Tag Archives: இனப்படுகொலை

டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

24 ஏப்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 3

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் சொல்லப்படாத இரகசியங்கள்.

முதலில் நாம் சில அடிப்படை புரிதல்களை விளங்கிக் கொள்ள வேண்டும். மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும், எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில் செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல் முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல, அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும், அதன் பின்னர் துருவங்களில் சற்றே தட்டையான உருண்டை என்றும் அந்த முடிவுகள் மாற்றப்பட்டது. இதை முரண்பாடு என்று கொள்வதும், அறிவியல் தவறு என்று கொள்வதும் பிழையானவைகள், புரிதலற்றவைகள். ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் மதத்தை அதன் வேதங்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் அறிவியலை நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அறிவியல் முடிவுகள் மாறும் இயல்புடையவை. ஆனால் அந்த மாறுதல்களுக்கும் சான்றுகள், ஆதாரங்கள் வேண்டும்.

இந்த அடிப்படையில் பரிணாமவியலைப் பார்த்தால், டார்வின் பரிணாமவியலுக்கு பருண்மையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலிருந்து பலரின் பங்களிப்புகளோடு அது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பரிணாமவியல் டார்வினிலிருந்து தொடங்கவும் இல்லை, டார்வினோடு முற்றுப் பெறவும் இல்லை. பருண்மையான தொடக்கம் என்பதன் பொருள் அவருக்கு முனே சிலர் பரிணாமவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், டார்வின் ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அளவுக்கு ஆய்வுகளைச் செய்ததும் முடிவுகளைக் கண்டடைந்ததும் ஆகும். மட்டுமல்லாது, அவரின் ஒவ்வொரு முடிவுகளும் எந்த மாறுதல்களுக்கும் இடமில்லாத அறுதிகளும் அல்ல. ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் தங்களின் தூதர்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். டார்வின் கடவுளோ தூதரோ அல்லர். அவர் ஓர் அறிவியலாளர் மட்டுமே. அவரின் அறிவியல் முடிவுகள் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தேறுபவைகள் நிற்கும் அல்லாதவைகள் தள்ளப்படும்.

இந்த அடிப்படையை விலக்கி விட்டு, அறிவியலுக்கு முரணான பார்வையில் அறிவியலை அணுகினால் அது நேர்மையற்றதாக இருக்கும் அல்லது மதவாதமாக இருக்கும். எதிர்க்குரல் எழுப்பும் நண்பர் ஆஷிக்கின் குரலும் மதவாதக் குரல் தான். ஆனால் சற்றே அறிவியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது.

தான் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் வரையிலும் மாபெரும் அறிஞராக அறிவியலாளராக மதிக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். ஏன் இப்போதும் கூட அவருக்கு அந்த மரியாதை உண்டு. அவர் தன்னுடைய ஆய்வின் விளைவாக புவியை மையமாகக் கொண்டே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு 15ம் நூற்றாண்டின் கோபர்நிகஸ் காலம் வரை செல்வாக்குடன் இருந்தது.
சில பத்தாண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தினர் 16 பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றான் ஜெயப்பிரகாஷ் என்பவன். அவன் பிடிபட்டபோது அதற்கு அவன் கூறிய காரணம் நூறாவது நாள் படம் பார்த்தது தான் என்பது.
இந்த இரண்டையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால் அது நண்பர் எதிர்க்குரல் ஆஷிக்கின் பதிவை ஒத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இனி கட்டுரைக்குத் திரும்புவோம்.

அவர் கட்டுரையின் தொடக்கமே அதிரடியாய் இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை தான் இனவெறிக்கு வித்திட்டது என்கிறார். இனவெறிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பரிணாமக் கொள்கையைக் கூறி ஹிட்லர் தன்னை நியாய்ப்படுத்திக் கொள்ள முயன்றார். 16 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் போல. ஒரு மனித இனத்தை விட இன்னொரு மனித இனம் மேம்பட்டது என்பதை பரிணாமத்தை ஏற்பவர்கள் நம்ப(!) வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அறிவியலை நம்புபவர்கள், அரிஸ்டாட்டிலை மதிப்பவர்கள் இன்றும் புவி தான் மையம் என்று தான் கூற வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.

