Tag Archives: படுகொலை

டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

24 ஏப்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 3

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் சொல்லப்படாத இரகசியங்கள்.

முதலில் நாம் சில அடிப்படை புரிதல்களை விளங்கிக் கொள்ள வேண்டும். மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும், எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில் செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல் முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல, அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும், அதன் பின்னர் துருவங்களில் சற்றே தட்டையான உருண்டை என்றும் அந்த முடிவுகள் மாற்றப்பட்டது. இதை முரண்பாடு என்று கொள்வதும், அறிவியல் தவறு என்று கொள்வதும் பிழையானவைகள், புரிதலற்றவைகள். ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் மதத்தை அதன் வேதங்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் அறிவியலை நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அறிவியல் முடிவுகள் மாறும் இயல்புடையவை. ஆனால் அந்த மாறுதல்களுக்கும் சான்றுகள், ஆதாரங்கள் வேண்டும்.

இந்த அடிப்படையில் பரிணாமவியலைப் பார்த்தால், டார்வின் பரிணாமவியலுக்கு பருண்மையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலிருந்து பலரின் பங்களிப்புகளோடு அது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பரிணாமவியல் டார்வினிலிருந்து தொடங்கவும் இல்லை, டார்வினோடு முற்றுப் பெறவும் இல்லை. பருண்மையான தொடக்கம் என்பதன் பொருள் அவருக்கு முனே சிலர் பரிணாமவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், டார்வின் ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அளவுக்கு ஆய்வுகளைச் செய்ததும் முடிவுகளைக் கண்டடைந்ததும் ஆகும். மட்டுமல்லாது, அவரின் ஒவ்வொரு முடிவுகளும் எந்த மாறுதல்களுக்கும் இடமில்லாத அறுதிகளும் அல்ல. ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் தங்களின் தூதர்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். டார்வின் கடவுளோ தூதரோ அல்லர். அவர் ஓர் அறிவியலாளர் மட்டுமே. அவரின் அறிவியல் முடிவுகள் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தேறுபவைகள் நிற்கும் அல்லாதவைகள் தள்ளப்படும்.

இந்த அடிப்படையை விலக்கி விட்டு, அறிவியலுக்கு முரணான பார்வையில் அறிவியலை அணுகினால் அது நேர்மையற்றதாக இருக்கும் அல்லது மதவாதமாக இருக்கும். எதிர்க்குரல் எழுப்பும் நண்பர் ஆஷிக்கின் குரலும் மதவாதக் குரல் தான். ஆனால் சற்றே அறிவியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது.

தான் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் வரையிலும் மாபெரும் அறிஞராக அறிவியலாளராக மதிக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். ஏன் இப்போதும் கூட அவருக்கு அந்த மரியாதை உண்டு. அவர் தன்னுடைய ஆய்வின் விளைவாக புவியை மையமாகக் கொண்டே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு 15ம் நூற்றாண்டின் கோபர்நிகஸ் காலம் வரை செல்வாக்குடன் இருந்தது.
சில பத்தாண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தினர் 16 பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றான் ஜெயப்பிரகாஷ் என்பவன். அவன் பிடிபட்டபோது அதற்கு அவன் கூறிய காரணம் நூறாவது நாள் படம் பார்த்தது தான் என்பது.
இந்த இரண்டையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால் அது நண்பர் எதிர்க்குரல் ஆஷிக்கின் பதிவை ஒத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இனி கட்டுரைக்குத் திரும்புவோம்.

அவர் கட்டுரையின் தொடக்கமே அதிரடியாய் இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை தான் இனவெறிக்கு வித்திட்டது என்கிறார். இனவெறிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பரிணாமக் கொள்கையைக் கூறி ஹிட்லர் தன்னை நியாய்ப்படுத்திக் கொள்ள முயன்றார். 16 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் போல. ஒரு மனித இனத்தை விட இன்னொரு மனித இனம் மேம்பட்டது என்பதை பரிணாமத்தை ஏற்பவர்கள் நம்ப(!) வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அறிவியலை நம்புபவர்கள், அரிஸ்டாட்டிலை மதிப்பவர்கள் இன்றும் புவி தான் மையம் என்று தான் கூற வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.

முதலாளித்துவம் வளர்ந்த பிறகு தான் தேசிய இனம் எனும் கொள்கையும், அதனடிப்படையில் இனவெறியும் தோன்றின. நிலப்பிரபுத்துவ காலங்களிலெல்லாம் இனப்பாகுபாடு பெரிய அளவில் இல்லை. அந்த காலகட்டங்களில் உலகமெங்கும் இருந்த அரசுகளை மக்கள் இனம் எனும் அடிப்படையில் எந்த மன்னனையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்ததாக வரலாறு இல்லை. அரேபிய முகம்மதின் தோன்றல்கள் துருக்கியை ஆண்டபோது இன அடிப்படையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஐரோப்பிய இனம், ஆப்பிரிக்க இனம், மங்கோலிய இனம் என்பதெல்லாம் தோற்றவேறுபாடுகளைக் கொண்டு அறிதலுக்காக பிரிக்கப்பட்ட அறிவியல் பகுப்புகள். இது நண்பர் ஆஷிக் கூறும் இனத்தில் சேராது. ஆனால் இன மேம்பாடு குறித்து விதந்தோத நண்பர் எடுத்துக் கொண்ட ஹிட்லர் கொன்றழித்த கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஹிட்லரின் இனமான அதே ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நண்பருக்கு ஏன் மறந்து போனது? பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும், ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார்? ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள் அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர். இது தேசியவாதமா? பரிணாமவாதமா? நண்பர் ஆஷிக் பதில் கூறுவாரா? ஆக ஹிட்லரின் இனவெறிக்கும் பரிணாமத்துக்கும் எந்தவித ஒட்டும் இல்லை. ஜெயப்பிரகாஷ் சொல்லிவிட்டான் என்பதற்காக கதை எழுதிய மணிவண்ணனை குற்றம் சொல்வது எந்த விதத்தில் சரி நண்பரே?

ஹிட்லரையும் டார்வினையும் பசை போட்டு ஒட்டுவதற்கு நண்பர் ஆஷிக் பயன்படுத்தியவை என்ன? The Preservation of Favoured Races in the Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள் அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக் கொண்டு அவர் கூறுவது என்ன? “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு” இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா? அல்லது, தகுதியுடயவை நீடிக்கும் என்பதில் இனவெறி கருக் கொண்டிருக்கிறதா?

