Tag Archives: பரிணாமம்

பரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்?

22 ஜூன்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 4

 darwin

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?

 

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ‘ஜல்லியடிப்புகள்’ எனும் சொல்லை ஏன் பாவித்திருக்கிறேன்? ஏனென்றால் மெய்யாகவே நண்பர் ஆஷிக்கின் கட்டுரையில் படைப்புவாதத்தை நிருவுவதாக கருதிக் கொண்டு அத்தனை ஜல்லியடிப்புகளை செய்திருக்கிறார் என்பதால் தான். தலைப்பை எடுத்துக் கொள்வோம், “பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?” பரிணாமம் உண்மையென்றால் இந்த சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆஷிக்? பரிணாமம் குறித்த அறிவியல் நிலை என்ன? புவியில் உயிரினப் பரவலை விளக்கும் சிறந்த கோட்பாடு.கவனிக்கவும் அறிவியல் கோட்பாடு தானேயன்றி அறிவியல் உண்மையல்ல. பெருவெடிப்புக் கொள்கை எப்படி ஓர் அறிவியல் கோட்பாடோ அதே போல் பரிணாமக் கொள்கையும் ஓர் அறிவியல் கோட்பாடு. பெருவெடிப்புக் கொள்கையைவிட சிறந்த கோட்பாடு ஒன்று தோன்றினால் எப்படி பெருவெடிப்புக் கொள்கை காலங்கடந்ததாய் போய்விடுமோ அதேபோன்று சிறந்த வேறொரு கோட்பாடு தோன்றினால் பரிணாமக் கொள்கையும் காலங்கடந்த ஒன்றாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில் உயிரினப் பரவலை விளக்க பரிணாமத்தை விட சிறந்த கோட்பாடு ஒன்று இல்லை. மட்டுமன்றி டார்வின் கூறிய அதே அடிப்படைகளோடு இன்றைய பரிணாமக் கொள்கையும் இல்லை. பின்னர் வந்த அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அலோபதி மருத்துவ முறை தொடங்கி உடற்கூறியல் ஆய்வுகள் வரை அனைத்தும் பரிணாமத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் அறிவியலுக்கும் மதவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு சிறு சான்று கிடைத்தாலும் அதைக் கொண்டு தான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது தள்ளி விடுவது தான் அறிவியலின் இயல்பு.இந்த அடிப்படையில் தான் பரிணாமம் அறிவியல் உண்மையல்ல, அறிவியல் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் உண்மை போல திரிப்பது எதற்காக? அப்போது தான் தங்கள் மதவாத புரட்டுகளை உண்மைபோல திணிக்கமுடியும் அதற்காக.

 

தலைப்பை அடுத்து ஒரு மீப்பெரும் பொய்யுடன் தன் கட்டுரையை தொடங்குகிறார் ஆஷிக். படைப்புவாதிகளின் வாதங்களுக்கு பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் தகுந்த பதிலளிக்கவில்லையாம். அறிவியலாளர்களை விட்டுவிடுங்கள்,மதவாதிகளுக்கு பதில் கூறும் சுமையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பொறுப்பை பொருள்முதல்வாதிகள் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கே உங்கள் வாதங்களை எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அதாவது பொருள்முதல்வாதிகள் பதிலளிக்காத மதவியாதிகளின் கேள்விகள் ஏதேனும் மிச்சம் இருந்தால் .. .. .. அப்படி எந்த வாதமேனும் இருக்கிறதா?பொருள்முதல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி எழுப்பியவர்களை தாக்கியும், முடக்கியும், கொன்றும் வருகிறார்கள் மதவாதிகள். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கில்லை. அறிவியலாளன் முதல் சாமானியன் வரை மதவியாதிகளின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்துக்கும் ஆளானவர்களின் பட்டியல் வேண்டுமா?வரலாற்றில் தேடிப்பாருங்கள், பக்கங்கள் போதாது. இப்படி ஒரு அறுவெறுக்கத்தக்க பக்கத்தை தாங்கி நிற்கும் மதவாதிகளா தங்களின் வாதங்களுக்கு பதிலில்லை என்று பேசுவது?

 

அடுத்து, அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதால் பரிணாமத்தை நிராகரிக்க முடியுமா? பெருவெடிப்புக் கொள்கை குறித்தும் அறிவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதன் காரணத்தைக் கொண்டு மதவாதிகள் ஏன் அதை நிராகரிக்கக் கூடாது? இந்த இடத்தில் ஒப்பீட்டளவில் ஏன் பெருவெடிப்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்கிறேன் எனும் கேள்வி எழக் கூடும். ஏனென்றால் நண்பர் ஆஷிக் போன்ற மதவாதிகள் பெருவெடிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாலும், பரிணாமத்திற்கான காரண கரியங்கள் பெருவெடிப்புக்கும் பொருந்தும் என்பதாலும், மதவாதிகளின் அறிவியல் பார்வை அவர்களின் வேதத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது மட்டும் தானேயன்றி அறிவியல் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தவும் தான்.

 

ஒரு ஆய்வில் கருத்து வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கொண்டு அந்த ஆய்வின் தன்மைகள் ஒரு போதும் தீர்மானிக்கப் பட்டதில்லை. அது நடைமுறையோடு பொருந்துகிறதா? மீண்டும் மீண்டும் சோதித்தறிய ஏதுவாய் இருக்கிறதா?சரியாய் இருக்கிறதா? என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஆனால் பரிணாமத்தை நிராகரிக்கக் கோரும் மதவாதிகள் கூறும் காரணங்கள் இந்த எல்லைக்குள் இருப்பதே இல்லை. அறிவியல் செய்யும் அனைத்து ஆய்வுகள் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கருத்து வேறுபாடுகள் அந்த ஆய்வை மேலும் செழுமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.ஆனாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் பரிணாமத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமன்றி பரிணாமத்தை எதிர்க்கும் அறிவியலாளர்களும் கூட பரிணாமவியல் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிற கோட்பாடுகளின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட பரிணாமத்தின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். இதற்கான காரணம் என்ன?

 

அறிவியல் உண்மைகளின் மீது கருத்து வேறுபாடுகள் எதுவும் எழுவதில்லை. கோட்பாடுகளில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் எழும். அறிவியல் கோட்பாடுகளின் மீதான கருத்து வேறுபாடுகள் எதில் குறைவாக இருக்கிறது எதில் அதிகமாக இருக்கிறது என்பதை பகுத்துப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கி விடும். அந்த வகையில் கடவுளை மதங்களை நேரடியாகத் தாக்கும் எந்தக் கோட்பாடுகளின் மீதும் கருத்து வேறுபாடுகள் கடுமையாக எழுந்திருக்கின்றன. கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மீது எழாத கருத்து வேறுபாடுகளா? புரூணோவின் மீது செய்யப்படாத விமர்சனங்களா? கம்யூனிசத்தின் மீது செய்யப்படாத அவதூறுகளா? (கம்யூனிசம் என்பது அரசியல் கட்சிக் கோட்பாடு அல்ல, இயங்கியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக அறிவியல் என்பதை அறிக) இந்த அடிப்படையில் தான் பரிணாமத்தின் மீதும் கருத்து வேறுபாடுகள் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது பன்னெடுங்காலமாக தாங்கள் நம்பிவரும் நம்பிக்கையின் மீதான பற்றுறுதியின் விளைவே பரிணாமத்தின் மீதான இவ்வளவு கருத்து வேறுபாடுகளுக்குமான காரணம். அறிவியலாளர்களிலும் அனேகர் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

 

அறிவியலாளர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் அல்லர். அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்களோ அதில் மட்டுமே அவர்கள் சிறந்தவர்கள். அறிவியலாளர்களுக்கும் மூடநம்பிக்கைகள் உண்டு. எடுத்துக்காட்டு ஒவ்வொரு முறை ஏவூர்தியை(ராக்கெட்) ஏவும்போதும் பூஜை செய்து ஏவுவது ஸ்ரீஹரிகோட்டாவில் வாடிக்கை, அவ்வளவு ஏன் சந்திராயன்1ஏவூர்தி மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து விட்டு பின்னர் ஏவியிருக்கிறார்கள். இதைச் செய்தது அறிவியலாளர்கள் என்பதால் அவர்களின் செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? எது அறிவியலின் அடிப்படையில் சரியாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். இப்போது நண்பர் ஆஷிக் கொடுத்திருக்கும் பட்டியலிலுள்ள இருநூற்றுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் பரிணாமத்தை எதிர்க்கிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? கூறுங்கள் பரிசீலிக்கலாம். ஐ.டி.யை ஏற்பவர்கள் பரிணாமத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை.அவர்கள் எந்த அடிப்படையில் ஏற்கவில்லை என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் பரிசீலிப்பதற்கு வசதியாக இருக்கும்.ஏனைய கோட்பாட்டை ஏற்பவர்கள் எனும் அடிப்படையில் பரிணாமத்தை மறுக்கிறார்களா? அல்லது பாலாஜியின் காலில் வைத்தார்களே அந்த அடிப்படையில் மறுக்கிறார்களா? பாலாஜியின் காலில் வைத்த அடிப்படை என்றால் அதை புறந்தள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை.

 

அடுத்து நண்பர் ஆஷிக் மேற்கோள் காட்டும் கட்டுரையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அம்சங்களும் அந்த கட்டுரையில் இருக்கிறது. நண்பர் ஆஷிக்கின் மொழிபெயர்ப்பு வாயிலாகவே பார்ப்போம். \\\ஆச்சர்யமளிக்கும் வகையில்,தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் படைப்பு கோட்பாடை நம்புகின்றனர்/// \\\இந்த அறிவியலாளர்கள் அனைவரும், கடவுள்தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார், இவைகள் தற்செயலாக வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள்/// இந்த இரண்டு கூற்றுகளையும் பாருங்கள். நிச்சயமாக இவை அறிவியலாளர்களின் கூற்றுகளாய் இருந்திருக்க முடியாது. படைப்புக் கோட்பாட்டை நம்புபவர்கள் அதை அறிவியல் அடிப்படையில் நம்ப முடியுமா?பாலாஜியின் காலில் வைத்த அடிப்படையில் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்பினால் அது அறிவியலின் வழியில் வந்த முடிவாக இருக்க முடியாது. அறிவியலின் வழி பார்த்தால் நிச்சயம் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்ப வாய்ப்பில்லை.தற்செயலாக இவ்வுலகம் வந்தது என்பது மதவாதிகள் பாவிக்கும் சொல். இச்சொல் ஒரு அறிவியலாளனின் வாயிலிருந்து வந்திருக்க முடியாது. ஏனென்றால் அறிவியலாளர்கள் எல்லாம் ஒரு சிங்குலாரிடியிலிருந்து வந்தது அதற்கு முன் அதற்கு முன் என்னவென்றி இன்னும் அறியப்படவில்லை என்று தான் கூறுவார்களேயன்றி பேரண்டம் தற்செயலாக வந்தது என்று கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவது அறிவியலே அல்ல. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் எளிமையாக விளக்கலாம்.இருவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புதுச் சட்டை அணிந்திருக்கிறார், மற்றொருவரோ நைந்து கிழிந்து இற்றுப் போயிருக்கும் சட்டையை அணிந்து கொண்டிருக்கிறார். இப்போது இன்னொருவர் வந்து கையில் உருப் பெருக்கியுடன் புதுச் சட்டையை உற்றுப் பார்த்து இந்த இடத்தில் ஒரு நூல் அருந்திருக்கிறது, அந்த இடத்தில் ஒரு நூல் வண்ணம் மாற்றி நெய்யப்பட்டிருக்கிறது, இன்னொரு இடத்தில் ஒரு நூலின் முறுக்கு குறைவாக இருக்கிறது. பிறிதொரு இடத்திலோ ஒரு நூல் எதிர்முறுக்காக இருக்கிறது. எனவே, நான் நைந்து போன சட்டையை ஏற்கிறேன் என்று அவர் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இப்போது கூறுங்கள் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

 

இன்னொரு அம்சத்தையும் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல் ஆய்வு என்பவை, அறிவியலாளர்கள் என்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு ஒப்பவே அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நலன் காக்காத, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எந்த ஒரு ஆய்வையும் எந்த ஒரு அறிவியலாளனும் நிகழ்த்திவிட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம்.ஏகாதிபத்தியங்களுக்கு கடவுள் நம்பிக்கை உதவி செய்ய வல்லது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.

 

அடுத்து, ஒரு முக்கியமான இடத்துக்கு வருவோம். குறிப்பிட்ட அந்த டெலிகிராப் நாளிதழில் வெளியிட்ப்பட்ட அறிக்கை டார்வினின் சொந்த வாழ்வை முன்வைத்து எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தினை முன்வைத்து எழுதப்பட்டது என்பதை நண்பர் ஆஷிக் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டால் அது ஓர் அறிவியல் கட்டுரை போன்ற தோற்றத்துக்கு உதவாது என நண்பர் நினைத்திருக்கலாம். பரவாயில்லை அதை விட்டு விடுவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் தவிர்க்க முடியாத அம்சம் பரிணாமத்தை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் கூறப்படும் ஐந்து காரணங்கள். இவைகளை நண்பர் ஆஷிக் லேசாக தொட்டு விட்டு கடந்து சென்று விட்டார். அந்த காரணங்களைப் பார்க்கலாம்.

 

பரிணாம ஆதரவு வாதங்கள்:

  1. உயிரினப் பரவலை பரிணாமக் கோட்பாடுபோல் வேறெதுவும் விளக்கவில்லை.
  1. பரிணாமக் கோட்பாடு விளக்கமாகவும் பொருள் சார்ந்தும் இருக்கிறது.
  1. பெரும்பாலான அறிவியல் சமூகமும் கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுவங்களும் பரிணாம கோட்பாட்டை ஆதரிக்கிறது.
  1. பேரண்டம் தோன்றிய காலம் குறித்து வேதங்கள் கொடுக்கும் கணக்கு ஏற்புடையதாக இல்லை.
  1. நோவாவின் கப்பலைக் காட்டுங்கள்.

