தொகுப்பு | ஜூன், 2011

பெற்றோர்களே ஏமாறாதீர்கள்!!

29 ஜூன்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் செலுத்த வேண்டாம்!

 கூடுதலாக கட்டிய பணத்தை திரும்ப பெறவும், மேலும் பணம் கட்டாமல் இருக்கவும்,

மாணவர்கள் மீது நடவடிக்கை என்று மிரட்டினாலும்

உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

தொடர்புக்கு : 9865685333

தனியார் கல்வி முதலாளிகளின் லாபவெறி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெற்றோர்களின் வருமானம் ஒவ்வொரு கல்வி ஆண்டின்  துவக்கத்திலும் கல்விக்காக் பெரும் தொகை கல்வி கொள்ளையர்களால் அபகரிக்கப்ப்டுகிறது. பெற்றோர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முண்னணி, புரட்சிகர அமைப்புகள், மேலும் சில அமைப்புகள் போராடிவருகின்றனர்.

பெற்றோர்களின் இந்த எதிர்ப்பு கல்வி தனியார்மயத்துக்கு எதிரான திசையில் சென்று விடக்கூடாது என எதிர்ப்புணர்வை நீர்த்து போகச் செய்யவும், கல்வி முதலாளிகளின் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கவும் அரசு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டி அறிவித்த கட்டணத்தை வசூலித்து எங்களால் கல்வி நிறுவனத்தை நடத்த முடியாது, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மேல் முறையீடு செய்தார்கள் முதலாளிகள். வாலு போய் கத்தி வந்ததை போல கோவிந்தராஜன் கமிட்டிபோய் ரவிராஜபாண்டியன் கமிட்டி வந்த்து.

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு மேல்முறையீடு செய்தவர்களுக்கு கட்டணங்களை உயர்த்தியும், சீருடைகள், புத்தகங்களுக்கு தாங்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கி பெற்றோர்களை மேலும் ஒரு சுற்று கொள்ளையடிப்பதற்கு வழிவகுத்துள்ளது. கல்வி கொள்ளையர்களோ ரவிராஜபாண்டியன் அறிவித்த கட்டணமும் போதாது இக்குறைவான கட்டணதை வ்சூலித்து தரமான கல்வியைத் தர முடியாது என்கிறார்கள். இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாக மிரட்டுகிறார்கள்.

ஆனால் எல்லா தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக தான் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தனது பொறுப்பை பெற்றோர் தலையில் சுமத்தி முதலாளிகள் கொள்ளையடிக்க துனை போகிறது அரசு.

ஆகவே அரசு மற்றும் கல்வி முதலாளிகளின் கூட்டணிக்கு எதிராக அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவும், கல்வி தனியார்மயமாவதை தடுக்கவும் பெற்றோர்கள் மாணவர் உழைக்கும் வர்க்க பிரிவினர் அனைவரும் ஓரணியில் திரண்டு   

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!

பள்ளியின் பெயர் எல்கேஜி யூகேஜி 1வது 2வது 3வது 4வது 5வது
நேவி நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1750 1650 1650 1650 1650 1650 1650
வாங்கும் கட்டணம் 4500 5000 5500 6000 6500 7000 7500
பெஸ்ட் நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1550 1550 3150 3150 3150 3150 3150
வாங்கும் கட்டணம் 4150 3700 4200 4250 4400 4500 4500
டுடே நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1300 1300 2100 2100 2100 2100 2100
வாங்கும் கட்டணம் 5740 6460 6500 6500 6700 6700 6700
சக்ஸஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2300 2300 3200 3200 3200 3200 3200
வாங்கும் கட்டணம் 4550 4550 5000 5000 5500 5500 5500
ரஹ்மானியா நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2400 2400 2850 2850 2850 2850 2850
வாங்கும் கட்டணம் 2500 3000 4000 4500 4500 5000 5000
பாரத் வித்யாலயா நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2100 2100 2000 2000 2000 2000 2000
வாங்கும் கட்டணம் 2200 2200 2500 2500 2700 2700 2700
அன்னை நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2450 2450 2100 2100 2100 2100 2100
வாங்கும் கட்டணம் 6285 6500 6700 6700 7000 7000 7000
விஸ்டம் மெட்ரிக் ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம்
வாங்கும் கட்டணம் 8600 8600 9000 9000 9500 9500 9500
மார்டன் நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1850 1850 1650 1650 1650 1650 1650
வாங்கும் கட்டணம் 4500 5000 5500 6000 6500 7000 7500
எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணம் 8150 8150 8050 8050 8050 8050 8050
வாங்கும் கட்டணம் 13600 14600 15000 15000 17000 17000 17000
கிங் யுனிவெர்ஸ் மெட்ரிக் ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 3300 3300 3800 3800 3800 3800 3800
வாங்கும் கட்டணம் 12500 12500 13000 13000 13500 13500 14000

72 கூட்டத்தினர் யார்?

