாக இருந்தால் அது மனதில் நிற்கும்.

கற்றுக் கொள்ள வேண்டுமென்று படிப்பது என்ன? சும்மா படிப்பது என்ன? என்பதற்கு ஒரு இடைவெளி இருக்கிறது. சிலர் புதிய கலாச்சாரம் பத்திரிகையோ சில நூல்கள் கட்டுரைகளோ புரிய மாட்டேன் என்கிறது, ரொம்ப தலைக்கு மேலே போகிறது என்கிறார்கள். அது தடுக்க முடியாது. நாம் ஒரு குறிப்பிட்ட உயரம் தான் இருக்கிறோம். உயரம் என்றால், அறிவு வளர்ச்சி, நம்முடைய ஆற்றல் என்பதில். நாம் முதல் வகுப்பு படிக்கும் போது ஐந்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். ஐந்தாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளரே என் தலை மட்டத்திற்கு எழுதவும் என்று சொல்வதா? அல்லது நம் தலையை எழுத்தை நோக்கி உயர்த்திக் கொள்வதா? நம்முடைய தலையைத்தான் எழுத்து நோக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எழுத்தாளனின் திமிர், அகங்காரம் அதைப் பற்றி நான் பேசவில்லை.

மார்க்ஸ் நூலையோ லெனின் நூலையோ, அப்படி ஆய்வு பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக் கூடிய இலக்கியங்கள் கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும். இன்னொரு முறை படிக்க வேண்டும். பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும். படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும். புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். இதையெல்லாம் யார் செய்வார்கள்?

யாருக்குக் கற்றுக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதோ, யாருக்கு ஆய்வு நோக்கம் இருக்கிறதோ அவர்கள் தான் இதைச் செய்ய முடியும். படித்த உடனேயே புரியவேண்டும் என்றால் தினத்தந்தி கூடப் புரியாது. படித்த உடன், பார்த்த உடன் – இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்ன போது- சின்ன மருது என்றால் வீரர் அது மட்டும் தான் எனக்குத் தெரியும் வேறு எதும் தெரியாதென்றால் – என்ன இப்படி கைகட்டி நிற்கிறார் வீரர்? வீரர் என்றால் இப்படி நெஞ்சை நிமிர்த்தி அல்லவா இருக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வளவுதானே தெரியும். கற்றுக் கொள்வது என்றால் அதில் ஒரு துன்பம் இருக்கிறது. Pleasure ஆக இருக்க முடியாது. பயிற்சியாக இருக்க வேண்டும். அந்தத் துன்பத்தை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அது எதைக் கற்பதிலும் இருக்கிறது.

ஒரு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால் ஒரு ஆறு பக்கம் எழுதுவதற்கு அவர் சில நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், இல்லையா? அந்தக் கட்டுரையைப் பற்றி சிந்திப்பதற்க்கும் அதைப் பற்றி ஆராய்வதற்க்கும் அதற்கு ஒரு வடிவம் கொடுத்து எழுதுவதற்கும் சில நாட்கள் ஆகியிருக்கும். ஒரு பக்கத்திற்கு 5நிமிடம் மேனிக்கு 5பக்கங்களுக்கு 25நிமிடம் அதற்குள் அதை அந்த எழுத்தாளன் என்ன புரிதலுடன் என்ன உணர்வுடன் எழுதியிருக்கிறானோ அதை இந்த 25 நிமிடத்திலே உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் நான் அந்த எழுத்தாளனின் தகுதிக்கோ அல்லது அதைவிட மேம்பட்ட தகுதியிலோ இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதற்குள்ளே இறங்கி சிந்தித்து படிக்க வேண்டும். அந்த அனுபவம், அந்த ஆய்வு, நீங்கள் அதற்குள்ளே சென்று வர வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பரிமாணம் தெரியும்.

மார்க்ஸின் பல நூல்களை பல எழுத்துகளை நான் 80களிருந்து ஒரு முப்பது நாப்பது முறையெல்லாம் படித்த நூல்கள் இருக்கின்றன. நான் 80களில் படிக்குப் போது எனக்குப் புரிந்ததற்கும் இன்று நான் படிக்கும் போது புரிவதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. அதே எழுத்து தான், ஒரு கமா முற்றுப் புள்ளி கூட மாறவில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் பின்னர்? ஏனென்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய அரசியல் அறிவு, சமூக அறிவு, அல்லது பொது அறிவு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட மேம்பட்டிருக்கிறது. அப்போது ஒரு வாக்கியத்தின் நுட்பத்தை, அழகை, nuance  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்  அழ்காகச் சொல்லிச் செல்லும் நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதை முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும்.

படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

இதைப் புரிந்து கொண்டுதான் படிக்க இறங்க வேண்டும். அப்போது படிப்பு என்பது ஒரு உழைப்பாக, முயற்சியாக இருக்கும். சும்மா அப்படிப் புரட்டிப் போட்டுப் போகும் வகையில் இருக்காது. புரட்டிப் போடுவது என்பது சில பேருக்கு பழக்கமாகக் கூட இருக்கிறது. ஊன்றி நின்று படிக்க முடியாது, ஊன்றி நின்று கவனிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் இந்த அளவுக்குள் சொல், இந்த நேரத்திற்குள் சொல் என்று கேட்கின்ற ஒரு பண்பாட்டிற்குள் நாம் இருக்கிறோம். அதற்குள் எதையும் செய்ய முடியாது. அப்படி நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும்.

