தொகுப்பு | திசெம்பர், 2011

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?

30 டிசம்பர்

 

“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ், 

´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை கலாச்சார தர்மப்படி சாதியப் போராட்டமாகவே உள்ளது என்பதும் இந்திய ஜனநாயமும் சட்டமும் அதிகார ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவே இயங்குகின்றன என்பதற்கும் இந்தியாவில் தொடரும் வர்க்கப்போராட்டங்களே உலகத்திற்கு உண்மையை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சில நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தில் ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் தான் இன்றும் இந்திய கிராமங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சாதியார்கள் அடிமை முறையில் ஆண்டாண்டு காலமாக பெரு நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தில் உழைப்புக்கேற்ற எந்த கூலியுமற்று எந்த உரிமையுமற்று வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். 

கோடிக்கணக்கான மக்களின் நிலை இன்றும் இப்படியே தொடருகிறது!

தமிழ்நாட்டில் நடந்த வர்க்கப்போராட்டங்களில் சாதியப் போராட்டத்தின் வெறித்தனத்தின் உச்சம் எந்நிலைக்கு சென்றது என்பதற்கு கீழ்வெண்மணி கிராமத்தின் சம்பவங்களை ஆராய்வோம்.

தஞ்சை என்றதும் பசுமையும், இலக்கியமும், சிற்பங்களும், ஓவியங்களும் நம் சிந்தனைகளில் ஒடக்கூடும். ஆனால் அதையும் தாண்டி தஞ்சை மண்ணிற்குள் சர்வாதிகாரத்தில் சாதித்திமிருக்குள் உடம்பை ஊறப்போட்டு வைத்த மிருகத்தனமும், அம்மண்ணின் மைந்தர்களுக்கு உரியதாக இருந்ததை நம் இலக்கியம் இதுவரை பேசியதில்லை.

தஞ்சையில் நிலச்சுவான்தார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் வைத்திருந்தது. இதில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நிலங்களில் செய்யும் வேலைகளுக்கு கூலியாக 1968-வரையிலும் ஒருபடி நெற்களே கூலியாக கொடுக்கப்பட்டன. 

மேலும் வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை நேரத்தில் களைப்பாக இருந்தால் உடம்பில் இரத்தம் வரும் அளவுக்கு சாட்டையாலும், சவுக்கு தடியாலும் தண்டிக்கப்பட்டனர். மாட்டுச் சாணியை தண்ணிருடன் கரைத்து குடிக்கச் சொல்லும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. மறுக்கும் கூலி தொழிலாளர்கள் அடியாட்களால் உதைக்கப்பட்டனர். 

இவ் அடிமைமுறை பல நூறு ஆண்டகளாக தொடர்ந்திருந்த போதும் 1947- இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் நீடித்தது என்பதும், இந்திய அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்ன செய்தது என்பதும் இன்றளவும் கேட்கக்கூடிய கேள்வியாகவே தொடருகிறது. 

1960-க்கு மேல் அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மையும், சீனிவாசராவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தி விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தனர்.

இராஜாஜி ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது´ என்று வர்ணித்ததும் அப்போதுதான். 

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெற்களுடன் மேலும் ஒருபடி நெற்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை. 

ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. 

விவசாய தொழிலாளர் சங்கம் இருப்பதால் தான் விவசாய தொழிலாளிகள் துணிந்து நிற்கிறார்கள் என்று சங்கத்தை ஒழித்துக் கட்ட நினைத்தனர். சங்கத்தில் இருந்த தொழிலாளர்களை தாக்குவதும், சங்கத்தில் இருப்பவர்களுக்கு வேலை தர மறுத்து சங்கத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைத்தனர். 

மேலும் நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில், ´நெல் உற்பத்தியாளர்´ சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் மூலம் உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் விவசாய தொழிலாளர்களை வரவழைத்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சச்சரவுகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. 