24 ஜூன்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 2

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு. WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் சஹர் (அதிகாலை) நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. வரலாறைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். நபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வெளிப்பட்டது ஒரே கொள்கையின் கீழ் சகோதரர்களாக, ஒழுக்கசீலர்களாக, மனிதநேயமிக்கவர்களாக, பெருந்தன்மை கொண்ட பண்பாளர்களாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபித்தோழர்கள், ஒருவருக்கொருவர் நயவஞ்சகமாக, கொலை வெறி பிடித்தவர்களாக நடந்து கொண்டர்கள்.
புஹாரி ஹதீஸ் : 4024
சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.
(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .
அலை – “அலைஸலாம்” இதர நபிகள் (இறைத்தூதர்களின்) பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூற நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.
ரலி – “ரலியல்லாஹுஅன்ஹு” குறிப்பிட்ட அந்த நபித் தோழருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல். “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” போன்று “அலைஸலாம்” “ரலியல்லாஹுஅன்ஹு” போன்ற பிரார்த்தனைகளைக் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.)
என்பத்தி இரண்டு வயதான முதியவர் உஸ்மான் அவர்களின் உயிரைப் பறித்தது எது? இதில் மிகப் பெரும் கேவலம் என்னவென்றால், அந்த கேவலமான நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் பல முக்கியமான தோழர்களும் அவர்களுடைய புதல்வர்களின் பங்களிப்புதான். இவர்களில் பலர் சொர்கவாசிகளென்று நபியால் அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள். எத்தனை நபித்தோழர்கள் இயற்கையான மரணத்தை சந்தித்தனர்? இன்னும் சிலர், அலீ அவர்கள் உட்பட தவறுகளைக் கண்டு நியாயத்தை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மவுன சாமியார்களாக இருந்தனர். அலீ அவர்கள் பதவி ஏற்றவுடன், உஸ்மான் அவர்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று முழங்கினார். நாற்காலி மோகம் யாரையும் விடவில்லை.
குழப்பங்கள் தோன்றும் வேளைகளில் அதை எதிர்த்து எழுந்து நிற்பவனை விட அமைதியாக அமர்ந்திருப்பது மேலானது என்ற ஹதீஸை அவர்கள் நிலைநிறுத்தினர். விளைவு ரத்த வெறி இன்று வரை தொடர்கிறது.
புஹாரி ஹதீஸ் : 7082
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதில் மாற்றான் மனைவியை அபகரிக்கும் செயல் வேறு. அந்த நிகழ்வுகளை நினைத்தால் மலக்கழிவுகளுக்குள் விழுந்ததைப் போன்ற உணர்வு. இது யாருடைய தவறு? சஹாபாக்களுக்குள் சுயநலம், அதிகாரவெறி, நயவஞ்சகம், உச்சகட்டமாக கொலைவெறி.
உதாரணத்திற்கு, உஸ்மான் அவர்களின் கொலைக்கு பழிவாங்குவதாக கூறி, நான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா அலீ அவர்களை எதிர்த்து, முஹம்மது நபி அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா அவர்கள் தலைமையில் பஷராவிற்கு அருகில் குரைபா என்ற இடத்தில் போர் நிகழ்ந்தது.

போர்களத்தில், ஆயிஷாவின் ஒட்டகத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததால் இந்தப் போர் Battle of the Camel (ஒட்டகப் போர்) என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆயிஷா அவர்கள் தோற்கடிக்கப்பட்ட அந்த போரில், முஸ்லீம்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகம். வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்கிறது. இருதரப்பிலும் இறந்தவர்களில் பலர் முஹம்மது நபி மற்றும் கலீபாக்களான அபூபக்கர், உமர் உஸ்மான் ஆகியோர் தலைமையிலும் ஒன்றாக காஃபிர்களை (மாற்று மதத்தினர்- முஹம்மது நபியை இறைத்தூதர் என்று ஏற்க மறுப்பவர்கள்) எதிர்த்து போரிட்ட மிக முக்கியமானவர்கள், அலீ அவர்களுக்கும் நன்கு தெரிந்த சஹாபாக்கள்.
இவ்வுலகிலேயே, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட பத்து சொர்க்கவாசிகளுள் அலீ அவர்களும் ஒருவர். போற்றுதலுக்குரிய நான்கு கலீபாக்களுள் ஒருவர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புக்குரிய மகளின் கணவர் என்று பல சிறப்புக்களை உடையவர்.
ஆயிஷா முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிகவிருப்பமான மனைவி மேலும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் தாய் என்ற தகுதியுடையவர்.
போர் என்பது ஒரு உச்சகட்ட நடவடிக்கை. இந்தப் போர் ஏற்பட இவர்களில் காரணம் யார்?
இந்த ஒட்டகப் போரில் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களின் மரணத்திற்கு பொறுப்பு யார்?
அலீ அவர்களின் ஆதரவாளர்களில் சிலர், உயிருடன் இருக்கின்ற தோல்வியடைந்த ஆயிஷாவின் ஆதரவாளர்களை அடிமைகளாக்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றனர். அலீ அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். உடனே அவர்கள் பஷரா நகரத்து மக்களின் உடைமைகளை சூறையாட அனுமதி கேட்கின்றனர். அதையும் அலீ மிகக் கடுமையாக மறுத்து, போர்களத்தில் கிடைத்த பொருட்களை பகிந்தளித்தார்.
போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.
புஹாரி ஹதீஸ் :7070
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
புஹாரி ஹதீஸ் : 7072
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.
இவர்களில் நம்மை (முஸ்லீம்களை)ச் சேராதவர்களும் நரகத்தில் வீழ்பவர்களும் யார்? இன்று நான் காணும் ஒரு சராசரி மனிதனிடம் இருக்கும் பெருந்தன்மையும், மனிதநேயமும் நபி (ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும்கூட இல்லாமல் போனது ஏன்?
பதவி அதிகாரங்களுக்காக நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள், உறவுமுறைகளின் முக்கியத்துவம் அறியாமல், மனிதாபிமானமின்றி சண்டையிட்டுக் கொள்வது போற்றுதலுக்குரியதா?
பெண்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறும் இஸ்லாமில், மருமகனை எதிர்த்து போர்க்களத்திற்குச் சென்ற ஆயிஷா அவர்களின் செயல் விநோதமாகத் தோன்றியது.
நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் அதிகாரங்களுக்காக ஒருவரையொருவர் கொல்லத் துணிந்த அலீ-ஆயிஷா ஆகிய இருவரிடமும், முஹம்மது நபியின் நற்போதனைகள் பயனளிக்காமல் போனது ஏன்?
மிக நெருங்கிய உறவினர்களிடமே பெருந்தன்மையாக நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் மாற்று மதத்தினரை என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் என் மனதைக் குத்திக் கிழித்தது. இத்தகையவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளின் நம்பகத் தன்மை என்ன? என்ற கேள்விகள் என்னுள் ஆரம்பமானது. இந்தக் கேள்விகள் என்னை உறங்க விடவில்லை.
இரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாற்றை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் 72 கூட்டத்தினர் யார்? என்ற உரையின் இறுதிப் பகுதிகளைக் கேட்க விரும்பவில்லை. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை தொடர்ந்து சில நாட்கள் உறங்கவும் முடியவில்லை. நான் அந்த மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைப் போல என்னுள் இனம் புரியாத வலி. ஒருவேளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் வரலாற்று செய்திகள் என்ற பெயரில் தவறான தகவலைத் தெரிவித்திருக்கலாம் என நினைத்து வேறு சில மார்க்க அறிஞர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் கூறிய செய்திகளனைத்தும் உண்மை என்று ஆதாரங்களையும் குறிப்பிட்டனர்.
நான் என்னுடைய வேதனையை தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இப்பொழுது உங்கள் மனதில் தோன்றும் சஹாபக்களின் (நபித்தோழர்கள்) மீதான தாழ்வான எண்ணம் தவறானது. அந்த துயரமான நிகழ்வு அல்லாஹ்வின் விதி. சஹாபாக்களுக்குள் நிகழ்ந்த அத்தகைய குழப்பம் அவர்களின் மீது தாழ்வான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவேதான் இதைப் போன்ற செய்திகள் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்றனர். சிலர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரை குறை கூறினர்.