நாம் தொலைக்காட்சி செய்தியைத் திரும்பத் திரும்ப பார்க்கிறோம். ஆனால் அதைப் பற்றி எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். பல போராட்டங்கள் நடைபெறும் போது தொலைக்காட்சி நிருபர்கள் வருவார்கள். ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்ன பிரச்சினை? என்று கேட்பார்கள். அதை என்ன என்று சொல்லுவோம். அதைக் கேட்டுக் கொள்வார்கள். பிறகு டிவி ஆன் செய்கிறோம் சார் நீங்கள் சொன்னதை ஒரு இரண்டு நிமிடத்தில் சொல்லுங்கள் என்பார்கள். இரண்டு நிமிடத்தில் சொல்ல முடியாது இருபது நிமிடம் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதோடு நிறுத்தினால் பரவாயில்லை.

நான் முதலில் ஒரு 20 நிமிடம், இந்த மாதிரி நடந்தது, இந்த இயக்கம், இதற்காக போராடுகிறோம் என்று அவரிடம் விளக்கியதைக் கேட்டிருக்கிறார் அல்லவா? உடனே இதிலிருந்து எது செய்தி என்று நிருபர்கள் முடிவு செய்கிறார்கள். நான் 2 நிமிடத்தில் சொல்ல வேண்டுமா என்றவுடன் இதுதான் பிரச்சினை, இந்த ஊர்களிலிருந்து வந்திருக்கிறார்கள், இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், இந்த இயக்கம், இவங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுங்கள் கரெக்டாக இருக்கும் என்பார்கள். உங்களுக்கு எத்தனை நிமிடத்தில் வேண்டும் என்று சொல்லுங்கள் அதற்குள் என்ன சொல்ல வேண்டுமென்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சொல்லும் நிலையில் இருந்திருக்கிறேன். இது அவர்களுக்கு உரைப்பதே இல்லை. அதற்கு இரண்டு காரணம். முதலில் இது ஒரு சீரியஸான பிரச்சினை என்றே அவர்களுக்குப் புரிவதில்லை.

இரண்டாவது எல்லாரும் தொலைக்காட்சிக்கு அலைபவர்களாக இருக்கும் உலகத்தில் அவர்கள் ஒரு மேலாண்மை செலுத்தும் நிலையில் – ஆங்கிலச் சானல்களில் பேட்டி எடுப்பவர்களைப் பாருங்கள் – எல்லாரையும் அதிகாரம் செய்யும் ஒரு தோரணையும் மிகப் பெரிய இடத்தில் உட்கார்ந்திருப்பது போலும் இருக்கிறார்கள். அப்படி எல்லாரும் அலைபவர்கள் போலக் கருதுவதால் ஒருவனிடம் இதைப் போலச் சொல் என்பது எவ்வளவு அநாகரீகமானது கேவலமானது என்று கூட உறைக்காத மனிதர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி இருக்க வேண்டும் நியூஸ் என்று அவர்கள் முதலாளிகள் இயக்குநர்கள் சொல்லி விடுகிறார்கள்.

என் முகம் தெரிவது தான் எனக்கு முக்கியம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லுவது போலச் சொல்லி விடலாம். இல்லை, செய்திதான் முக்கியம் என்றால் அதற்குத் தகுந்தாற்போலச் சொல்ல வேண்டும். எதற்கு சொல்கிறேனென்றால் இது இளைஞர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல. நமக்குள்ள பிரச்சனை. அதை எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க மறக்கிறோம், அப்படிப் பழக்கப்படுத்தப் படுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது நம்மையும் நம் எதிர்காலத் தலைமுறையையும் தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

இந்தியாவில் நாம் தான் முதல் பொருள்முதல்வாதிகளா? நமக்கு முன்னாள் 2500-3000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டிற்கு இணையான அற்புதமான பொருள்முதல்வாதிகள் இந்த மண்ணிலே இருந்திருக்கிறார்கள் – சார்வாகர்கள், லோகாயதர்கள் பின்னால் பௌத்தர்கள். அதையெல்லாம் என்ன செய்வது? 2500-3000 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் வளராத காலத்தில் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்பியவனை, ஆன்மா என்று தனியாக இல்லை என்று பேசியவனைப் பற்றி நமக்குத் தெரியவில்லை என்று சொன்னால் நாம் அந்த மரபை எப்படி வரித்துக் கொள்ள முடியும்? அதற்குப் பின்னாலே ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு வரலாற்றிலே நேர்மறையான சாதனையாளர்கள் எல்லோரும், யாரெல்லாம் மனித குலத்தின் மீது காதல் கொண்டு சிந்தித்தார்களோ, உழைத்தார்களோ அவர்களெல்லாம் ஆளும் வர்க்கங்களாலே நசுக்கப் பட்டிருக்கிறார்கள். அல்லது இருட்டடிப்பு செய்யப் பட்டு இருக்கிறார்கள். அவர்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டியது, சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. இன்றையத் தேவைக்காக எழுதுவது பேசுவது என்ற அளவிற்கு இணையான அளவிற்கு நம் மரபையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம்முடைய கடமை.