முதலில் டார்வின் பயன்படுத்திய இனம் எனும் சொல்லின் பொருளும், நண்பர் ஆஷிக் பயன்படுத்தியிருக்கும் இனம் எனும் சொல்லின் பொருளும் வேறு வேறானது. டார்வின் பயன்படுத்தியது காக்கோசிய இனம், நீக்ராய்டு இனம், மங்கலாய்டு இனம் எனும் அறிவியல் சார்ந்த அதாவது தோற்றப்பாகுபாட்டில் மனிதனைப் பிரிக்கும் இனங்கள். அந்த அடிப்படையில் காக்கோசிய (ஐரோப்பிய) இனம் நீக்ராய்டு (ஆப்பிரிக்க) இனத்தைவிட காலத்தால் பிற்பட்டது, புதிய பரிணமிப்பு. அதாவது நீக்ரய்டுகளை விட துருவப்பனியின் தாக்கத்தால் தோற்றத்தில் மாற்றம் பெற்று புதிய தகவமைப்புகளுடன் கூடியவன் காக்கோசிய மனிதன். ஆனால் நீக்ராய்டைவிட முன்னேறியவனா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஏனென்றால் அறிவியல் கூறும் இனம் என்பது, டார்வின் கூறும் இனம் என்பது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வேறுபாடு நண்பருக்கு தற்செயலாக தெரியாமல் போனதா? அல்லது தான் எழுத நினைப்பதை எழுதுவதற்கு தெரியாததாய் காட்டிக் கொள்வதுதான் வசதி என்று கருதினாரா?

தகுதியுடையவை நீடிக்கும் என்பதின் பொருள் என்ன? இந்த சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன் சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்(!). இது சரியா? வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்து உலகில் நிற்பதற்கு தகுதி வேண்டும். பூமியில் தோன்றி தொன்னூறு விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன. அவற்றுள் மிகப்பலமானதாக கருதப்படும் டினோசர்களும் அடக்கம். தோராயமாக மூன்றுகோடி ஆண்டுகள் பூமியை ஆக்கிரமித்திருந்த டினோசர்களுக்கு இல்லாத தகுதி தற்போது ஆடுகளுக்கு இருக்கிறதா? ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக் கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால் அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின் தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும் ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா? இந்த ஆடுகள் மட்டும் தான் எண்ணிக்கையில் பெருகுகின்றன. ஆனால் வரையாடுகள். அதை மனிதன் உணவாக கொள்வதில்லை. தமிழக அரசின் பாதுகாப்பில் இருந்தாலும் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. வரையாடுகளும் பலவீனமானவை தானே அவை ஏன் எண்ணிக்கையில் கூடவில்லை?

மதவாதிகளுக்கு எப்போதுமே உண்மை தேவையில்லை. தங்களின் மூட நம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்க உண்மை போன்ற திரித்தல்களே தேவை. இவைகளை ஏன் கூறிகிறேன் என்றால், நண்பர் ஆஷிக் கூறும் டார்வின் குறைந்த இனம் எனக் கூறிய ஆப்பிரிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் பரிணாமம் தவறு தானே. எனும் கருத்தும் அந்த வகைப்பட்டதே என்பதற்காகத்தான். தாழ்ந்த இனம் என்றதும் அறிவில் குறைபாடானவர்கள், கற்றுக் கொள்ளும் பண்பில் குறைபாடானவர்கள் என்று கற்பிதம் செய்து கொண்டு டார்வின் நபி பொருத்தமில்லாதவற்றை கூறிவிட்டார். எனவே, அவர் ஏக இறைவனான அல்லாவின் தூதர் அல்ல என்று கூறினால் சிரிக்க மட்டும் தான் முடியும். கவனிக்கவும், பரிணாமம் எப்போதோ டார்வினைக் கடந்து விட்டது.

இன்றைக்கு இருக்கும் மனித இனமான க்ரோமாக்னன், அதற்கு முந்திய நியாண்டர்தால் உட்பட 20க்கும் மேற்பட்ட மனித இனங்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. அந்த இனங்களெல்லாம் எப்படி அழிந்தன? க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும் இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள். ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்? முதலாளித்துவ இனவெறியா? டார்வினின் இனம் குறித்த ஆய்வுகளா? நண்பர் ஆஷிக் தேடல் கொண்டவராக இருந்தால் வரலாறுகளில் பார்வையை பதிக்கட்டும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவை இன்னும் பெற்றிருக்கவில்லை எனும் ஒற்றை காரணத்தின் மேல் நின்று ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எவ்வளவு மக்களை எவ்வளவு இனங்களை சூரையாடியிருக்கின்றன என்பது புரியவரும்.

ஒரு ஹிட்லரோடு ஏன் நண்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்கா ஒருபக்கம் இஸ்லாமிய மதவெறிக்கு தூபம் போட்டும் மறுபக்கம் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி பலனடைவது கூட டார்வின் கூற்றிலிருந்து கிளைத்தது தான் என்று கூட நண்பர் கட்டுரை தீட்டிக் கொள்ளலாம். ஆனால் அவைகளில் உண்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையா?

நண்பர் ஆஷிக்கின் இந்த கட்டுரை முழுவதுக்குமான அடிப்படை சர் ஆர்தர் கீத் என்பவரின் ஒரு மேற்கோளிலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அதாவது ஹிட்லர் பரிணாமக் கொள்கையை ஆதரித்ததால் தான் யூத இனப்படுகொலைகளைச் செய்தார் என்று ஹிட்லரின் செயல்பாடு குறித்து கீத் கூறுவதாக இருக்கிறது அந்த மேற்கோள். பரிணாமவியலின் தன்மைகள் குறித்து ஆராயும் போது தனிப்பட்ட சிலரின் கருத்துகளோ செயல்களோ எந்த அளவுக்கு முக்கியப்படும்? ஹிட்லரின் கொலைக்களத்துக்கும் பரிணாமவியலுக்கும் தொடர்பில்லை என்று மேலே விளக்கப்பட்டிருக்கிறது. நண்பர் ஆஷிக் ஆழமாக இதை விளக்க முன்வரும்போது மேலும் ஆழமாக நாம் மறுக்கலாம். இப்போதைக்கு அதே ஆர்தர் கீத் என்பவரின் அதே “evolution and ethics” நூலிலிருந்து ஒரு மேற்கோள் மட்டும் போதும் எனக் கருதுகிறேன். ஹிட்லர் ஒருபோதும் பரிணாமக் கொள்கையை நிரூபிப்பதற்காக தான் யூதக் கொலைகளை செய்வதாக கூறிக் கொண்டதில்லை. மாறாக, கடவுள் தனக்கு இட்ட பனியை தான் செய்வதாகத் தான் கூறியிருக்கிறார். அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமான The Behavior of Germany Considered from an Evolutionary Point of View in 1942 என்பதில் இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது, “to discuss the question of why Providence created different races, but rather to recognize that it punishes those who disregard its work of creation” அதாவது, “படைப்பு, தன்னை அவமதிப்பவர்களை தண்டிப்பது, கடவுள் ஏன் வெவ்வேறு இனங்களைப் படைக்க வேண்டுமென்ற கேள்வியை விவாதிக்கும் பொழுது ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்” இதற்கு நண்பர் ஆஷிக் என்ன பதில் கூற முற்படுவார் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