என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(!?) அனைத்து பழியையும் தன் தலையில் ஏற்க இறைவன் இருக்கிறான்!. இவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள்(?). மார்க்கவாதிகள், வரலாறு முழுமையாக தெரியாத பாமர மக்களிடம் மழுப்பலான பதிலைக் கூறியே சுமார் 1400 வருடங்களை கடத்தியிருக்கின்றனர். எல்லோரும் கேள்வியை ஆரம்பித்தால் எதில் முடியும் என்ற அச்சமும் பதில் கைவசமில்லை என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

என் சிந்தனை வேறு திசையில் நகரத் தொடங்கியது. விரும்பத்தகாத நிகழ்வாயினும் மறுக்க முடியாத உண்மையல்லவா, இதை ஆராய்ந்தால் நிச்சயமாக சில உண்மைகள் வெளிவரும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. மார்க்க அறிவை பெருக்கவும், மறைக்கப்பட்ட செய்திகளை அறியவும் ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன்.

இதுவரை

துவங்கும் முன்

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

19 ஜூன்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

நன்றி: வினவு

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

19 ஜூன்

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.

சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.

இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.

“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.

சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லுஎன்றுகேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:

இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.

மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.

பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.

உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?

“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே!  அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.

இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.

தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.

சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.

துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”” உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.

“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.

நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.

நன்றி: வினவு

ஆரம்பத்தை நோக்கி

12 ஜூன்

 

தீவிரமாக இஸ்லாத்தை பின்பற்றி ஒழுகும் ஒருவராயிருந்து பின்னர் ஏற்பட்ட ஒரு சந்தேகத்திற்கு விடைதேடி வேதங்களையும் அதன் விளக்கங்களையும் விரிவாக ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியின் பயனாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒரு முன்னாள் இஸ்லாமியரின் பயணம் தான் இந்த நூல். தனக்குத்தானே தஜ்ஜால் என பெயர் சூட்டிக்கொண்ட இவர், இந்நூலை ஆழ்ந்து படித்து முடிக்கும் ஒரு இஸ்லாமியர் இஸ்லாத்திலிருந்து விலகுவது திண்ணம் என்கிறார். என்ன நண்பர்களே இவரின் சவாலை சந்திக்க நீங்கள் தயாரா?

 துவங்கும் முன்

ஹதீஸ்கள் பற்றி ஓர் சிறிய அறிமுகம்,

 

என்  சம்பந்தமாக எதையும் எழுதி வைக்காதீர்கள் என நபிகள் நாயகம் உத்தரவிட்டிருந்தார்கள் .

 

குர்ஆன்  எழுதிப்பதிவு செய்யப்படும் சூழ்நிலையில் ஹதீஸும் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம்? எது  நபிகளாரின் பொன்மொழி? என்பதில்  குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை நபிகள் நாயகம் சொன்னார்கள். ஆகவே  நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

 

ஆயினும்  அபூஹூரைரா போன்ற ஓரிரு நபித்தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று தெளிவு பெற்றிருந்தமையால் சில பொன்மொழிகளை ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்கள். எனினும்  அவை பெரிய அளவிலோ தெகுப்பு வடிவிலோ இருக்கவில்லை.

 

நபித்தோழர்கள்  அபரிமிதமான தங்களது நினைவாற்றலில் இருந்தே நபிகளாரின் பொன்மொழிகளை வாய்வழியாக உலகுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதனால்  அக்காலங்களில் நபிகளாரின் பொன்மொழிகளை மனனம் செய்வது சிறந்தமார்க்க சேவையாக கருதப்பட்டது. இன்றை  காலத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்பவர் ஹாபிழ் என்று அழைக்கப்படுகிறார். அன்றோ  ஒரு இலட்சம் பொன்மெழிகளை மனனம் செய்தவர் ஹாபிழ் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல  மனனம் செய்யப்படும் பொன்மொழிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஹாகிம் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் ஆகிய சிறப்புபெயர்கள் வழங்கப்பட்டன.

 

ஹதீஸ் என்றால் என்ன?

 ஹதஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதிய செய்தி எனப்பொருள்படும். இஸ்லாமிய உலகில் ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

        அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

 

 

ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

 

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

 

ஹதீஸ் வகைகள்

ஹீஹ் அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச் சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

 

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

 

லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

 

மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ:கள் மவ்லூஉ எனப்படும்.

 

முதல்  தொகுப்பு

ஹிஜ்ரீ  முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த உமைய்யா வம்ச ஆட்சியாளர் ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (கி.பி 681-717.) ஆட்சிக் காலத்தில்  நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பெருமளவில் நபித்தோழர்கள் மரணமடைந்த போது ஹதீஸ்கள் நூல் வடிவத்தில் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

 

உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களது உத்தரவிற்கேற்ப இமாம் முஹம்மது பின் முஸ்லிம் பின் `ஹாப் அஸ்ஸூஹரீ ( ஹி 124 ) நபிகளாரின் பொன் மொழிகளின் முதல் தொகுப்பை திரட்டினார். அதற்குப்பின் பக்திசிரத்தையோடும் அக்கறையோடும் பலரும் நபிகளாரின் பொன்மொழிகளை திரட்டத் தொடங்கினார்கள்.

 

அந்த ஆர்வத்தின் முடிவில் சில பிரச்சினைகளும் எழுந்தன. நபிகளாரின் பொன்மொழிகள் அல்லாத பலவும் திரட்டுக்களில் இடம் பெற்றன. தவறான எண்ணத்தோடு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் மற்றும் குழுஉணர்வின் தாக்கத்தாலும் பலர் பொய்யான செய்திகளை இட்டுக்கட்டடியி நபிமொழி என்ற பெயரில் உலாவ விட்டிருந்தனர். அவையும் திரட்டுக்களில் இடம் பெறத் தொடங்கின. இப்பொய்ச் செய்திகள் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் ஆபத்தாக அமைந்தன.

 

இந்நிலையில் தான் இமாம் முஹம்மது பின் இஸ்மாயீல் புகாரி ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளை திரட்டித்தர முதன்மையான உறுதி பூண்டார். மார்க்கத்திற்கும் சமுதயத்திற்கும் மிகப்பொரிய சேவையாற்றுவதற்காக பிறப்பபெடுத்தது போல் 16 ஆண்டுகால பெரும் முயற்சிக்குப்பின் தனக்கு மனனமாக இருந்த சுமார் 6 இலட்சம் பொன்மொழிகளிலிருந்து 7586 பொன்மொழிகளை தேர்வு ஆதரப்பூர்வமான பொன்மொழிகள் தொகுப்பை உலகுக்கு வழங்கினார். அதற்குப்பிறகு அவருடைய வழியை அடியொட்டி பலரும் ஆதராப்பூர்வ தொகுப்புகளை திரட்டித்தந்தனர். அவற்றுள் மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள் ஆறு.

 

1. ஸஹீஹூல் புகாரீ

நூலின் பெயர்  : அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (புகாரீ)

முழுப் பெயர்   :  அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்முஸனத் அல்முக்தஸர் மின் உமூரி ரசூலில்லாஹி வ சுனனிஹி வ அய்யாமிஹி)

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்புகாரீ (ரஹ்)

பிறப்பு          :ஹிஜ்ரீ 194 (கி.பி. 810) ஷவ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக் கிழமை இரவு

இறப்பு          : ஹிஜ்ரீ 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஸஹீஹூல் புகாரீ ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதத் துவங்கினார்கள். தமது முப்பத்து நான்காம் வயதில் ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால அயராத உழைப்பிற்குப் பிறகு அதனை எழுதி முடித்தார்கள். அன்னார் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். இந்நூலில் 7563 (ஃபத்ஹூல் பாரீயின் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்ததாக அபூதாவூத் எனும் நூல்தான் இயற்றப்பட்டது.

 2. சுனன் அபூதாவூத்

நூலின் பெயர்  :  சுனன் அபூதாவூத்

ஆசிரியர் பெயர் : அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ (ரஹ்)

பிறப்பு          : ஹிஜ்ரீ 202

இறப்பு          : ஹிஜ்ரீ 275 (கி.பி. 889) ஹவ்வால் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை

ஈரானிலுள்ள ஸிஜிஸ்தான் நகரில் பிறந்த அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் (சஜிஸ்தானீ) (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். ஹதீஸ்களுக்காகவே இவ்வுலகில் பிறந்து வாழ்ந்தவர் என்று இவரைக் குறித்துப் பெருமையாகக் கூறுவர். இவர் தம்முடைய பிரசித்தி பெற்ற சுனன் அபூதாவூத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலை இயற்றி தம்முடைய ஆசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அவர்கள் தமது மாணவரை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலில் 5274 (முஹ்யித்தீன் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து ஸஹீஹ் முஸ்லிம் இயற்றப்பட்டது.

 

3. ஸஹீஹ் முஸ்லிம்

நூலின் பெயர்  : அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

ஆசிரியர் பெயர் : அபுல் ஹஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அந்நைசாப ரீ அல்கு ரீ (ரஹ்)

பிறப்பு          :ஹிஜ்ரீ 204 (கி.பி. 819)

இறப்பு          : ஹிஜ்ரீ 261 (கி.பி. 875) ரஜப் மாதம் 25ஆம் நாள் ஞாயிறு மாலை

இன்றைய மேற்கு ஈரான் நாட்டிலுள்ள நைசாபூர் நகரில் பிறந்த அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அல்குi~ரீ அன்நைசாபூரீ (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். பிற்காலத்தில் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்துள்ளார்கள்.ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹ_ல் புகாரிக்கு அடுத்ததாக ஸஹீஹ் முஸ்லிம் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் அமைக்கப்பட்டள்ள முறையையும் அதில் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒழுங்கையும் கவனித்து இது ஸஹீஹுல் புகாரீயைவிட மேம்பட்டதாகும் என மொராக்கோ போன்ற மேற்கத்திய நாட்டினர் சிலர் கூறியுள்ளனர். இந்நூலில் 7345 (நவவீ இமாம் இலக்கம்) ஹதீஸ்கள் உள்ளன.