அது முதலாளித்துவ எழுத்தாளர்களாகக் கூட இருக்கலாம். முதலாளித்துவம் தான் நம் எதிரி. முதலாளித்துவ சிந்தனை எனபது மனித குல வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றிய ஒரு விஷயம். அதை இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. மறுத்துவிட முடியாது. அற்புதமான எழுத்தாளர்கள் அதில் இருந்திருக்கலாம். அதை எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் அவசியம் இருக்கிறது? இது “பொதுவாக எல்லாம் படிக்க வேண்டும், எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நன்னெறி போதனை அல்ல. இது நடைமுறைக்கானது. உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுகிறோம் போராடுகிறோம் என்று சொன்னால் அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோஷம் போடுவது, சண்டை போடத் தயாராக இருப்பது, உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பது இவை மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த சமூகம் முழுவதையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது எங்கள் வீட்டு வாசலிலோ ஒன்றும் போலீஸ் நிற்கவில்லையே?. பெரும்பான்மையான மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சமூகம் தான் நியாயமானது இந்தச் சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்பட முடியாதது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அடங்காமல் போனால் தான் துப்பாக்கி முனை.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”.  பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

படிக்காத வரை அடிமைத்தனம், படிக்கும் போது விடுதலை!

ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைப் பார்த்து சொல்வது என்ன? ஏன் திராவிட இயக்கத்தை, தலித் இயக்கங்களை, தாழ்த்தப்பட்டவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றி உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பன ஆதிக்க சக்திகள் சொல்வது என்ன? நீயெல்லாம் நாடாள்வாயா? உனக்கெல்லாம் விவரம் தெரியுமா? உன்னால் முடியுமா? என்று ஏளனச் சிரிப்பு சிரித்தார்கள். பிறகு படிக்கிறோம், மாற்றங்கள் வருகிறது. அது தானே வரலாறு. ஆளும் வர்க்கம் என்ன கருதுகிறது என்றால் இதை நிறுத்த இவர்களால் முடியாது என்று கருதுகிறது. ஒரு ஏளனப் பார்வை பார்க்கிறது. அது உண்மைதான். அது பொய் அல்ல. நாங்கள் தான் எங்கள் ரத்தம் வியர்வையால் உலகத்தைப் படைத்தோம் உண்மை. எல்லாவற்றையும் நாங்கள் தான் உருவாக்கினோம் உண்மை. அதெல்லாம் உண்மைதான். அதனால் நாங்கள் ஆளும் உரிமை படைத்தவ்ர்கள். உண்மை. ஆளும் ஆற்றல் இருக்கிறதா? நிர்வாகம் செய்யும் ஆற்றல் இருக்கிறதா? அவன் நம்மை அடக்கி வைத்திருப்பது போல அவனை அடக்கி வைக்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா?

அந்த ஆற்றலை எப்படி அடைவது? ஆயுதம் மூலமாகவா? அதற்கு கற்க வேண்டும். வேறு குறுக்கு வழி கிடையாது. அதனாலேயே லெனின் Proletarian Intellectuals உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். அதனால் தான் போலிப்பகட்டு, போலி அறிவு, மேதாவித்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளி வர்க்க இயக்கத்திலேயே சாதாரண தொழிலாளிகளாய் இருப்பவர்கள் கூட அதை வெளிப்படுத்தும் போது மார்க்ஸ் அதை கடுமையாகச் சாடுகிறார். அதனால் பலர் வருத்தப்பட்டதுண்டு.

இந்தப் படித்த அறிவு ஜீவிகளுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும். சோசலிசம் பேசிக் கொண்டிருந்த சாதாரண ப்ரூதோன் போன்ற மனிதர்கள். அறிவியல் பூர்வமற்ற எதையும் அவர் மென்மையாகப் பார்க்கத் தயாராக இல்லை. ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் எழுதுவார் “இந்த சமூக அறிவியல் கல்வி என்பது ஒரு செங்குத்தான வழுக்குப் பாதையில் ஏறுவதற்கு ஒப்பாகும். இதற்குத் தயாராக இல்லாதவர்கள் விலகி விடுங்கள்”. இது விளையாட்டாகச் சொல்லப்பட்டது அல்ல. அத்தகைய உழைப்பு அதற்குத் தேவை. அப்படி உழைப்பு இருந்தால் தான் நாம் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும், எந்த வர்க்கத்தை விடுவிக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அந்த வர்க்கத்திற்கு தலைமை தாங்கவோ வழிகாட்டவோ விடுவிக்கவோ முடியும்.