இதுபோன்ற பரிணாமத்திற்கு எதிரான தொடர் கட்டுரைகளை நண்பர் எழுதுவதன் நோக்கம் பரிணாமக் கொள்கை தவறு படைப்புக் கொள்கையே சரி என்பது தான். இதை அக்கட்டுரைகளை முடிக்கும் முத்தாய்ப்புகளில் காணலாம். ஆனாலும் எப்படி சரி என்பதை மட்டும் நண்பர் ஆஷிக் உட்பட எந்த மதவாதியும் கூறுவதே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கும் இனி வரப்போகும் கட்டுரைக்குமான ஆதாரக் கேள்வி இது தான். பரிணாமத்தை நுணுகுங்கள் தப்பில்லை. அதில் தவறுகளும் உண்டு, எந்த அறிவியலாளரும் இதை மறுக்கப் போவதில்லை. ஆனால் அப்படி நுணுகி அறிவியலாளர்களால் தவறு என ஒப்புக் கொண்டு ஒதுக்கப்பட்டவைகளுக்கு அலங்காரம் செய்து உங்கள் மூட நம்பிக்கைகளுக்கு மணம் முடிக்க எண்ணாதீர்கள். பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த ஆதாரக் கேள்வி இத்தொடரில் இனி வரவிருக்கும் அத்தனை கட்டுரைகளிலும் தொடரும். பதில் வருமா?

கொலைகார இராணுவப் படைகள்; கொடூரமாய் கொல்லப்படும் பழங்குடிகள்

15 ஜூலை

 

கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

 

கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.  இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

 

ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார்  ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.


நடந்தது என்ன?  

 

பழங்குடியினரது  வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் – ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.

 

சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில்  பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.

 

 

கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள், ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே  கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்தது.

 

 

எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள். 

 

கொலைகாரன் விஜயகுமார்

 

இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும்  பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.

 

இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும்  நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர். அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.

 

பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.


இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.

 

கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால்  வெளியில் சொல்கிறேன்” என்றார்.

 

சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.

 

போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?

 

மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.

சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார். கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.

 

ஏன் இந்தக் கொலைகள்?

 

சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

 

இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650  கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10  லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.

இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

 

மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்

 

இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.

 

கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!

 

அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.

 

கொலை செய்யப்படதில் பெரும் பகுதி சிறுவர்கள்:
http://www.ndtv.com/video/player/news/6-minors-killed-in-Chhattisgarh-encounter-congress-report/238237
கொல்லப்பட்டவர்களின் பிணாங்களைக் கூட கொடுக்க மறுக்கும் சிதம்பரத்தின் நிர்வாகம்:
முதல் பதிவு: கலையகம்

வீரவணக்கம் தோழர் கிஷன் ஜி

10 டிசம்பர்

கிஷன்ஜி என்று அனைவராலும் அறியப்பட்ட புரட்சியாளர் மல்லோஜூல கோடீஸ்வர ராவ், 1954 ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் பெத்தபள்ளி என்ற ஊரில் பிறந்தவர். புரட்சிகர இயக்கமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இயக்கத்தில் தம்மைப் பல காலமாக இணைத்துக் கொண்டு செயல் பட்டவர். அவரது குடும்பம் சாதியில் உயர் சாதியினரான பிராமணராக இருந்தபொழுதும் மிகவும் முற்போக்கான குடும்பம். அவருடைய தாயும் தந்தையும் அரசியல்உணர்வும் நற்சிந்தனையும் உடையவர்கள். அவருடைய தந்தையார் வெங்கையா வெள்ளையரை எதிர்த்து நடந்த சுதந்திர இயக்கத்தில் நாட்டுக்காகப் போராடிச் சிறை சென்றவர். அவர் அன்றையக் காங்கிரெஸ் கட்சியின் ஆந்திர மாநிலத் துணைத் தலைவராக பணி செய்தவர்.தாயார் மதுரம்மாள் தமது பெயருக்கு ஏற்ப இனிமையான வழியில் தம் மக்கள் மூவரையும் நாட்டுப் பற்றுடனும் ஏழைகள் மீது அன்பு காட்டும் வழியிலும் வளர்த்தவர். கிஷன்ஜியின் இளைய சகோதரர் ஒருவரும் மாவோயியப் புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுபவர் என்று சொல்லப் படுகிறது.

கிஷன்ஜியின் இளமைக் காலம்

கிஷன்ஜி தமது பதினைந்தாம் வயதிலேயே புரட்சிகர இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். தன் இளமைக் காலத்தில் அவர் அநீதியையும் ஏற்றத்தாழ்வையும் கண்டு கொதிப்படைவது வழக்கம். நீதியும் நேர்மையும் தமது இரண்டுகண்களாகக் கொண்டு எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அது கண்டு கொதித்து எழுந்தவர். பள்ளிமாணவனாக இருந்த காலத்திலேயே வகுப்பில் ரவுடித்தனம் செய்யும் மாணவர்களையும், மாணவிகளைக் கேலி செய்யும் சில்லறைப் பொறுக்கிகளையும் தட்டிக் கேட்பதில் முன் நின்றவர். தமது இளமைக் காலத்தில் காந்தியின் நூல்களையும், தாகூரின் கவிதைகளையும் தெளிவாகக் கற்றவர். இன்சொல் பேசும் இனியவர்.