 

 4. ஜாமிஉத் திர்மிதீ

நூலின் பெயர்  : அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

ஆசிரியர் பெயர் : அபூரூடவ்சா முஹம்மத் பின் ரூடவ்சா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்)

பிறப்பு          : ஹிஜ்ரீ 209

இறப்பு          :ஹிஜ்ரீ 279 (கி.பி. 892)

  இன்றைய உஸ்பிகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் நகரத்தில் பிறந்த அபூஈசா முஹம்மத் பின் ஈசா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். புகாரீ (ரஹ்) அவர்களின் பிரதிநிதி (கலீஃபா) என்று இவரைக் குறித்துக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் 3891 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

5. இப்னுமாஜா

நூலின் பெயர்  :சுனன் இப்னுமாஜா

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ருப்ஈ (ரஹ்)

பிறப்பு          :ஹிஜ்ரீ 209

இறப்பு          :ஹிஜ்ரீ 273 (கி.பி. 887)

காஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் பிறந்த அப+ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் தமது சுனன் இப்னு மாஜா நூலை ஹாஃபிழ் அப+ ஜர்ஆ அர்ராஜீ (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அன்னார் ஆராய்ந்து இந்நூலில் சுமார் முப்பது பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்கள். இதில் 4341 (அப்துல் பாகீயின் இலக்கம்) ஹதீஸ்கள்.

 

 

 6. சுனன் நஸயீ

நூலின் பெயர்  : சுனன் நஸயீ

ஆசிரியர் பெயர் : அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ஐப் அந்நஸயீ (ரஹ்)

பிறப்பு  : ஹிஜ்ரீ 215

இறப்பு  : ஹிஜ்ரீ 303 (கி.பி. 915)

 

கிழக்கு ஈரானிலுள்ள நசா எனும் நகரத்தில் பிறந்த அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ஐப் அன்னஸயீ (ரஹ்) அவர்கள் முஸ்லிம் (ரஹ்) அவர்களைவிட அதிகமாக ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள். இந்நூலில் 5769 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

 

இவை தவிர இன்னும் ஏராளமான ஆதாரப்பூர்வமான பொன்மொழித் தொகுப்புகள் உண்டு.

 

 

 

இமாம் புகாரி அவர்களின் வாழ்க்கை வரலாறு

 இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயில் பின் இப்ராஹீம் பின் முஃகீரா பின் பர்திஸ்பா அல்ஜூஅஃபி அல்புகாரீ (ரஹ்) அவர்கள் ஆவார். இன்றைய ரஷ்யக் குடியரசுகளில் ஒன்றான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு (கி.பி.810) `வ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு அன்னார் பிறந்தார்கள்.

 

சிறு வயதிலேயே தந்தையை இழந்த அன்னார் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். உள்ளூரிலேயேஆரம்பக் கல்வியைக் கற்று முடித்த பின் தாயார் மற்றும் சகோதரருடன் தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி206இல்) ஹஜ் புனித்ப பயணம் மேற்கொண்ட அன்னார் ஹதீஸ் எனும் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக திரு மக்காவிலிலேயே தங்கிவிட்டார்கள்.

 

திருமக்கா மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக எகிப்து சிரியா இராக் முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார்கள். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல லட்சங்களாகும் இருப்பினும். நம்பத் தகுந்த ஆதாரப்பூர்வமான அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே இந்நூலில் இடம் பெறச் செயவதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

 

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563. இவற்றில் திரும்பத் திரும்ப வரும் நபிமொழிகளை நீக்கிப் பார்த்தால் சுமார் 4000 நபிமொழிகளே மிஞ்சும். இந்த எண்ணிக்கையே இமாம் இப்னுஹஜ்ர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் விரிவுரை மூலத்தில் காணப்படுகிறது.

 

இந்நூலுக்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் சூட்டிய முழுப்பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் பின் கனனி ரசூலில்லாஹி (ஸல்) வ அய்யமிஹி ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் முறிவுறாத நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற, அல்லாஹ்வின் திருத் தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைச் சரிதை குணநலன்கள் அனைத்தும் உட்பொதிவாய் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு என்பது இதன் பொருளாகும். இதனை ஸஹீஹூல் பபுகாரீ (இமாம் புகாரீ அவர்களின் ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்பு) என்று சுருக்கமாகக்கூறுவர். 16 ஆண்டு காலக் கடின உழைப்புக்குப் பின் இத்தொகுப்பு உருவானது.

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இந்நூலன்றி வேறு பல நூல்களும் எழுதியயுள்ளார்கள். அவற்றில் சில,

  1. அல் அதபபுல் முஃப்ரத்
  2. அத்தாரீகுல் கபீர்
  3. அத்தாரீஸ் ஸஃகீர்
  4. அல் முஸ்னதுல் கபீர்
  5. அத்தஃப்சீரல் கபீர்
  6. அல் மப்சத்
  7. அல்ஹிபா
  8. அல் அ`ரிபா                   
  9. அல்வஹ்தான்
  10. அல் இலல்

 

கல்விக் கடலாகத் திகழ்ந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இறைவழிபாடு,  நபிவழி வாழ்க்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றுடன் தூய்மையான முறையில் வாழ்ந்தார்கள். வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்ட அன்னார் ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து நகரில் தமது 62ஆவது வயதில் மறைந்தார்கள்.