நிலச்சுவான்தார்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட சங்கத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொல்லும்படி சதி திட்டம் தீட்டப்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் இணைந்து இச்சதி திட்டத்தை குறித்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் புகார் கொடுத்தாலும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை. 

நிலைமை இழுபறியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் 25.12.1968-அன்று மாலை 5-மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் [நாயுடு] வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிலச்சுவான்தார் சவரிராஜ் [நாயுடு] வீட்டுக்கு வந்து முத்துச்சாமி, கணபதியின் கட்டை அவிழ்த்து அழைத்துச் சென்றனர். 

அப்போது நிலச்சுவான்தார் ஆட்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த நிலச்சுவான்தார்கள் ஆத்திரம் கொண்டனர். ´கோபால கிருஷ்ண´ [நாயுடு] துப்பாக்கிகளுடன் காவல்துறை மற்றும் அடியாட்களோடு வெண்மணி கிராமத்துக்கு சென்றார். 

கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்ட விவசாயத் தொழிலாளர்களை காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதைப் போல் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தினர். தற்பாதுகாப்புக்காக விவசாயத் தொழிலாளர்களும் திருப்பி தாக்கினர். இதில் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கித் தாக்குதலில் பல தொழிலாளர்களுக்கு உடலில் குண்டுகள் பாய்ந்தன. தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓடினர். 

தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 48. 

ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண [நாயுடு] குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த 48-பேர்களும் மரண பயத்தில் கதறினர். குடிசையை தீ ஆக்ரோஷமாக பிடித்துக் கொண்டு தகி தகித்துக் கொண்டு இருந்தது. 

தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வந்துவிடக் கூடும் என்று அடியாட்கள் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும் குடிசையில் இருந்து ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பிடிபட்டு மீண்டும் குடிசைக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். ஒரு தாய் தன் ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்ற வெளியே வீசினாள். பாதகர்களோ குழந்தை என்றும் பார்க்காமல் மீண்டும் குடிசைக்குள்ளே தூக்கியெறிந்தார்கள். 

இக்காட்சிகளை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3-சிறுகுழந்தைகளும் பயத்தில் கத்தின. அவர்களையும் தூக்கி நெருப்பில் போட்டது வன்முறைக்கூட்டம். பெருங்கூச்சலும், மரண ஓலமும் வெகுநேரத்திற்கு பின்பே அடங்கியது.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொன்டிருந்த குடிசையின் உள்ளே பார்த்த போது மனித உயிர்கள் கருகி தீச்சுவாலைகள் சதைகளை சாம்பல்களாக்கி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. 

மறுநாள் காலை 10- மணி அளவில் எரிந்து சாம்பலாகிப் போயிருந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது. மிகச் சிறிய குடிசைக்குள் கருகிய நிலையில் 44-மனித உடல்களை எண்ண முடியாத அளவில் எலும்பும் சாம்பல் குவியலுமாய் கிடக்கிறது. அதில் மாதாம்பாள் (வயது 25) என்ற பெண் தன் குழந்தை தீயில் கருகிவிடக் கூடாதே என்று இறுக்கி அணைத்தபடி குழந்தையோடு கருகி பிணமான பின்னும் அவளுக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்தபடி இறந்து போய் இருந்த காட்சியும் குழந்தை தாய் மார்பின் முலையில் வாய் வைத்தபடி இறந்து கிடந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்தது.

பிணங்களின் உடல்களை பரிசோதிக்கும்படி அரசாங்க டாக்டருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் வந்த டாக்டர் இதற்குள் புகுந்து சாம்பலாகிப் போன உடல்களை பரிசோதிப்பது சிரமம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் காவல்துறையோ தோராயமாக 29-பேர்தான் இறந்திருக்கின்றனர் என்று கணக்கை குறைத்து எழுத முற்பட்டது. ´இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்´ என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கதை சொல்லியது. 