படித்தவர்கள், அறிவுஜீவிகள், ஆற்றல் உள்ளவர்கள் என்பவர்கள் எல்லாம் எதிரிகளின் கையில் இருக்கிறார்கள். நல்ல உடல் பலம் உள்ளவர்கள் எல்லோரையும் அளந்து அளந்து பார்த்து ராணுவத்திலும் போலீசிலும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். படித்தவர்களை எல்லாம் IAS,  IPS என்று உயர் நிர்வாகப் பதவியில் வைத்திருக்கிறார்கள். ஆற்றல் மிக்க வழக்குரைஞர்கள் கணக்குத் தணிக்கையாளர்கள் எல்லாம் டாடா பிர்லா அம்பானி மிட்டல்களுக்காக வேலை செய்கிறார்கள். இப்போது இந்த ஸ்பெக்ட்ரம் விவாதங்களைப் பாருங்களேன். வாதிடுபவர்களெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் தான். பிரச்சனை பெரிதாக ஆக ஆக பெரிய கைகள் வந்து ஆஜராகின்றானர். டாடாவிற்கு ஹரீஷ் சால்வே வருகிறார். இன்னொருத்தருக்கு அதே போல் இன்னொருவர். இந்த வக்கீல்கள் எப்படிப் பட்டவர்கள்? ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் எழுந்து விட்டு உட்கார்ந்தால் 10லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுபவர்கள். வழக்கு நடக்கிறதா இல்லையா, பேசுகிறாரா இல்லையா என்பதல்ல விஷயம். Appearance Fees – ரஜினிகாந்த் கால்ஷீட் போல. படப்பிடிப்பு நடக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. அந்த வழக்கறிஞர் எல்லாரும் என்ன செய்கிறார்கள்? மிக நேர்த்தியான மொழியில் ஊழலை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். மோசடியை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். அல்லது இங்கே இருக்கும் சோ போன்ற ஆட்கள் மிகத் திறமையாக வாதாடுகிறார்கள். அவனைத் பார்ப்பனத் திமிர் பிடித்தவன் பார்ப்பன பாசிசத்தின் கைக்கூலி என்றெல்லாம் மட்டும் சொன்னால் போதாது.  அவனை அறிவுரீதியாக ஏளனம் செய்து தூக்கி எரிகின்ற ஆற்றல் அவனை பற்றிய  பிரமைகளை வைத்திருக்கின்ற நம் மக்களுக்கு அவனொரு அற்பப்பதர் என்று காட்டக்கூடிய ஆற்றல் அது நமக்கு வேண்டும்.

அந்த ஆற்றல் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். படிப்பதென்பது நமக்கு ஒரு உழைப்பு. அந்த உழைப்பில் தான் நாம் இன்பம் காண முடியும். உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் என்று கேட்டாற்போல, கற்பதில் கூட துன்பத்தில் தான் இன்பம் இருக்கிறது. அந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தயாராக இல்லாதவர்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆராய்ந்து ஆராய்ந்து சிந்தித்து சிந்தித்து ஒரு கதவு திறக்கிறதே கேள்விக்கு அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது. அப்படியே மொட்டை அமிழ்த்தி உடனே பதில் வந்து விட்டால் அதில் மகிழ்ச்சி கிடையாது.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

ஸ்டாலின் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கொடுங்கோலன், சர்வாதிகாரி, கொலைகாரர் என்று நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். இன்னொரு பாதி அவரை முட்டாள் என்று சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.  மார்க்ஸ் அறிவுஜீவி. ஏங்கெல்ஸ் அறிவுஜீவி, லெனின் கூட அறிவுஜீவி, ஸ்டாலின் ஒரு முட்டாள். சர்வாதிகாரி என்ற பிம்பம் முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியில் பரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர், அதிலிருந்து படித்து வந்தவர். அவரை இழிவு படுத்தும் ஆயுதமாக இதனைப் பயன் படுத்துகிறார்கள்.

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் FRONTLINE  ஆங்கில நாளேட்டில் AG நூரானி என்ற வழக்கறிஞர்/எழுத்தாளர் ஸ்டாலின் பற்றிய ஒரு நூல் பற்றி எழுதியிருந்தார். அதை எழுதும் போது வேற சில முக்கியமான எழுத்தாளர்களை மேற்கோள் காட்டிச் சொல்கிறார். “ஸ்டாலினுடைய தனி நூலகத்தில் 25000 நூல்கள் இருந்தன. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த ரூஸ்வெல்ட் சர்ச்சில் போன்ற அனைவரையும் விட அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக வரலாற்று ஞானம் மிக மேம்பட்டதாக இருந்தது” என்று கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்வதை இவர் மேற்கோள் காட்டுகிறார்.  அது என்ன விஷயம் என்றால் அவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன்தான். ஒரு நாட்டினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, ஒரு கட்சியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது அந்தப் பொறுப்பிற்குத் தகுதியானவனாக தன்னை வளர்த்துக் கொள்வது அவரது விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல. அது ஒரு தார்மீகக் கடமை.

அவர் 20000 புத்தகங்கள் வைத்திருந்தாரா, 10000 புத்தகங்கள் வைத்திருந்தாரா என்பதல்ல பிரச்சனை. ஆனால், மிகச் சாதாரண வர்க்கத்திலிருந்து ஒரு மனிதர் மேற்கத்திய நாடுகளில் பிரபு குலப் பின்னணியில் வந்த கல்வி பயின்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள், ராஜ தந்திரிகளோடு இணையாகப் பேச வேண்டுமானால் அதற்குரிய அறிவு வேண்டும்.. எல்லாத் துறைகளிலும் அறிவு வேண்டும். இல்லை என்றால் வெறும் கொள்கைப் பற்று, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு என்ற பேச்சால் பயன் இல்லை. அறிவிற்கு அது மாற்றீடாகாது. அதை வைத்து இதைச் சரிக்கட்ட முடியாது. நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

உழைப்பது என்றாலும் ஒரு சமூகம் எந்தத் துறையில் நம்முடைய உழைப்பைக் கோருகிறதோ அந்தத் துறையில் உழைக்கத் தயாராக வேண்டும். கருத்தியல் ரீதியாக இப்படி ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் – நான் கம்யூனிஸ்டுகளை மட்டும் சொல்லவில்லை – பெரியார் இயக்கத்தில் இருக்கிறார்கள்; அம்பேத்கார் மீது பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் வேலை இருக்கிறது. பார்ப்பன பாசிசம் என்பது ஓய்ந்து போனது அல்ல. அது மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் தலை எடுக்கக் கூடியது. அவற்றையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஆற்றல் உள்ளவர்கள் தேவை.