 

பரிணாம எதிர்ப்பு வாதங்கள்:

  1. பரிணாமக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை. இருந்திருந்தால் நமக்கு இன்னும் அதிகம் உயிரினப் படிவங்கள் கிடைத்திருக்கும்.
  1. பரிணாமவாதிகளின் கூற்றுப்படி உலகம் பழையது என்றால் கிடைத்திருப்பதை விட இன்னும் அதிகம் எலும்புக் கூடுகளும், குகை ஓவியங்களும் கிடைத்திருக்க வேண்டும். கடலில் இன்னும் அதிகம் சோடியம் குளோரைடும், அதிக வண்டலும் சேர்ந்திருக்க வேண்டும்.
  1. இருட்டில் பார்ப்பதற்கு சில உயிரினங்கள் செயல்படுத்தும் கூட்டுக் கண் குறித்து பரிணாமத்தில் தெளிவான விளக்கங்கள் இல்லை.
  1. வேதத்தில் பூமியின் படைப்பில் வரும் நாட்கள் என்பதை காலங்கள் என்று கொள்ள வேண்டும்.
  1. என்ன நோக்கத்திற்காக இவைகளெல்லாம் ஏற்பட வேண்டும்?

 

இந்தக் காரணங்களை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இவை கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களாக இருக்கிறது என்று. பரிணாமத்தை முதன்மைப்படுத்தி கேட்கப்பட்ட கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களை அந்தக் கட்டுரை பரிணாமத்திற்கான காரணங்களாக குறுக்க வேண்டிய அவசியமென்ன? எளிமையான காரணம் தான். பரிணாமத்தை திரித்துப் புரட்டி ஆஷிக் பாய் தமிழில் எழுதும் கட்டுரைகள் போலவே ஆங்கிலத்தில் யாரோ ஒரு மஹானுபாவர் கட்டுரை எழுத அதை டெலிகிராப் பத்திரிக்கை பிரசுரிக்க அதைப் பார்த்த ஆஷிக் புளகமடைந்து போய் கொஞ்சம் கூட்டிக் குறைத்து தமிழ்க் கட்டுரையாக்கி விட்டார். அவ்வளவு தான்.

 

இந்தக் கட்டுரையில் நண்பர் ஆஷிக் பிம்பமாக்கல் ஒன்றையும் செய்திருக்கிறார். பரிணாமத்தை எதிர்க்கிறேன் என்று எந்த ஆய்வாளரும் கருத்து தெரிவித்து விட்டால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாவாராம் அதனால் பரிணாம எதிர்ப்பை வெளிப்படையாக கூற தயங்குகிறார்களாம். இதற்கு பின்னூட்டத்திலும் விளக்கங்கள் அளித்திருக்கிறார். படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.யார் எதை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்குவார்கள் என்பதற்கு நிகழ் காலத்திலும் வரலாறுகளிலும் அனேக சான்றுகள் உண்டு, எனவே அவைகளை விட்டு விட்டு ஆஷிக்கின் பின்னூட்ட பதில்களிலிருந்து பார்ப்போம். பரிணாமவியலை எதிர்த்து கருத்து கூறினால் என்ன நடக்கும்? அவர்களது கட்டுரை பிரசுரிக்கப்படாது அதிகபட்சம் வேலை இழக்கலாம். ஆனால் இது எங்கே நடக்கிறது என்று ஆஷிக் கூறுகிறார்? NAS போன்ற பரிணாமத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்போர். அதை எதிர்த்து கருத்து கூறமுடியாது. கூறினால் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாதாம் வேலையிழப்பார்களாம். திமுகவில் இருந்து கொண்டு கருணாநிதியை எதிர்த்து கட்டுரை எழுதி அதை முரசொலியில் பிரசுரிக்கவில்லை, திமுகவை விட்டு தூக்கிவிட்டார்கள் என்று கூக்குரலிட்டால் அது எப்படி இருக்கும்?ஜனநாயக அமைப்பாக இருந்தால் அது விமர்சனங்களைப் பரிசீலிக்கும் இல்லாவிட்டால் அதன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். இதை பரிணாமத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உலகில் இருக்கமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நேர்மையாளர்களின் செயலா? நண்பர் ஆஷிக்கிற்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான், வரலாற்றை திரும்பிப் பாருங்கள் ஆத்திகர்களின் கைகளில் சிக்கி நாத்திகர்கள் அனுபவித்த ரத்தக்கரை படிந்த நீண்ட நெடிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். அது ஏன் என்பதற்கான பதிலை தேடிப் பாருங்கள். புரியாமல் நீங்கள் மதவாதியாக இருந்தால் அது உங்களுக்கு புரிதலைத் தரும். தரவேண்டும்.

ஆஷிக் உட்பட அத்தனை மதவாதிகளும் பதிலளிக்காத, பதிலளிக்க விரும்பாத, பதிலளிக்க முடியாத நம்முடைய ஆதாரக் கேள்வி – பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். எங்கே உங்களின் படைப்புக் கொள்கை சரி என்பதற்கான ஆதாரங்கள்?

 

இதற்கு மேலும் இந்தக் கட்டுரையை நீட்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை நண்பர் ஆஷிக் மேற்கண்ட ஐந்து காரணங்களுக்கும் விளக்கம் வேண்டும் எனக் கோரினால் அப்போது இந்தக் கட்டுரையின் பின் இணைப்பாக அவைகளை விளக்கி அடுத்த கட்டுரையாக எழுதிக் கொல்ளலாம்.

இத்தொடரின் முந்திய கட்டுரைகள்:

1. எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

2. புரிதலை மறுக்கும் புதிர்கள்

3. டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

24 ஏப்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 3

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் சொல்லப்படாத இரகசியங்கள்.

முதலில் நாம் சில அடிப்படை புரிதல்களை விளங்கிக் கொள்ள வேண்டும். மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும், எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில் செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல் முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல, அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும், அதன் பின்னர் துருவங்களில் சற்றே தட்டையான உருண்டை என்றும் அந்த முடிவுகள் மாற்றப்பட்டது. இதை முரண்பாடு என்று கொள்வதும், அறிவியல் தவறு என்று கொள்வதும் பிழையானவைகள், புரிதலற்றவைகள். ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் மதத்தை அதன் வேதங்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் அறிவியலை நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அறிவியல் முடிவுகள் மாறும் இயல்புடையவை. ஆனால் அந்த மாறுதல்களுக்கும் சான்றுகள், ஆதாரங்கள் வேண்டும்.

இந்த அடிப்படையில் பரிணாமவியலைப் பார்த்தால், டார்வின் பரிணாமவியலுக்கு பருண்மையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலிருந்து பலரின் பங்களிப்புகளோடு அது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பரிணாமவியல் டார்வினிலிருந்து தொடங்கவும் இல்லை, டார்வினோடு முற்றுப் பெறவும் இல்லை. பருண்மையான தொடக்கம் என்பதன் பொருள் அவருக்கு முனே சிலர் பரிணாமவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், டார்வின் ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அளவுக்கு ஆய்வுகளைச் செய்ததும் முடிவுகளைக் கண்டடைந்ததும் ஆகும். மட்டுமல்லாது, அவரின் ஒவ்வொரு முடிவுகளும் எந்த மாறுதல்களுக்கும் இடமில்லாத அறுதிகளும் அல்ல. ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் தங்களின் தூதர்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். டார்வின் கடவுளோ தூதரோ அல்லர். அவர் ஓர் அறிவியலாளர் மட்டுமே. அவரின் அறிவியல் முடிவுகள் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தேறுபவைகள் நிற்கும் அல்லாதவைகள் தள்ளப்படும்.

இந்த அடிப்படையை விலக்கி விட்டு, அறிவியலுக்கு முரணான பார்வையில் அறிவியலை அணுகினால் அது நேர்மையற்றதாக இருக்கும் அல்லது மதவாதமாக இருக்கும். எதிர்க்குரல் எழுப்பும் நண்பர் ஆஷிக்கின் குரலும் மதவாதக் குரல் தான். ஆனால் சற்றே அறிவியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது.

தான் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் வரையிலும் மாபெரும் அறிஞராக அறிவியலாளராக மதிக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். ஏன் இப்போதும் கூட அவருக்கு அந்த மரியாதை உண்டு. அவர் தன்னுடைய ஆய்வின் விளைவாக புவியை மையமாகக் கொண்டே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு 15ம் நூற்றாண்டின் கோபர்நிகஸ் காலம் வரை செல்வாக்குடன் இருந்தது.
சில பத்தாண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தினர் 16 பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றான் ஜெயப்பிரகாஷ் என்பவன். அவன் பிடிபட்டபோது அதற்கு அவன் கூறிய காரணம் நூறாவது நாள் படம் பார்த்தது தான் என்பது.
இந்த இரண்டையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால் அது நண்பர் எதிர்க்குரல் ஆஷிக்கின் பதிவை ஒத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இனி கட்டுரைக்குத் திரும்புவோம்.

அவர் கட்டுரையின் தொடக்கமே அதிரடியாய் இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை தான் இனவெறிக்கு வித்திட்டது என்கிறார். இனவெறிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பரிணாமக் கொள்கையைக் கூறி ஹிட்லர் தன்னை நியாய்ப்படுத்திக் கொள்ள முயன்றார். 16 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் போல. ஒரு மனித இனத்தை விட இன்னொரு மனித இனம் மேம்பட்டது என்பதை பரிணாமத்தை ஏற்பவர்கள் நம்ப(!) வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அறிவியலை நம்புபவர்கள், அரிஸ்டாட்டிலை மதிப்பவர்கள் இன்றும் புவி தான் மையம் என்று தான் கூற வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.

முதலாளித்துவம் வளர்ந்த பிறகு தான் தேசிய இனம் எனும் கொள்கையும், அதனடிப்படையில் இனவெறியும் தோன்றின. நிலப்பிரபுத்துவ காலங்களிலெல்லாம் இனப்பாகுபாடு பெரிய அளவில் இல்லை. அந்த காலகட்டங்களில் உலகமெங்கும் இருந்த அரசுகளை மக்கள் இனம் எனும் அடிப்படையில் எந்த மன்னனையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்ததாக வரலாறு இல்லை. அரேபிய முகம்மதின் தோன்றல்கள் துருக்கியை ஆண்டபோது இன அடிப்படையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஐரோப்பிய இனம், ஆப்பிரிக்க இனம், மங்கோலிய இனம் என்பதெல்லாம் தோற்றவேறுபாடுகளைக் கொண்டு அறிதலுக்காக பிரிக்கப்பட்ட அறிவியல் பகுப்புகள். இது நண்பர் ஆஷிக் கூறும் இனத்தில் சேராது. ஆனால் இன மேம்பாடு குறித்து விதந்தோத நண்பர் எடுத்துக் கொண்ட ஹிட்லர் கொன்றழித்த கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஹிட்லரின் இனமான அதே ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நண்பருக்கு ஏன் மறந்து போனது? பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும், ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார்? ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள் அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர். இது தேசியவாதமா? பரிணாமவாதமா? நண்பர் ஆஷிக் பதில் கூறுவாரா? ஆக ஹிட்லரின் இனவெறிக்கும் பரிணாமத்துக்கும் எந்தவித ஒட்டும் இல்லை. ஜெயப்பிரகாஷ் சொல்லிவிட்டான் என்பதற்காக கதை எழுதிய மணிவண்ணனை குற்றம் சொல்வது எந்த விதத்தில் சரி நண்பரே?

ஹிட்லரையும் டார்வினையும் பசை போட்டு ஒட்டுவதற்கு நண்பர் ஆஷிக் பயன்படுத்தியவை என்ன? The Preservation of Favoured Races in the Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள் அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக் கொண்டு அவர் கூறுவது என்ன? “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு” இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா? அல்லது, தகுதியுடயவை நீடிக்கும் என்பதில் இனவெறி கருக் கொண்டிருக்கிறதா?

முதலில் டார்வின் பயன்படுத்திய இனம் எனும் சொல்லின் பொருளும், நண்பர் ஆஷிக் பயன்படுத்தியிருக்கும் இனம் எனும் சொல்லின் பொருளும் வேறு வேறானது. டார்வின் பயன்படுத்தியது காக்கோசிய இனம், நீக்ராய்டு இனம், மங்கலாய்டு இனம் எனும் அறிவியல் சார்ந்த அதாவது தோற்றப்பாகுபாட்டில் மனிதனைப் பிரிக்கும் இனங்கள். அந்த அடிப்படையில் காக்கோசிய (ஐரோப்பிய) இனம் நீக்ராய்டு (ஆப்பிரிக்க) இனத்தைவிட காலத்தால் பிற்பட்டது, புதிய பரிணமிப்பு. அதாவது நீக்ரய்டுகளை விட துருவப்பனியின் தாக்கத்தால் தோற்றத்தில் மாற்றம் பெற்று புதிய தகவமைப்புகளுடன் கூடியவன் காக்கோசிய மனிதன். ஆனால் நீக்ராய்டைவிட முன்னேறியவனா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஏனென்றால் அறிவியல் கூறும் இனம் என்பது, டார்வின் கூறும் இனம் என்பது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வேறுபாடு நண்பருக்கு தற்செயலாக தெரியாமல் போனதா? அல்லது தான் எழுத நினைப்பதை எழுதுவதற்கு தெரியாததாய் காட்டிக் கொள்வதுதான் வசதி என்று கருதினாரா?

தகுதியுடையவை நீடிக்கும் என்பதின் பொருள் என்ன? இந்த சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன் சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்(!). இது சரியா? வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்து உலகில் நிற்பதற்கு தகுதி வேண்டும். பூமியில் தோன்றி தொன்னூறு விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன. அவற்றுள் மிகப்பலமானதாக கருதப்படும் டினோசர்களும் அடக்கம். தோராயமாக மூன்றுகோடி ஆண்டுகள் பூமியை ஆக்கிரமித்திருந்த டினோசர்களுக்கு இல்லாத தகுதி தற்போது ஆடுகளுக்கு இருக்கிறதா? ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக் கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால் அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின் தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும் ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா? இந்த ஆடுகள் மட்டும் தான் எண்ணிக்கையில் பெருகுகின்றன. ஆனால் வரையாடுகள். அதை மனிதன் உணவாக கொள்வதில்லை. தமிழக அரசின் பாதுகாப்பில் இருந்தாலும் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. வரையாடுகளும் பலவீனமானவை தானே அவை ஏன் எண்ணிக்கையில் கூடவில்லை?