நாளேடுகளில் முகப்பு செய்திகளாக கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. தமிழகம் அதிர்ந்தது. கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். தி.க மற்றும் கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள். சீனாவில் வானொலியில் தொடர்சியாக கீழ்வெண்மணி கொடூரம் குறித்து செய்தி வெளியிட்டது. 

உலக நாடுகள் இந்தியாவின் ஜாதித் திமீரில் நடந்த படுகொலையைக் கண்டு உறைந்து போனது. ‘பாட்ரியாட்´, ´நியுஏஜ்´ போன்ற டெல்லிப் பத்திரிகைகள் “நாட்டுக்கே அவமானம்” என்று எழுதின. கீழ்வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பெரியாரின் வயது 90. [ஆதாரம்: பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி 1968-டிசம்பர் 27-ஆம் தேதியில் விடுதலையில் வந்திருக்கிறது.]

28.12.1968-அன்று கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகள் குறித்து பெரியாரிடம் தெரிவிக்கப்பட்ட உடன் அன்று மாலையே வீடு திரும்பினார். கீழ்வெண்மணி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளும் வெளியிட்டார்.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் சம்பவம் நடந்த அன்றே செய்தி தெரிந்ததும் மறுதினம் கீழ்வெண்மணிக்கு வந்தனர். 

கிட்டத்தட்ட 1-லட்சம் விவசாயக் கூலி தொழிலாளிகள் கீழ்வெண்மணியில் முற்றுகையிட்டனர். எப்போது என்ன நடக்கும் என்று உணரமுடியாத வண்ணம் பதட்ட நிலையில் இருந்தது. எல்லாரிடமும் மிராசுதாரையும், அடியாட்களையும் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மிகுந்திருந்தது. 

கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமசாமி அம்மக்களை அமைதிப்படுத்தி நீண்ட நேரம் உரையாற்றினார். கொடூரமாக நடைப்பெற்ற நிகழ்வுக்கு சட்டப்படி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல் நிலையத்தில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து புகார் தரப்பட்டது. கீழ்வெண்மணி படுகொலையை நேரில் பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிக்கு வந்தார்கள்.

கீழ்வெண்மணி வன்முறை நடந்தபோது போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண [நாயுடு] உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் நிலசுராந்தாரர்கள் கூட்டம் வேறொரு மோசடி வேளையில் ஈடுபட்டது.

“விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச்சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர்” என்று நிலச்சுவான்தார்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டு ஊடகங்களில் செய்தி வரச் செய்தனர். நெருப்புக்கு இறையாக்கப்பட்டதற்கு காரணம் சொன்ன நிலச்சுவான்தார்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற 11-விவசாயத் தொழிலாளிகளுக்கு என்ன காரணத்தை சொல்ல முடிந்தது?

போலீஸ் ஐஜி கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் துப்பாக்கிகள் 42- இருப்பதாகவும், 28-ஆம் தேதி முடிய 5-துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்று கூறியதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். மிகக் கொடுமையாக நடந்த இப்படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண [நாயுடு]வுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண [முதலியார்] 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். 

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண [நாயுடு] சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண [நாயுடு] மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

“Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene.” -‘Hindu´

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.” – ´இந்து´

மேலும் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று புத்திசாலித்தனமான கருத்தையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், நீதிக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன செய்வது? தமிழகத்தில் மக்களிடம் எந்த சலசலப்பும் இல்லை. 

விவசாயத் தொழிலாளர்கள் விரக்தியடைந்தனர். எத்தனை சாட்சிகள் இருந்தும் ஜனநாயகமும், சட்டமும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. அதன் பின்னணி அரசியல் நகர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல….

நிலச்சுவான்தார்களின் கௌரவப் பிரச்சனையாக கருதப்பட்டு எப்படியும் கோபால கிருஷ்ண நாயுடுவை வெளிக்கொணருவதில் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். சி.பி.எம் கட்சி கீழ்வெண்மணியில் கருகி போனவர்களுக்காக நினைவு இல்லம் கட்டியது மட்டுமே அம்மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.

