Tag Archives: அறிவியலாளர்கள்

பரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்?

22 ஜூன்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 4

 darwin

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?

 

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ‘ஜல்லியடிப்புகள்’ எனும் சொல்லை ஏன் பாவித்திருக்கிறேன்? ஏனென்றால் மெய்யாகவே நண்பர் ஆஷிக்கின் கட்டுரையில் படைப்புவாதத்தை நிருவுவதாக கருதிக் கொண்டு அத்தனை ஜல்லியடிப்புகளை செய்திருக்கிறார் என்பதால் தான். தலைப்பை எடுத்துக் கொள்வோம், “பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?” பரிணாமம் உண்மையென்றால் இந்த சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆஷிக்? பரிணாமம் குறித்த அறிவியல் நிலை என்ன? புவியில் உயிரினப் பரவலை விளக்கும் சிறந்த கோட்பாடு.கவனிக்கவும் அறிவியல் கோட்பாடு தானேயன்றி அறிவியல் உண்மையல்ல. பெருவெடிப்புக் கொள்கை எப்படி ஓர் அறிவியல் கோட்பாடோ அதே போல் பரிணாமக் கொள்கையும் ஓர் அறிவியல் கோட்பாடு. பெருவெடிப்புக் கொள்கையைவிட சிறந்த கோட்பாடு ஒன்று தோன்றினால் எப்படி பெருவெடிப்புக் கொள்கை காலங்கடந்ததாய் போய்விடுமோ அதேபோன்று சிறந்த வேறொரு கோட்பாடு தோன்றினால் பரிணாமக் கொள்கையும் காலங்கடந்த ஒன்றாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில் உயிரினப் பரவலை விளக்க பரிணாமத்தை விட சிறந்த கோட்பாடு ஒன்று இல்லை. மட்டுமன்றி டார்வின் கூறிய அதே அடிப்படைகளோடு இன்றைய பரிணாமக் கொள்கையும் இல்லை. பின்னர் வந்த அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அலோபதி மருத்துவ முறை தொடங்கி உடற்கூறியல் ஆய்வுகள் வரை அனைத்தும் பரிணாமத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் அறிவியலுக்கும் மதவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு சிறு சான்று கிடைத்தாலும் அதைக் கொண்டு தான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது தள்ளி விடுவது தான் அறிவியலின் இயல்பு.இந்த அடிப்படையில் தான் பரிணாமம் அறிவியல் உண்மையல்ல, அறிவியல் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் உண்மை போல திரிப்பது எதற்காக? அப்போது தான் தங்கள் மதவாத புரட்டுகளை உண்மைபோல திணிக்கமுடியும் அதற்காக.

 

தலைப்பை அடுத்து ஒரு மீப்பெரும் பொய்யுடன் தன் கட்டுரையை தொடங்குகிறார் ஆஷிக். படைப்புவாதிகளின் வாதங்களுக்கு பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் தகுந்த பதிலளிக்கவில்லையாம். அறிவியலாளர்களை விட்டுவிடுங்கள்,மதவாதிகளுக்கு பதில் கூறும் சுமையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பொறுப்பை பொருள்முதல்வாதிகள் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கே உங்கள் வாதங்களை எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அதாவது பொருள்முதல்வாதிகள் பதிலளிக்காத மதவியாதிகளின் கேள்விகள் ஏதேனும் மிச்சம் இருந்தால் .. .. .. அப்படி எந்த வாதமேனும் இருக்கிறதா?பொருள்முதல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி எழுப்பியவர்களை தாக்கியும், முடக்கியும், கொன்றும் வருகிறார்கள் மதவாதிகள். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கில்லை. அறிவியலாளன் முதல் சாமானியன் வரை மதவியாதிகளின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்துக்கும் ஆளானவர்களின் பட்டியல் வேண்டுமா?வரலாற்றில் தேடிப்பாருங்கள், பக்கங்கள் போதாது. இப்படி ஒரு அறுவெறுக்கத்தக்க பக்கத்தை தாங்கி நிற்கும் மதவாதிகளா தங்களின் வாதங்களுக்கு பதிலில்லை என்று பேசுவது?