Rahmath.net லிருந்து

*****

கடவுளைக் காணவில்லை

8 ஜூன்

 

” ஒரு நாயிடம் போய் கடவுள் இருக்கா ? இல்லையா ? எனக் கேட்டால் அது என்ன சொல்லும் … சிந்தியுங்கள் … பதிலைக் கடைசியில் சொல்கின்றேன். ” …..

நேற்றுத் தான் இந்த செய்தியைக் கேள்விப் பட்டேன். கடவுள் காணாமல் போய்விட்டதாக XD8975HGYU0987 கிரகத்தைச் சேர்ந்த மனிதர்கள் கலிபோர்னியாவில் இருக்கும் நாசா மையத்துக்கு அவசர மின் காந்த அலை நகல் ஒன்றை அனுப்பினார்கள். இந்தச் செய்தியைக் கேட்டு நாசாவின் ” கடவுள் தேடும் பணி ” பிரிவின் தலைவர் கிரகம் வெல் அதிருந்துப் போனார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக கோடிக் கணக்கான டாலர்களை செலவிட்டு பால்வெளிகளை எல்லாம் சல்லடைப் போட்டுத் தேடி வருகின்றார்கள். இத்தனை நாளாகத் தேடி ஒன்றையும் கண்டுப் பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தகவலை உடனடியாக இராஜாங்க செயலரின் அலுவலகத்துக்கு இரகசியமாக அறிவித்தார் அவர். 

அமெரிக்க உட்பட வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றின் இரகசியப் பிரிவுகளை உள்ளடக்கிய இக்குழுவின் கடவுளைத் தேடி விண்கலம் சில ஆண்டுகளுக்கு முன் தான் NGC 4414 விண்மீன் பேரடை கிரகங்ளின் மனிதக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஏவப்பட்டது. பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்த பால்வெளி கிரகங்களுக்கும் இந்தக் கலம் தமது கதிரியக்கங்களைப் பரப்பி கடவுளின் இருப்பைப் பற்றி தேடி வருகின்றார்கள். இதற்கு முன் ஏவப்பட்ட ஆதாம் விண்கலம் கடவுளைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது NGC 1300 விண்மீன் பேரடைக் கிரகத்தில் இருந்து வந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் அது நொறுக்கப்பட்டது. 

கிரகம் வெல் பதவியேற்றதும், பல புதிய திட்டங்களை வகுத்து கடவுளைத் தேடும் பணியில் மும்முரமாக இறங்கியது இந்த மையம். தமது ஓய்வுப் பெறும் காலத்துக்குள் எப்படியாவது கடவுளைப் பற்றி எதாவது கண்டுப் பிடித்து விட வேண்டும் என்பதே இவரின் பேரவா ? ஆனால் ஆரம்பம் முதலே இவர் எடுத்த எல்லாக் காரியங்களும் தவிடுப் பொடியாகி விட்டது எனலாம். பூமியில் இருக்கும் கடும் போக்காளர்கள் பலர் கடவுளைத் தேடுவது மகாப் பாவம் எனப் பிரச்சாரம் செய்து வருவதையும் அவர் சற்று யோசித்துப் பார்த்தார். ஆனால் வெறும் சிறியக் கூட்டத்தின் போராட்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியே நேரிடையாக சொன்னப் பிறகு இவருக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. 

கடவுளைத் தேடும் பணி மையத்தில் எனக்கு பெரிய வேலை என்று எதுவும் கிடையாது. கிரகம் வெல்லின் உதவியாளர் மரியானா தரும் செய்திகளை வேற்று விண்மீன் பேரடைகளுக்கு மின் காந்த அலை நகல் அனுப்பி வைப்பதைத் தவிர வேறொன்றும் அங்கு செய்வதில்லை நான். சில நேரங்களில் மரியானா தனதுக் கிராமத்தினைக் குறித்து சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருப்பேன். மரியானாவுக்கு கிரகம் வெல் மீது ஒருவிதக் கடுப்பு இருக்கின்றது. காரணம் இருவரும் ஒரேக் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் ஒருவர் மீது மற்றொருவருக்கு பாசம் தானே இருக்க வேண்டும், ஆனால் இவர்களுக்கு சண்டை தான் எப்போதும். என்ன இருந்தாலும் ஹோமோ சாப்பியன்களைப் போல முதுகுக்குப் பின்னால் பேசுவது இவர்களின் வழக்கம் இல்லை. 

நீங்கள் நினைப்பது சரி தான் ! மரியானாவும், கிரகம் வெல்லும் நமது விண்மீன் பேரடையைச் சேர்ந்தவர்களே இல்லை. அவர்களின் கிராமம் என்பது மிகவும் சிறியதொரு கிரகத்தில் இருக்கின்றது. அங்கு நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தினால் பலர் புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்துவிட்டனர். இப்படி வேற்றுக் கிரக வாசிகளை இங்கு நுழையவிடுவதால் தமது வேலைகள் பறிப் போவதாக அமெரிக்காவில் பலரும் விசனப்பட்டுக் கொள்கின்றவர்களும் உண்டு. ஆனால் அமெரிக்காவோ, பிற நாடுகளோ அனைத்து கிரக வாசிகளையும் இங்கே அனுமதிப்பது இல்லை. 

பூமிக்குள் நுழைவது என்பது அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. முதலில் விண்ணப்பம் செய்ய வேண்டுமாம். விண்ணப்பம் செய்வோர்களை தேர்ந்தெடுப்பதில் மரியானாவின் கிரகத்தில் ஒரு விசித்திர நடைமுறை இருப்பதாக அவள் ஒருமுறைக் கூறியது ஞாபகம் இருக்கின்றது. அதாவது அங்குள்ள ஆணோ, பெண்ணோ தமது கிராமங்களை புறந்தள்ளிப் போய்விட முடிவு எடுத்தால் – மீண்டும் அங்கே வரமாட்டேன் என சத்தியம் செய்துக் கொடுக்க வேண்டும். அதனை உறுதி செய்வதற்காக அனைவரின் காலில் விழுந்து எழ வேண்டுமாம். பின்னரே விண்ணப்பங்களை அனுப்ப அங்குள்ளவர்கள் அனுமதிப்பார்கள். 

