தொகுப்பு | பிப்ரவரி, 2011

பெண் என்றால் அவ்வளவு இள‌க்காரமா?

27 பிப்

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது.

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது.

காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது.

இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர்.

பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர்.

இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார்.

இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.

இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது.

இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

*******************************************************

இது உச்சகட்ட ஆணாதிக்கத்திமிர். பெண் என்றால் அடுப்படிக்குத்தான் சரி எனும் மமதையின் வெளிப்பாடு. அந்த நிறுவனமும் இதை ஆமோதித்து விமானியை மாற்றிய செயல் அறுவெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது. பெண்ணிலிருந்து பிறந்து வந்து பெண்மையை கேவலப்படுத்தும் இதுபோன்ற பொறுக்கிகள் காறி உமிழவும் அறுகதையற்றவர்கள்.

நமது பால்வீதியில் 54 கோள்களில் உயிர்கள் இருக்கலாம்

27 பிப்

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத் திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது.

மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ பெரிசு.

இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெ ரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும்.

கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்.

 

நன்றி: தமிழ் சி.என்.என்

பூப்படைதல் குறித்து பேசுதல் அவசியம்

27 பிப்

ஒவ்வொரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும். சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோசப் பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவின்மையால் பல மன உளைச்சல்கள் ஏற்படலாம்.

இதைத் தவிர்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படைதலின் போது நடைபெறும் மாற்றங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வேண்டும்.

இந்த அறிவினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. பூப்படைதலின் முதற் கட்டமாக ஒரு பெண்ணின் மார்பு வளர்ச்சி ஆரம்பிக்கும்.

அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியமாக இருக்கலாம். தொடர்ந்து அவர்களின் அக்குள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் மயிர்கள் வளருதல்.

இந்த புதிய மாற்றங்கள் அவர்களின் பூப்படைதலின் ஆரம்ப நிலை என்றும் இதுவே ஒவ்வொரு பெண்ணிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு என்றும் அடிப்படை அறிவை அந்த பெண்ணிற்கு புகட்டவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

குறிப்பாக தாய் இது பற்றி தன் பெண்ணோடு மனது விட்டு உரையாட வேண்டும். இந்த நேரத்திலேயே அடுத்தகட்டமாக ஆரம்பிக்கப்போகும் மாதவிடாய் பற்றி அது ஆரம்பிக்கும் முன்னமே எடுத்துக் கூறி அதை அந்தக் பிள்ளை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

சிலவேளைகளில் தாய் மாதவிடாய் காரணமாக சில அசௌகரியங்களை சந்திப்பவராக இருக்கலாம். ஆனாலும் தன் பிள்ளையிடம் அது பற்றி கூறாமல் மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணிலும் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அதுவே அவர்களின் பெண்மைக்கு அடையாளமாக அமைவதோடு பிற்காலத்தில் அவர்களிற்கு தாய்மைத் தன்மையை அழிக்கப் போவது என்று கூறி அவர்களை மாத விடாயை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுபடி செய்ய வேண்டும்.

அத்தோடு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கினை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் பூரணமான அறிவை அது ஏற்படுவதற்கு முன்னமே ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

மேலும் மாதவிடாய் சம்பந்தமாக அந்தப் பெண் பிள்ளையின் மனதிலே நிறையச் சந்தேகங்கள் எழலாம். குறிப்பாக,

1. மாதவிடாய் காலத்தில்எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?

2. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?

3. மாதவிடாய் காலத்தில் தான் குளிக்கலாமா?

4. மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கலாம்.

தாய் இதுபற்றி தானாகவே பேசத் தொடங்கி இது பற்றிய விபரங்களை பெண்ணுக்கு முழுமையாக தெரியப் படுத்த வேண்டும்.

குறிப்பாக மாதவிடாய் மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டாலும் சரியாக எத்தனை நாளுக்கு ஒருமுறை ஏற்படும் என்பது பெண்ணுக்கு பெண் வேறுபாடும். 21.நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்று தெரியப்படுத்த வேண்டும் .

அதாவது சில பெண்களிலே 21 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும்.சில பேர்ல32 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லதுசில பேரிலே 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படலாம்.