கோபால கிருஷ்ண [நாயுடு] விடுதலை செய்யப்பட்டு 12-ஆண்டுகள் சென்ற நிலையில் 1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ணனை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர். பிணத்தின் அருகில் ´வினோத் மிஸ்ரா´ வாழ்க! என நச்சல்பாரி இயக்கத் தலைவரின் பெயரில் துண்டு அறிக்கைகளை வீசிவிட்டு சென்றனர்.

காவல் துறை வன்முறையாளர்கள் கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றதாக குற்றம் சாட்டியது. தமிழகத்தில் தொழிலாளர்களோ இனிப்பு கொடுத்து கொண்டாடினர். 

கீழ்வெண்மணி படுகொலையும் அதற்கு சட்டம் கொடுத்த தீர்ப்பின் யோக்கியதையைக் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத அலட்சியத்தில் தான் தமிழக மக்களின் மனிதாபிமானம் இருக்கிறது…

மக்களின் இழிநிலைக்கு அடிப்படையாக சாதித்திமிரை ஒழித்தெடுக்கும் வேலையை சாமர்த்தியமாக அலட்சியப்படுத்துவதன் மூலம் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அடக்கியே மீண்டும் மீண்டும் ஓர் மாயைக்குள் சமூகத்தை கட்டமைக்கிறது இந்திய தேசீயம்…

வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் நமக்கு சட்டத்தின் பங்களிப்பின் நம்பகத்தன்மையை குறித்து பல கேள்விகள் எழுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 64-வருடங்களாகிறது. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள், ‘நாங்களும் மனிஷன்கள் தான்டா’ என்று போராடக்கூடிய நிலையில் தான் இன்றைய இந்திய ஜனநாயகம் இருக்கிறது.

முதல் பதிவு: தமிழச்சி

இலங்கையில் புத்த மதம் படும்பாடு

28 டிசம்பர்

 

பௌத்த பிக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்ற மொன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர் பான வரைவுத் திட்ட சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

பௌத்த பிக்குகளுக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்படும் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இந்த தனி நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரதமரும், பௌத்த சாசன அமைச்சருமான டி.எம். ஜயரட்ன இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.

 

மன்னராட்சி காலத்தில் பௌத்த பிக்குகள் தொடர்பான முறைப்பாடுகள் விஹாரைகளிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. உத்தேச பௌத்த பிக்குகளுக்காக நீதிமன்றம் கண்டியில் அமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, கொலை, கொள்ளை, சட்டவிரோத தொல்பொருள் அகழ்வு, பாலியல் வன்முறை, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பாசிசத்தின் வரலாறில் எப்போதும் மதம் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. கத்தோலிக்க திருச்சபையும், மற்றும் கிறீத்தவ நிறுவனங்களும் இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், ஸ்பானிய நாடுகளில் பாசிசம் நிலவிய போது, அப் பாசிச அரசுகளுக்கு ஆதரவு வழங்கின. இந்தியாவில் நவ பாசிச சிந்தனை இந்து மத நிறுவனங்களால் வளர்க்கப்படுகிறது. மன்னர் மஹிந்த எதை வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு இப்போ புத்தமதத்தின் முற்று முழுதான அதரவு தேவைப்படுகிறது .

 

ஜேவிபி யில் இருந்தும், ஜாதிக கெல உறுமயவில் இருந்து வெளியேறும் இனவாத பிக்குகளை தன் வசம் திருப்ப மஹிந்த பாவிக்கும் மூலோபாயத்தில் ஒன்று தான் இந்த நீதி மன்றம். ஜேசு கிறீஸ்து இன்று உயிரோடு இருந்திருந்தால், தனது சிந்தனையும் பெயரும் எவ்வளவு கீழ்த்தரமாக கிறீஸ்தவ பாதிரிகளால் பயன்படுத்தப்படுகிறதனை கண்டு தூக்கில் தொங்கி இருப்பர். அதே போன்று இலங்கையில் புத்த மதம் படும்பாட்டை கண் கொண்டு பார்த்தல் புத்தன் இந்து சமுத்திரத்தில் விழுந்து தன் உயிரை போக்கி இருப்பான் ! 