எனக்குத் தெரிந்து இந்தத் திருவண்ணாமலை தீபம் கொஞ்ச நாள் முன்பு இல்லாமல் இருந்தது. இப்ப எந்த டீக்கடையில் நின்றாலும் திருவண்ணாமலை தீபத்திற்குப் போகிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். எந்தக் கோயிலில் என்ன திருவிழா என்றாலும் கூட்டம் கூடுகிறது. இது பெரியார் பிறந்த மண்ணா? அவர் அவ்வளவு எழுதி இருக்கிறாரே. அவ்வளவு பேசி இருக்கிறாரே அதில் ஒரு 2 சதவீதம் ஒவ்வொருத்தரும் செய்தால் எவ்வளவு பயனடையலாம்? அதை ஏன் செய்ய முடியவில்லை என்று இந்த இடது சாரி முற்போக்கு எண்ணம் கொண்ட நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

நூல்கள் படிப்பதென்பதை நம்முடைய விருப்பம் அல்லது விருப்பமின்மை என்ற வரையரையைத் தாண்டி அதை நம்முடைய கடமையாகக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் தொடுத்த தாக்குதல், மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாக உண்ணும் இயந்திரங்களாக, நுகரும் இயந்திரங்களாக மாற்றுவதற்கான தாக்குதல். நம் அறிவை செயலிழக்கச் செய்வதற்கான தாக்குதல். அந்தத் தாக்குதலில் நம்முடைய சிந்தனையும், மூளையும் ஊனமுற்றுப் போவதற்கு தெரிந்தே அனுமதிக்கக் கூடாது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும் என்று கூறி இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

___________________________

– உரை: தோழர் மருதையன்
– எழுத்தாக்கம்: உமா
___________________________

நன்றி: வினவு

நீரிழிவு நோய் குறித்து

28 டிசம்பர்

வேலூரில் சமீபத்தில் அக சுரப்பியல் மாநாடு நடந்தது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். உடல் ஆரோக்கியத்திற்கும், சுரப்பிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் பாதி விவாதங்கள், நீரிழிவு நோய் குறித்தே நடந்தன. உலகளவில் பரவி கிடக்கும் இந்நோய் குறித்து பேசப்பட்டது ஆச்சரியமளிக்கவில்லை. புதிய பிரச்னைகள், நவீன முன்னேற்றங்கள், கணைய செல் மாற்றுச் சிகிச்சையும், அதனால் நீரிழிவு நோய் நிரந்தரமாக குணமாகும் வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒரு மருத்துவர், இன்சுலினை மாதம் ஒருமுறை போடும் விதமாக மாற்றியமைப்பது பற்றி விவரித்தார். இதுவரை, எலியை வைத்தே இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மனிதர்களிடம் ஆய்வு நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்தியாவில், 15 வயதுக்கு மேற்பட்ட, நகரங்களில் வாழ்வோர் 11 சதவீதத்தினரும், கிராமங்களில் 3 சதவீதத்தினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தோராய மதிப்பீடு தான். 30 முதல் 40 சதவீதத்தினர், உடலில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பது தெரியாமல் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

 

நீரிழிவு நோய்க்கு நாம் ஏன் அடிமையானோம்?

 

இந்தியா பலமுறை, பஞ்சத்தை பார்த்து விட்டது. அதன் விளைவாக, சிக்கனத்தை கடைபிடிக்கும் மனநிலையை கொடுக்கும் மரபணுக்கள் நம் உடலில் தோன்றி விட்டன. இவை, உடலில் சேரும் கலோரி சத்தை, அதிகம் செலவழிக்காமல், கொழுப்பாய் மாற்றி, அதை உடல் முழுவதும் பரவச் செய்து விடுகின்றன. இதனால் தான், ஒல்லியான உடல் கொண்ட இந்தியனுக்குக் கூட, தொப்பை விழுந்து விடுகிறது. நம் உடலில், முதன்முதலில் அதிக எடை கூடும் இடம், வயிறு தான்.

 

இத்தகைய வளர்சிதை மாற்றக் குறைபாடு, நீரிழிவு நோய் கொண்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு கொண்ட பெண்கள், கர்ப்பப் பை கட்டி, கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

 

நீரிழிவு நோய் உருவாகுமா என்பதை அறிய, சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். வெறும் வயிற்றில் இருக்கும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவு 125 மி.லி., / டி.எல்., என்பதற்கு அதிகமாகவோ, தோராயமாக எடுக்கப்படும் அளவு 250 மி.லி., / டி.எல்., என்பதற்கு அதிகமாகவோ இருந்தால், சர்க்கரை நோய் உள்ளதற்கான அறிகுறியாக கொள்ளலாம்.