21 தொடக்கம் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்றும் இது சரியாக ஒவ்வொரு மாதத்திற்கும்(30நாட்கள்) ஒருமுறைதான் ஏற்பட வேண்டியதில்லை என்றும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்ததாக மாதவிடாய் காலத்தில் மிதமான வயிற்று வலி ஏற்படலாம் என்றும் இது சில நாட்களுக்கே இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி வைக்க வேண்டும்.

மேலும் மாதவிடாய் காலத்தில் சாதாரணமான நடவடிக்கைகள் (சைக்கிள் ஓடுதல், நடனமாடுதல், விளையாடுதல்) போன்றவற்றிலும் ஈடுபடலாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் பெண் பிள்ளையை மாதவிடாய் ஆரம்பத்தினாலும் , பூப்படைதளினாலும் ஏற்படப் போகும் மாற்றங்களை எதிர்கொள்ளும் முகமாக தயார் படுத்த வேண்டும்.

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை 1

25 பிப்

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.

ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.

ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள்
,மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.

ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035-திருக்குறள்)

(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)

இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை
விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகா வின் வார்த்தைகள்.

இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(விருந்தோம்பல்..குறள் 81)

இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.

அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.

இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.

இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.

ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.

நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.

வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)

இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.

ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.

இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.

இன்று..

நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.

இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப்
பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.

65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.

மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.

மரபணு மாற்று..

உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும்
பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.

சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?

முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம்.நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.

விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.

இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.

மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.

இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.

விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.

இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..

கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

 

நன்றி: மணற்கேணி

கன்னடியன்கால் மறியலும் நதி நீர் இணைப்பும்

25 பிப்

தமிழகத்தில், முதன் முதலாக துவக்கப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டம், அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக தாமிரபரணி உள்ளது. இந்த நதி, கன்னடியன்கால் அணைக்கட்டுக்கு வந்து, பின் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு கால்வாய்கள் வழியாக, பாசனத்திற்கு செல்கிறது.

இதன் மூலம், நெல்லை மாவட்டத்தில், 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில், 46 ஆயிரம் ஏக்கரும், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தாமிரபரணி நதி மூலம், ஆண்டுதோறும், 13 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வீணாகிறது. எனவே தான், வீணாகும் தண்ணீரை, இன்னொரு பகுதிக்கு பயன்படுத்தும் விதமாக, தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம், 2009ல் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம், கன்னடியன்கால் அணைக்கட்டில் இருந்து வெளியாகும் தண்ணீரை, வெள்ளங்குழி என்னுமிடத்தில் திருப்பிவிட்டு கருமேனியாறு, நம்பியாறு உள்ளிட்ட, ஐந்து நதிகளை கடந்து, சாத்தான்குளம் அருகே, எம்.எல்.தேரி வரையிலும், 73 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் கொண்டு செல்ல, 369 கோடி ரூபாயில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.

இதன் மூலம், 3,040 எக்டேர் நிலம் பாசன வசதி பெறும். இதற்காக, கன்னடியன் அணைக்கட்டின் உயரம், 3 அடி உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளில் சிலர், இந்த அணைக்கட்டு உயர்த்தப்பட்டதால், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வராது என்ற தவறான தகவலால், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை செயலரும் முன்னாள் நெல்லை மாவட்ட கலெக்டருமான தனவேல், விவசாயிகளிடம் இதை தெளிவாக தெரிவித்தார். “வெள்ளநீர் கால்வாய் திட்டம் வெள்ளக்காலங்களில் மட்டுமே செயல்படும். மற்ற காலங்களில் தண்ணீர் விடமாட்டோம். எனவே, விவசாயிகள் பீதியடையத்தேவையில்லை” எனக் கூறினார்.

போராட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரே திரளாக கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். போக்குவரத்தை தடை செய்தனர். சைக்கிளில் சென்றவர்களை கூட அடித்து உதைத்தனர்.

இருப்பினும், அரசியல் நிர்பந்தம் காரணமாக போலீசார் அமைதி காத்தனர். தடியடி நடத்தி கலைத்தால், மாநில அளவில், பிரச்னை பூதாகரமாக்கப்படும் என்பதால், போலீசார் மவுனம் காத்தனர். மாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் நடக்காமல் கலைந்து சென்றனர்.