 

முதல் பதிவு: பு.ஜ.ம.மு

இஸ்லாமிய இளைஞர்களே! எங்கு செல்கிறீர்கள்?

23 டிசம்பர்

 

இன்றைய தமிழ் சூழலில் இஸ்லாமியர்களின் துடிப்பான ஆதரவை பெற்ற அமைப்புகளில் முக்கியமானது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு. 1980களின் பிறகான இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பணிகளில் பிஜே என்றழைக்கப்படும் ஜெய்னுலாப்தீன் என்பவரின் பங்களிப்பு முதன்மையானது. மத அமைப்பு என்றாலும், பெருமளவில் இளைஞர்களை ஈர்த்ததில் பிஜேவின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. 1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை. தொடக்கத்தில் இருந்த ஜாக் அமைப்பு முதல் இன்று வரை அவர் இருந்த அமைப்புகளை இருந்தபோது, வெளியேறிய பிறகு என இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் பிஜே எனும் தனிமனித ஆளுமையை உய்த்துணரலாம். இந்த தனிமனித ஆளுமையே அந்த அமைப்பு பலத்தின் ஆதாரசுருதியாக இருக்கிறது.

 

அதேநேரம், இந்த தனிமனித ஆளுமை மதத்தின் மீதான பற்றுறுதியாக இஸ்லாமிய இளைஞர்களிடம் பொருள்மாற்றம் செய்து உணரப்பட்டிருக்கிறது. தவ்ஹீத் ஜாமாத்தில் செயல்படும் இளைஞர்களிடம் அரசியல் ரீதியான பேச்சுகளில் ஈடுபடும் போது இதை அவர்கள் மறுக்கிறார்கள். தங்களின் அமைப்பு உறுதிக்கான அடிப்படை மத ஒழுங்கில் தங்கியிருக்கிறதேயன்றி குழுவாதத்திலோ, தனிநபர் வழிபாட்டிலோ அல்ல என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நேரும் சொந்த அனுபவங்கள் அவர்களின் வாழ்வில் அழுத்தங்களை ஏற்படுத்தும் வரை; தங்களின் மத ஒழுங்கை சமூக அரசியல் அரங்குகளில் உரசிப்பார்ப்பதற்கோ, ஒப்பீட்டு முறையில் மீளாய்வு செய்வதற்கோ ஆகுமான தூரத்தில் அவர்கள் இருக்கப் போவதில்லை. என்றாலும் சில கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்தியாக வேண்டியதிருக்கிறது. எனவே சில தொடக்கநிலை கேள்விகளை முன்வைப்பதற்காகவே இந்தப் பதிவு.

 

கீழே இருக்கும் காணொளியின் சில துணுக்குகளைக் காணுங்கள்.

 








இது ஒன்றும் புதிய காணொளி அல்ல, கமுக்கமான காணொளி என்றும் கூறமுடியாது, அமைப்பில் செயல்படும் பலர் ஏற்கனவே இதைக் கண்டும் இருக்கலாம். அமைப்பில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருந்த பாக்கர் (தற்போது தனியாக இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை நடத்தி வருகிறார்) என்பவர் மீது கூறப்பட்ட பாலியல் அத்துமீறல் முறையீட்டில் என்ன முடிவு எடுப்பது என்பதற்காக நிர்வாகிகள் ஒரு விடுதி அறையில் கூடி விவாதிக்கும் காணொளி இது. பின்னாளில் அவர் அமைப்பை விட்டு நீக்கப்பட்டது, தனி அமைப்பை தொடங்கியது, இன்று அந்த இரு அமைப்புகளும் ஒன்றின் மீது மற்றொன்று வசைமாரி பொழிந்து கொள்வது போன்றவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

 