முதலாளித்துவம் வளர்ந்த பிறகு தான் தேசிய இனம் எனும் கொள்கையும், அதனடிப்படையில் இனவெறியும் தோன்றின. நிலப்பிரபுத்துவ காலங்களிலெல்லாம் இனப்பாகுபாடு பெரிய அளவில் இல்லை. அந்த காலகட்டங்களில் உலகமெங்கும் இருந்த அரசுகளை மக்கள் இனம் எனும் அடிப்படையில் எந்த மன்னனையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்ததாக வரலாறு இல்லை. அரேபிய முகம்மதின் தோன்றல்கள் துருக்கியை ஆண்டபோது இன அடிப்படையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஐரோப்பிய இனம், ஆப்பிரிக்க இனம், மங்கோலிய இனம் என்பதெல்லாம் தோற்றவேறுபாடுகளைக் கொண்டு அறிதலுக்காக பிரிக்கப்பட்ட அறிவியல் பகுப்புகள். இது நண்பர் ஆஷிக் கூறும் இனத்தில் சேராது. ஆனால் இன மேம்பாடு குறித்து விதந்தோத நண்பர் எடுத்துக் கொண்ட ஹிட்லர் கொன்றழித்த கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஹிட்லரின் இனமான அதே ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நண்பருக்கு ஏன் மறந்து போனது? பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும், ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார்? ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள் அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர். இது தேசியவாதமா? பரிணாமவாதமா? நண்பர் ஆஷிக் பதில் கூறுவாரா? ஆக ஹிட்லரின் இனவெறிக்கும் பரிணாமத்துக்கும் எந்தவித ஒட்டும் இல்லை. ஜெயப்பிரகாஷ் சொல்லிவிட்டான் என்பதற்காக கதை எழுதிய மணிவண்ணனை குற்றம் சொல்வது எந்த விதத்தில் சரி நண்பரே?

ஹிட்லரையும் டார்வினையும் பசை போட்டு ஒட்டுவதற்கு நண்பர் ஆஷிக் பயன்படுத்தியவை என்ன? The Preservation of Favoured Races in the Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள் அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக் கொண்டு அவர் கூறுவது என்ன? “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு” இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா? அல்லது, தகுதியுடயவை நீடிக்கும் என்பதில் இனவெறி கருக் கொண்டிருக்கிறதா?

முதலில் டார்வின் பயன்படுத்திய இனம் எனும் சொல்லின் பொருளும், நண்பர் ஆஷிக் பயன்படுத்தியிருக்கும் இனம் எனும் சொல்லின் பொருளும் வேறு வேறானது. டார்வின் பயன்படுத்தியது காக்கோசிய இனம், நீக்ராய்டு இனம், மங்கலாய்டு இனம் எனும் அறிவியல் சார்ந்த அதாவது தோற்றப்பாகுபாட்டில் மனிதனைப் பிரிக்கும் இனங்கள். அந்த அடிப்படையில் காக்கோசிய (ஐரோப்பிய) இனம் நீக்ராய்டு (ஆப்பிரிக்க) இனத்தைவிட காலத்தால் பிற்பட்டது, புதிய பரிணமிப்பு. அதாவது நீக்ரய்டுகளை விட துருவப்பனியின் தாக்கத்தால் தோற்றத்தில் மாற்றம் பெற்று புதிய தகவமைப்புகளுடன் கூடியவன் காக்கோசிய மனிதன். ஆனால் நீக்ராய்டைவிட முன்னேறியவனா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஏனென்றால் அறிவியல் கூறும் இனம் என்பது, டார்வின் கூறும் இனம் என்பது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வேறுபாடு நண்பருக்கு தற்செயலாக தெரியாமல் போனதா? அல்லது தான் எழுத நினைப்பதை எழுதுவதற்கு தெரியாததாய் காட்டிக் கொள்வதுதான் வசதி என்று கருதினாரா?

தகுதியுடையவை நீடிக்கும் என்பதின் பொருள் என்ன? இந்த சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன் சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்(!). இது சரியா? வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்து உலகில் நிற்பதற்கு தகுதி வேண்டும். பூமியில் தோன்றி தொன்னூறு விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன. அவற்றுள் மிகப்பலமானதாக கருதப்படும் டினோசர்களும் அடக்கம். தோராயமாக மூன்றுகோடி ஆண்டுகள் பூமியை ஆக்கிரமித்திருந்த டினோசர்களுக்கு இல்லாத தகுதி தற்போது ஆடுகளுக்கு இருக்கிறதா? ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக் கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால் அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின் தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும் ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா? இந்த ஆடுகள் மட்டும் தான் எண்ணிக்கையில் பெருகுகின்றன. ஆனால் வரையாடுகள். அதை மனிதன் உணவாக கொள்வதில்லை. தமிழக அரசின் பாதுகாப்பில் இருந்தாலும் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. வரையாடுகளும் பலவீனமானவை தானே அவை ஏன் எண்ணிக்கையில் கூடவில்லை?

மதவாதிகளுக்கு எப்போதுமே உண்மை தேவையில்லை. தங்களின் மூட நம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்க உண்மை போன்ற திரித்தல்களே தேவை. இவைகளை ஏன் கூறிகிறேன் என்றால், நண்பர் ஆஷிக் கூறும் டார்வின் குறைந்த இனம் எனக் கூறிய ஆப்பிரிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் பரிணாமம் தவறு தானே. எனும் கருத்தும் அந்த வகைப்பட்டதே என்பதற்காகத்தான். தாழ்ந்த இனம் என்றதும் அறிவில் குறைபாடானவர்கள், கற்றுக் கொள்ளும் பண்பில் குறைபாடானவர்கள் என்று கற்பிதம் செய்து கொண்டு டார்வின் நபி பொருத்தமில்லாதவற்றை கூறிவிட்டார். எனவே, அவர் ஏக இறைவனான அல்லாவின் தூதர் அல்ல என்று கூறினால் சிரிக்க மட்டும் தான் முடியும். கவனிக்கவும், பரிணாமம் எப்போதோ டார்வினைக் கடந்து விட்டது.