மதவாதிகளுக்கு எப்போதுமே உண்மை தேவையில்லை. தங்களின் மூட நம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்க உண்மை போன்ற திரித்தல்களே தேவை. இவைகளை ஏன் கூறிகிறேன் என்றால், நண்பர் ஆஷிக் கூறும் டார்வின் குறைந்த இனம் எனக் கூறிய ஆப்பிரிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் பரிணாமம் தவறு தானே. எனும் கருத்தும் அந்த வகைப்பட்டதே என்பதற்காகத்தான். தாழ்ந்த இனம் என்றதும் அறிவில் குறைபாடானவர்கள், கற்றுக் கொள்ளும் பண்பில் குறைபாடானவர்கள் என்று கற்பிதம் செய்து கொண்டு டார்வின் நபி பொருத்தமில்லாதவற்றை கூறிவிட்டார். எனவே, அவர் ஏக இறைவனான அல்லாவின் தூதர் அல்ல என்று கூறினால் சிரிக்க மட்டும் தான் முடியும். கவனிக்கவும், பரிணாமம் எப்போதோ டார்வினைக் கடந்து விட்டது.

இன்றைக்கு இருக்கும் மனித இனமான க்ரோமாக்னன், அதற்கு முந்திய நியாண்டர்தால் உட்பட 20க்கும் மேற்பட்ட மனித இனங்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. அந்த இனங்களெல்லாம் எப்படி அழிந்தன? க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும் இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள். ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்? முதலாளித்துவ இனவெறியா? டார்வினின் இனம் குறித்த ஆய்வுகளா? நண்பர் ஆஷிக் தேடல் கொண்டவராக இருந்தால் வரலாறுகளில் பார்வையை பதிக்கட்டும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவை இன்னும் பெற்றிருக்கவில்லை எனும் ஒற்றை காரணத்தின் மேல் நின்று ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எவ்வளவு மக்களை எவ்வளவு இனங்களை சூரையாடியிருக்கின்றன என்பது புரியவரும்.

ஒரு ஹிட்லரோடு ஏன் நண்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்கா ஒருபக்கம் இஸ்லாமிய மதவெறிக்கு தூபம் போட்டும் மறுபக்கம் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி பலனடைவது கூட டார்வின் கூற்றிலிருந்து கிளைத்தது தான் என்று கூட நண்பர் கட்டுரை தீட்டிக் கொள்ளலாம். ஆனால் அவைகளில் உண்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையா?

நண்பர் ஆஷிக்கின் இந்த கட்டுரை முழுவதுக்குமான அடிப்படை சர் ஆர்தர் கீத் என்பவரின் ஒரு மேற்கோளிலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அதாவது ஹிட்லர் பரிணாமக் கொள்கையை ஆதரித்ததால் தான் யூத இனப்படுகொலைகளைச் செய்தார் என்று ஹிட்லரின் செயல்பாடு குறித்து கீத் கூறுவதாக இருக்கிறது அந்த மேற்கோள். பரிணாமவியலின் தன்மைகள் குறித்து ஆராயும் போது தனிப்பட்ட சிலரின் கருத்துகளோ செயல்களோ எந்த அளவுக்கு முக்கியப்படும்? ஹிட்லரின் கொலைக்களத்துக்கும் பரிணாமவியலுக்கும் தொடர்பில்லை என்று மேலே விளக்கப்பட்டிருக்கிறது. நண்பர் ஆஷிக் ஆழமாக இதை விளக்க முன்வரும்போது மேலும் ஆழமாக நாம் மறுக்கலாம். இப்போதைக்கு அதே ஆர்தர் கீத் என்பவரின் அதே “evolution and ethics” நூலிலிருந்து ஒரு மேற்கோள் மட்டும் போதும் எனக் கருதுகிறேன். ஹிட்லர் ஒருபோதும் பரிணாமக் கொள்கையை நிரூபிப்பதற்காக தான் யூதக் கொலைகளை செய்வதாக கூறிக் கொண்டதில்லை. மாறாக, கடவுள் தனக்கு இட்ட பனியை தான் செய்வதாகத் தான் கூறியிருக்கிறார். அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமான The Behavior of Germany Considered from an Evolutionary Point of View in 1942 என்பதில் இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது, “to discuss the question of why Providence created different races, but rather to recognize that it punishes those who disregard its work of creation” அதாவது, “படைப்பு, தன்னை அவமதிப்பவர்களை தண்டிப்பது, கடவுள் ஏன் வெவ்வேறு இனங்களைப் படைக்க வேண்டுமென்ற கேள்வியை விவாதிக்கும் பொழுது ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்” இதற்கு நண்பர் ஆஷிக் என்ன பதில் கூற முற்படுவார் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

இதுபோன்ற பரிணாமத்திற்கு எதிரான தொடர் கட்டுரைகளை நண்பர் எழுதுவதன் நோக்கம் பரிணாமக் கொள்கை தவறு படைப்புக் கொள்கையே சரி என்பது தான். இதை அக்கட்டுரைகளை முடிக்கும் முத்தாய்ப்புகளில் காணலாம். ஆனாலும் எப்படி சரி என்பதை மட்டும் நண்பர் ஆஷிக் உட்பட எந்த மதவாதியும் கூறுவதே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கும் இனி வரப்போகும் கட்டுரைக்குமான ஆதாரக் கேள்வி இது தான். பரிணாமத்தை நுணுகுங்கள் தப்பில்லை. அதில் தவறுகளும் உண்டு, எந்த அறிவியலாளரும் இதை மறுக்கப் போவதில்லை. ஆனால் அப்படி நுணுகி அறிவியலாளர்களால் தவறு என ஒப்புக் கொண்டு ஒதுக்கப்பட்டவைகளுக்கு அலங்காரம் செய்து உங்கள் மூட நம்பிக்கைகளுக்கு மணம் முடிக்க எண்ணாதீர்கள். பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த ஆதாரக் கேள்வி இத்தொடரில் இனி வரவிருக்கும் அத்தனை கட்டுரைகளிலும் தொடரும். பதில் வருமா?

புரிதலை மறுக்கும் புதிர்கள்

21 செப்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 2

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக் கின் பதிவு: புரியாதப் புதிர்கள்..

 

பரிணாமக் கோட்பாடு. மனிதன் எப்படி தோன்றினான் வளர்ந்தான் எனும் சிந்தனை எப்போதும் மனிதனுக்கு இருந்துகொண்டே வந்திருக்கிறது. இதற்கு அறிவியல் அடிப்படையில் முதலில் விளக்கமளிக்க முயன்றவர் டார்வின். இந்த ஆய்வுகளை டார்வின் தான் முதலில் தொடங்கினார் என்று கூறமுடியாவிட்டாலும் – டார்வினின் சம காலத்தில் லாவொஷியர் போன்ற பலர் இந்த ஆய்வை செய்து வந்தனர் – டார்வினே இந்தக் கோட்பாட்டை பருண்மையாக உருவாக்கியவர். மட்டுமல்லாது தொடர்ந்து வந்த பலராலும் இக் கோட்பாடு செழுமைப்படுத்தப்பட்டு வந்தது, வருகிறது. மனித வாழ்வை புரட்டிப் போட்ட வெகுசில அறிவியல் கோட்பாடுகளில் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பான இடம் உண்டு. அதே நேரம் முன்வைக்கப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருசில அறிவியல் கோட்பாடுகளிலும் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பிடம் உண்டு.

 

பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்ப்பவர்களில் முதன்மையானவர்கள் மதவாதிகள். ஏனென்றால் கடவுளே மனிதனைப் படைத்தான் எனும் சிந்தனையின் அடி வேரிலேயே பரிணாமம் வெடி வைத்து விட்டது. ஆனாலும் ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பரிணாமக் கொள்கையை எதிர்ப்பதைப் போல் இந்தியாவின் பார்ப்பனிய (இந்து)மதம் அத்தனை மூர்க்கமாக எதிர்ப்பதில்லை. காரணம் அதன் அவதாரப் புரட்டுகளுக்கு ஓர் அறிவியல் பொருளை தந்திருப்பதாக அவர்கள் நம்புவது தான். மற்றொரு வகையில் பரிணாமக் கோட்பாட்டை மறுப்பவர்கள் யாருமில்லை என்று கூறிவிடலாம். எளிதாக இப்படிக் கூற பலரும் ஒப்புவதில்லை என்பதால் அதை இரண்டாகப் பிரிக்கலாம். 1. பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் 2. கோட்ப்பாட்டு ரீதியாக ஏற்பவர்கள். கோட்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் குறிப்பாக மருத்துவர்கள் பொதுவாக மக்கள் அனைவரும். ஏனென்றால் அல்லோபதி மருத்துவம் முழுமையாக பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆய்கிறது, தீர்க்கிறது, மருத்துவம் செய்கிறது. மற்றப்படி பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றால் அதன் பொருள் பயன்பாட்டு ரீதியாக ஏற்று கோட்பாட்டு ரீதியில் மறுக்கிறார்கள் என்பதே.

 

இது ஒருபுறமிருக்கட்டும் கடவுளை மறுப்பது என்பதற்கு பரிணாமக் கோட்பாடு மட்டுமே அடிப்படையா என்றால் இல்லை என்பதே பதில். இயங்கியல் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையிலேயே கடவுள் மறுப்பு இயங்கி வருகிறது, பரிணாமம் அதற்கு உற்ற துணைவன். இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதன் கருப்பொருள் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே. கடவுளை ஆதாரப்படுத்த விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது இயங்கியல் பொருள்முதல் வாதத்தை மறுப்பதுதான். யாரும் அதைச் செய்வதில்லை என்பதோடு மட்டுமில்லாமல் அதை புரிந்து கொள்வதற்கும் முயல்வதில்லை. எனவே தான் பரிணாமக் கோட்பாடு எளிய இலக்காகி விட்டது. இதற்கு ‘எதிர்க்குரல்’ ஆஷிக் பாய் மட்டும் விலக்காகி விட முடியுமா என்ன?

 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இதைத் தீர்ப்பதற்கு பரிணாமக் கோட்பாட்டை துணைக்கழைப்பது தேவையில்லாதது. ஏனென்றால் பரிணாமக் கோட்பாட்டின் பணி பூமியில் உயிரினம் தோன்றி வளர்ந்த வரலாற்றை விவரிப்பது மட்டுமே. அறிவியலின் அடிப்படையில் கடவுள் இருக்கக் கூடுமா என்று கேட்டால் அது எளிமையான பதில் தான். எப்போதும் நிலைத்து நின்று இயங்கக் கூடிய ஆற்றல் ஒன்று உண்டா என்றால் அறிவியலின் பதில் இல்லை என்பதே. எனவே கடவுள் என்று ஒன்று இல்லை.

 

பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கிறதா? இது தான் நண்பர் ஆஷிக் முன்வைத்திருக்கும் கேள்விகளுள் முதன்மையானது. இதை விரிவாகப் பார்க்கலாம். முதலில் பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்பட்டதா? இல்லை. கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்படாத ஒரு கோட்பாட்டை, அது கடவுளை மறுக்கவில்லை எனவே கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமாக மட்டுமே இருக்க முடியும். அதேநேரம் அந்தக் கோட்பாட்டை அலசினால் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு நம்மால் வரமுடியும். உலகில் தற்போது நிலவும் அனைத்து மத, கடவுட் கோட்பாடுகளையும் எடுத்துக் கொண்டால்; உலகில் மனிதர்களின் தோற்றம் குறித்து அவை கூறுவது கடவுள் எந்த முன்மாதிரியும் இல்லாமல் மனிதனைப் படைத்தார் என்பது தான். ஒவ்வொரு மதமும் தனித்தனியே இதன் விகிதங்களில் மாறுபட்டாலும் சாராம்சத்தில் கடவுள் படைத்தார் என்பதில் அனைத்து மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும் ஒன்றுகின்றன. ஆக, உலகிலிருக்கும் எல்லா மதங்களும் அதாவது எல்லா கடவுள் நம்பிக்கைகளும் ஏற்கும் ஒன்றை பரிணாமக் கோட்பாடு மறுக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது, கடவுளை பரிணாமக் கோட்பாடு மறுக்கவில்லை என்றா? தம் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளைத் திரிப்பது என்பது இதுதான்.

 

நண்பர் ஆஷிக் தன்னுடைய விருப்பங்களுக்காக ரிச்சர்ட் டாக்கின்சையோ, டாக் ஆர்ஜின்ஸ் தளத்தையோ துணைக்கழைப்பது உள்நோக்கம் கொண்டது. தன்னுடைய நிலையை விளக்கி அதன் தெளிதலுக்கான எடுத்துக்காட்டாய் டாக்கின்சின் கூற்றையோ, இணையதளக் கட்டுரைகளையோ காட்டினால் அது தவறல்ல, ஆனால் தன்னுடையை நோக்கம் குறித்த எந்த விளக்கங்களும் இல்லாமல் பரிணாமம் குறித்து அதன் ஆதரவாளர் ஒருவர் கூறிய கூற்றை எடுத்துக் கொண்டு அலசி ஒட்டுமொத்தமாக பரிணாமக் கோட்பாடே தவறு என்பது போலும் படைப்புவாதமே சரி என்பது போலும் தோற்றத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும்? அதாவது பரிணாமமா படைப்புவாதமா என்று கட்டுரையை நகர்த்துவதும்; பரிணாமக் கோட்பாட்டிலிருக்கும் நுண்ணிய பேதங்களை நிறம் பிரித்துக் காட்டி, படைப்புவாதம் குறித்து மூச்சே விடாமல் படைப்புவாதமே சரி என தோற்றம் காட்டுவதும் முரண்பாடானவை. இந்த முரண்பாட்டை தன்னுடைய விருப்ப நோக்கம் (கடவுள் நம்பிக்கை) கொண்டு பூசி மெழுகியிருக்கிறார் நண்பர் ஆஷிக்.