ஆனால், தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து, பரப்புரை, கேள்விபதில் நிகழ்சிகளின் மூலம் இஸ்லாமிய கோட்பாட்டு வாதத்தை இஸ்லாமிய மக்களின் முனைப்பாக மாற்றுவதற்கு ஒழிச்சலின்றி பாடுபட்ட பிஜே, பாக்கர் பாலியல் விவகாரத்தில் பரிந்துரைக்கும் வழிமுறை இஸ்லாமிய கோட்பாட்டு அடிப்படையிலானது தானா? பாக்கர் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் புரிந்துள்ளார் என்பதும், அது அமைப்பில் முறையீடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதனடிப்படையில் அமைப்பு நிர்வாகிகள் முறையிட்ட பெண்ணிடம் விசாரணை செய்திருக்கிறார்கள் என்பதும், பாக்கரின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார் என்பதும், பாலியல் தவிர்த்து பொருளாதார முறைகேடுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதும், அமைப்பு ரீதியான விதிமீறலும் கூட அவர் மீது இருக்கிறது என்பதும் அங்கு நிர்வாகிகளால் மறுக்கவியலாத முறையில் வெளிப்படுத்தப் படுகிறது. இந்த நிலையில் பீஜே பரிந்துரைக்கும் வழிமுறைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவர், இது வெளிப்பட்டால் அது இயக்கத்தை பாதிக்கும் என்பதால் முடிந்தவரை விவகாரத்தை அமுக்கிவிட முயற்சிக்கிறார். சில நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் வற்புறுத்துவதாலும், பாக்கரே பொதுக்குழுவோ, செயற்குழுவோ அதில் நேர்நிற்க தயார் என்றும் அறிவித்ததாலும் இறங்கி வரும் பிஜே, அப்போதும் பொதுக்குழுவா? செயற்குழுவா? என்பதையும் தன்னுடைய கருத்துக்கு இசைவாக தீர்மானிக்க அறிவுறுத்துகிறார்.

 

தன் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவள் கையைத் தறிப்பேன் என்கிறார் முகம்மது. ஆனால், ஏராளமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை, பாடுபட்டு வளர்த்த இயக்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதால் விசயத்தை அமுக்கக் கோருகிறார் பிஜே.

 

யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரச்சனை உங்கள் முன் வந்தால் அவர் காஃபிர் என்பதால் நீங்கள் நீதம் தவற வேண்டாம் என்கிறார் முகம்மது. ஆனால், முஸ்லீம்களுக்குள்ளேயான பிரச்சனையில் கூட மூடி மறைக்க முயல்கிறார் பீஜே.

 

இந்த விவகாரத்தில் பிஜே காட்டிய வழிமுறை சரியா? தவறா? சரி என்றால் எந்த அடிப்படையில்? கட்டிக் காத்த இயக்கம் அவப்பெயரை சந்திக்க நேரக் கூடாது என்னும் உன்னத(!) நோக்கம் அவருக்கிருந்தது என்று நம்புபவர்கள், இயக்கம் மீதும், இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அவர் என்ன மாதிரியான எண்ணம் கொண்டிருந்தார்? இயக்கத்தின் மீதான அவர் கருத்து என்ன? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா. இதோ கீழே உள்ள காணொளி துணுக்கை பாருங்கள்.

 

 

மேலே குற்றம் சாட்டப்படும் அதே பாக்கர் பிஜே மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டை வைக்கிறார். அதாவது டிசம்பர் ஆறில் அயோத்தி சென்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட முடிவை பிஜே கிடப்பில் போட்டுவிட்டர் என்பது பாக்கரின் குற்றச்சாட்டு. இதற்கு பிஜே அளிக்கும் பதிலைக் கவனியுங்கள். மேடையில் மக்களை கவர்வதற்காக கண்டதையும் பேசுவோம், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்கிறார். யார் கூறுவது? மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று. என்றால் இந்த இயக்கத்தின் மீதும் அந்த இயக்கத்தில் செயல்படும் உறுப்பினர்கள் மீதும் என்ன மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? மக்களை ஆட்டு மந்தைகளாக கருதும் ஒரு தலைவனின் செயல்பாட்டில் நேர்மை என்ற ஒன்று இருக்க முடியுமா? அல்லது மக்களை உந்தாற்றலாக கருதாத ஒரு இயக்கம் சரியான நிலைப்பாட்டில் நீடித்திருக்க முடியுமா?