1969 ம்ஆண்டு தாம் ஒரு பள்ளி மாணவனாக இருந்த போது நடைபெற்ற தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நடந்த போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமது இடைவிடாத அரசியல் கல்வியின் பலனாக மர்க்சியமே உலகைக்காக்கும் ஆயுதம் என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர். ஏன் இப்படி வயதான தாயை தனியேவிட்டு விட்டுப் பிறருக்காகப் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கேட்டால் கிஷன்ஜி சொல்லும் பதில்: “என் தாய்க்கு மூன்று பிள்ளைகள், அதில் ஒருவர்வீட்டுக்கு, இருவர் நாட்டுக்கு.” எதிலும் நியாயமாக நடக்கும் கிஷன்ஜி குடும்ப பாரத்தைச் சுமப்பதற்கும் நியாயமான வழியைச் சொன்னவர். கொண்ட கொள்கைக்காக தமது வீடு,நண்பர்கள், சொத்துகள், உற்றார் உறவினரைத் துறந்து மக்கள் பணி செய்யச் சென்றவர். வீட்டைவிட்டுச் சென்ற கிஷன்ஜியை அவரது தாயாரும் உறவினர்களும் முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் உயிரற்ற உடலாகப் பார்க்க முடிந்தது.

அரசியல் பணி

பள்ளிக் கல்விக்குப் பின்னர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பு படிக்கத்தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் பெரும் வீச்சில் நடந்து வந்த நக்சல்பாரி,ஸ்ரீகாகுளம் விவசாயிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு முழு நேரப் புரட்சிப்பணிக்காக தமது பல்கலைக் கழகக் கல்வியையும் துறந்தார். 1974 ம் ஆண்டு புரட்சிகர மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்தார். சர்வாதிகாரி இந்திராவின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில் சில மாதம் சிறையில் இருந்தார். சிறை விட்டுத் திரும்பிய பின் இயக்கத்தின் அறை கூவலை ஏற்று கிராமப் பணி செய்யக் கிளம்பினார். அந்தக் கால கட்டத்தில் புரட்சிகர இயக்கத்தினர்மக்கள் பணி செய்ய கிராமங்களை நோக்கிச் செல்லுமாறு கேட்கப் பட்டனர். கிராம மக்களுடன் வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் ஜக்தியால் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் நிலப் பிரபுக்களிடம் இருந்து நிலங்களை மீட்டுக் குத்தகை விவசாயிகளுக்கு வழங்கியது. இளைஞர்கள் கிராம மக்களை அணி திரட்டி அவர்களுடைய உரிமைகளை உணர்த்தி நிலப் பிரபுக்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்டனர். அவரதுபணியின் தீவிரம் கண்டு 1979 ம் ஆண்டு இயக்க ஊழியர்கள் அவரை கரீம் நகரமாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்தனர். பின்னர் கட்சியின் ஆந்திர மாநிலக்கமிட்டியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டார். 1986 ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

வங்காளத்தில் கிஷன்ஜியின் பணி

மேற்கு வங்க மாநிலத்தில், நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னர் அந்த இயக்கத்தை ஒடுக்கியும், போலிக் கம்யுனிசம் பேசியும்,மக்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் வைத்திருந்த அவரைப் பணியாற்றும் படி அவரது கட்சி அவரைப் பணித்திருந்தது. 1986 ம் ஆண்டு தொடங்கி அவர் படுகொலைசெய்யப்பட்டது வரை கிஷன்ஜி வடக்கு, கிழக்கு இந்தியாவிலும், தண்டகாரண்யத்திலும் பணியாற்றி வந்தார். தண்டகாரண்யம் என்பது இந்தியாவின் மத்தியப் பகுதியில் திராவிட இனங்களின் மூத்த இனங்களான கோண்டுகள் உள்ளிட்ட இதர பழங்குடிகள் வாழும் இன்றைய சத்திஸ்கார் மாநிலமாகும். போலிக் கம்யுனிஸ்டுகளின் தலைவர் ஜோதிபாசுவும் அதன்பின்வந்த புத்ததேவ் பட்டச்சாரியாவும் புரட்சிக்கு சாவு மணி அடித்து விட்ட பெருமிதத்தில் இருந்த போது, இங்கே கிஷன்ஜி தமது அரசியல் பணியைத் தொடங்கினார். இனி நாடாளுமன்றத்தில் தான் தமது அரசியல் நடக்கும் என்று ஜோதிபாசு தீர்மானமாக இருந்தபோது வழி தெரியாது தளர்ந்து கிடந்த பழங்குடிகளை கிஷன்ஜியின் இயக்கம் அணித திரட்டி ஒருஇயக்கமாக்கி வந்தது. கிஷன்ஜி செய்த அரசியல் பணிகளில் மகத்தானது மார்க்சியத்தை வங்காள மண்ணில் உயிர்ப்பித்தது.இது தவிர, வங்காளத்திலும், பீகாரிலும் சிதறுண்டு கிடந்த இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியின் பல புரட்சிகரப் பிரிவுகளுடன் தொடர்ந்து அரசியல் விவாதம் நடத்தி மாவோயிஸ்டுக் கட்சி என ஓரணியில் திரட்டியதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியிருந்தார்.

லால்கார் போராட்டம் 

சுரங்கம் தோண்டுவதற்காக பசங்குடி விவசாயிகளின் நிலங்களை இந்திய இரும்புக் கம்பெனிகளான ஜிண்டால், டாட்டா போன்றவை பறித்துக் கொண்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தெற்கு வங்காளத்தின் புருலியா, ஜார்கிராம்,மிட்னாபூர் போன்ற மாவட்டங்களில் வாழும் வீரம் மிக்க சந்தால் இன மக்களையும் இதர பழங்குடிகளையும்ஒற்றுமைப் படுத்தி ஒரு ஆயுதம் தாங்கிய கொரில்லாப்படையினையும், பல ஆயிரம் தொண்டர்களைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கத்தையும் வளர்த்தெடுத்தார். லட்சக் கணக்கான மக்கள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் பங்கு கொண்டு வீரத்துடன் போராடியலால்கார், நந்திகிராமம், சிங்கூர் நில மீட்பு இயக்கங்களுக்கு அவர் அரசியல்தலைமையேற்று வழி நடத்தினார். கடந்த முப்பது ஆண்டு காலத்தில் இந்திய முழுமையும் நடைபெற்றஎந்த ஒரு போராட்டத்தையும் விட இது அளவிலும் குணத்திலும் மாறுபட்டது. இந்தப் பேரியக்கம் இந்திய அரசியலில், ஏன் தெற்காசிய அரசியலில் ஒரு மிகப் பெரும் வீச்சைஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. உலக முதலாளிகள், அவர்களின் ஏவல் படைகள் அனைவரும் உற்று நோக்கிய இந்தப் போராட்டம்போலிக் கம்யுனிஸ்டுகளின் மாயையில் இருந்து மக்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