 

அடுத்து, அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதால் பரிணாமத்தை நிராகரிக்க முடியுமா? பெருவெடிப்புக் கொள்கை குறித்தும் அறிவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதன் காரணத்தைக் கொண்டு மதவாதிகள் ஏன் அதை நிராகரிக்கக் கூடாது? இந்த இடத்தில் ஒப்பீட்டளவில் ஏன் பெருவெடிப்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்கிறேன் எனும் கேள்வி எழக் கூடும். ஏனென்றால் நண்பர் ஆஷிக் போன்ற மதவாதிகள் பெருவெடிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாலும், பரிணாமத்திற்கான காரண கரியங்கள் பெருவெடிப்புக்கும் பொருந்தும் என்பதாலும், மதவாதிகளின் அறிவியல் பார்வை அவர்களின் வேதத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது மட்டும் தானேயன்றி அறிவியல் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தவும் தான்.

 

ஒரு ஆய்வில் கருத்து வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கொண்டு அந்த ஆய்வின் தன்மைகள் ஒரு போதும் தீர்மானிக்கப் பட்டதில்லை. அது நடைமுறையோடு பொருந்துகிறதா? மீண்டும் மீண்டும் சோதித்தறிய ஏதுவாய் இருக்கிறதா?சரியாய் இருக்கிறதா? என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஆனால் பரிணாமத்தை நிராகரிக்கக் கோரும் மதவாதிகள் கூறும் காரணங்கள் இந்த எல்லைக்குள் இருப்பதே இல்லை. அறிவியல் செய்யும் அனைத்து ஆய்வுகள் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கருத்து வேறுபாடுகள் அந்த ஆய்வை மேலும் செழுமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.ஆனாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் பரிணாமத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமன்றி பரிணாமத்தை எதிர்க்கும் அறிவியலாளர்களும் கூட பரிணாமவியல் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிற கோட்பாடுகளின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட பரிணாமத்தின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். இதற்கான காரணம் என்ன?

 

அறிவியல் உண்மைகளின் மீது கருத்து வேறுபாடுகள் எதுவும் எழுவதில்லை. கோட்பாடுகளில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் எழும். அறிவியல் கோட்பாடுகளின் மீதான கருத்து வேறுபாடுகள் எதில் குறைவாக இருக்கிறது எதில் அதிகமாக இருக்கிறது என்பதை பகுத்துப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கி விடும். அந்த வகையில் கடவுளை மதங்களை நேரடியாகத் தாக்கும் எந்தக் கோட்பாடுகளின் மீதும் கருத்து வேறுபாடுகள் கடுமையாக எழுந்திருக்கின்றன. கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மீது எழாத கருத்து வேறுபாடுகளா? புரூணோவின் மீது செய்யப்படாத விமர்சனங்களா? கம்யூனிசத்தின் மீது செய்யப்படாத அவதூறுகளா? (கம்யூனிசம் என்பது அரசியல் கட்சிக் கோட்பாடு அல்ல, இயங்கியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக அறிவியல் என்பதை அறிக) இந்த அடிப்படையில் தான் பரிணாமத்தின் மீதும் கருத்து வேறுபாடுகள் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது பன்னெடுங்காலமாக தாங்கள் நம்பிவரும் நம்பிக்கையின் மீதான பற்றுறுதியின் விளைவே பரிணாமத்தின் மீதான இவ்வளவு கருத்து வேறுபாடுகளுக்குமான காரணம். அறிவியலாளர்களிலும் அனேகர் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

 