நெல்லையில் செயல்படுத்தப்படும் வெள்ளநீர் கால்வாய் திட்டம், தமிழகத்தின் முதல் திட்டம். இதனால் எந்த பாதிப்பும் கிடையாது என அதிகாரிகள் விளக்கிக்கூறியும், அரசியல் ரீதியாக எதிர்கொள்வதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

************************************************

இந்தியாவைப் பொருத்தவரை போதுமான அளவுக்கு ஆறுகள் இருக்கின்றன. மழைநீரும் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது. ஆனாலும் தண்ணீர் பிரச்சனை பூதாகரமாக உயர்ந்துகொண்டே செல்கிறது. உலகவங்கி எதிர்ப்பதால் நீர்நிலைகளில் பராமரிப்புப் பணிகளைச் செய்வதை அரசு சுத்தமாக கைவிட்டுவிட்டது. இதனிடையே பிராந்திய ஓட்டுக்கட்சி குண்டர்கள் ஆறுகளில் மணலை பெருங்கொள்ளையடிப்பதால் நீர்வளம் மேலும் வறண்டு போகிறது. மழைக் காலங்களிலோ வீணாக கடலில் கலக்கிறது. மணல் கொள்ளையை தடுத்து மழை நீரை ஏரி குளங்களில் சேமித்துப் பயன்படுத்த வகை செய்தாலே தண்ணீர் பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்ந்து போகும். இந்திய அளவிலும், மாநில அளவிலும் இதை எந்த ஓட்டுக் கட்சியும் செய்யாது, செய்யவும் முடியாது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை காரணம் காட்டித்தான் தேசிய நதிகளை இணைப்பது குறித்து பேசப்படுகிறது. இதனால் தண்ணீர் பிரச்சனை தீராது என்பதுடன் பல்தேசிய நாடான இந்தியாவில் தேசிய முரண்பாடுகளை பெரிய அளவில் கிளப்பியும் விடும். ஆனால் பன்னாட்டு நிதி அமைப்புகள் இந்திய நீர்வளத்தை மொத்தமாக தனியார்மயப் படுத்துவதற்காக இந்த திட்டத்தைத்தான் முன்னிருத்துகின்றன. அதனால் தான் ஓட்டுக் கட்சிகள் இந்தத்திட்டத்தை நீர்த்தேவைகளை தீர்க்கவந்த பெருந்திட்டமாக மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படும் மக்களும் அதை ஆதரிக்கும் மனோநிலையில் இருக்கிறார்கள். மக்களின் இந்த மனோநிலையை ஓட்டுக்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றன. எனவே மக்கள் எதிலும் மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக விளங்கிக்கொள்ள முன்வரவேண்டும். இல்லாவிட்டால் “உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா” என்பது போன்ற நிலைக்கு ஆளாக நேரிடும்.

சவுதியின் சலுகைகள் பயத்தின் வெளிப்பாடுகள்

24 பிப்

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். உடல் நலம் குன்றியிருந்து மன்னர் மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (23.02.2011) சவுதி திரும்பினார்.

நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.

**************************************************

அரபு நாடுகள் என்றில்லாமல் கிட்டத்தட்ட சௌதியின் தொங்குசதை நாடான பஹ்ரைனில் கூட மக்கள் எழுச்சியடைந்திருப்பது சவுதி ஆளும் வர்க்கத்திற்கு கிலியைத் தரும் ஒன்றுதான். ஏற்கனவே நஜ்ரான், ஜிசான் போன்ற எல்லையோரப் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து பலரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் மறுபக்கமாகவே புதிய சலுகைகளும், திட்டங்களும் அறிவிக்கப்படுகிறது. மக்கள் விழிப்புணர்வடைந்து விட்டால் இதுபோன்ற பிச்சைத்திட்டங்கள் எடுபடாது என்பது கடைசிவரை ஆளும் வர்க்கத்திற்கு விளங்குவதில்லை.

கட்சிகள் + நன்கொடை = ஊழல்

24 பிப்

தேர்தல் வந்தால் போதும் நிதி வசூலை ஆரம்பித்துவிடுகின்ற கட்சிகள். அது எங்கிருந்துதான் இந்தக் கட்சிகளுக்கு பணம் கொட்டுகிறதோ… ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிவிடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களை விட அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த கட்சிகளின் வருமானங்கள், அது தொடர்பாக அக்கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள் போன்ற விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இவற்றைப் பெற்று வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.

2007 – 08 மற்றும் 2008 – 09ம் ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள வருமானம் ரூ 717 கோடியே 69 லட்ச ரூபாய்!