யாரும் புக முடியாத காடுகளுக்குள் இருந்து கொண்டு மாவோயிஸ்டுகள்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அட்டுழியம் செய்கிறார்கள் என்ற பொய்யுரையை கிஷன்ஜிதலைமையில் நடந்த லால்கார் போராட்டம் புரட்டிப் போட்டது. அவர் தலைமையில் நடந்தபோராட்டம் பெரும் நகரங்களுக்கு அருகில் திரளான மக்கள் பங்கேற்புடன் மிகவும்ஒழுக்கமான முறையில் நடந்தது. புரட்சியின் அலைகள் கல்கத்தா போன்ற தொழில் நகரங்களைநெருங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை கிஷன்ஜி வழி நடத்திய இந்தப் போராட்டங்கள் வழங்கின.

வங்காள இளைஞர்களிடம் எழுச்சி 

வடக்கு, கிழக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக வங்காளத்தில் தொய்வுற்றுக் கிடந்த இளைஞர் கூட்டம் பெரும் திரளாக அணி திரண்டுபுரட்சி இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்ள முன்வந்தது கிஷன்ஜி செய்த பெரும்பணிக்கு கிடைத்த பலனாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அவரைப் பற்றிதினமும் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அவரைப் பற்றிப் பேசாத பத்திரிகைகளே இல்லை, செய்தி வெளியிடாத தொலைக் காட்சிகளே இல்லை என்னும் அளவுக்கு அவருடைய பணி பிரபலம் அடைந்து இருந்தது. தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் கிஷன்ஜியைக் கண்டு பேட்டி எடுக்க விரும்பாத பத்திரிகையளரே இல்லை என்ற சூழல் நிலவியது. போலிசும் அரசும் மீண்டும் மீண்டும் கிஷன்ஜியை கொன்று விட்டதாகச் சொல்லி வந்த போதும் அவர் மக்கள் என்னும் கடலில் ஒரு மீனைப் போல நீந்தி வந்தார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி மக்களைக் குழப்பும் போலியான அறிவுஜீவிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிஷன்ஜி தெளிவான வகையில் அவரவர்விரும்பும் மொழியில் பதில் கொடுத்து வந்தார்.

புரட்சிகர அரசியலுக்கும் தத்துவத்திற்கும் உரியமுக்கியத்தை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் எளிமையாகவும் நேரடியாகவும் வார்த்தை ஜாலங்கள் இன்றி, ஒளிவு மறைவின்றி, கேட்பவர்,படிப்பவர் நெஞ்சைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கும். சமீப கால வங்காள அரசியலில் படித்தோர் பாமரர் அனைவரும் விரும்பும் தலைவராக கிஷன்ஜி இருந்தார். 

பன்மொழிப் புலவர் கிஷன்ஜி

பல மொழிகளில் வல்லுனரான கிஷன்ஜி தெலுங்கு, இந்தி,வங்காளி, ஆங்கில மொழிகளில் எழுதவும் பேசவும் புலமை பெற்று இருந்தார். கோண்டி உட்படபல வழக்கு மொழிகளிலும் அவர் பேசும் புலமை பெற்று அந்த மக்களின் இதயத்தில் இடம்பெற்று இருந்தார். கவிதையிலும் இசையிலும் பாடல்களிலும் தமது உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த கிஷன்ஜி தாம் கொல்லப்படும் வரை ஒரு மென்மையான இலக்கிய ஆர்வலராகவாழ்ந்து மறைந்தார். பொருளாதாரம் தொடங்கி வரலாறு வரை அனைத்துத் துறைகளிலும்மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கிஷன்ஜி. தமது 57 வயதிலும் ஒரு போராளியாக வாழ்ந்த அவர் ஒரு நாளின்ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்கியவர் அல்லர். அவர் கால் படாத கிராமங்களேவங்காளத்தின் தெற்குப்பகுதியிலும், மத்திய இந்தியாவிலும், தண்டகாரண்ரயத்திலும்இல்லை எனலாம். கற்பதிலும் கேட்பதிலும் மிகச் சிறந்த இந்த மனிதர் தாம் சாகும்வரைஒரு படிப்பாளியாகவே வாழ்ந்தவர்.

தேசிய இனங்களின் விடுதலை

தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு மிகுந்த முக்கியம்கொடுத்தவர் கிஷன்ஜி. இந்தியாவின் போராடும் தேசிய இனங்கள் மாவோயிசப் புரட்சிகரஇயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அறுபது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு போராடும் அஸ்ஸாமியர்கள், நாகர்கள், மணிப்புரிகள்,திரிபுரிகள் என அனைத்துப் பிரிவினருடனும் ஒளிவு மறைவற்ற நேர்மையான அரசியல்விவாதங்களை அவர் தலைமையிலான இயக்கம் நடத்தி வந்தது. வடக்கு மற்றும் கிழக்குஇந்தியாவின் தேசிய இனங்கள் இந்தியப் போலிக் கம்யுனிச இயக்கங்களால் தொடர்ந்துதுரோகம் செய்யப்பட்டவர்கள். வெறுப்புற்று இருந்த இந்த தேச விடுதலை இயக்கங்கள் இந்தியாவில்புரட்சி பேசும் இயக்கங்களை ஒருபோதும் நம்பியதே இல்லை. ஆனால், சமீப ஆண்டுகளில் கிஷன்ஜிஅவர்களுடன் நடத்திய அரசியல் விவாதங்கள் இந்த இயக்கங்கள் புரட்சியாளர்களுடன் இணைந்துசெயல்படும் அளவுக்கு முன்னேறியிருந்தது. இது இந்திய அரசியல் வானில் ஒரு புதுவிதமானஅரசியல் கூட்டணி அமைவதை நோக்கியதான பாதை சென்றுசொல்லலாம். 