 

இந்த இடத்தில் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் மேலும் சில விளக்கங்கள் அளிப்பது சரியானதாகவும், எதிர்காலப் பயன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும். எல்லாவற்றையும் கடவுள் பின்னாலிருந்து இயக்குகிறார் என்பது நம்பிக்கையாளர்கள் நிலைப்பாடு, எல்லாம் தானாகவே வந்தது என்பது மறுப்பாளர்களின் நிலைப்பாடாக நம்பிக்கையாளர்கள் முன்வைப்பது. ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், எல்லாம் தானே வந்தது என்று கூறுபவர்கள் அல்ல மறுப்பாளர்கள். காரணகாரியங்களுக்கு ஆட்பட்டு ஒன்றன் தொடர்ச்சியாக இன்னொன்று இருக்கிறது, குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அந்த தொடர்ச்சியை இன்னும் மனிதன் அறியவில்லை, அறிவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் மறுப்பாளர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கையாளர்களோ எதுவுமே இல்லாமலிருந்து கடவுள் நினைத்ததும் எல்லாம் வந்துவிட்டது என்கிறார்கள். ஆக தானாகவே எல்லாம் வந்தது என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்கள் தானேயன்றி மறுப்பாளர்கள் அல்ல.

 

டாக் ஆர்கின் தளத்தை மறுப்பாளர்களின் ஆதர்ச தளமாக, அடையாளமாக கருதிக் கொண்டே நண்பர் ஆஷிக் தன் அனைத்து ஆக்கங்களையும் முன்வைக்கிறார். அவ்வாறல்ல, அந்தத்தளம் மறுப்பாளர்களால் நடத்தப்படுகிறதா இல்லை நம்பிக்கையாளர்களால் நடத்தப்படுகிறதா எனும் கேள்விகளுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் அதன் கட்டுரைகளுக்குள் புகுந்து செய்யப்படும் வார்த்தை விளையாடுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்வதைவிட அவருடைய கேள்விகளாக வெளிப்படையாக முன்வைக்கலாம்.

 

பரிணாமம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார் நண்பர் ஆஷிக், அதேநேரம் பரிணாமக் கோட்பாடு கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ தீர்க்காது என்றும் கூறிவருகிறார். என்றால் பரிணாமத்தின் மீது அவர் திணிக்கும் சுமைகளை நீக்கிவிட்டு அதாவது கடவுளை நீக்கிவிட்டு அந்தக் கோட்பாடு குறித்து ஆஷிக் என்ன கருதுகிறார் என்பதை நண்பர் வெளிப்படுத்த முன்வர வேண்டும். ஏனென்றால் பரிணாமத்தை ஏற்கலாம் அதை கடவுள் பின்னிருந்து இயக்குகிறார் எனும் திருத்தலுடன் என்பது போன்று அவருடைய சில கட்டுரைகள் பொருள் தருகின்றன.

 

இனி நண்பர் ஆஷிக் எழுப்பும் கேள்விகளுக்கு வருவோம், \\\ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது/// அல்ல. நிச்சயமாக முடியும். ஆதியும் அந்தமும் இல்லாத பொருள் என்று எதையாவது அறிவியல் ஏற்குமா? பதில் கூறிப் பார்க்கலாம். மாறாக மனிதன் அத்தனை உயரமில்லை, அறிவியலுக்குள் அடங்காது, இத்யாதி .. இத்யாதி .. .. என நழுவாமல் பரீட்சார்த்த ரீதியாக இதற்கான பதிலை தேடிப் பார்க்கலாம்.

 

கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்பது வெறுமனே உளவியல் ரீதியான கேள்வி மட்டுமல்ல. சமூக ரீதியாக கடவுளை மறுக்கும் கேள்வி. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது? ஏன் அனைவரும் அனைத்து வளங்களும் வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று இருக்க முடியாது எனும் கேள்வி சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும் என்றால்; கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா எனும் கேள்வி ஒரு தவறான பாதையை விலக்க உதவும்.

 

முந்திய பதிவு

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 4

16 ஆக

 
 
நண்பர்களே.சென்ற பதிவுகளில் அறிவார்ந்த வடிவமைப்பின் விளக்கம் அதன் வரலாறு குறித்து அறிந்தோம்.அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கம்[ID] பிற பரிணாம எதிர்ப்புகளை விட அறிவியல்(?) ரீதியான விமர்சனங்களை பரிணாமத்தின் மேல் தொடுப்பதும் அதற்கு பரிணாம ஆய்வாளர்கள் பதிலளிப்பதும் இந்த 15+ ஆண்டுகளில் அதிகம் விவாதிக்கப் பட்ட ஒன்று.
இந்த இயக்கமும் பல்கலைகழகம் , ஆய்வுக் கூடம்,கல்வி,விளம்பர பிரச்சாரம் என மும்முரமாக இயங்குகிறார்கள்.இதன் முக்கியமான் நாயகர்கள் குறித்து அறிவோம்.ஒவ்வொருவர் பற்றி சுருக்கமான விவரங்களும் அவர்களின் ஒரு சிறிய உரையும் இப்பதிவில் அளிக்கிறேன்.காணொளியில் அவர்கள் முன் வைக்கும் பரிணாம கொள்கையின் மீதான விமர்சனங்கள் வரும் பதிவுகளில் விவாதிக்கப்படும்.இப்போது அறிமுகம் மட்டுமே!!!!!!!!!!
 
1.Phillip E. Johnson
 
 
 
 
Phillip E. Johnson (d.o.b: 18 June 1940) அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தின் தந்தையாக அறியப்படுகிறார்.இவர் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் மட்டுமல்லாது பெர்க்லி பல்கலைகழகத்தில் சட்டத்துறை பேராசியராகவும் [emeritus professor of law at Boalt School of Law at the University of California, Berkeley] 1967 to 2000 ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர். கிறித்தவ[Presbyterian Church (USA] மத நம்பிக்கையாளர். மைக்கேல் டென்டன் எழுதிய Michael Denton‘s Evolution: A Theory in Crisis. [1985] புத்தகம் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Blind Watchmaker[1986] புதகம் ஆகியவற்றின் மீதான ஆய்வில் பரிணாம விமர்சகராக மாறியதாக குறிப்பிடுகிறார். Discovery Institute‘s Center for Science and Culture (CSC) நிறுவனர்களுள் ஒருவர்.
 
 
 
 

2.Michel Behe

Michael J. Behe (born 1952) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்தவர். உயிர்வேதியலில்[Biochemistry] முனைவர் பட்டம் பெற்ற சிறந்த ஆய்வாளர். sickle-cell disease என்னும் இரத்த குறைபாடு பற்றியே ஆய்வு செய்து முனைவர் பட்டம் [1978 to 1982] பெற்றார். உன்னத முனைவர் பட்டம் எனப்படும் postdoctoral work [1982 to 1985] ஆய்வில் டி என் ஏ [DNA] அமைப்பு குறித்து ஆய்வு செய்தார் .பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்விதழ்களில் பதிவிட்டார். நியூ யார்க்கில் உள்ள Queens College  கல்லூரியில் உயிர் வேதியியல் துறை பேராசியராக பணியாற்றியவர். இப்போது பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள  Lehigh University ல் பணி புரிந்து வருகிறார். Discovery Institute’s Center for Science and Culture அமைப்பிலும் பெருந் தொண்டு ஆற்றி வருகிறார்.
 
முதலில் பரிணாம் கொள்கையை ஏற்புடையதாக கருதினார்.ஆனால் மைக்கேல் டென்டன் எழுதிய Evolution: A Theory In Crisis புத்தகம் படித்த பின் பரிணாம கொள்கையை விமர்சிக்க தொடங்கினார். பரிணாம் கொள்கை உண்மையாக இருக்க முடியாது என்பதற்கு உயிர்வேதியியல் ரீதியான ஆதாரம் கண்டு பிடித்ததாக கூறினார் பெஹே. சில உயிர்களின் அடிப்படை வடிவமைப்புகள் எளிமைப் படுத்த முடியாத சிக்கலாக இருப்பதாகவும் இவை எந்த ஒரு எளிமையான அமைப்புகளில் இருந்து பரிணமிக்க முடியாது என்ற விமர்சனத்தை வெளியிட்டார்.இதுவே Irreducible complexity     என அழைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையின் சாரம் ஆகும். இவை பரிணாம செயல்முறைகளான் இயற்கை தேர்வு+சீரற்ற சிறு மாற்றத்தின் மூலமாக விளகக முடியாது என்பதால் இவை ஒரு அறிவு கொண்ட சக்தியால் மட்டுமே படைக்கப் பட்டு இருக்க முடியும்.இம்மாதிரி விளக்கங்கள் நிறைய கேட்டு இருக்க்லாம்.”கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாத‌தால் கடவுள் உண்டு”.இந்த விள்க்கம் எல்லாம் மைக்கேல் பெஹேவின் Irreducible complexity  கொள்கை போட்ட குட்டிகள்தான். இவர் 1996ல் எழுதிய. Darwin’s Black Box  புத்தகம் பிரபலமானது.
 
 
இக்கொள்கை முன்னெடுப்பதில் இவர்&கொள்கைகள் பற்றி இன்னும் அதிகம் வரும் பதிவுகளில் பார்ப்போம்..
 
மைக்கேல் பெஹே கீழ்க்கண்ட வாதங்களை காணொளியில் முன் வைக்கிறார்
முதல் காரணி வாதம்[First cause argument]
 
ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்[Fine tuning argument]
 
இயற்கையாக ப்ரோட்டின் அமையும் நிகழ்தகவு[Probability of protein formation]
 
பிரபஞ்சத்தில் முதல் உயிரின் தோற்றம்.[Abiogenesis]

.Michel Behe

3.William Albert “Bill” Dembski

William Albert “Bill” Dembski (born July 18, 1960) இவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை  William J. Dembski பரிணாம் உயிரியல் பேராசியர் [University of Erlangen-Nuremberg] என்பது வியப்பான உண்மை. William Dembski கணிதம் [University of Chicago], தத்துவம் [Princeton Theological Seminary] என இரு முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறுவயது முதலே பரிணாம் கொள்கை மீது சந்தேகம் கொண்ட டெம்ஸ்கி 1991ல் சீரற்ற தன்மையை வடிவமைத்தல்[Randomness by design] என்னும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.
 
[பரிணாமத்தின் படி வடிவமைப்பு என்பது சீரற்ற தன்மையால் [Design by randomness] இவர் ப்ளேட்டை திருப்பி போடுகிறார். ஹா ஹா ஹா சரியான போட்டி!!!!!!!!!! சில பரிணாம கொள்கையாளர்கள் சீரற்ற சிறுமாற்றம் மட்டும்தான் ஒழுங்கற்றது இயற்கை தேர்வு அப்படியல்ல என்று கூறுவது சரியே என்றாலும் இங்கு இப்பதிவு ஒரு  ID கொள்கையாளரின் கண்ணோட்டதிலேயே எழுதப்படுகிறது. விமர்சனங்கள்,விவாதங்கள் பிறகு ]
 
பரிணாம செயல்முறைகள் மூலம் சிக்க்லான வடிவமைப்பு நிகழ முடியாது என்பதற்கு கணித ரீதியாக சில விமர்சனங்களை வைக்கிறார். பரிணாமத்தின் மாதிரியான Evolutionary Algorithms      பல கணித சிக்கல்களை தீர்ப்பது பரிணத்தின் நிரூபணம் என்பதை உடைக்க முயல்கிறார். இதற்கு No free lunch theorem மற்றும் Complexity theory அடிப்படையில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.இவர் Discovery Institute‘s Center for Science and Culture (CSC)  ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். எனக்கு பிடித்தவர் இவர்தான் . இவர் நம்ம specialization  ஆள் அதனால் வரும் பதிவுகளில் இவர் கட்டுரைகள் நுணுக்கமாக் அலசப்படும்

4.Stephen C Meyer

Stephen C. Meyer.Director of the Center for Science and Culture at the Discovery Institute and Vice President and Senior Fellow at the Discovery Institute
Stephen C. Meyer புவியியலில் பட்டமும்,வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் எழுதிய   signature in the cell     என்ற புத்தகமும் பிரபல்மானது.செல்லில் உள்ள டி என் ஏ ல் உள்ள சிக்கலான வடிவமைப்பு,தகவல்கள் பரிணாமத்தை தவறு என்று நிருபிப்பதாக வாதிடுகிறார்.
 
 
இது இல்லாமல் இன்னும் சிலரும் உண்டு என்றாலும் இந்த நால்வரை பற்றி சில குறிப்புகள் கொடுத்தது ஏன் எனில் இவர்களில் விமர்சன முறைகள் வேறுபட்டது.திரு ஜான்சன் சட்டாரீதியாக‌வே பரிணாம கொள்கை கல்வி எதிர்ப்பு குறித்து மேற்கொண்டார்.
 

திரு மைக்கேல் பெஹே உயிர் வெதியியல் சார்ந்தும்,திரு டெம்ஸ்கி கணிதம் சார்ந்தும் ஸ்டீஃபன் மெயர் செல் ஆய்வு சார்ந்தும் விமர்சனம் வைப்பதால் இந்த விமர்சகர்களை  அறிவது அவசியம் ஆகிறது.இனி நேரடியாக  கொள்கை  மற்றும் அதன் பரிணாம் விமர்சனம் குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.நன்றி

 

முந்திய பதிவுகள்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

8 ஆக

 

இஸ்லாமிய பரப்புரைப் பதிவர்களில் எதிர்க்குரல் ஆஷிக் அஹமது சற்றே வித்தியாசமானவர் அல்லது வித்தியாசமான பதிவர். தெளிவாகச் சொன்னால் ஆஹா, ஓஹோ என்று அற்புத சுகமளிக்கும் எழுத்துக்கூட்டல் செய்யாமல், இரும்பூறெய்தாமல் தான் விரும்பும் படைப்பு வாதத்தை, பரிணாமத்தின் தவறு என அவர் கருதும் ஒன்றின் மீதே கட்டியமைப்பவர்.  நினைத்ததை எழுத்தில் கொண்டுவரும் வல்லமை கொண்டவர் என்பதை அவரின் பதிவுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம். பரிணாம எதிர்ப்பு பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருபவர். என்னுடைய கணிப்பு சரியானது என்றால், தமிழ் இணையப் பரப்பில் இஸ்லாமிய பதிவர் சிண்டிகேட்டின் பிதாமகன். இவரின் பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் எண்ணமிருப்பதாக முன்பொருமுறை தெரிவித்திருந்தேன். ஆனால் அதை அப்போது செயலுக்கு கொண்டுவரவில்லை. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.