 

சர்க்கரையை வெளியேற்றும் திறன் இவர்களிடையே குறைந்து காணப்படும். டிரைகிளிசரைடு அளவும் 150 மி.லி., / டி.எல்., என்பதற்கு மேலாகவும், எச்.டி.எல்., கொழுப்பு, ஆண்களுக்கு 40 மி.லி., / டி.எல்., என்பதற்கும், பெண்களுக்கு 50 மி.லி., / டி.எல்., என்பதற்கு குறைவாகவும் காணப்படும். ரத்த அழுத்தமும் 135/85 என்ற அளவுக்கு மேல் காணப்படும். இந்த அசாதாரண கணக்கீட்டை கொண்டவர்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு அல்லது “எக்ஸ் சிண்ட்ரோம்’ என்ற பாதிப்புக்கு உள்ளாகி இருப்பர் என கொள்ளலாம். உங்கள் உடல் கணக்கீடுகளை நீங்களாகவே பரிசோதித்து கொள்ளலாம். உடல் எடை அளக்கும் கருவியும், இடுப்பளவைக் கணக்கிடும் நாடாவும் இருந்தால் போதும். உடல் எடை குறியீட்டெண் (பாடி மாஸ் இன்டெக்ஸ்) முதலில் எடுக்க வேண்டும். உடல் எடையை கிலோ கணக்கில் அளந்து, அதை, உங்கள் உயரத்தின் (மீட்டர்) இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் எண்ணிக்கை தான், உங்கள் எடை குறியீட்டெண். இது, 23 என்ற அளவில் இருக்க வேண்டும். 30ஐ தாண்டினால், ஆபத்து கட்டத்தை நீங்கள் நெருங்குகின்றீர் எனக் கொள்ளலாம். இடுப்பின் மேல் பாகம் மற்றும் கீழ் பாகங்களுக்கு இடையேயான விகிதம் ஆண்களுக்கு ஒன்று என்றும், பெண்களுக்கு 0.8 என்றும் இருக்க வேண்டும். கீழ் பாக அளவை, மேல் பாக அளவால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கை இது. இடுப்பில் மேல் பாகம், ஆண்களுக்கு 102 செ.மீ., என்பதாகவும், பெண்களுக்கு 88 செ.மீ., என்பதாகவும் இருந்தால், ஆபத்தின் துவக்கம். இந்த உடல் அளவீடுகளுக்கென, தனியாக மருத்துவரை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலே சொன்ன அறிகுறிகளில் மூன்றுக்கு மேற்பட்டவை தென்பட்டால், வளர்சிதை மாற்றக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கொள்ளலாம். மக்களிடையே நடத்தப்பட்ட பொதுவான ஆய்வில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 40 சதவீதத்தினர், வளர்சிதை மாற்றக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி எனில், நாம் நீரிழிவு நோயாளிகளாக இருக்க வேண்டும் என, சபிக்கப்பட்டவர்களா? வளர்சிதை மாற்றக் குறைபாட்டை தவிர்க்க, அது, நீரிழிவு நோயாக மாறுவதைத் தடுக்க, உடலில் தோன்றக் கூடிய உயிரி ரசாயன மாறுபாடுகளை சரிசெய்ய வேண்டும். உடல், இன்சுலினை எதிர்ப்பதால் தான், இந்த மாறுபாடுகள் தோன்றுகின்றன. நாம் உண்ணும் உணவு, குளூக்கோசாக மாறி, செல்களுக்கு சென்று, உடலுக்கு சக்தி கொடுக்கிறது. “எக்ஸ் சிண்ட்ரோம்’ கொண்டவர்களின் உடல், இன்சுலின் செயல்படுவதை எதிர்க்கிறது. எனவே, செல்களுக்கு குளூக்கோஸ் சென்றடையும் பணியைச் சீராக்க, அதிகளவு இன்சுலின் சுரக்க நேரிடுகிறது. இந்த அளவு இன்சுலினைச் சுரக்க, உடலால் இயலவில்லை. எனவே, நீரிழிவு நோய் உண்டாகி விடுகிறது.

இந்த பாதிப்பை தவிர்க்க மிகச்சிறந்த வழி, உடல் எடை குறியீட்டெண்ணை 23லேயே வைத்து கொள்வது தான். தினமும் 30 நிமிட நடை, இன்சுலினை எதிர்க்கும் திறனை குறைக்கும். வேகமான நடையாக இருக்க வேண்டும். இடையிடையே சற்று நின்று செல்லலாம். உடல் சக்தியைச் சேமிக்கும் வகையில், ஆசுவாசமாக நடப்பது பலன் தராது. ஒரு மணி நேரத்திற்கு நான்கு கி.மீ., நடக்கும் வகையில் உங்கள் வேகம் அமைய வேண்டும்.

இந்தப் பயிற்சியே போதுமானதாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு 1,500 கலோரிச் சத்து மட்டுமே உட்கொள்ளும் வகையிலான உணவு முறையையும் கடைபிடிக்க வேண்டும். இது முடியவில்லை எனில், சைக்கிளிங், நீச்சல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். இதற்கும் நேரம் இல்லையெனில், தினமும் 20 நிமிடம், மாடிப்படி ஏறி இறங்கலாம்.

பளு தூக்குதல், உடல் வடிவமைப்பை சீராக்குதல் போன்ற பயிற்சிகள் உடலுக்கு வலு சேர்த்து, வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுமே தவிர, வளர்சிதை மாற்றக் குறைபாட்டை நீக்காது. நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றையும் உடனுக்குடன் செய்தால் மட்டுமே, குறைபாடு நீங்கும். முழு உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யாமல், தொப்பையை மட்டும் குறைக்கும் பயிற்சியும் பலன் தராது.