படுகொலை 

முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் தேடிவந்த போதும் சிறிதும் அஞ்சாத கிஷன்ஜி, நாட்டின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல பகுதிகளுக்கும் பயணம் செய்து வந்தவர். தமது வாழ்வு முழுவதையும் இந்தியாவின் ஏழை விவசாயிகள், பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்த இந்த மாவீரன், பலர் அறிய உயிருடன் பிடித்துச் செல்லப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட 2011 நவம்பர் 27 ம் நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒருதுயரம் மிக்க நாளாகும். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற போர்வையில் சமாதானம் பேச வரவழைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது பெருந்தலைவர் கிஷன்ஜி. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் மரணம் மிகவும் துயரமானது, இமய மலையினும் கனமானது.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்,களவாணிகள், தரகர்கள் நிறைந்த காங்கிரசுக் கட்சியும் அவர்களின் ஏவலர்களான சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், மந்திரி செட்டிநாட்டுச் சிதம்பரமும்,வங்காள முதல்வர் மமதா பானர்ஜியும் நேரடியாக இந்தப் படுகொலையை நடத்தியவர்கள் என்று புரட்சிகர இயக்கங்கள் அறிவித்துள்ளன.

கிஷன்ஜியின் இழப்பு இந்தியா மட்டும் இல்லாமல், உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்கள், தேசிய இனங்கள் அனைத்திற்குமான ஒரு பேரிழப்பாகும்.

தியாக சீலர்களின் மகனாகப் பிறந்து, பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் புகழ் வான் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்ப தொன்றில் (குறள்: 233)

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்தஉலகத்தில் நிலைத்திருப்பது புகழைத்தவிர வேறு எதுவும் இல்லை.

ஓங்குக கிஷன்ஜியின் புகழ் !!

 

முதல் பதிவு: கலையகம்

கோத்ரா: தொடரும் காவித் தீர்ப்புகள்

22 பிப்

2000 பேரை பலி வாங்கிய குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான, கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவ வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த ரயில் எரிப்பில் தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இந்த வழக்கி்ல் குற்றம் சாட்டப்பட்ட 63 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்சேவகர்கள் 58 பேர் பிணமானார்கள்.

இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத்தினரை குறி வைத்து வேட்டையாடினர் சங் பரி்வார் அமைப்பினர். மிகக் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்டன. இதில் சிக்கி 2000 பேர் பலியானார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள்.

முதலில் இந்த வழக்கை, திட்டமிடாத தாக்குதலாக எப்ஐஆர் பதிவு செய்தது போலீஸ். ஆனால் பின்னர் குஜராத் அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுப் படை, இதை முஸ்லீம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு செய்ததாகக் கூறியது.

இந்த நிலையில் 2005ம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அமைத்த கமிஷன் தனது விசாரணையில் இது விபத்தே என்று தெரிவித்தது. ஆனால் இந்த கமிஷன் சட்டத்திற்குப் புறம்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நீதி விசாரணைக் கமிட்டி, இந்த சம்பவம் திட்டமிடப்படாதது, தற்செயலாக நடந்தது என்று தெரிவித்தது.

ஆனால் 2008ம் ஆண்டு மோடி அரசு அமைத்த புதிய கமிஷன், முதலில் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் கூற்றையே ஏற்று, இது திட்டமிடப்பட்ட சதியே என்று தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், பொடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கூறிய கூற்றை (திட்டமிடபப்பட்ட சதி அல்ல என்று கூறப்பட்டிருந்ததை) ஏற்றுக் கொண்டது.

இந்தப் பின்னணியில் இந்த ரயில் எரிப்பு சம்பவம் விபத்தா அல்லது சதியா என்ற வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.பாட்டீல் தீர்ப்பை வழங்கினார்.

அவர் கூறுகையில், ஐபிசி 302 பிரிவின்படி 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். 63 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மெளலவி உமர்ஜி விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 95 பேர் மீது விசாரணை நடந்து வந்தது. அவர்களில் 80 பேர் கைது செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 15 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். 5 பேர் சிறார்களாக அறிவிக்கப்பட்டு சிறார் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 16 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

முதலில் அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இதை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் இன்னும் நிலுவையில் உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் ஐபிசி மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் முக்கியத்துவம் கருதி சபர்மதி சிறை வளாகத்திற்குள்ளேயே சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அங்கேயே விசாரணை நடந்து வந்தது.

2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வெளியாகியுள்ள முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

************************************************

ஆக திட்டமிட்டு வெளியிலிருந்து தான் தீயிட்டு எரிக்கப்பட்டது என நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது விபத்து என்றும், திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்றும் இருவேறுவிதமாக கமிசன்கள் சொல்லியிருந்த நிலையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வெளியிலிருந்து எண்ணெய் ஊற்றி எரித்திருந்தால் பெட்டியில் வெளிப்புறம் முழுவதும் எரிந்திருக்கும், ஏனென்றால் வெளியிலிருந்து எண்ணெயை உள்ளே ஊற்றும் போது பெரும்பகுதி வெளியில்தான் வழியும். ஆனால் தீ ஜன்னல்களின் வழியாகவே தீ வெளியில் பரவியிருக்கிறது. இது பெட்டி உள்ளிருந்தே எரிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக காட்டும் ஆதாரம் என கமிசன்கள் தெரிவித்திருந்தன. மட்டுமல்லாது, இதைத்தொடர்ந்து நடந்த கலவர(!)த்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்தங்களைச் செய்து தயாராக இருந்திருந்தார்கள் என்பதை தெகல்கா நிரூபித்திருக்கிறது. நம்புங்கள், ஆனாலும் முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என்று.

மும்பை கலவரம், கோவை கலவரம், கோத்ரா என அனைத்திலும் கலவரத்திற்கான தூண்டுதல் என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை வழக்குகள் மட்டும் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருக்கின்றன. நம்புங்கள், இந்தியா ஜனநாயக நாடு தான் என்று.

தமிழக மீனவர்களுக்கான இணையக்குரல்

28 ஜன

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து.

இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை உண்டாக்கவும் குறிப்பிட்ட பிரச்ச்னை குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்தவும் டிவிட்டர் பதிவுகள் உதவியிருக்கின்ற‌ன.

இந்த வரிசையில் இப்போது தமிழகமும் சேர்ந்திருக்கிறது.

ஆம், இலங்கை கடற்படையால் தமிழக‌ மீனவர்கள் தொடர்ந்து கொடுரமாக படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக டிவிட்டரில் குரல் கேட்க துவங்கியுள்ளது.