அறிவியலாளர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் அல்லர். அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்களோ அதில் மட்டுமே அவர்கள் சிறந்தவர்கள். அறிவியலாளர்களுக்கும் மூடநம்பிக்கைகள் உண்டு. எடுத்துக்காட்டு ஒவ்வொரு முறை ஏவூர்தியை(ராக்கெட்) ஏவும்போதும் பூஜை செய்து ஏவுவது ஸ்ரீஹரிகோட்டாவில் வாடிக்கை, அவ்வளவு ஏன் சந்திராயன்1ஏவூர்தி மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து விட்டு பின்னர் ஏவியிருக்கிறார்கள். இதைச் செய்தது அறிவியலாளர்கள் என்பதால் அவர்களின் செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? எது அறிவியலின் அடிப்படையில் சரியாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். இப்போது நண்பர் ஆஷிக் கொடுத்திருக்கும் பட்டியலிலுள்ள இருநூற்றுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் பரிணாமத்தை எதிர்க்கிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? கூறுங்கள் பரிசீலிக்கலாம். ஐ.டி.யை ஏற்பவர்கள் பரிணாமத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை.அவர்கள் எந்த அடிப்படையில் ஏற்கவில்லை என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் பரிசீலிப்பதற்கு வசதியாக இருக்கும்.ஏனைய கோட்பாட்டை ஏற்பவர்கள் எனும் அடிப்படையில் பரிணாமத்தை மறுக்கிறார்களா? அல்லது பாலாஜியின் காலில் வைத்தார்களே அந்த அடிப்படையில் மறுக்கிறார்களா? பாலாஜியின் காலில் வைத்த அடிப்படை என்றால் அதை புறந்தள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை.

 

அடுத்து நண்பர் ஆஷிக் மேற்கோள் காட்டும் கட்டுரையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அம்சங்களும் அந்த கட்டுரையில் இருக்கிறது. நண்பர் ஆஷிக்கின் மொழிபெயர்ப்பு வாயிலாகவே பார்ப்போம். \\\ஆச்சர்யமளிக்கும் வகையில்,தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் படைப்பு கோட்பாடை நம்புகின்றனர்/// \\\இந்த அறிவியலாளர்கள் அனைவரும், கடவுள்தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார், இவைகள் தற்செயலாக வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள்/// இந்த இரண்டு கூற்றுகளையும் பாருங்கள். நிச்சயமாக இவை அறிவியலாளர்களின் கூற்றுகளாய் இருந்திருக்க முடியாது. படைப்புக் கோட்பாட்டை நம்புபவர்கள் அதை அறிவியல் அடிப்படையில் நம்ப முடியுமா?பாலாஜியின் காலில் வைத்த அடிப்படையில் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்பினால் அது அறிவியலின் வழியில் வந்த முடிவாக இருக்க முடியாது. அறிவியலின் வழி பார்த்தால் நிச்சயம் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்ப வாய்ப்பில்லை.தற்செயலாக இவ்வுலகம் வந்தது என்பது மதவாதிகள் பாவிக்கும் சொல். இச்சொல் ஒரு அறிவியலாளனின் வாயிலிருந்து வந்திருக்க முடியாது. ஏனென்றால் அறிவியலாளர்கள் எல்லாம் ஒரு சிங்குலாரிடியிலிருந்து வந்தது அதற்கு முன் அதற்கு முன் என்னவென்றி இன்னும் அறியப்படவில்லை என்று தான் கூறுவார்களேயன்றி பேரண்டம் தற்செயலாக வந்தது என்று கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவது அறிவியலே அல்ல. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் எளிமையாக விளக்கலாம்.இருவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புதுச் சட்டை அணிந்திருக்கிறார், மற்றொருவரோ நைந்து கிழிந்து இற்றுப் போயிருக்கும் சட்டையை அணிந்து கொண்டிருக்கிறார். இப்போது இன்னொருவர் வந்து கையில் உருப் பெருக்கியுடன் புதுச் சட்டையை உற்றுப் பார்த்து இந்த இடத்தில் ஒரு நூல் அருந்திருக்கிறது, அந்த இடத்தில் ஒரு நூல் வண்ணம் மாற்றி நெய்யப்பட்டிருக்கிறது, இன்னொரு இடத்தில் ஒரு நூலின் முறுக்கு குறைவாக இருக்கிறது. பிறிதொரு இடத்திலோ ஒரு நூல் எதிர்முறுக்காக இருக்கிறது. எனவே, நான் நைந்து போன சட்டையை ஏற்கிறேன் என்று அவர் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இப்போது கூறுங்கள் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

 

இன்னொரு அம்சத்தையும் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல் ஆய்வு என்பவை, அறிவியலாளர்கள் என்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு ஒப்பவே அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நலன் காக்காத, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எந்த ஒரு ஆய்வையும் எந்த ஒரு அறிவியலாளனும் நிகழ்த்திவிட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம்.ஏகாதிபத்தியங்களுக்கு கடவுள் நம்பிக்கை உதவி செய்ய வல்லது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.