 

முதலாவதாக, அவரின் ஆக்கங்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலானவை ஆங்கிலக் கட்டுரைகளின் மறு ஆக்கங்கள். அறிவியல் இணைய இதழ்களில் வெளியாகும் பரிணாமத்திற்கு எதிரான ஐயநோக்குடைய கட்டுரைகளே இவருடைய ஆக்கங்களுக்கான கருப்பொருள். ஆனால் எனக்கோ ஆங்கிலப் புலமை போதாது. தமிழில் அவர் எழுதுபவைகளை உள்வாங்கிக் கொள்வதிலோ, அது சரியா தவறா என சீர் தூக்குவதிலோ எனக்கு போதிய திறனிருப்பதாகவே கருதுகிறேன் (உயர்வு நவிற்சியாகவும் இருக்கலாம்) ஆனாலும் மூலக் கட்டுரையை படித்து முழுமையாக புரிந்து கொள்வதில் இருக்கும் போதாமை சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.

 

இரண்டாவதாக, அவர் பயன்படுத்தும் ஒரேமாதிரியான வடிவம். அதாவது, ஏதாவது ஒரு அறிவியலாளரின் அல்லது அறியப்பட்டவர்களின் பரிணாமத்துக்கு எதிரான ஒரு கூற்றை எடுத்துக் கொள்வது; அதைக் கொண்டு பரிணாமமே தவறானது, அறிவியலல்லாதது என்று சொந்த வாதத்தை இட்டு நிரப்புவது; பிறகு எந்தவித நிருவலும் இல்லாமல் இதற்கெதிராக படைப்புக் கொள்கையே சரி எனும் தோற்றம் தரும் முத்தாய்ப்பைச் செய்வது. சற்றேஎறக்குறைய அவரின் அனைத்து பரிணாம எதிர்ப்பு ஆக்கங்களும் இந்த பாட்டையிலேயே பயணப்பட்டிருக்கும். ஒரேவிதமான இதுபோன்ற நிருவலில்லாத கட்டுரைகளுக்கு ஏன் மறுப்பெழுத வேண்டும் எனும் அயர்ச்சியும் சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.

 

ஆனாலும் அவருக்கு மறுப்பெழுத வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுத்துக் கொண்டே வந்தது. எனவே தயக்கங்களைத் தள்ளி வைத்துவிட்டு களத்துக்கு வந்து விட்டேன். எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் என்பதால் உள்ளபடியே இப்பதிவுகளுக்கு நேர்க்குரல் எனும் பொருள் வந்து விடுகிறது, நேரிய குரலாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. நண்பர் ஆஷிக் தன் பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார் என்றாலும் தொடராக எழுதுவதில்லை. ஆகவே அவர் எழுதியிருக்கும் வரிசையிலேயே நேரிய குரலை நடத்தலாம் என்பது திட்டம்.

 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் அவரும் நானும் செய்து கொண்ட ஒரு உரையாடலின் மீள்பதிவிலிருந்து இந்த மறுப்பை தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். ‘செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி, புதிய கடவுளர் யார்? எனும் கட்டுரையில் பின்னூட்டத்தினூடாக நாங்கள் நடத்திக்கொண்ட உரையாடல் இதோ,

 

Aashiq AhamedAugust 18, 2010 at 9:31 pm

சகோதரர் மருதையன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

உங்களிடம் சில கேள்விகள்

 

1. “தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று கிரேக் வென்டர் கருத்து சொன்னது மே மாதம். உங்களுடைய இந்த கட்டுரை வெளிவந்தது ஜூலை மாதம். கிரேக் வென்டர் மறுப்பு தெரிவித்தது உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைத்து விட்டீர்களா?

 

2. உயிரியலைப் பொறுத்தவரை ஒரு செல்லை உருவாக்கினால் தான் உயிரை உருவாக்கியதாக அர்த்தம். இவர்கள் உருவாக்கியதோ செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? இந்த விசயமும் உங்களுக்கு தெரியாதா?

 

அதுவும் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு ஏற்கனவே உள்ள செல்கள் தான் தேவைப்பட்டிருக்கின்றன. இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

 

3. பதினைந்து வருடங்களாக பாடுபட்டு, பலருடைய உதவியைக் கொண்டு செயற்கை மரபணுத் தொகுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்களோ ஒரு செல் ஆதி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று சொல்கின்றீர்கள், இது அறிவுக்கு ஒத்து வரும் வாதமா?

 

4. விஞ்ஞானிகளோ “ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ, ஒரு நல்ல அறிவியல் முன்னேற்றத்தை உங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

 

இந்த செயற்கை செல் ஆய்வு, இறை நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளதா, அல்லது உங்களைப் போன்றவர்கள் முகத்திலா?

 

உங்களுக்கு நேரம் இருப்பின் என்னுடைய இந்த பதிவை சற்று பாருங்கள்

 

http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html

 

நன்றி

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

 

செங்கொடி August 19, 2010 at 11:51 pm 

 

நண்பர் ஆஷிக்,

 

உங்கள் கட்டுரையை படித்துப்பார்த்தேன். உங்கள் கட்டுரையின் திசையும், இந்தக் கட்டுரையின் திசையும் வேறு வேறானது. செயற்கை உயிர் என்று கட்டுரைக்கு தலைப்பிட்டிருப்பது தவறானது. அது தோழர் மருதையனுக்கு தெரியவில்லை. மெய்யில் செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதை மறைத்து தோழர் மருதையன் நாத்தீகத்துக்கு ஆதரவாக பொய் சொல்லிவிட்டார், என்பது உங்கள் குற்றச்சாட்டு. அதற்காக ஆங்கில இணைய தளங்களைத் தேடிப்படித்து விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

 

அதேநேரம் இந்தக் கட்டுரையை நீங்கள் நிதானமாக படித்திருந்தீர்களென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் தோழர் மருதையன் அவ்வாறு கூறவில்லை என்பது.

 

\\ ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா//

 

\\ செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத் தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்//

 

\\ கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது//

 

இவைகள் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகளில் சில. ஆதாவது நீங்கள் உங்கள் கட்டுரையில் என்ன குறிப்பிட்டிருக்கிறீர்களோ அது தான் இந்தக் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தலைப்பில் செயற்கை உயிர் எனக் குறிப்பிட்டதை மட்டும் வைத்துக்கொண்டு தோழர் பொய் சொல்லிவிட்டார் என்கிறீர்களே, சரிதானா அது?

 

சரி ஏன் செயற்கைசெல் என குறிப்பிட வேண்டும்? அது ஒரு குறியீடு. செயற்கை செல் என்பது அந்த ஆராய்சியை குறிக்கும் குறியீடு. இந்தப் பெயரைத்தான் அறிவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள், அது முழுவதும் செயற்கையான செல் அல்ல என்றபோதிலும். இதையே நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், \\ வென்டர் தன்னுடைய ஆய்வை “synthetic cell ” என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன்// ஆக நீங்கள் தலைப்பிட்டதன் நியாயம் தோழரின் தலைப்பிடலுக்கு பொருந்தமுடியாது என்று எப்படி அவ்வளவு தீவிரமாக நம்புகிறீர்கள்.

 

எனவே அது செயற்கைசெல் இல்லையென்றாலும் செயற்கைச் செல் என்றே குறிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். பின் உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன? அது நாத்தீகரால், கம்யூனிஸ்டால் சுட்டப்படுகிறது என்பதைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு காரணமாக இல்லை. அது உங்கள் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. \\ மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?// அதாவது உங்கள் கட்டுரையின் ஆகப் பெரும்பகுதியை அது செயற்கை உயிரல்ல என்பதை விளக்குவதற்காக செலவிட்ட நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு என்ன? செயற்கை உயிரை விட்டுவிட்டு காலியானது நாத்தீகம் தான் ஆத்தீகமல்ல என்று தந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கட்டுரையை ஆத்தீகமா நாத்தீகமா என்ற கேழ்வியை எழுப்பி அதற்கான பதிலாக அமைக்காமல் இயற்கையா? செயற்கையா? என்று அமைத்திருக்கிறீர்கள். தலைப்புக்கு தோதுவாக கடைசியில் “என்னைப் பொருத்தவரை” என்ற சொல்லடையோடு உங்கள் கருத்தை வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம் உங்களுக்கு?

 

ஒரு மரபணுத் தொகுப்பை உருவாக்கவே பல ஆண்டுகள் முயன்று பல கோடி ரூபாய் செலவில் பலருடைய பங்களிப்பினால் தானே முடிந்திருக்கிறது. அப்படியிருக்க நீங்கள் ஆதியில் ஒரு செல் தானாகவே உருவானது என கூறுகிறீர்களே இது எப்படி அறிவாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?

 

ஒரு அறிவியலாளரின் தன்னடக்கத்திற்கும் ஆன்மீகவாதியின் தன்னடக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கட்டுரையிலேயே குறிக்கப்படுள்ளது ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு உயிரை உருவாக்கும் அளவுக்கு அறிவியலாளர்களுக்கு உயிரியல் தெரியாது என்று அவர்கள் கூறினால் அது உண்மை. இன்றைய அறிவியலில் அதற்கு வழியில்லை, அதை நோக்கி முனைந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இது நியாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் ‘குன்’ என்று சொன்னதும் ஆகிவிட்டது என்று நம்புபவர்களிடம்தான் இது எந்த விதத்தில் நியாயம் எனும் கேள்வியை எழுப்ப வேண்டும்.

 

படைப்பு என்பது ஆண்டவனின் தனித்துறை. அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது. அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை.

 

தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன. பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி. பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?

 

இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்.

 

செங்கொடி

 

Aashiq Ahamed August 20, 2010 at 7:10 am 

 

அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

நீங்கள் நான் எழுதியதை முழுமையாக புரிந்து கொண்டீர்களா? அல்லது வேண்டுமென்றே இப்படி எழுதுகின்றீர்களா? புரியவில்லை. நீங்கள் எழுதியதில் தான் எவ்வளவு குழப்பங்கள்

 

1. செயற்கை உயிர் என்று தலைப்பில் வந்ததா பிரச்சனை?. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் “செயற்கை செல்” என்றுதான் இதனை குறிப்பிடுகின்றார்கள், அதனால் நாமும் அதனை அப்படிதான் குறிக்க வேண்டும், அது தவறாக இருந்தாலும் கூட. இல்லையென்றால் படிப்பவர்களுக்கு நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்று துவக்கத்தில் புரியாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது இதுவா பிரச்சனை? மருதையன் தலைப்பில் செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.

 

பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்.

 

கடவுள் எப்போது காலியாவார்?, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே? இவர்கள் உயிரை உருவாக்கினார்களா?, வென்டர் ஒப்புக்கொண்டார் “நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று. பின்னர் எங்கிருந்து வந்தது “பழைய கடவுள் காலி” என்பது போன்ற வார்த்தைகள்?

 

தலைப்பில் ஒன்று வைத்து விட்டு பின்னர் பதிவில் வேறுவிதமாக எழுதியது (நீங்களே பட்டியலிட்டு இருக்கின்றீர்கள்) படிப்பவர்களை முட்டாளாக்கும் செயலில்லையா? தலைப்பை justify பண்ணி மருதையன் எழுதினார் என்கின்றீர்களா?

 

இந்த பதிவை படித்த ஒரு சிலராவது நிச்சயம் குழம்பி இருப்பார்கள், “என்ன இது தலைப்பு இப்படி இருக்கிறது, பதிவு வேறு மாதிரி இருக்கிறதே” என்று

 

இப்போது நீங்கள் இது தெரியாதது போன்று எழுதி மறுபடியும் அவர் செய்த தவறை நீங்களும் செய்கின்றீர்கள் .. நியாயமா?

 

2. //இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது//

 

இப்படியெல்லாம் நீங்கள் எழுதினால் பின்னர் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தான் கேட்போம்

 

சரி விடுங்கள். ஒரு செல் உருவாகுவதற்கு நிறைய காலம் ஆகின்றது என்றே வைத்து கொள்வோம். இங்கு அதுவும் அல்ல பிரச்சனை என்ன தெரியுமா பிரச்சனை?

 

//தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?//

 

இது தான் பிரச்சனை. இன்று 15 ஆண்டுகள் அயராது உழைத்து ஒன்றை உருவாக்கியவர்கள் நாளை ஒரே நாளில் இதனை உருவாக்கலாம்.

 

ஆனால் இதுவெல்லாம் தற்செயலாக உருவாகியது என்று கூறுகின்றீர்களே அதுதான் பிரச்சனை. இந்த மரபுரேகை 1.08 base pairs கொண்டது. இப்போது இவர்கள் என்ன செய்யவேண்டுமென்றால் இந்த மில்லியன் வார்த்தைகளை (அதாவது அதற்குண்டான வேதிப்பொருட்களை) பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டு தூர சென்று விட்டு நோட்டம் விடட்டும். இவையெல்லாம் தற்செயலாக ஒன்று சேர்ந்து மரபுரேகை உருவாகுகிறதா என்று பார்ப்போம்.

 

எடிசன் உருவாக்கிய கரியிழை குமிழ் விளக்குக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் அது தற்செயலாக ஒன்று சேர்ந்து விளக்காக ஆகிறாதா என்று பார்த்து சொல்லுங்கள்.

 

இந்த கருத்தை என்னுடைய பதிவில் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றேனே .. நீங்கள் படித்து மறந்திருந்தால் உங்களுக்கு ஞாபகமூட்ட இன்னொருமுறை ..

 

//ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?//

 

புரிகிறதா?

 

3. //அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது//

 

அப்படியா சேதி? இதற்கும் வென்டர் பதில் சொல்லியிருக்கின்றாரே, பார்க்கவில்லையா?

 

//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை//

 

பிறகு நான் எழுதியது, //இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது//

 

இப்போது அவர்கள் கடவுளின் எல்லைக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் .. ஒரு நிமிஷம், அதற்கு முன்னர் உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்.