பாஜக மட்டும் இளைத்ததா என்ன… ஆட்சியில் இல்லாவிட்டாலும் அக்கட்சி ரூ 343 கோடியே 8 லட்சம் ஈட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ 251 கோடியே 76 லட்சமும், ஏழைப் பங்காளர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி ரூ 122 கோடியே 53 லட்ச ரூபாயும், சமாஜ்வாடி கட்சி ரூ 71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் ரூ 57 கோடியே 40 லட்சமும், ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ 6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் பெற்றுள்ளது.

2007 – 08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008 – 09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பாஜகவுக்கு 6 கோடி ரூபாயும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

இவை வெளியில் தெரிந்த கணக்கு மட்டுமே. மறை முகமாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் இதைவிட இருமடங்கு இருக்கும் என்கிறது இந்த தகவல்களை வெளியிட்டுள்ள அமைப்பு.

இப்படியெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது எதற்காக? ஜனநாயகத்தை தழைக்கச் செய்யவா… ம்ஹூம்!

ஆட்சியிலிருக்கும் கட்சி மூலம் அதிக காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியாக உள்ள முக்கிய கட்சி அந்த காரியங்களைக் கெடுக்காமல் இருக்கவும்தான்

**********************************************

கோடிகளில் குளிக்கும் இந்த ஓட்டுக்கட்சிகளுக்கு, வரி ஏய்ப்பு முதல் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு கருப்புப்பணத்தை குவித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும்? ஓட்டுக்கட்சிகளுக்கே தெரியாத அவர்களில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நன்கொடைகளை அள்ளி வீசுகிறார்களா? ஒன்றுக்கு பத்தாக திருப்பியெடுக்கும் உத்திரவாதமில்லாத எதையும் எந்த முதலாளியும் செய்வதில்லை. இந்த நன்கொடைகள் தான் தொழிற்கொள்கை வழிமுறைகளை, சலுகைகளை தீர்மானிக்கின்றன. ஆக தங்களுக்கு சாதகமாக விதிமுறைகளை வளைப்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம் தான் இந்த நன்கொடைகள்.

அலைக்கற்றை விற்பனையை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்கு பணம் கொடுத்ததுதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால், இவற்றை நன்கொடைகள் என்று குறிப்பிடுவது அயோக்கியத்தனமானது. அதேநேரம் இந்தியாவில் செயல்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு தரகு நிறுவனங்களுக்கு சாதகமானவையே அன்றி மக்களுக்கு சாதகமானவை அல்ல. என்றால் இதை எப்படி ஜனநாயக அரசு என்று கூறமுடியும்?

பார்வதியம்மாளை இறந்த பின்னும் கொலை செய்த சிங்களவெறியர்கள்

23 பிப்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் மூன்று நாய்களை சுட்டுப் போட்டதுடன், அவரது அஸ்தியையும் தாறுமாறாக அள்ளி வீசியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை தமிழ் இணையதளங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நேற்று மாலை பார்வதியம்மாளின் உடல் அஞ்சலி நிகழ்வுக்குப் பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை மயானத்துக்குச் சென்று அஸ்தியை சேகரித்த முயன்றபோதுதான் அங்கு அஸ்தி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது தெரிந்தது.

மேலும், பார்வதியம்மா உடல் எரிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டும் இருந்தது.

சிங்களப் படைகளே இந்த கேவலமான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அந்தப் பகுதியினர் அச்சத்துடன் தெரிவித்தனர். நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் பார்வதியம்மாளின் இறுதிக் கிரியைகளை நடத்திய ஐயர் யார்? என சிங்களத்தில் மிரட்டும் தொனியில் விசாரித்ததாகவும் கூறினர்.

*****************************************************

இறுதிச் சடங்கிற்கான சாம்பலைக்கூட விட்டுவைக்காத மனிதத்தன்மையற்ற செயல் இது. ‘அடையாளம் தெரியாத சிலர்’ என்பது குற்றவாளிகளை மறைக்க நெடுங்காலமாய் பயன்படுத்தப்படும் உத்தி. இராணுவமோ, சிங்களவர்களோ, அல்லது வேறு யாரோ இது அவர்கள் எந்த அளவுக்கு வெறியேற்றப்பட்டு களமிற‌க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

லிபியா: வன்முறைக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலி

22 பிப்

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் நெல்லை வாலிபர் பலியானார்.5 பேர் காயமுற்றனர்.ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த சில தினங்களாக உள்நாட்டு கலவரம் வெடித்து நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த சுமார் 25 பேர், மற்றும் சொக்கம்பட்டி, நெற்கட்டும் செவல், சிந்தாமணிப்பேரிபுதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 50 பேர் லிபியா நாட்டில், கொரியா நாட்டின் டவர் கட்டுமான பிரிவில் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.