 

அடுத்து, ஒரு முக்கியமான இடத்துக்கு வருவோம். குறிப்பிட்ட அந்த டெலிகிராப் நாளிதழில் வெளியிட்ப்பட்ட அறிக்கை டார்வினின் சொந்த வாழ்வை முன்வைத்து எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தினை முன்வைத்து எழுதப்பட்டது என்பதை நண்பர் ஆஷிக் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டால் அது ஓர் அறிவியல் கட்டுரை போன்ற தோற்றத்துக்கு உதவாது என நண்பர் நினைத்திருக்கலாம். பரவாயில்லை அதை விட்டு விடுவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் தவிர்க்க முடியாத அம்சம் பரிணாமத்தை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் கூறப்படும் ஐந்து காரணங்கள். இவைகளை நண்பர் ஆஷிக் லேசாக தொட்டு விட்டு கடந்து சென்று விட்டார். அந்த காரணங்களைப் பார்க்கலாம்.

 

பரிணாம ஆதரவு வாதங்கள்:

  1. உயிரினப் பரவலை பரிணாமக் கோட்பாடுபோல் வேறெதுவும் விளக்கவில்லை.
  1. பரிணாமக் கோட்பாடு விளக்கமாகவும் பொருள் சார்ந்தும் இருக்கிறது.
  1. பெரும்பாலான அறிவியல் சமூகமும் கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுவங்களும் பரிணாம கோட்பாட்டை ஆதரிக்கிறது.
  1. பேரண்டம் தோன்றிய காலம் குறித்து வேதங்கள் கொடுக்கும் கணக்கு ஏற்புடையதாக இல்லை.
  1. நோவாவின் கப்பலைக் காட்டுங்கள்.

 

பரிணாம எதிர்ப்பு வாதங்கள்:

  1. பரிணாமக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை. இருந்திருந்தால் நமக்கு இன்னும் அதிகம் உயிரினப் படிவங்கள் கிடைத்திருக்கும்.
  1. பரிணாமவாதிகளின் கூற்றுப்படி உலகம் பழையது என்றால் கிடைத்திருப்பதை விட இன்னும் அதிகம் எலும்புக் கூடுகளும், குகை ஓவியங்களும் கிடைத்திருக்க வேண்டும். கடலில் இன்னும் அதிகம் சோடியம் குளோரைடும், அதிக வண்டலும் சேர்ந்திருக்க வேண்டும்.
  1. இருட்டில் பார்ப்பதற்கு சில உயிரினங்கள் செயல்படுத்தும் கூட்டுக் கண் குறித்து பரிணாமத்தில் தெளிவான விளக்கங்கள் இல்லை.
  1. வேதத்தில் பூமியின் படைப்பில் வரும் நாட்கள் என்பதை காலங்கள் என்று கொள்ள வேண்டும்.
  1. என்ன நோக்கத்திற்காக இவைகளெல்லாம் ஏற்பட வேண்டும்?

 

இந்தக் காரணங்களை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இவை கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களாக இருக்கிறது என்று. பரிணாமத்தை முதன்மைப்படுத்தி கேட்கப்பட்ட கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களை அந்தக் கட்டுரை பரிணாமத்திற்கான காரணங்களாக குறுக்க வேண்டிய அவசியமென்ன? எளிமையான காரணம் தான். பரிணாமத்தை திரித்துப் புரட்டி ஆஷிக் பாய் தமிழில் எழுதும் கட்டுரைகள் போலவே ஆங்கிலத்தில் யாரோ ஒரு மஹானுபாவர் கட்டுரை எழுத அதை டெலிகிராப் பத்திரிக்கை பிரசுரிக்க அதைப் பார்த்த ஆஷிக் புளகமடைந்து போய் கொஞ்சம் கூட்டிக் குறைத்து தமிழ்க் கட்டுரையாக்கி விட்டார். அவ்வளவு தான்.