 

4. //அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை//

 

relax please.. .ஒரு விஷயம் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது என்று அதற்கு மறுப்பு தெரிவித்தால் இப்படி ஒரு பதிலா? உணர்ச்சிவசப்பட வேண்டாம் சகோதரரே..

 

இந்த செயற்கை செல் ஆய்வை விமர்சித்து ஆய்வாளர்கள் (in Nature, in The Sceintist etc) கருத்து சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன வலி இருக்கமுடியும்? என்னவோ போங்க..

 

கரியை பூசியிருக்கா? யார் மேல்? நாத்திகத்தின் மேல் தானே?

 

5. //தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன//

 

வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்

 

வேண்டாம் வேண்டாம். ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதற்கும் மட்டும் ஆதாரங்கள் கொடுங்கள் போதும். அது தான் விவாதப் பொருள்.

 

6. //பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி//

 

நல்ல வேலை பரிணாமத்தையும், அறிவியலையும் கமா போட்டு பிரித்தீர்கள். அறிவியல் என்று எழுதி பிராக்கெட்டில் பரிணாமம் உட்பட என்று எழுதாமல் போனீர்களே, அதுவரை மகிழ்ச்சி. அப்படி எழுதியிருந்தால் பரிணாமத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டியிருக்கும்.

 

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே, “இது பொய் அதனால் அது உண்மை” என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. அப்படி சொல்வதில் லாஜிக்கும் இல்லை. இது பொய் என்றால் அது உண்மை என்றாகாது. அது உண்மை என்பதற்கு வலுவான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்.

 

//பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?//

 

நியாயமான நல்ல கேள்வி ஆனால் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லையே என்னுடைய தளத்தில் இதற்கான ஒரு உரையாடல் உள்ளது. இது பற்றி பிறகு பேசுவோம் இன்ஷா அல்லாஹ்

 

இப்போது என்ன விஷயம் என்றால், மருதையன் அப்படி தலைப்பு வைத்தது சரியா தவறா என்பதுதான். அதனை தீர்த்து கொள்வோம் முதலில்

 

மறுபடியும் சொல்கின்றேன், உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

 

7. //இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்//

 

அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?

 

நான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம், முதலில் நான் என்ன சொல்ல வந்திருக்கின்றேன் என்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். அது உங்களது நேரத்தையும் சரி, என்னுடைய நேரத்தையும் சரி அதிகமாக்வே மிச்சப்படுத்தும்

 

நன்றி

 

இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக ஆமின்

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

 

 

செங்கொடி August 23, 2010 at 2:46 am  45.3

நண்பர் ஆஷிக்,

 

முதலில் மருதையன் பொய் சொல்கிறார் என்றீர்கள், இப்போது \\ செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்// என்கிறீர்கள். ஆக செயற்கை உயிர் என்பது பிரச்சனைக்குறியதல்ல அதன் பின்னதான கடவுள் குறித்தது தான் பிரச்சனையானது எனின் உங்களின் கட்டுரை கடவுளை மையமாக எடுத்துக்கொள்ளாமல் அந்த ஆய்வை மையமாக எடுத்துக்கொண்டிருந்தது என்பதை உங்கள் கட்டுரைக்கான கரு மயக்கம் எனக் கொள்ளலாமா?

 

போகட்டும் தோழர் மருதையனின் அந்தத் தலைப்பு கடவுளை முக்கியமாக கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா? பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார்? இந்தத்தலைப்பில் கடவுள் எனும் சொல் வருகிறது அதன் பொருள் முதலாளித்துவத்தைக் குறிக்கிறது. அதாவது படைத்தல் எனது தொழில் என தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த பழைய கடவுளை நகர்த்திவிட்டு அந்த இடத்தை முதலாளித்துவம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது தான் அந்தத் தலைப்பு கொண்டிருக்கும் பொருள். கட்டுரையின் பேசு பொருளும் அதுவே. உங்கள் பின்னூட்டத்தின் கடைசியில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\ அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?// நீங்கள் போட விரும்பும் அருவாளை உங்கள் மூளையில் போட்டுக் கொள்ளுங்கள், அதுவாவது உங்கள் புரிதலை கூர் தீட்டட்டும்.

 

கடவுளை கண்ணால் பார்த்தால் தான் நம்புவோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இப்போது அது போல் ஒரு செல்லை உருவாக்கிக் காட்டுங்கள் என்பது. டி.என்.ஏ மரபணு செய்திகளில் ஏற்படும் தவறுகள் மூலம் புதிய கூறுகள் உயிர்களுக்கு ஏற்படுவதையும், சூழலியல் தாக்கங்கள் உயினினங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையிலான பின்னோக்கிய யூகித்தல் தான் தற்செயல் தோற்றம் என்பது. ஒரு அணுவின் உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் வேறொரு அணுவாக மாற்ற முடியும் என்பது வேதியல். அறிவியலாளர்கள் அப்படி மாற்றியும் காட்டியிருக்கிறார்கள். என்றால் இன்றைய அதி நவீன கருவிகளும் அறிவியலாளர்களின் திறமையும் அணுக்கட்டமைப்பை மாற்றுவதற்கு தேவைப்படுகிறது எனும் போது தொடக்க நாட்களில் அது எப்படி மாறியிருக்க முடியும் என்று கேள்வியெழுப்புவது புத்திசாலித்தனம் அல்லவே. இன்றைக்கு அதி நவீன கருவிகளும், அறிவியலாளர்களும் ஆற்றும் பங்களிப்பை அற்றை நாட்களில் தட்ப வெப்பமும் சூழலும் செய்திருக்கும். உயிர் என்பதற்கு அளவுக்கு மீறி மிகை மதிப்பை ஏற்றியதால் தான் முதல் செல் எப்படி உருவாகியது என்பது உங்களுக்குள் மிகைத்த ஒன்றாக நிற்கிறது. நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள், அது உயிரற்றதிலிருந்து உயிர் எனும் உங்களில் மிகை மதிப்புக்கு சற்று விளக்கமளிக்கும். http://senkodi.wordpress.com/2008/12/11/darvin-tenthara/

 

\\ அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா?// இது தான் நான் கேட்டிருப்பது, ஆனால் பதிலாக நீங்கள் \\ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது// உங்களுடைய கூற்றின் படியே இறைவனுடைய(!) படைப்பைக்கொண்டே தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். அவன் செய்த மாறுதல்களுக்கு இறைவனுடைய(!) படைப்பினங்கள் தான் பயன்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?

 

அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சி குறித்து எதிர்க்கருத்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதான். அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்குமே எதிர்க்கருத்துகளும் உண்டு. அவை குறித்த ஆய்வை மேம்படுத்த செழுமைப்படுத்தவுமே உதவும். அந்த எதிர்க்கருத்தும் உங்களிஅப் போன்றவர்களின் எதிர்க்கருத்தும் ஒன்றல்ல.

 

அறிவியல் கண்டு பிடிப்புகளை நாத்திகத்திற்கு பயன் படுத்தலாமா? இந்தக் கேள்வி அடிப்படையிலேயே தவறானது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆத்தீகத்திற்கு ஆதரவாக பயன்படுத்தலாமா என்றுதான் கேள்வி எழுப்பமுடியும். ஏனென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் தன் இயல்பிலேயே மூட நம்பிக்கைகளை தகர்ப்பதாக இருக்கிறது.

 

மீண்டும் உங்களைக் கேட்கிறேன் \\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// நியாயமான கேள்வி என ஒத்துக்கொண்ட நீங்கள் பதிலையும் கூறினீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.

 

செங்கொடி

 

Aashiq Ahamed August 25, 2010 at 5:56 am 

 

அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

 

//ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?//

 

இதற்கு தான் //உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்// என்று கூறினேன். படித்தீர்களா?

 

ஒரு மரபுத் தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான் என்ற உங்களுடைய பழைய கேள்விக்கான பதில் தான் இது. இப்போது மறுபடியும் கேட்டு, நான் பதில் சொல்லிய பிறகும் என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்களே, இது நியாயமா?

 

“.. the ability to synthesize DNA sequences chemically and insert them into already living cells has existed for decades, the JCVI achievement simply changes the scale..” – Christina Agapakis, What synthia means to me, Oscillator, Science Blogs, dated 21st May 2010.

 

கிறிஸ்டினா அவர்கள் கூறியிருப்பது புரிகிறதா?.வென்டர் கழகம் செய்தது போன்று பல காலங்களாக நடந்து வருகிறதாம். இப்போது நடந்துள்ளது தான் அளவுக்கோளில் பெரியதாம்.

 

நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், தாங்கள் தயவுக்கூர்ந்து இது குறித்து நன்கு படித்து விட்டு வாருங்கள் என்பதுதான். “ஒரு மரபுத்தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான்” என்பது போன்ற வாதங்கள் உங்களுக்கு அறிவியலில் உள்ள தவறான புரிதலையே காட்டுகின்றன.

 

உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்

 

நன்றி,

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

 

 

செங்கொடி August 31, 2010 at 2:29 am 

 

நண்பர் ஆஷிக்,

 

முதலில் தோழர் பொய் சொல்லி விட்டார் என்றீர்கள், இல்லை என காட்டப்பட்டது. தலைப்பில்தான் பிரச்சனை என்றீர்கள், தலைப்பு சரியானது தான் என விளக்கப்பட்டது. இந்த இரண்டையும் உங்களின் தற்போதைய பின்னூட்டத்தில் விட்டு விட்டீர்கள் என்பதே உங்களின் கேள்விகளை நான் சரியாக உள்வாங்கி பதிலளித்திருக்கிறேன் என்பதையும் நீங்களும் அதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதையும் உணர்த்துகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் \\ மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது// என எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்க முடியுமா? என்னுடைய எந்த பதில் உங்களுக்கு என்ன விதத்தில் குழப்பமாக இருக்கிறது எனக்கூறுங்கள்.

 

நடந்த ஆய்வு எங்கு நடந்தது என்பதற்கு மட்டும் இப்போது பதில் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டவிதமே வருவோம். அந்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த பெரிய வெற்றியெல்லாம் அடைந்துவிடவில்லை என்றே கொள்வோம். கடுகினும் சிறிய வெற்றியாகவே அது இருக்கட்டும். கேட்பதெல்லாம் ஒன்றுதான். அத்தனை சிறிய வெற்றி எந்தத் துறையில் நடந்திருக்கிறது? அது கடவுளின் துறையா? இல்லையா? இதற்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

 

\\ உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்// இல்லை போதுமானது என நான் நினைக்கவில்லை.

 

கடவுளின் வாசலை தட்டியிருக்கும் ஆய்வின் நுணுக்கங்களை நுணுகி ஆராயும் நீங்கள் \\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// எனும் கேள்வியை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியில்லையே.

 

தோழமையுடன்

செங்கொடி

 

இந்த உரையாடல் நண்பர் ஆஷிக் பதில் தராததால் அதன் பின்னர் தொடரவே இல்லை. மீள்பதிவினால் நண்பருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதும், விட்டுவிடுவதும் நண்பரின் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது. அடுத்த பதிவிலிருந்து நண்பரின் எதிர்க்குரல் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நேரிய குரலாக மறுப்புகள் வரும்.

 

 

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 3

9 ஜூலை
நண்பர்களே பரிணாமத்திற்கு மாற்றாக அதன் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[ID] என்னும் கொள்கையை குறித்த தொடர் பதிவுகளை எழுதி வருகிறோம்.முந்தைய இரு பதிவுகளில் அதன் வரையறுப்பு ,முக்கியமான் கொள்கையாக்கங்களை பார்த்தோம். ID கொள்கையாளர்களின் கருத்துகளை அப்படியே வெளியிடுவதில் மிக கவனமாகவும் வெளிப்படையாகவும் இருந்து வருகிறோம்.இப்பதிவில் அதன் தோற்றம், வரலாறாக அவர்களின் தளத்தில் இருந்தே மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறோம். இதில் பல தேவையான் விவரங்கள் இருக்கலாம். வழக்கம் போல் மொழி மாற்ற சிக்கல்களை தவிர்க்க ஆங்கில மூலத்தையும் அளித்து விடுகிறோம்.

 History of intelligent design and the creation – evolution controversy

1611: அரசன் ஜேம்ஸ் ஆங்கில பைபிள் பிரதி வெளியீடு
1654: கிறித்தவ‌ பேராயர் உஷைர் உலகம் தோன்றிய நாளை பைபிளில் இருந்து 4004B.C.E என கணக்கிடுகிறார்
1802: இயற்கை இறையியல் என்பது அறிவியல்,தத்துவம் உட்பட்ட காரணிகளை கொண்டு  கடவுளின் இருப்பை நிறுவும் முயற்சியாகும்.
William Paley (July 1743 – 25 May 1805) இயற்கை இறையியல் துறை சார்ந்த முக்கியமான புத்தகம் வெளியிடுகிறார். இது Teleological argument என்னும் இயற்கையின் படைப்புகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு இருப்பது கடவுளை நிறுவுகிறது எனும் கொள்கையை தெளிவாக முதலில் முன் வைத்தது எனலாம்.
 
1830: டார்வினின் பரிணாம் கொள்கைக்கு மூல ஆதாரங்களில் ஒன்றான புவியியலின் முக்கியமான புத்தக்மான Principles of Geology        ஐ Charles Lyell          வெளியிடுகிறார்.
 
1859: டார்வினின் உற்ற நண்பரும்,தீவிர ஆதரவாளரான          T.H. Huxley பரிணாம கொள்கைக்கும்,மதவாதிகளுக்கும் கருத்து மோதல் வரலாம் என எதிர் நோக்குகிறார்.  Origin of Species     புத்தகம் வெளிவருவதற்கு முன் டார்வினுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த மோதலுக்காக என் ஆயுதங்களை தயாராக் வைத்துள்ளேன் என்று எழுதி இருந்தார்.
 
1859: அறிவியலாளர் டார்வின் (12 February 1809 – 19 April 1882)  பரிணாம கொள்கையின் மிக முக்கியமான புத்தகமாகிய  “Orgin of Spicies” வெளியிடுகிறார். உயிர்கள் அனைத்தும் ஓர் செல் உயிர்களில் இருந்து இயற்கைத் தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றங்களின் காரணமாக பரிணாம வளர்ச்சி மூலம் உருவாகின என்பதுதான் இக்கொள்கையாகும்.
 