 

கடந்த 17ம் தேதி இவர்களில் சிலர் சொந்த ஊருக்கு போனில் பேசியுள்ளனர். லிபியாவில் உள்நாட்டு கலவரம் மோசமாக இருப்பதாகவும் தங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாதுகாப்பு கருதி வாகனத்தில் அழைத்துச்செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் 18ம் தேதியில் இருந்து இதுவரையிலும் தகவல் இல்லை.

 

தலைவன்கோட்டையை சேர்ந்த முருகையா(40) என்பவர் குண்டுவீச்சில் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதே ஊரை சேர்ந்த அசோக்குமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் படுகாயமுற்றுள்ளனர்.வேலைக்கு அழைத்துச்சென்ற நிறுவனத்தில் இருந்தும் இதுவரை தகவல் இல்லை. லிபியாவில் இறந்த முருகையாவின் மனைவி வெள்ளத்தாய் உள்ளிட்ட தலைவன்கோட்டை கிராம பெண்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து மனுகொடுத்தனர். தங்கள் குடும்பத்தினர் பசியும் பட்டினியுமாக குடிநீருக்கு கூட வழியின்றி தவிப்பதாக வெளியுறவுத்துறை மூலம் பேசி 50க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் ஜெயராமன், இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

முருகையா இறந்தது எப்படி..!மனைவி வெள்ளத்தாய் கண்ணீர் :

லிபியாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பினாங்கி என்னுமிடத்தில் பணியாற்றிவந்தனர். கடந்த 17ம் தேதி இரவில் முருகையா, மனைவி வெள்ளத்தாய்க்கு போனில் பேசி அங்குள்ள நிலமையை தெரிவித்துள்ளார். மறுநாள் தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை அந்த முகாமில் இருந்து வேறு இடத்திற்கு அழைத்துசெல்வதற்காக 10 ஜீப்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த கலவரக்காரர்கள் முகாம் மீது குண்டுகளை வீசியுள்ளர். எனவே தொழிலாளர்கள் முண்டியடித்துக்கொண்டு உயிர்பிழைப்பதற்காக ஜீப்களில் கிளம்பினர். அந்த கும்பல் இவர்கள் மீது குண்டுவீசி தாக்கியது. இதில் தலைவன்கோட்டையை சேர்ந்த முருகையா, அசோக்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட 15 பேர் சென்ற ஜீப் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

தொடர்ந்து குண்டுவீச்சும் நடந்ததில் அசோக்குமார், முத்துக்குமார் ஆகியோர் காயமுற்றனர். அவர்கள் கண்முன்பாகவே முருகையா பரிதாபமாக இறந்துள்ளார். அசோக்குமார் உள்ளிட்ட இருவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை எதுவும் இன்றி போட்டுவைத்துள்ளனர். தப்பி ஓடியவர்களில் ஜெயக்குமார், முருகேசன், தொழிலாளர்களை அழைத்துச்சென்ற ஒப்பந்க்காரர்ர வேலுச்சாமி ஆகியோர் அருகில் உள்ள மசூதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசோக்குமார்தான் ஆஸ்பத்திரியில் இருந்தபடி முருகையா இறந்த தகவலை ஊருக்கு தெரிவித்துள்ளார். மசூதியில் தஞ்சமடைந்துள்ளவர்கள் உணவு எதுவும் இல்லாமல் கழிவறை தண்ணீரை குடித்தபடி <உயிர்பிழைத்துவருகின்றார்களாம். இறந்துபோன முருகையாவின் மனைவி வெள்ளத்தாய் கூறுகையில், 18ம் தேதி எனக்கு போன் வரவில்லை. ஆனால் அன்றைக்கு குண்டுவீச்சில் எனது கணவர் இறந்துவிட்டதாக உடன் வேலை பார்ப்பவர்கள் தகவல் கூறி தெரிந்துகொண்டேன். வேலைக்கு சென்று 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தமாதம் வருவதாக இருந்தது. இறந்துபோன அவரது முகத்தையாவது பார்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் கண்ணீர் மல்க.