 

இந்தக் கட்டுரையில் நண்பர் ஆஷிக் பிம்பமாக்கல் ஒன்றையும் செய்திருக்கிறார். பரிணாமத்தை எதிர்க்கிறேன் என்று எந்த ஆய்வாளரும் கருத்து தெரிவித்து விட்டால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாவாராம் அதனால் பரிணாம எதிர்ப்பை வெளிப்படையாக கூற தயங்குகிறார்களாம். இதற்கு பின்னூட்டத்திலும் விளக்கங்கள் அளித்திருக்கிறார். படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.யார் எதை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்குவார்கள் என்பதற்கு நிகழ் காலத்திலும் வரலாறுகளிலும் அனேக சான்றுகள் உண்டு, எனவே அவைகளை விட்டு விட்டு ஆஷிக்கின் பின்னூட்ட பதில்களிலிருந்து பார்ப்போம். பரிணாமவியலை எதிர்த்து கருத்து கூறினால் என்ன நடக்கும்? அவர்களது கட்டுரை பிரசுரிக்கப்படாது அதிகபட்சம் வேலை இழக்கலாம். ஆனால் இது எங்கே நடக்கிறது என்று ஆஷிக் கூறுகிறார்? NAS போன்ற பரிணாமத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்போர். அதை எதிர்த்து கருத்து கூறமுடியாது. கூறினால் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாதாம் வேலையிழப்பார்களாம். திமுகவில் இருந்து கொண்டு கருணாநிதியை எதிர்த்து கட்டுரை எழுதி அதை முரசொலியில் பிரசுரிக்கவில்லை, திமுகவை விட்டு தூக்கிவிட்டார்கள் என்று கூக்குரலிட்டால் அது எப்படி இருக்கும்?ஜனநாயக அமைப்பாக இருந்தால் அது விமர்சனங்களைப் பரிசீலிக்கும் இல்லாவிட்டால் அதன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். இதை பரிணாமத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உலகில் இருக்கமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நேர்மையாளர்களின் செயலா? நண்பர் ஆஷிக்கிற்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான், வரலாற்றை திரும்பிப் பாருங்கள் ஆத்திகர்களின் கைகளில் சிக்கி நாத்திகர்கள் அனுபவித்த ரத்தக்கரை படிந்த நீண்ட நெடிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். அது ஏன் என்பதற்கான பதிலை தேடிப் பாருங்கள். புரியாமல் நீங்கள் மதவாதியாக இருந்தால் அது உங்களுக்கு புரிதலைத் தரும். தரவேண்டும்.

ஆஷிக் உட்பட அத்தனை மதவாதிகளும் பதிலளிக்காத, பதிலளிக்க விரும்பாத, பதிலளிக்க முடியாத நம்முடைய ஆதாரக் கேள்வி – பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். எங்கே உங்களின் படைப்புக் கொள்கை சரி என்பதற்கான ஆதாரங்கள்?

 

இதற்கு மேலும் இந்தக் கட்டுரையை நீட்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை நண்பர் ஆஷிக் மேற்கண்ட ஐந்து காரணங்களுக்கும் விளக்கம் வேண்டும் எனக் கோரினால் அப்போது இந்தக் கட்டுரையின் பின் இணைப்பாக அவைகளை விளக்கி அடுத்த கட்டுரையாக எழுதிக் கொல்ளலாம்.

இத்தொடரின் முந்திய கட்டுரைகள்:

1. எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

2. புரிதலை மறுக்கும் புதிர்கள்

3. டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!

10 ஜன

ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும் அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் இருக்கின்றனர்.

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌ முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்

மொத்த அளவு (மெ.வா) குறிப்புகள்
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் 1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) 1,080 இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540 ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 405 மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு 305 பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 610

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும்.

தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். மெ.வா குறிப்புகள்
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு >>500 இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 1,575 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 2,625 இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்

காற்றாலை 700 மெகாவாட் தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
உயிர்ம எரிபொருள் 900 மெகாவாட் உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல் >> 5,000 மெகாவாட் தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் மிக அதிக அளவு சேமிப்பு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..

மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.

அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.

வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகிறோமா ?