கலோரி அளவைக் குறைக்கும் முயற்சியாக, நீங்கள் உண்ணும் உணவில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். “டிவி’ பார்த்து கொண்டே அல்லது மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்தபடியே சாப்பிட்டால், உடலுக்குள் செல்லும் கலோரி அளவு அதிகரித்து விடும். நொறுக்கு தீனி உண்பதை தவிர்க்க, பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள், கலோரி அளவை மறைமுகமாக அதிகரிக்கும். ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 500 மி.லி., எண்ணெயே போதுமானது. குழந்தை பருவம் முதலே இந்த பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

உதவி வேண்டி ஒரு கோரிக்கை

27 டிசம்பர்

கடையநல்லூர் நண்பர்களே,

நடு அய்யாபுரம் தெருவைச் சேர்ந்த அசைனா கனிஃபா கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டார் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

தற்போது அவரின் மூத்த மகள் சகோதரி சாபிதா அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.  எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி (09/01/2011 ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வரியநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களால் திருமணச் செலவை தாங்க முடியாத நிலையில் கடையநல்லூரைச் சார்ந்த அனைத்து நண்பர்களிடம் உதவி செய்யுமாறு கோருகிறார்கள்.

உதவி செய்வது புண்ணிய காரியம் எனும் அடிப்படையிலல்லாது, சமூகத்தில் நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு, அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வதும், அவர்களின் சிரமங்களை பகிர்ந்துகொள்வதும் நம்முடைய கடமை எனும் அடிப்படையில் வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு அவர்கள் சார்பில் நல்லூர் முழக்கம் உங்களை வேண்டிக் கொள்கிறது.

மெஹர் நிசா,
32, நடு அய்யாபுரம் தெரு,
கடையநல்லூர்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பழைய எண் 116/9 புதிய எண் 166,
பெசண்ட் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை 14

தொலைபேசி இலக்கம்,

+919841960104
+919600070582

தீயணைக்க விரைந்துவந்த வண்டி விபத்தில் சிக்கினால்……

27 டிசம்பர்

கடையநல்லூர் அட்டகுளம் தெரு மேலவட்டாரத்தில்  அடைத்துக்கிடந்த பாழடைந்த வீடு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் புகை மூட்டம் பரவியது.

அதிர்ச்சியடைந்த பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மின்னல் வேகத்தில் வந்த தீயணைப்பு வண்டி முக்கிய சாலையில் இருந்து தெருவிற்கு திரும்பும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மின் கம்ப தந்திகள் அறுந்து விழுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

வேறு வழியில்லாமல் பொதுமக்களே போராடி தீயை அணைத்தனர். இந்நிகழ்வு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூரில் ஈருருளி விபத்து

27 டிசம்பர்

மங்களாபுரத்தை சேர்ந்த வாலிபர் (27) இருசக்கர வாகனத்தில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருத்த பொழுது கடையநல்லூர் மின்கோட்ட அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த சுமையுந்து மீது மோதினார். இதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட அவருக்கு சாலையில் மோதியதால் தலை பிளவுபட்டது.

இதைய‌டுத்து அங்குள்ள பொது மக்கள் அவசர சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் விபத்துக்குள்ளான வாலிபர் செல்லும் வழியிலே இறந்து விட்டார். நின்று கொண்டிருந்த சுமையுந்தும் தப்பி சென்று விட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து தொடர் விபத்துக்களால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*************************************************

எந்த அவசியமும் இல்லாத நிலையில் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை ஒரு மதிப்பாக, கௌரவமாக இளைஞர்கள் மனதில் ஏற்றிவைத்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் மறுபக்கம் இது. சாலை விதிகளை பின்பற்ற அறிவுறுத்துவது, தலைக் கவசம் அணித்தால் உயிரிழப்பைத் தடுக்கலாம் என பரப்புரை செய்வது மட்டுமே விழிப்புணர்வாக ஆகிவிடுமா?

முன்னேற்றம், வாழ்க்கை வசதி எனும் பெயரில் பெருநிறுவனங்களின் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதையே நாகரீகமாக கடைக்கோடி மக்களையும் பின்பற்ற நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கும் இன்றைய முதலாளிய வாழ்க்கை முறையை அறிந்துகொள்வது அல்லவா முழுமையான விழிப்புணர்வாக இருக்கும்?

எண்ணெய் லாபம்: வருமானமா? சுரண்டலா?

27 டிசம்பர்

வளைகுடாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்தான் இந்த ஆண்டு எக்கச்சக்க வருமானம் பார்த்துள்ளன. 2010-ம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்த வருமானம் 1.1 ட்ரில்லியன் டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத உச்சகட்ட வருமானம் இது. எண்ணெய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாலும், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும் இந்தளவு வருவாய் பெருகியுள்ளது.

இந்த வருவாயின் அடிப்படையைக் கொண்டு எமிரேட்ஸ் தொழில் வங்கியின் தயாரித்துள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் 2010 ஆண்டு வளர்ச்சி 5.4 சதவீதம் என்றும், 2011-ல் இது 6.6 சதவீதமாக இருக்கும் கூறப்பட்டுள்ளது.

இப்போதைய போக்கின்படி பார்த்தால், வரும் 2011-ல் 1.15 ட்ரில்லியன் டாலர் அளவு வருமானம் குவிக்கும் இந்த வளைகுடா நாடுகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 40 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளன வளைகுடா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

********************************************************

எண்ணெய் விலை என்பது உலகின் அத்தனை மக்களையும் பாதிக்கக்கூடிய, அத்தனை பொருட்களிலும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாகும். இதன் உற்பத்திச் செலவுகளை, பராமரிப்பு, அனுப்புச் செலவுகளை மட்டும் விலையாக நிர்ணயித்தால் உலகின் அனைத்துப்பொருட்களின் விலையும் குறையும். இதோடு ஏகாதிபத்தியங்களின் விலைக் கொள்கைகளையும் அதன் கொள்ளை நோக்கையும் தகர்த்தால்………..? உலகில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மூலமும் அந்தப் பொருளின் மதிப்பை விட அதிகமான விலை நம்மிடமிருந்து பிடுங்கப்படுகிறது. இதை வருமானம், லாபம் என்பதா? அல்லது நம் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதா?