டிவிட்டரில் செயல்படும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க மீனவர் நலனில் அக்கறை கொண்டவர்கள் தொடரும் மீனவர் படுகொலைகள் தொடர்பான குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிடும் வசதியோடு மறுபதிவு(ரீடிவீட்)பதில் அளிப்பது போன்ற பல வசதிகள் இருக்கின்றன.

இதே போலவே குறிப்பிட்ட தலைப்பிலான பதிவுகளை சக டிவிட்டர் பயனாளிகல் மத்தியில் கவனத்தில் கொண்டு வர அவற்றை ஹாஷ்டாக்(#)என்னும் குறியோடு வெளியிடும் வசதியும் உள்ளது. இப்படி ஹாஷ்டாக் குறியை பயன்படுத்தும் போது ஒரே தலைப்பிலான குறும்பதிவுகள் தனித்து தெரியத்துவங்கும்.

அந்த பிரச்ச‌னைக்கு ஆதரவு தேட விரும்பினால் சக டிவிட்டர் பயனாளிகளையும் ஹாஷ்டாக் குறியை சேர்த்து கொள்ளுமாறு கேட்கலாம்.இப்படி ஹாஷ்டாக் குறியோடு பதிவுகள் வெளியாகும் போது அந்த தலைப்பு டிவிட்டரில் மேலோங்கும் வாய்ப்பை பெற்று பரவலான கவனத்தை ஈர்க்கும்.

டிவிட்டரில் ஒரு தலைப்பு மேலெழுந்தது என்றால் உடனே அது ஊடகம் முதல் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கும். இதே போல தான் இப்போது டிவிட்டரில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பான கருத்துக்கள் குறும்பதிவுகளாக வெளியாகி கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளன.

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலைவெறி தாக்குதல் தொடர்கதையாகியுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்டாத நிலையில் எல்லோர் மனதிலும் ஒரு ஊமை கோபம் குடிக்கொண்டிருக்கிற‌து. இந்த கோபம் தான் டிவிட்டரில் குறும்பதிவுகளாக பொங்கி கொண்டிருக்கிறது.மீனவர் படுகொலை தொடர்பான பதிவுகளை வெலியிடுபவர்கள் சக குறும்பதிவர்களையும் இதே போன்ற பதிவுகளை எவ்ளியிடுமாறு கேட்டுக்கொண்டனர்.அதில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை தவறாமல் சேர்த்து கொள்ளுமாறும் குறிப்பிட்டனர்.

இதன் பார்த்தவர்கள் அவற்றை மறுபதிவு செய்ததோடு தங்கள் பங்கிற்கு கருத்துக்களை தெரிவிக்கவும் செய்தனர்.இவ்வாறு டிஎன்பிஷர்மேன் ஹாஷ்டாக்கோடு வெளியான பதிவுகள் தனித்து தெரியத்துவங்கின. இந்த பதிவுகள் மீனவர்கள் படுகொலை தொடர்பான கவலையையும் கோபத்தையும் ஆவேசத்தையும் பிரதிபலித்தன.தொடர்ந்து பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் அடாவடி செயலை கண்டிப்பதோடு இந்த விஷயத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் மவுனத்தையும் கண்டிக்கும் வகையில் பதிவுகள் அமைந்திருந்தன. ஒரு டிவிட்டர் பதிவு இந்திய கடற்படையின் சீருடை என்ன புடவையா என கேட்டது. பல‌ பதிவுகள் மீனவர் கொலையை தடுத்து நிறுத்தாமல் நிதி கொடுத்து கை கழுவுவதை கண்டனம் செய்தன.

இலங்கை கடற்படையை கண்டிக்கும் பதிவுகளும் அதிகம் வெளியாயின. நம்மூர் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றும் பாராமுகத்தை விமர்சிக்கும் பதிவுகளும் அதிக்கம் செலுத்தின. படுகொலையை தடுத்து நிறுத்த செய்ய வேண்டியவற்றையும் பதிவுகள் வலியுறுத்தின.

ஊடக‌ங்கள் இந்த பிரச்சனையை உரிய முரையில் கவனிக்காமல் இருபத‌ற்கும் கண்டன குரல்கள் எழுந்தன. திடிரென பார்த்தால் த‌மிழ் டிவிட்டர் வெளியில் மீனவர்களுக்காக ஆதரவு அலை உருவாகி சுழன்ற‌டித்து.

பலர் மீனவர்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டதோடு இது போன்ற‌ ஆதரவு திரட்டும் முயற்சியை உள்ளபடியே வரவேற்றும் மகிழ்ந்தனர். தென்னரசு போனர் டிவிட்டர் பதிவர்கள் டின்பிஷர்மேன் என்னும் குறிப்போடு பதிவிடுமாறு ஓயாமல் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதன் பயனாக தமிழர்களின் இணைய‌கோபம் கரைபுரண்டோடுகிற‌து. இதனிடையே சேவ் டிஎன்பிஷர்மேன் ஆர்ஜி என்னும் இணையதளமும் அமைக்கப்பட்டு இந்த பதிவுகள் ஒருங்கிணைக்கப்ப்பட்டு வருகிறது.மீனவர் படுகொலை தொடர்பான கட்டுரைகள் மற்றும் இணைப்புகள் சம‌ர்பிக்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மீனவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த துயரத்தை வெகுஜன கோபமாக மாற்றும் முதல் முயற்சியாக இதனை க‌ருதலாம். இந்த இணைய இயக்கம் நிற்காமல் வெல்லட்டும்.

நன்றி: சைபர் சிம்மன்

**********************************************

இணைய தளம்

டுவிட்டர்

ஃபேஸ்புக்

அனுராதபுரம் சிறையில் நடப்பது என்ன?