விண்ணப்பங்களில் கேட்டிருக்கும் கேள்விகள் விசித்திரமானவை. எத்தனைக் கண்கள், காதுகள், மூக்குகள், வாய் என்பவற்றையும். தலை எங்குள்ளது எனவும், சுவாசிக்கப் பயன்படும் வாய் எது எனவும் கேட்பார்கள். நல்ல வேளை மரியானாவின் கிரகவாசிகளும் நம்மைப் போல ஆக்சிஜனையே சுவாசிக்கின்றார்கள். அதனால் அவர்களால் எளிதாக இங்கு வரமுடிகின்றது. கடும் உழைப்பாளிகள், வெறும் ஒரு மணி நேரம் தான் தூங்குவார்கள். பதினைந்து மணி நேரம் கடுமையாக உழைப்பார்கள். அனைத்து மொழிகளையும் கப்” பெனப் பிடித்துக் கொள்வார்கள். 

கிரகம் வெல் மீண்டும் கடுப்பாகின்றார். கடவுளைத் தேடிப் போன விண்கலத்தின் சமிக்ஞ்சைகள் மிகவும் நொந்தலாக வருகின்றது என்றத் தகவல்கள் அவரை மேலும் கலவரப்படுத்தியது. மரியானாவிடம் எதோ சொல்லி விட்டு உள்ளே சென்றுவிடுகின்றார். 

என்னிடம் வந்த மரியானா” நீங்கள் போய் ! உணவு இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் ”  என சொன்னாள் பச்சை நிறக் கண்கள் மிளிர. சரி ! என நானும் எனது கேபினை விட்டு வெளியேறினேன். 

சிற்றுண்டியகத்தில் அனைவரும் பரப்பரப்பாக இருந்தனர். கடவுளைக் காணவில்லை என்ற செய்தியை அறிந்து கலவரத்துடன் திரையில் வெளிப்படும் செய்தியறிக்கையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையில் செய்தியை வாசித்துக் கொண்டிருந்த பெண் ரோபோ, ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடும் கடும்ப் போக்காளரையும் காட்டிக் கொண்டிருந்தது. நான் அவற்றைப் பொருட்படுத்தாது, ஒரு விலன் பானத்தையும், ஒரு ரொட்டித் துண்டையும் ஆர்டர் கொடுத்துவிட்டு ஜன்னல் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.

உணவும் வந்து சேர்ந்தது, ரொட்டியைக் கடித்தப் படியே .. சிவப்பாக மாறிய வானத்தை விறைத்தப்படியே இருந்தேன்….

திடிர் என திரையில் வெளிப்பட்ட செய்திகளைக் கண்ட சக பணியாளர்க் கூட்டம் ” ஹொய் ! ” என கத்தினார்கள். என்னாச்சு எனப் போய் பார்த்தேன். 

கடவுள் அருகில் இருக்கும் விண்கலத்தில் சமிஞ்சைகள் கிடைக்கப் பெற்றது என்ற செய்திகள் கூறியது. கடவுள் காணமல் போனதைப் பற்றி செய்திகளுக்குத் தெரியாது. அது கிரகம் வெல்லின் அலுவலகத்துக்கும் அரசாங்கத்துக்கு மட்டுமே தெரியும். 

கடவுளுக்கும் கலகக் காரர்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அது நடந்தால் மட்டுமே நாமெல்லாம் வாழ முடியும் என்ற சூழலும் இருக்கின்றது. இல்லையாயின் கலகங்கள் செய்வோர் பூமியின் அமைதியைக் குலைத்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

கடவுள் என்பது ஒரு செயற்கையாக இணைக்கப்பட்ட ஒரு கோளாகும். பூமியை ஒத்த இக்கோளுக்குத் தான் கலகங்களை செய்யும் கடவுளர் கடும்போக்காளர்களை கிரகம் கடத்த உலக நாடுகளின் சம்மேளனம் முடிவு செய்திருந்தது. காரணம் இச்சிறிய மக்கள் அடிக்கடி கடவுளின் பெயரால் கலகங்களையும், கொள்ளையடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் நடத்தி வந்தார்கள். அவர்களின் பலமும் அட்டூழியமும் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. அவர்களை இனிமேல் பூமியில் வைத்திருப்பது ஆபத்து என முடிவு செய்த உலக நாடுகள் அனைவரையும் கைது செய்து கடவுளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஒருத் தொகுதி மக்கள் ஏற்கனவே கிரகம் கடத்தப்பட்ட நிலையில். இரண்டாவதாக சென்ற விண்கலமே ! சமிஞ்சைகள் இழந்துப் போனது. கடவுள் கிரகம் முதலில் நமது பால்வெளி விண்மீன் பேரடைக்குள் தான் இருந்தது. ஆனால் எதிர்க்காலத்தில் இங்கிருந்துப் போகும் கலகக் காரர்கள் அங்கிருந்து திரும்பி வந்து தாக்குதல் நடத்தினால் என்னவாகும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் முப்பது லட்சம் ஒளியாண்டுகள் நகர்வது போல அதனை வடிவமைத்தார்கள். ஆனால் அனைத்து கலகக் காரர்களையும் அங்கு கொண்டுப் போய் சேர்க்கும் முன்னர் திடிர் என அது காணமல் போனதே அதிர்ச்சி சம்பவமாகும். அவற்றை கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தேடியும் பயனில்லை.