இது நிச்சயம்…..

25 டிசம்பர்

காணலாம்
கருத்தில் ஏறலாம்
அல்லாது விலகியும்.

வெறுப்பை உமிழலாம்
வீணென்று தர்க்கமும்.

எத்தனை மனிதர்கள்
தோலில் வலிக்கும் வரை
தூக்கம் கலையாத மனிதர்கள்.

சுள்ளெனச் சுட்டாலும்
சடுதியில் மறந்துவிடும்
எத்தனை விதங்கள்.

சமாதானங்கள் எல்லோருக்கும் உண்டு
பிழைப்பு.

எட்டில் ஒரு பாகத்திற்கு
எல்லா நாளும் அர்ப்பணம்.

ஒன்றாய் எழுந்து நின்றால்
சூரியனும் விழுந்துவிடும்
பிரிக்கின்றன மாயவலைகள்
மதவலைகள்.

குரல் கொடுத்தால் போதும்
ஒரு காக்கையும் சாகாதிங்கே
தடுக்கின்றன தன்னலங்கள்
தள்ளா நலங்கள்.

லட்சம் விவசாயிகள் மடிந்த பின்னும்
கண்களில் மண் விழுந்த பின்னும்
உறுத்தவில்லை யாருக்கும்
உப்பிட்டுச் சாப்பிடும் யாருக்கும்

மலைக்க வைக்கும்
மலையா அது?

கடக்க அடாத‌
கடலா அது?

நொருங்கி வீழும்
ஓர் நாள்.

வருவோம்
தொட‌ர்ந்து வ‌ருவோம்

பாறை போல் க‌டின‌ம‌ல்ல‌
உங்க‌ள் ம‌ன‌ம்
எறும்பு போல் மென்மையும‌ல்ல‌
எங்க‌ள் முய‌ற்சி

நாங்க‌ள் ஊறுவோம்
உங்க‌ள் பாராம‌ன‌ம் தேயும்

உங்க‌ள் கைக‌ளையும்
இணைத்துக்கொண்டே
வெட்டி வீழ்த்துவோம்
உல‌க‌ம‌ய‌ ஈன‌த்தை.


– நசீபா காஹ்தூன்.

நான்கு திருமணம்: மனைவியருக்கு சம்மதமா?

24 டிசம்பர்

வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யூனுஷ் பெபாரி (46). இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். இந்த நிலையில், முதல் 2 மனைவிகளுக்கு தெரியாமல் மேலும் 2 பேரை மணந்தார்.

இதில் முதல் இரு மனைவிகளுக்கும் தங்களது கணவர் பெபாரிதான் என்பது தெரியும். ஆனால் 3 மற்றும் 4வது மனைவிகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. ரகசியமாக இதை வைத்திருந்தார் பெபாரி. அதே போல அந்த லேட்டஸ்ட் மனைவிகளுக்கும், முதல் இரு மனைவிகள் குறித்து தெரியாது. இப்படி ரகசியமாக நான்கு மனைவிகளுடன் நான்கு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பெபாரி.

ஒவ்வொரு மனைவியுடனும் தனித் தனியாக வெளியில் சென்று சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் பெபாரி. இந்த நிலையில், கிராமத் திருவிழாவுக்கு முதல் 2 மனைவிகளுடன் சென்றார்.

அப்போது எதிர்பாராத வகையில், பெபாரியின் 3வது மனைவி அங்கு வந்து விட்டார். இதையடுத்து சண்டை மூண்டது. பெபாரியின் குட்டு வெளிப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மூன்று மனைவிகளும் அவரை 4வது மனைவியிடம் கூட்டிச் சென்றனர். 3 பெண்கள் தனது கணவரை இழுத்து வருவதைப் பார்த்த 4வது மனைவிக்கு பெரும் குழப்பம், பின்னர்தான் அந்த மூன்று பேரும் பெபாரியின் மனைவியர் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.

அவ்வளவுதான், பொங்கி எழுந்த நான்கு பேரும் சேர்ந்து பெபாரியா சரமாரியாக கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்கி விட்டனர். அவரும் எவ்வளவு தான் தாங்குவார். இறுதியில் அடி தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்து போனார்.

******************************************************

இஸ்லாமிய மரபுப் படி நான்கு திருமணம் செய்துகொள்வது அதுவும் பிற மனைவிகளின் அனுமதியின்றி செய்துகொள்வது அனுமதிக்கப்பட்ட, சரியான செயல் தான். அந்த மனைவியரும் இஸ்லாமியப் பெண்கள் தான். என்றால், ஏன் அந்தப் பெண்கள் தம் கணவரைத் தாக்கினர் என்பதை சிந்திப்பார்களா இஸ்லாமியர்கள்? தங்கள் சகோதரியின் கணவர் இப்படி ஒரு திருமணத்தைச் செய்தால் இந்திய முஸ்லீம்கள் குறிப்பாக கடையநல்லூர் முஸ்லீம்கள் அது சரியானது தான் என மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வார்களா?

மதம் என்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதை விடுத்து சமூக அடிப்படையில் அது சரியானது தானா? என்பதை மீள்பார்வை செய்ய முன்வரவேண்டிய நேரமிது.