கோத்ரா: தொடரும் காவித் தீர்ப்புகள்

22 பிப்

2000 பேரை பலி வாங்கிய குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான, கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவ வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த ரயில் எரிப்பில் தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இந்த வழக்கி்ல் குற்றம் சாட்டப்பட்ட 63 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்சேவகர்கள் 58 பேர் பிணமானார்கள்.

இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத்தினரை குறி வைத்து வேட்டையாடினர் சங் பரி்வார் அமைப்பினர். மிகக் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்டன. இதில் சிக்கி 2000 பேர் பலியானார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள்.

முதலில் இந்த வழக்கை, திட்டமிடாத தாக்குதலாக எப்ஐஆர் பதிவு செய்தது போலீஸ். ஆனால் பின்னர் குஜராத் அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுப் படை, இதை முஸ்லீம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு செய்ததாகக் கூறியது.

இந்த நிலையில் 2005ம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அமைத்த கமிஷன் தனது விசாரணையில் இது விபத்தே என்று தெரிவித்தது. ஆனால் இந்த கமிஷன் சட்டத்திற்குப் புறம்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நீதி விசாரணைக் கமிட்டி, இந்த சம்பவம் திட்டமிடப்படாதது, தற்செயலாக நடந்தது என்று தெரிவித்தது.

ஆனால் 2008ம் ஆண்டு மோடி அரசு அமைத்த புதிய கமிஷன், முதலில் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் கூற்றையே ஏற்று, இது திட்டமிடப்பட்ட சதியே என்று தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், பொடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கூறிய கூற்றை (திட்டமிடபப்பட்ட சதி அல்ல என்று கூறப்பட்டிருந்ததை) ஏற்றுக் கொண்டது.

இந்தப் பின்னணியில் இந்த ரயில் எரிப்பு சம்பவம் விபத்தா அல்லது சதியா என்ற வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.பாட்டீல் தீர்ப்பை வழங்கினார்.

அவர் கூறுகையில், ஐபிசி 302 பிரிவின்படி 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். 63 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மெளலவி உமர்ஜி விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 95 பேர் மீது விசாரணை நடந்து வந்தது. அவர்களில் 80 பேர் கைது செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 15 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். 5 பேர் சிறார்களாக அறிவிக்கப்பட்டு சிறார் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 16 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

முதலில் அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இதை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் இன்னும் நிலுவையில் உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் ஐபிசி மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் முக்கியத்துவம் கருதி சபர்மதி சிறை வளாகத்திற்குள்ளேயே சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அங்கேயே விசாரணை நடந்து வந்தது.

2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வெளியாகியுள்ள முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

************************************************

ஆக திட்டமிட்டு வெளியிலிருந்து தான் தீயிட்டு எரிக்கப்பட்டது என நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது விபத்து என்றும், திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்றும் இருவேறுவிதமாக கமிசன்கள் சொல்லியிருந்த நிலையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வெளியிலிருந்து எண்ணெய் ஊற்றி எரித்திருந்தால் பெட்டியில் வெளிப்புறம் முழுவதும் எரிந்திருக்கும், ஏனென்றால் வெளியிலிருந்து எண்ணெயை உள்ளே ஊற்றும் போது பெரும்பகுதி வெளியில்தான் வழியும். ஆனால் தீ ஜன்னல்களின் வழியாகவே தீ வெளியில் பரவியிருக்கிறது. இது பெட்டி உள்ளிருந்தே எரிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக காட்டும் ஆதாரம் என கமிசன்கள் தெரிவித்திருந்தன. மட்டுமல்லாது, இதைத்தொடர்ந்து நடந்த கலவர(!)த்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்தங்களைச் செய்து தயாராக இருந்திருந்தார்கள் என்பதை தெகல்கா நிரூபித்திருக்கிறது. நம்புங்கள், ஆனாலும் முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என்று.

மும்பை கலவரம், கோவை கலவரம், கோத்ரா என அனைத்திலும் கலவரத்திற்கான தூண்டுதல் என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை வழக்குகள் மட்டும் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருக்கின்றன. நம்புங்கள், இந்தியா ஜனநாயக நாடு தான் என்று.