27 ஜன

தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையையிட்டு அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் மீண்டும் நேற்று புதன்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதேநேரம் கைதிகளை பார்க்க வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் சிறைச்சாலைக்கு வெளியே உறவினர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கட்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பதையிட்டு தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் பின்னர் அதனைக் கைவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று புதன்கிழமை, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சிறைச்சாலை கூரை மீதேறி சுமார் 50 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளைப் கொடிகள், பதாகைகள் ஆகியவற்றை ஏந்தியவாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதிகளை நேற்று பார்வையிட வந்த உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அநுராதபுரம் குருநாகல் பிரதான வீதியில், அனுராதபுர சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள ஜயந்த மாவத்தையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அந்த இடத்திலிருந்து கலைப்பதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டதுடன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இதேவேளை அநுராதபுரச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர் உள்ளிட்ட சுமார் 50 பேரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் சிறைச்சாலை வளாகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் பலியானதுடன் 26 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தீர்மானத்தின்படி விசாரணைக்கான விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான அறிக்கையை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்குமாறு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னரே அநுராதபுரம் சிறைசாலையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு நிர்வாக ரீதியான காரணம் இருக்குமாயின் அதை நிவர்த்தி செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.

**********************************************

இலங்கையில் இனவழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது, வெளியுலகத்திற்கு செய்தி செல்லாதவாறு தடுத்துவிட்டால் எதையும் செய்யலாம் என்பதே சிங்கள அரசின் நிலையாக இருக்கிறது. இதோ, அதை உறுதிப்படுத்துகிறது எமக்கு கிடைத்த ஒரு தகவல்

“நேற்று நான்கு மணியிலிருந்து சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக
கைதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உண்ணாவிரதம் இருப்பவர்கள் நேற்றிலிருந்து சாப்பாடும் எடுக்காமல்
இருக்கிறார்கள். அதனை சிறைச்சாலை நிர்வாகம் கணக்கில் எடுக்காமல்
இருக்கின்றது. அதாவது அடிப்படை வசதிகளான நீர் உணவு இருப்பிடம் போன்ற
பிரச்சினைகளை வைத்துத்தான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. 48
மணித்தியாலங்கள் கடந்துள்ள போதும் இதுவரையும் சிறைச்சாலை அமைச்சு கூட
எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு அடித்து அடக்கச் சொல்லி தகவல்
வந்ததாக சிறைச்சாலை நிர்வாகமும் மேலும் சில சிவில் குண்டர்களும்
பொலிசாரும் சேர்ந்து கைதிகளுக்கு அடித்து கல்லெறிந்து பிரச்சினைகள்
இடம்பெற்றுக் கொண்டுள்ளதுடன் நேரடியாக துப்பாக்கிப் பிரயோகமும்
மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை விசேட பாதுகாப்பு எனச் சொல்லி தனியாகத்தான்
அடைத்து வைத்திருக்கின்றாhகள். கைதிகள் எங்குமே ஓட முடியாத படியாக உள்ள
நிலையில் நால்வருக்கு வெடி பட்டு தலையில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்குது.
அவர்களை தூக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை
உறுதிப்படுத்தமுடியவில்லை.

நான் இப்ப மதிலுக்கு பக்கத்தில் படுத்திருந்துதான் கதைக்கிறன். அரசியல்
கைதிகள் எங்கும் ஓட முடியாத நிலை. துப்பாக்கிச் சூடு முற்று முழுதாக
எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றது. இருவருக்கு காலில்
வெடிபட்டும் கிடக்கிறார்கள். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கோண்டு போவதற்கு கூட வழியில்லை”

எதிர்ப்பு நடவடிக்கையா?, சில்லரை வன்முறையா?

25 ஜன

சென்னை எழும்பூரில் உள்ள சிங்களர்களால் நடத்தப்படும் இலங்கை மகாபோதி சங்கத்தில் நேற்று இரவு திடீரென சிலர் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் புத்த பிக்குகள் உள்பட ஐவர் காயமடைந்தனர்.

எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது.இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர்.

இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள். நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி,டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின.

கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர்.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

*******************************************************

இதுவரை நானூறுக்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டிருந்தும் அதை தடுக்கும் நோக்கிலான எந்த நடவடிக்கையையும் மைய அரசு எடுக்கவில்லை, மாநில அரசுக்கு அதற்கான அதிகாரமில்லை. அதேநேரம், அந்த கடல் பிராந்தியத்திலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்துவது இந்திய அரசுக்கும் தேவையாக இருக்கிறது. அதனால் தான் இது போன்ற நிகழ்வுகளின் போது நடவடிக்கை எடுக்கிறோம் என்று அறிக்கைவிட்டு மக்களை சமதானமடையச் செய்வதில் மட்டுமே முனைகிறார்கள்.

இதில், மனுக்கொடுப்பது, கோரிக்கை விடுப்பது அதிகபட்சமாக கடலுக்குள் போகாமலிருப்பது, உண்ணாவிரதம் போன்ற அடையாள எதிர்ப்புகளோடு மக்கள் முடங்கிவிட வேண்டுமா? ஆக, வேறுவிதத்தில் தங்கள் எதிர்ப்புகளிக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு அரசுகள் மக்களைத் தள்ளுகின்றன. அதன் விளைவுகள் தான் இது போன்ற நிகழ்வுகள்.

ஆனால் இது தனி அமைப்புகள் மீதான தாக்குதலாக சில்லறை வன்முறையாக முடிந்துவிடக்கூடாது. எல்லாத்தரப்பு மக்களையும் விளக்கி உடனிணைத்துக்கொண்டு மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடவேண்டும், தாக்குதல் தொடுக்க வேண்டும். மக்களை இதற்குமேலும் ஏமாற்ற முடியாது எனும் எண்ணத்தை மைய அரசுக்கு ஏற்படுத்தினாலொழிய இந்த மீனவர் படுகொலையில் அரசு எதுவும் செய்ய முன்வராது என்பதே உண்மை.

குஜராத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்தது மோடிதான்

24 அக்

2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர்  நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர்  கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா

***************************************************************************

ஜடாபியா மட்டுமல்ல, நேரடியாக படுகொலைகளை புரிந்தவர்களே தாங்கள் என்னென்ன செய்தோம்? எத்தனை பேரை வெட்டிக்கொன்றோம், எத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம்? எவ்வளவு சொத்துக்களை சூறையாடினோம்? என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். என்ன நடந்தது? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை. இப்போது ஒரு ஜடாபியா வந்தா இதை புதிதாய் அம்பலப்படுத்துகிறார்? குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இந்துக்களின் மனசாட்சிக்காக தூக்குத்தண்டனை விதிக்கும், இந்துக்களின் நம்பிக்கைக்காக அவர்களிடம் இடத்தைக்கொடுக்கும் நாட்டில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலும் எதுவும் நடக்காது என்றால் அது நிர்வாகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் இந்துபாசிச‌வெறியின் அடையாளம்.