1860: T.H. Huxley ம் Samuel Wilberforce ம் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக்த்தில் பரிணாமம் குறித்து விவாதிக்கின்றனர்.
 
1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்க‌ளிடம் இருந்தே எதிர்ப்பு’ வந்தது. பலர் டார்வினின் கொள்கையை நிரூபிக்க முடியாது,உயிர்களின் தோற்றம் ,பல் வகை பிரிவுகளாதல் ஆகியவற்றை விளக்க முடியாது என்றே கருத்து தெரிவித்தனர்.இந்த அறிவியல் ரீதியான எதிர்ப்பு  சுமார் 50_80 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.இது மட்டுமல்லாமல் மத ரீதியாகவும் எதிர்ப்பு வந்தது.
 
1874: John William Draper என்ற எழுத்தாளர் History of the Conflict Between Religion and Science என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.அதில் மதம்,அறிவியல் இவற்றின் முரண்பாடுகள் மோதல் போக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறார்.இந்த டார்வினின் பரிணாம கொள்கை மீண்டும் ஒரு மத கொடுந் தண்டனைகளை தோற்றுவிக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.அது என்ன மத கொடுந் தண்டனை [Inquisition] என்று அப்பாவியாக கேட்கும் நண்பர்கள் இங்கே பாருங்கள்.
1896: Andrew Dickson White என்ற எழுத்தாளர் A History of The Warfare of Science With Theology என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் . இது கிறித்தவ மதத்தின் கொள்கைகளை ,வரலாற்றை விமர்சித்தது.
 
1905-1915: இதற்கு எதிர்வினையாக கிறித்தவ ப்ராஸ்டன்டன்ட் சபையை சேர்ந்த Bible Institute of Los Angeles (Biola) அமைப்பு The Fundamentals என்ற புத்தக்த்தை வெளியிடுகிறார்கள்.  இது இந்த இரு புத்தகங்களையும் கடுமையாக விமர்சித்தது.பரிணாமம் குறித்த  ஆவணப்படுத்தப்பட்ட முதல் விமர்சனம் இது ஆகும்
1912: நாளிதழ் தலைப்பு செய்தியாக டார்வினின் பரிணாம கொள்கை நிரூபணம் கிடைத்ததாக செய்தி வெளியிடுகிறது.மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான[Missing link] முன்னோர் உயிரினத்தின் படிமம் கிடைத்ததாகவும் இது மதவாதிகளின் தாக்குதலில் இருந்து அறிவியலை வளர்க்க உதவியதாக ஆர்தர் கெய்த் குறிபிட்டார். ஆனால் பொ.ஆ 1953ல் இது ஒரு பொய்யான் படிமாம், ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப்பட்டது. இது இன்றும் பரிணாம எதிர்ப்பாளர்களால் பரிணாம(ஆய்வாளர்களின்)த்தின் நேர்மையற்ற சான்றாக  விமர்சிக்கப் படுகிறது. http://en.wikipedia.org/wiki/Piltdown_Man

1925: இக்கால கட்டத்தில் (பெரும்பாலான)உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாம கொள்கையை ஏற்கின்றனர். பள்ளி,கல்லூரிகளில் பரிணாம் பாடத்திட்டம் ஆக்கப்படுகிறது.இப்போது பரிணாமத்திற்கு இருவகைகளில் எதிர்ப்பு வருகிறது.

1. பரிணாம்த்தை முற்று முழுதாக எதிர்க்கும்,பைபிள் ரீதியான படைப்பியல்வாதிகள்.[Young and Old earth creationists]
2.பரிணாம்த்தின் சீரற்ற,ஒழுங்கற்ற தனமையை மட்டும் ஏற்காமல் ,இது ஒரு வழி நடத்தப்பட்ட செயல் என்னும் கொள்கையாளர்கள். [Guided and directed Evolution]
 
1925: ஸ்கோப்ஸ் வழக்கு விசாரணை:பரிணாமத்தை பள்ளி கல்லூரிகளில் பாடத் திட்டமாக்க அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் எதிர்ப்பு வலுக்கிறது ஜான் ஸ்கோப்ஸ் என்னும் உயிரியல் ஆசிரியர் மீது டென்னீஸ் மாநிலத்தின் பட்லர் சட்டத்தை மீறியதாக் வழக்கு போடப்பட்டது.பட்லர் சட்டம் எனில் பைபிளின் படைப்புக் கொள்கையை தவிர வேறு கல்வி அளித்தல் தவறு.,இது நீதி மன்றத்தில் வழக்காகிறது. இதில் ஸ்கோப்ஸ் சட்டத்தை மீறியதாக நிரூபணம் ஆனாலும்,தீர்ப்பு மாற்றப்பட்டு விடுவிக்கப் பட்டார்.இது மதம் பரிணாமம் மோதலை மிகவும் பரபரப்பு ஆக்கியது. [இது குறித்தே ஒரு சிறப்பு பதிவு இடுவோம்]
 
1959: டார்வினின் புத்தகம் வந்து நூறாண்டு கடந்தும் அது ஏற்படுத்திய அதிர்வுகள் ஓயவில்லை.
1968: படைப்பியல் கொள்கையும் பள்ளிகளில் கற்பிக்கப் பட வேண்டும் என்ற‌ இன்னொரு வழக்கில் Edwards v. Arkansas அமெரிக்க ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் பரிணாம் கல்விக்கு எதிரான சட்டம் நீகப்படுகிறது.எந்த மதத்தின் படைப்புக் கொள்கையும் பாடத் திட்டத்தில் இருக்க கூடாது என்று தெளிவாக கூறுகிறது.:

1971: பரிணம்த்தை விமர்சித்து சிறந்த வழக்கறிஞர் Norman Macbeth என்பவர் Darwin Retried: An Appeal to Reason. என்ற புத்தத்தை வெளியிடுகிறார்.இதில் அக்கால கட்டத்தின் பரிணாம் விமர்சனங்களை முன் வைத்தது. 

 
1972: Institute for Creation Research ஆரம்பிக்கப் படுகிறது.இதில் 1980 வரை இளைய பூமி[Young earth] கொள்கையே முன் வைக்கப் பட்டது..

1973: அமெரிக்க டென்னீஸ் மாநில சட்டசபையில் மீண்டும் பட்லர் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்படி மனிதனின் தோற்றமாக் பள்ளிகளில் எந்த கொள்கையும் பாட புத்தகங்களில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படி செய்வதென்றால் அது ஒரு கோட்பாடு[theory] மட்டுமே மற்றும் அறிவியல் ரீதியாக் நிரூபிக்கபடாத உண்மை என்றும் கூறப்பட வேண்டும். பைபிள் உட்பட்ட அனைத்து மத புத்தகங்களும் பாடபுத்தகங்கள் அல்ல என்பதும் இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

1982: McLean v. Arkansas: வழக்கில்  Arkansas மாநிலத்தில் அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism”] என்பது அறிவியல் அல்ல என தீர்ப்பு வருகிறது.
 
1983. அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism” ]  எதிர்த்து சில அமைப்புகள் உருவாக்கப் படுகிறது. 1982 வழக்கு விசாரணைகளுக்கு பிறகு இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேசிய அறிவியல் கல்வி அமைப்பு[National Center for Science Education (NCSE),] ஆக உருவெடுக்கிறது.
 
1986: ஹியூக் ராஸ்[Hugh Ross] “நம்பிக்கையின் காரணங்கள்” [“Reasons to Believe,” ] என்னும் பழைய பூமி[Old earth] கொள்கை அமைப்பை ஏற்படுத்துகிறார்.
 
1986: மைக்கேல் டென்டன் [Michael Denton] என்பவர்          Evolution: A Theory in Crisis.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.
1987: Edwards v. Aguillard: வழக்கில் மூன்று நிபந்தனைகள் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு விதிக்கிறது.
1) பாட திட்டத்தில் மதம், அல்லது சார்ந்த கொள்கைகள் இருக்க கூடாது.
 2) மத பிரச்சாரம் தவிர்த்தல்
 3) அரசு மற்றும் மதத்தின் தொடர்பு பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
1991: Phillip Johnson என்பவர்          Evolution: Darwin on Trial.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.  
1993: பரிணாம எதிர்ப்பு வரலாற்றில் முக்கியமான கூட்டம்            Pajaro Dunes, California. ல் நடக்கிறது. இதில் அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தை[intelligent design movement] தொடங்க போகும்    Phillip Johnson, Michael Behe, உட்ப‌ட பலர் கலந்து கொள்கின்றனர்.
ID Starts
1996: Michael Behe எழுதிய புத்தகம்  Darwin’s Black Box, அறிவார்ந்த வடிவமைப்பு[intelligent design] என்னும் சொல்லை முதன் முதலில் பிரபலப் படுத்துகிறது. இப்புத்தக்த்தில்தான் எளிமைப்படுத்தப் படாத சிக்கல்[“irreducible complexity] என்னும் கொள்கையும் விவாதிக்கப்படுகிறது
 
1996: “Mere Creation” ஆய்வரங்கம் Biola University ல் நடக்கிறது.இதில் அறிவார்ந்த வடிவமைப்பின் நாயகர்கள் Michael Behe, David Berlinsky, Walter Bradley, William Dembski, Sigrid Hartwig-Scherer, Phillip Johnson, Robert Kaita, Steven Meyer, J. P. Moreland, Paul Nelson, Nancy Pearcey, Del Ratzsch, John Mark Reynolds, Hugh Ross, மற்றும் Jonathan Wells கலந்து கொள்கின்றனர்..

1998: William Dembski எழுதிய புத்தகம் The Design Inference அறிவார்ந்த வடிவமைப்பின் பல கொள்கைகளை கணித ரீதியாக அளிக்கிறார். .

1999: அமெரிக்க கான்சாஸ் மாநிலத்தில் பெரும் பரிணாமம் [macroevolution] குறித்த பாடத்திட்டங்களை கல்வியில் இருந்து நீக்குகிறது.

 
2000: Jonathan Wells எழுதிய புத்தகம் Icons of Evolution வெளியிடப் படுகிறது.
2000: David K. DeWolf, Stephen C. Meyer, and Mark Edward எழுதிய புத்தகம்  “Teaching the Origins Controversy: Science, Or Religion, Or Speech”  வெளியிடப் படுகிறது. இது பாட திட்டத்தில் அறிவார்ந்த வடிவமைப்பு சார்ந்த பரிணாம விமர்சனம் சேர்க்கப் பட வேண்டும் என வலியுறுத்தியது.

2001: PBS ன் பரிணாமம் குறித்த ஆவணப் படம் ஒளிபரப் பட்டது.

2001ல் இருந்து இன்றுவரை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் பரிணாமம் vs ID , மோதல் நீதி மன்றங்களில் மற்றும் பல தளங்களில் தொடர்கிறது……………… தொடர்கிறது!!!!!!!!!!!!!!.

(நாமும் தொடர்வோம்)
References:

1. Summer for the Gods by Edward J. Larson.
2. Bones of Contention by Marvin L. Lubenow.
3. Darwinism and the Law: Can Non-Naturalistic Scientific Survive Constitutional Challenge by H Wayne House (see http://www-acs.ucsd.edu/~idea/house.rtf).
4. Cretinism or Evilution? No. 2 Edited by E.T. Babinski. See http://www.talkorigins.org/faqs/ce/2/part12.html
5. Timeline for Origins Class at http://jmlynch.dhs.org/classes/origins/timeline.php
6. Religion and Science: History, Method, Dialogue in “Dispelling Some Myths About The Split Between Theology and Science in the Nineteenth Century” an essay by Claude Welch.
7. See PBS Evolution‘s re-interpretation of this famous exchange.
8. William Jennings Bryan & The Scopes Trial by R.M. Cornelius at http://www.bryan.edu/historical/wjbryan_trial/ from Bryan College Historical Resources (a Christian college in Dayton Tennessee, home of the Scopes Trial).

முந்திய பதிவுகள்

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 2

29 ஜன

 

சென்ற பதிவில் இத்தொடர்பதிவை ஏன் எழுதுகிறோம் என்பதை மட்டும் பார்த்தோம்.

 

.இந்த பரிணாமம்/அறிவார்ந்த படைப்பு என்பதன் விவாதங்களை தமிழில் ஆவணப்படுத்தும் ஒரு ,சார்பற்ற முயற்சியாகவே இப்பதிவு எழுதப் படுகிறது. ஆகவே இத்தொடர் பதிவில் இக்கொள்கையாளர்களின் விளக்கங்களின் எளிமையான தமிழாக்கம் தருவது மட்டுமே நம் நோக்கம்.அறிவார்ந்த வடிவமைப்பு சரியா? இல்லையா? என்பதை இப்பதிவில் விவாதிக்கப் போவது இல்லை. இது ஏன் எனில் முதலில் தமிழில் முடிந்தவரை இக்கொள்கை சார்ந்த விவரங்களை ஆவணப்படுத்தி விட்டால் இரு கொள்கைகளையும் விவாதிப்பதை அறிவார்ந்த தமிழ் சான்றோர்  சமூகம் பார்த்துக் கொள்ளும். இதனை அடுத்த படியில் செய்யலாம் என நினைக்கிறேன்.  