– சங்கர் சர்மா

மின் கொள்கை ஆய்வாளர்

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

முதல் பதிவு: பூவுலகின் நண்பர்கள்

 

மரபணு மாற்று முறையில் மனித உறுப்புகள்

28 மார்ச்

மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் சீன மருத்துவ விஞ்ஞானிகள்.

இப்போது தேவையான உடல் உறுப்புகளை மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று, பாதிக்கப்பட்ட மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவருகிறார்கள்.

மனித உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதால், தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

*****************************************************

அறிவியல், மருத்துவ ஆய்வுகள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயன்பாடுள்ளதாக, பயன்தரத் தக்கதாக இருக்கிறது என்பதைத் தான் இது போன்ற ஆய்வுகளில் முதன்மைத் தனமுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது போன்ற முதன்மைத் தனமுள்ள ஆய்வுகளெல்லாம் சந்தைப் படுத்தப்பட்டு மக்களை சுரண்டும் நோக்கிலேயே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது வலிதரக் கூடிய யதார்த்தம். இந்த நிலை மாறவேண்டும், மாற்ற மக்கள் முன்வரவேண்டும்.

ஜிஎஸ்எல்வி தோல்வி: குழு அமைத்து ஆராய வேண்டியது எதை?

1 ஜன

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆராய வல்லுநர் குழுவை அமைத்துள்ளது இஸ்ரோ.

இதற்கான காரணத்தை ஆராய்ந்து ஜனவரி இறுதிக்குள் அறிக்கை அளிக்க இஸ்ரோ
முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தலைமையில் 11 பேர் கொண்ட திறனாய்வுக் குழுவை இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அமைத்துள்ளார்.

இத்துடன், ரஷியாவின் கிரையோஜெனிக் என்ஜின் உள்பட எதிர்காலத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கும் ஜிஎஸ்எல்வி ஏவுகலன்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பற்றியும் பரிந்துரைக்க வேண்டுமென இக்குழுவை இஸ்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர, ஜிஎஸ்எல்வி ஏவுகலன்களின் எதிர்காலத் திட்டங்கள், இன்சாட், ஜிசாட் வரிசை, இன்சாட் 3டி மற்றும் சந்திரயான் 2 செயற்கைக்கோள்களை உறுதியாக ஏவுவது,  கிரையோஜெனிக் என்ஜின்களின் தயாரிப்பு- இயக்கம், எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களின் உடனடி தேவையை நிறைவு செய்வதற்கான வியூகம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிக்கை அளிக்க திட்ட மீளாய்வு, வியூக குழுவை இஸ்ரோ தலைவர் அமைத்துள்ளார்.

திட்டக்குழு உறுப்பினரும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் 7 பேர் கொண்ட இக்குழு, ஜனவரி இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரு குழுக்களும் அளிக்கும் அறிக்கைகள் நாட்டின் தலைச்சிறந்த வல்லுநர்களான அப்துல் கலாம், எம்.ஜி.கே.மேனன், யஷ்பால், யூ.ஆர்.ராவ், கே.கஸ்தூரிரங்கன், ஜி.மாதவன் நாயர், ஆர்.சிதம்பரம், ஆர்.நரசிம்ஹா ஆகியோரிடம் அளித்து கருத்தறியப்படும்.

விண்வெளி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சி.குப்தா தலைமையிலான குழுவினர், இஸ்ரோவின் செயல்பாடுகளில் தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு ஆலோசனை வழங்குவார்கள் என்றும் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***************************************************

பொதுவாக இதுபோன்ற ஏவுதல்கள் வெற்றியடைந்தால் தேசியப் பெருமிதத்தில் மகிழ்வதும், தோல்வியடைந்தால் வருந்துவதும் மக்களிடம் ஓர் இயல்பாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அறிவியல் உச்சங்களெல்லாம் பெருநிறுவங்களுக்கு சேவை செய்வதற்குத்தான் பயன்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன. அப்படியானால் மக்கள் பெருமித உணர்வு கொள்வது வீணானதா? ஆம். அது ஏற்பட்ட பெருமிதமல்ல, ஏற்படுத்தப்படும் பெருமிதம். விரிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள கட்டுரையைப் படியுங்கள்.

ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்

புதிய உயிரி கண்டுபிடிப்பு

4 டிசம்பர்

NASA discovery changes scientific definition of Life!

உயிரின் அடிப்படை ரசாயனமான பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற தனிமம் கொண்ட புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு உயிர் உருவாக 6 வேதியல் பொருட்கள் கட்டாயம் என்பது தான் இதுவரை உயிரிலார்கள் கூறி வந்த ‘விதி’. அந்த 6 பொருட்கள்: கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர்.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் இந்த ரசாயனங்களால் உருவானவை தான்.

இதில் டிஎன்ஏ (deoxyribo nucleic acid-DNA ) எனப்படும் நமது ஜீன்கள் உருவாக பாஸ்பரஸ் மிக மிக அவசியம். இதனால் உயிரின் அடிப்படை வேதிப் பொருள்களில் மிக முக்கியமானதாக பாஸ்பரஸ் கருதப்படுகிறது.

இதனால் பாஸ்பரஸ் இல்லாமல் உயிர் என்பதே இல்லை என்பது தான் இதுவரை கூறப்பட்டு வந்த இயற்கை விதி.

ஆனால், நேற்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா இந்த அடிப்படை விதியையே தகர்க்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது பூமியில் ஒரு புதிய ரக பாக்டீரியாவை நாஸா கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவின டிஎன்ஏவில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டிஎன்ஏவி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் என்பது விஷத்தன்மை கொண்ட, உயிர்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒரு தனிமம். ஆனால், அதுவே ஒரு உயிரை உருவாக்கியும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஏரியில் இந்த பாக்டீரியாவை கணடுபிடித்துள்ளார் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுப் பிரிவு விஞ்ஞானியான பெலிஸா வோல்பே சிமோன்.

இவர் சில ஆண்டுகளுக்கு முனபே, உயிர் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமி உருவானபோது நிலவிய சூழல், இருந்த விஷ வாயுக்கள் சூழ்ந்த வளிமண்டலம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, பாஸ்பரசின் ரசாயன குணங்களைக் கொண்ட ஆர்சனிக் போன்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கூட உயிர்களை உருவாக்கியிருக்கலாம். அந்த வகை உயிர்கள் இன்னும் கூட எங்காவது இருக்கலாம் கூறியிருந்தார்.

அப்போது இவரது இந்தக் கருத்தை ஆச்சரியத்துடன் பார்த்த நாஸா, அது குறித்து மேலும் விரிவான ஆய்வு நடத்த இவருக்கு நிதியுதவி வழங்கியது.

இதையடுத்து சிமோனின் விஞ்ஞானிகள் டீம் இந்த மாற்றுவகை உயிர் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினர்.

அவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த ஆர்சனிக் ஆராய்ச்சியாளராகக் கருதப்படும் ரோனால்ட் ஓரேம்லாண்ட் பெரும் உதவிகள் செய்தார். இவர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த ஆராச்சியாளர் ஆவார். உலகின் ஆர்சனிக் நிறைந்த பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சிமோனின் குழுவினரை வழிநடத்தினார்.

அவர் சொன்ன இடங்களில் ஒன்று தான் கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஆர்சனிக் நிறைந்த விஷ ஏரி. அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு GFAJ-1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ‘உயிர்’ என்பது இது தான் என்ற அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

******************************************************

கடவுளின் தனிப்பட்ட தகுதி என கருதப்படும் படைப்பில் அடுத்தடுத்து அறிவியலாளர்கள் புதிய பரிமாண‌ங்களை எட்டி வருகின்றனர். செயற்கை உயிர் தொடங்கி, புதுவகை உயிர்வரை ஒவ்வொன்றிலும் அடுத்தடுத்த படிகளைக் கண்டு முன்னேறி வருகின்றனர். மனிதர்களின் மூடநம்பிக்கைகளை சரியான அறிவியல் பார்வையே உடைக்கவல்லது என்பதால் இது குறித்த அறிதல்கள் அனைவருக்கும் எழ வேண்டும்.

செயற்கை உயிர் பற்றிய ஒரு கட்டுரையையும் அதனைச்சுற்றி நடந்த விவாதங்களையும் காண ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் கட்டுரையை படிக்கலாம்.

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?