இன்றைக்கு இருக்கும் மனித இனமான க்ரோமாக்னன், அதற்கு முந்திய நியாண்டர்தால் உட்பட 20க்கும் மேற்பட்ட மனித இனங்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. அந்த இனங்களெல்லாம் எப்படி அழிந்தன? க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும் இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள். ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்? முதலாளித்துவ இனவெறியா? டார்வினின் இனம் குறித்த ஆய்வுகளா? நண்பர் ஆஷிக் தேடல் கொண்டவராக இருந்தால் வரலாறுகளில் பார்வையை பதிக்கட்டும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவை இன்னும் பெற்றிருக்கவில்லை எனும் ஒற்றை காரணத்தின் மேல் நின்று ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எவ்வளவு மக்களை எவ்வளவு இனங்களை சூரையாடியிருக்கின்றன என்பது புரியவரும்.

ஒரு ஹிட்லரோடு ஏன் நண்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்கா ஒருபக்கம் இஸ்லாமிய மதவெறிக்கு தூபம் போட்டும் மறுபக்கம் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி பலனடைவது கூட டார்வின் கூற்றிலிருந்து கிளைத்தது தான் என்று கூட நண்பர் கட்டுரை தீட்டிக் கொள்ளலாம். ஆனால் அவைகளில் உண்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையா?

நண்பர் ஆஷிக்கின் இந்த கட்டுரை முழுவதுக்குமான அடிப்படை சர் ஆர்தர் கீத் என்பவரின் ஒரு மேற்கோளிலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அதாவது ஹிட்லர் பரிணாமக் கொள்கையை ஆதரித்ததால் தான் யூத இனப்படுகொலைகளைச் செய்தார் என்று ஹிட்லரின் செயல்பாடு குறித்து கீத் கூறுவதாக இருக்கிறது அந்த மேற்கோள். பரிணாமவியலின் தன்மைகள் குறித்து ஆராயும் போது தனிப்பட்ட சிலரின் கருத்துகளோ செயல்களோ எந்த அளவுக்கு முக்கியப்படும்? ஹிட்லரின் கொலைக்களத்துக்கும் பரிணாமவியலுக்கும் தொடர்பில்லை என்று மேலே விளக்கப்பட்டிருக்கிறது. நண்பர் ஆஷிக் ஆழமாக இதை விளக்க முன்வரும்போது மேலும் ஆழமாக நாம் மறுக்கலாம். இப்போதைக்கு அதே ஆர்தர் கீத் என்பவரின் அதே “evolution and ethics” நூலிலிருந்து ஒரு மேற்கோள் மட்டும் போதும் எனக் கருதுகிறேன். ஹிட்லர் ஒருபோதும் பரிணாமக் கொள்கையை நிரூபிப்பதற்காக தான் யூதக் கொலைகளை செய்வதாக கூறிக் கொண்டதில்லை. மாறாக, கடவுள் தனக்கு இட்ட பனியை தான் செய்வதாகத் தான் கூறியிருக்கிறார். அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமான The Behavior of Germany Considered from an Evolutionary Point of View in 1942 என்பதில் இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது, “to discuss the question of why Providence created different races, but rather to recognize that it punishes those who disregard its work of creation” அதாவது, “படைப்பு, தன்னை அவமதிப்பவர்களை தண்டிப்பது, கடவுள் ஏன் வெவ்வேறு இனங்களைப் படைக்க வேண்டுமென்ற கேள்வியை விவாதிக்கும் பொழுது ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்” இதற்கு நண்பர் ஆஷிக் என்ன பதில் கூற முற்படுவார் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

இதுபோன்ற பரிணாமத்திற்கு எதிரான தொடர் கட்டுரைகளை நண்பர் எழுதுவதன் நோக்கம் பரிணாமக் கொள்கை தவறு படைப்புக் கொள்கையே சரி என்பது தான். இதை அக்கட்டுரைகளை முடிக்கும் முத்தாய்ப்புகளில் காணலாம். ஆனாலும் எப்படி சரி என்பதை மட்டும் நண்பர் ஆஷிக் உட்பட எந்த மதவாதியும் கூறுவதே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கும் இனி வரப்போகும் கட்டுரைக்குமான ஆதாரக் கேள்வி இது தான். பரிணாமத்தை நுணுகுங்கள் தப்பில்லை. அதில் தவறுகளும் உண்டு, எந்த அறிவியலாளரும் இதை மறுக்கப் போவதில்லை. ஆனால் அப்படி நுணுகி அறிவியலாளர்களால் தவறு என ஒப்புக் கொண்டு ஒதுக்கப்பட்டவைகளுக்கு அலங்காரம் செய்து உங்கள் மூட நம்பிக்கைகளுக்கு மணம் முடிக்க எண்ணாதீர்கள். பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த ஆதாரக் கேள்வி இத்தொடரில் இனி வரவிருக்கும் அத்தனை கட்டுரைகளிலும் தொடரும். பதில் வருமா?

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

19 ஜூன்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

நன்றி: வினவு