இப்பதிவில் இன்னும் இதன் வரையறுப்பை அக்கொள்கையாளர்கள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை கேள்வி பதிலாக  வெளியிடுகிறோம். மொழி பெயர்ப்போடு ஆங்கில மூலமும் கொடுப்பது அவசியம் என்றே கருதுகிறோம். மொழி பெயர்ப்பை மேம்படுத்தும்  கருத்துகளை நன்றியோடு வரவேற்கிறோம்.
இப்பதிவில் அதன் தெளிவான‌ வரையறுப்பை பார்ப்போம். இந்த கேள்வி பதில் அக்கொள்கையாளர்களின் முக்கியமான தளத்தில் இருந்து எடுக்கபட்டது.
1.முதலில் நுண்ணறிவு [Intelligence] என்றால் என்ன? என்பதை அறிவோம்.
இது பல பரிமாணம் உள்ள சொல் ஆகும்.இதற்கு பல விளக்கங்கள் உண்டு.எளிமையாக இப்படி சொல்லலாம்.
நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், தகவல் பரிமாற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், கோர்வையாக சிந்தித்தல்,  கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் கூட குறிப்பிட்ட அளவு பெற்றுள்ளதாகவே கருதப் படுகிறது.  
2.அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை [Intelligent Design] என்றால் என்ன?
இது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பை தேடும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு ஆகும்.இதில் பலதுறை அறிவியலாளர்கள், தத்துவ மேதைகள் ஆகியோர் பங்களிப்பு ஆற்றுகின்றனர்.
இக்கொள்கையின்படி “பிரபஞ்சம், உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  நுண்ணறிவு சார்ந்த காரணி மூலமே சரியாக‌[நன்றாக] விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.”
ஒவ்வொரு இயற்கையின் நிகழ்வையும் அந்த காரணிகள் ஊடாக ஆய்வு செய்து அவை வடிவமைக்கப்பட்டே இருக்கின்றனவா இல்லை இந்நிகழ்வுகள் தானாக‌ நடைபெற வாய்ப்பு உண்டா அல்லது இரண்டும் சேர்ந்தா  என்பதின் மீதே ஆய்வு நடைபெறுகிறது. இந்த காரணிகளில் சில நுண்ணறிவு உரியவையாக உள்ளன் என்பதுதான் இக்கொள்கையின் மிக முக்கியமான‌ அம்சமாகும். இக்காரணிகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துவதாக் இக்கொள்கையாக்கம் முன்வைக்கிறது.எடுத்துக்காட்டாக உயிரினங்களின் உடல் செல்களில் உள்ள டி என் ஏ மூலக்கூறுகளில் உள்ள தகவல்கள்,பிரபஞ்சத்தில் (இபோதைய கருத்தின்படி) பூமியில் மட்டும் உயிர் வாழும் சூழ்நிலை ஏற்படும் விதமான் அமைப்பு,530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிடைத்த வளர்ச்சி பெற்ற கேம்பிரியன் படிமங்கள் ….போன்றவற்றை அறிவார்ந்த மூலக் காரணி என்பதற்கு சான்றாக முன் வைக்கின்றனர்.
What is intelligent design?

Intelligent design refers to a scientific research program as well as a community of scientists, philosophers and other scholars who seek evidence of design in nature. The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. Through the study and analysis of a system’s components, a design theorist is able to determine whether various natural structures are the product of chance, natural law, intelligent design, or some combination thereof. Such research is conducted by observing the types of information produced when intelligent agents act. Scientists then seek to find objects which have those same types of informational properties which we commonly know come from intelligence. Intelligent design has applied these scientific methods to detect design in irreducibly complex biological structures, the complex and specified information content in DNA, the life-sustaining physical architecture of the universe, and the geologically rapid origin of biological diversity in the fossil record during the Cambrian explosion approximately 530 million years ago.

3. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையும் (மதங்களின்) இறை படைப்பியல் கொள்கையும் ஒன்றா?
இல்லை!!!!!!!!!!!!!!!.இரண்டும் ஒன்றல்ல.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு உள்ளதா இல்லை இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாற்றம் மேலான விள்க்கம் மட்டும் போதுமா என்பதை  தேடும், வரையறுக்கும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு முயற்சி மட்டுமே!!!. ஆனால் இறை படைப்புக் கொள்கை என்பது மத புத்தக்த்தில் உள்ள படைப்பு தகவல்களை இப்போதைய அறிவியலோடு பொருத்துவதே ஆகும்.
அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை இயற்கையின் ஒழுங்கான வடிவங்களை சான்றாக முன் வைத்து அதில் இருந்து என்ன அனுமானம் கொள்ள முடியும் என்பதையே வலியுறுத்துகிறது. இக்கொள்கையின் படி  ஒழுங்கான வடிவமைப்பின் அறிவார்ந்த காரணியாக வரையறுக்கப்படுவது இயற்கைக்கு மேம்பட்டதுதான் [Supernatural] என்று கண்டறிய முடியுமா என வலியுறுத்துவது இல்லை!!!!!!!!!!!!!!!!.
பாரபட்சமற்ற உண்மையான ஆய்வாளர்கள் இவ்விரு கொள்கைகளின் வித்தியாசத்தை ஏற்றுக் கொள்வது இயல்பு.(I like this!!!!!!!!!!!!!)
அறிவார்ந்த கொள்கையை முறியடிக்க பல பரிணாம ஆய்வாளர்கள் இதுவும் இறை படைப்பியல் கொள்கை ஒன்றே என்று தவறாக கூறுவது வழக்கம்.இதன் மூலம் இக்கொள்கையின் மேன்மைகளை, உண்மைகளை  விவாதிக்காமல் ஒதுக்கி விடலாம் என்பதே இதன் நோக்கமாகும்.ஆகவே இயற்கையின் நிகழ்வுகளில் வடிவமைப்பு உள்ளதா என்ற தேடலை மட்டுமே இக்கொள்கை முன் வைக்கிறது,அதன் சான்றுகளின் மேல் மட்டுமே வாதங்களை வைக்கிறது.

Is intelligent design the same as creationism?

 No. The theory of intelligent design is simply an effort to empirically detect whether the “apparent design” in nature acknowledged by virtually all biologists is genuine design (the product of an intelligent cause) or is simply the product of an undirected process such as natural selection acting on random variations. Creationism typically starts with a religious text and tries to see how the findings of science can be reconciled to it. Intelligent design starts with the empirical evidence of nature and seeks to ascertain what inferences can be drawn from that evidence. Unlike creationism, the scientific theory of intelligent design does not claim that modern biology can identify whether the intelligent cause detected through science is supernatural.

Honest critics of intelligent design acknowledge the difference between intelligent design and creationism. University of Wisconsin historian of science Ronald Numbers is critical of intelligent design, yet according to the Associated Press, he “agrees the creationist label is inaccurate when it comes to the ID [intelligent design] movement.” Why, then, do some Darwinists keep trying to conflate intelligent design with creationism? According to Dr. Numbers, it is because they think such claims are “the easiest way to discredit intelligent design.” In other words, the charge that intelligent design is “creationism” is a rhetorical strategy on the part of Darwinists who wish to delegitimize design theory without actually addressing the merits of its case.
4. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை ஒரு அறிவியல் கொள்கையா?
ஆம்!!!!!!!!!!!!.பிற அறிவியல் கொள்கைகள் கோட்பாடுகள் போல் இயற்கை மீதான  கணிப்புகள் + கோட்பாடு உருவாக்கம் + ஆய்வு மூலம் சோதித்தல்+கோட்பாடு வரையறுப்பு முடிவாக்கம் என்ற நான்கு நிலைகளையும் உள்ளடக்கியது.
“அறிவார்ந்த காரணிகள் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகின்றன” என்ற கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு இயற்கையின் செயலும்,படைப்பும இவ்வியல்பை கொண்டிருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் இச்சிக்கலான வடிவமைப்பை உறுதி செய்ய முயல்கின்றனர்.இதில் முக்கியமான் ஆய்வுக் கரு எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு[irreducible complexity] என்பதாகும். இவை கண்டறியப்ப்டும் போது இவை வடிவமைக்கப் பட்டு மட்டுமே இருக்க முடியும் என்றா கோட்பாட்டு முடிவாக்கத்திற்கு வருகின்றனர்.

நண்பர்களே இத்தொடரில் எந்த கருத்தையும் உருவாக்க விரும்பவில்லை.அனைவரும் இக்கொள்கை குறித்து பாரபட்சமற்ற தகவல்கள் தமிழில் அளிக்க‌ வேண்டும் என்பதே நம் ஆசை.கருத்துகள் விவாதங்கள் வரவேற்கப் படுகிறது என்றாலும் அது தகவல் பரிமாற்றமாக் மட்டும் இருந்தால் நலமாக இருக்கும் என ஒரு வேண்டுகோள்.அறிந்த தகவல்களை பகிருங்கள்.

Is intelligent design a scientific theory?

Yes. The scientific method is commonly described as a four-step process involving observations, hypothesis, experiments, and conclusion. Intelligent design begins with the observation that intelligent agents produce complex and specified information (CSI). Design theorists hypothesize that if a natural object was designed, it will contain high levels of CSI. Scientists then perform experimental tests upon natural objects to determine if they contain complex and specified information. One easily testable form of CSI is irreducible complexity, which can be discovered by experimentally reverse-engineering biological structures to see if they require all of their parts to function. When ID researchers find irreducible complexity in biology, they conclude that such structures were designed.
முந்திய பதிவு

 

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 1

18 ஜன

பரிணாமம். அறிந்த அனைவரையும் உலுக்கிப் போட்ட ஓர் அறிவியல் தேற்றம். ஆதரவாகவும் எதிராகவும் உலகை இருகூறாக பிரித்த ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு. தொடக்கம் முதல் இன்றுவரை மதவாதிகள் இதற்கு எதிராக சளைக்காமல் சமர் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் குறித்து அக்கரை இல்லை. அறிந்தாலும் அறியாவிட்டாலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறிவியலின் அணுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களின் மத வரம்புகளைக் கடந்து பேசுவதால் முனை மழுங்கியவை என்றாலும் கூட தங்களின் வேத வசனங்களை பரிணாமத்திற்கு எதிரான வாளாக தாங்கி நிற்கிறார்கள். ஆனால் மதங்களின் மழுங்கிய தன்மையை உணர்ந்து கொண்டவர்கள் பரிணாமத்தை எதிர்க்க வேதங்களும் மதப்பிடிப்பும் போதுமானதல்ல எனக் கண்டதால் அவர்கள் கண்டடைந்த ஆயுதம் தான் அறிவார்ந்த வடிவமைப்பு(Intelligent Design) எனும் கொள்கை. பரிணாமக் கொள்கைக்கு எதிரான இந்தக் கொள்கை பரிணமித்ததை விளக்குவது தான் இந்தத்தொடர். தமிழில் வெகுவான கவனம் பெறாத இதனை நண்பர் சார்வாகன் தொடராக எழுதுகிறார். இத்துறையின் அறிஞர்கள் குறித்த அறிமுகம், அவர்களின் விளக்கங்கள் விவாதங்களினூடாக விரியப்போகும் இத்தொடரை இனி சார்வாகன் மொழிதலிலேயே தொடர்வோம்.

************************************************************

மகாகவி பாரதிக்கு “கவிதை எமக்கு தொழில்” என்றது போல் நமக்கு “தேடல் ஒரு தொழில்” என்பதால் தேடுவதை உண்மையின் அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்தே தமிழ் சொந்தங்களுடன் பகிர்ந்து வருகிறோம். நம் தேடல: பெரும்பாலும் அறிவியலை எளிமைப்படுத்துவது, இயற்கை சார்ந்த வாழ்வு என்ற எல்லைகளுக்குல் இருந்தாலும் பிற விஷயங்களை பிறரிடம் இருந்தும் கற்று வருகிறோம்.

பரிணாம கொள்கை என்பதுதான் என்ன?
மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து இயற்கை தேர்வு[natural selection],சீரற்ற சிறு மாற்றங்கள்[mutations] ஆகியவற்றால் மாற்றம் அடைந்து தோன்றின‌.
பரிணாமம் இபோதைய அறிவியலின் உயிர் தோற்ற, பரவலாக‌ ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை என்ற அளவில் அதனை கற்று வருகிறோம். அது குறித்து சில பகிர்தலும் முயற்சித்தோம். பரிணாமத்திற்கும் பிற அறிவியல் கொள்கைகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவெனில்
“இந்த ஒரு கொள்கை மட்டுமே 90% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ள‌ப் பட்டாலும் 90% மக்களால் ஏற்றுக்(அறிந்து) கொள்ளப்படாததும் ஆகும்”
மக்கள் எந்தக் காலத்தில் எதை புரிந்து கொண்டார்கள்? பல கொள்கைகள் இப்படித்தான் மக்கள் ஆட்டு மந்தை போல் தினசரி வாழ்வின் தேவைகளை சந்திப்பதிலேயே அவர்கள் வாழ்வு முடிந்து விடுகிறது என்று கூறலாம் என்றாலும், பரிணாம கொள்கை பல மதவாதிகளிடம் இருந்து மிகுந்த எதிர்ப்பை பெற்ற கொள்கையாகும்.
எடுத்துக்காட்டாக இபோதைய பிரபஞ்ச தோற்ற கொள்கையான பெரு விரிவாக்க கொளகை கூட பரிணாமம் போன்றதே.அதாவது
“ஓரணுவில் இருந்து விரிவடைந்து அனைத்து பிரபஞ்சமும் தோன்றியது.” (Big Bang Theory)
“ஓர் செல் உயிர்களில் இருந்து மாற்றம் அடைந்து அனைத்து உயிர்களும் தோன்றியது”. (Evolution theory).
அனைத்து  மதவாதிகளும் பெரு விரிவாக்க கொள்கையை எதிர்ப்பது இல்லை.இது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.வேண்டுமெனில் விளக்குவோம்!.
மதங்கள் கூறும் படைப்புக் கொள்கையையே பரிணாம கொள்கை முன் உயிர்களின் தோற்றமாக ஏற்கப்பட்டு வந்தது. அதனை பரிணாமத்தின் மாற்றாக மதவாதிகள் வைப்பது உண்டும்
1.இளைய பூமி கொள்கை [Young earth creationism]
2.பழைய பூமி கொள்கை [Old earth creationism]
இவற்றின் படி மத புத்தகங்கள் கூறும் படைப்பு செயல்களை இப்போதைய அறிவியலின் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளோடு ஒட்டியோ, வெட்டியோ விளக்குவதாகும். இவற்றில் பல சிக்கல்கள் இருப்பதால் பரிணாம்த்திற்கு மாற்று ஒன்று இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அது அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்று அழைக்கப்படுகிறது.
அதனை என்ப்படி வரையறுப்பது?
பிரபஞ்சம்,உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  அறிவு சார்ந்த காரணி மூலமே நன்றாக விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.”
“certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not a possibly undirected process such as natural selection.”
இது குறித்த பல தகவல்களை இத்தொடர் பதிவில் பார்ப்போம்.