இந்நிலையில் பூமியில் மிச்சம் இருந்த கலக்காரர்களும் பெருகத் தொடங்கினார்கள். அவர்களின் பலமும் அதிகரித்து வந்தது. மற்றொரு கடவுளை உருவாக்க உலக நாடுகள் திட்டமிட்டன, ஆனால் அந்த முயற்சிக்கு சில நாடுகள் போதிய ஆதரவுத் தரவில்லை. கலகக் காரர்களை கொன்றுவிடவே சில நாடுகள் விரும்பின. அது உயிரின உரிமைகளை மீறும் செயல் என பல நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த சிக்கல் தொடர்ந்துக் கொண்டு போகவே, கடவுள் தொலைந்த செய்தியை யாரும் அறிவிக்கவில்லை. இதனை எனக்கு சொல்லியப் போதும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும், உண்மையை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னை புரோகிராம் செய்துவிட்டார்கள். 

உலகத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமானதாக இருப்பதை பலரும் அறியாமல் இருக்கின்றார்கள். அரசுகளும் இவற்றை மறைத்தே வருகின்றன. என்ன செய்ய ? கலக்காரர்களின் நம்பிக்கைகள் இன்னும் 2300-ம் ஆண்டிலேயே தங்கிவிட்டது. அதன் பின் சொல்லப்பட்ட கண்டுப்பிடிப்புகளால் பலவற்றை இல்லை என்பதை உலக நாடுகள் அறிவித்தன. ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் கலகக்காரர்களுக்கு இல்லாமல் போனது. இதன் விளைவு இக்கலகங்கள்.

உணவு இடைவேளை முடித்து, எனது கேபினுக்குத் திரும்பினேன். எனது கேபினின் திரையில் அந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டே இருப்பதைப் பார்த்தேன்.

” ஒரு நாயிடம் போய் கடவுள் இருக்கா ? இல்லையா ? எனக் கேட்டால் அது என்ன சொல்லும் … சிந்தியுங்கள் … பதிலைக் கடைசியில் சொல்கின்றேன். ” ….. பிரபலத் தொகுப்பாளரின் வழக்கமான குரலில் யோ டிவியின் நிகழ்ச்சி அது. நாய் ” லொள் ” என்றது. ” சரியான விடை அளித்த நேயர்களுக்கு தமது மனம் விரும்பிய கேலக்ஸி மாக்னாவின் ஒரு வாரம் உல்லாச சுற்றுப் பயணத்துக்கான முழு வாய்ப்பு ” என அவர் தொடர கரவொலி அந்த அரங்கத்தில் பரவியது. 

அறைக்குள் கிரகம் வெல் கவலைத் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதை அவரின் கண்ணாடி அறை வழியாக நான் பார்த்தேன்.

நன்றி: கொடுக்கி, இக்பால் செல்வன்

வெற்றுப் பிதற்றல்களுக்கு முகம் கொடுப்பது அவசியமா?

7 ஜூன்

நீண்ட நாட்கள் கழித்து நண்பர் முஸ்தபா தன் காயங்களையெல்லாம் ஆற்றிக் கொண்டு மீண்டு வந்திருக்கிறார். அவருக்கான கடந்த என் பதிவில் இப்படி குறிப்பிட்டிருந்தேன், \\முதலில் நான் பயன்படுத்திய ஆணாதிக்கம் என்ற சொல்லுக்கு மறுப்பு தெரிவித்தார், அதை விளக்குவதற்காக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதை அப்படியே விட்டு விட்டு நண்பர் ஆன்மீகத்தில் சாய்ந்தார். நண்பரின் பதிலிலிருந்தே ஆணாதிக்கத்தின் கூறுகள் மதத்தில் படர்ந்திருக்கின்றன எனக்காட்டினேன். இப்போது நண்பர் மீண்டும் முதன்மைத்தனமானவைகளைத் தவிர்த்து விட்டு துணையாக குறிப்பிட்டவைகளை மட்டும் முக்கியமானதாக எடுத்துக்கொண்டு தன் மறுப்பைத் தயாரித்திருக்கிறார். இதற்கு பதில் கூறிய பின்னர் நண்பர் அடுத்த தயாரிப்பில் வேறு தலைப்பை நாடுவாரோ….// இதை சற்றும் பொய்ப்பிக்காமல், கேட்ட கேள்விகள் எதற்கும் பதிலளிக்கும் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாமல் மீண்டும் தொடர்பற்று ஏதேதோ பிளிரல்கள்.

நான் உளரல்களை பொருட்படுத்துவதில்லை. எந்த தார்மீக விழுமியங்களுக்கும் ஆட்படாமல் தங்களின் மனக் கிலேசங்களை வார்த்தைகளால் சொறிந்துவிட்டுக் கொள்ளும் விளம்பர மோகிகளுக்காக என்னுடைய நேரத்தை செலவு செய்ய நான் ஆயத்தமாக இல்லை.

அதேநேரம் ஒழுங்காக விமர்சனங்களுக்கு பதில்கூறும் துணிவு இன்னமும் மிச்சமிருப்பதாக நண்பர் கருதினால், கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதில்தரத் தயார் என ஒற்றை வரியை பதிலாகத் தரட்டும். அவர் விரும்பும் எல்லை வரையிலும் விளக்கவும் விவரிக்கவும் விவாதிக்கவும் நான் தயார். நண்பர் தயாரா?

வாழ்வு என்றால் என்ன? அதற்கான தகுதிகளை எங்கிருந்து வரித்துக் கொள்வது என்பது குறித்த தேடலோ அறிதலோ கொஞ்சமும் இல்லாமல், வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்றிருப்பவர்களால் அனுதாபப்படவும் முடிவது ஆச்சரியம் தான்.

ஆர்வமுள்ளவர்கள் பாலியல் குறித்து ஓர் இஸ்லாமியருடன் நடத்திய விவாதத்தை இதில் தரவிறக்கி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்