 

மனைவியைப் பிரிந்து அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு மேல் தனித்திருக்கக்கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. ஆனால் பிஜே உட்பட இஸ்லாமிய அமைப்புகளை நடத்தும் அனைவரின் பொருளாதார அடிப்படைகளும் வெளிநாடுகளில் ஆண்டுக் கணக்கில் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் முஸ்லீம் உழைக்கும் மக்களையே சார்ந்திருக்கிறது. வரதட்சனையை இஸ்லாம் தடுக்கிறது. எனவே வரதட்சனை வாங்கி நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்று உதார் விடும் அண்ணன்கள்; குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை எனவே, அவ்வாறு பிரிந்திருந்து அனுப்பும் பணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறிவிப்பார்களா?

 

இப்போது கூறுங்கள் இளைஞர்களே! இந்த இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பு மதத்தின் மீதான பற்றுறுதியினாலா? ஒரு தனிமனிதரின் ஆளுமையினாலா? எனக்குத் தெரியும் இதைப் படிக்கும் பலர் இந்தக் கேள்விகளை அலட்சியப்படுத்தி புறந்தள்ளிவிடக் கூடும் என்பது. ஆனால், குறுகிய வட்டத்திற்கு வெளியே சிந்திக்கும் திறனுள்ளவர்களின் மனதில் ஒரு வீழ்படிவாகவேனும் இந்தக் கேள்விகள் தங்கியிருக்கும்.

 

நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகில் நிகழும் எந்த ஒரு செயலும் நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது, நம்மைப் பிசைந்து உருக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்மீது தாக்கம் செலுத்தும் செயல்களை நம்மால் கவனிக்காமல் கடந்துவிட முடியுமா? விலைவாசி உயர்வில் தொடங்கி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் வரை ஒவ்வொன்றின் மீதும் உங்களின் கருத்து என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்து தனக்கு சாதகமா பாதகமா எனும் அடிப்படையில் எழுந்ததா?, சரியா தவறா எனும் அடிப்படையில் எழுந்ததா? இதை சரிப்படுத்தாமால் உங்களுக்குள் எழும் எந்தக் கருத்தும், – அது மத ரீதியாக ஏற்படும் கருத்தானாலும் கூட – தவறாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

 

எந்த விசயத்திலும் தவறான கருத்தைக் கொண்டிருக்கக் கூடாது என எண்ணுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, தங்களிடம் இருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமூகத்துடன் உரசிப்பார்ப்பது தான்.

வாருங்கள் இளைஞர்களே!

உங்களின் சமூகப் பார்வை இந்தக் கணத்திலிருந்தே தொடங்கட்டும்.

பகவத் கீதை: தடை செய்யப்பட வேண்டிய நச்சுக்கிருமி

21 டிசம்பர்

ரஷியாவில் பகவத் கீதை நூல் வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.

 

மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.

வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.

பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,

ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும்.

 

முதல் பதிவு: புமாஇமு

 

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்

20 டிசம்பர்

கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.

அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.

திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.

90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.

பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.

இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.

இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.

இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.

இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?

இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.

இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.

ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.

90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.

எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.

மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.

இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.

அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைகள். இதில் சசிகலா கும்பல் முடிவெடுத்திருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது.

ஒட்டு மொத்தமாக பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை நியாயப்படுத்துவதற்காகவே பார்ப்பன ஊடங்கள் சசிகலா கும்பலை மட்டும் குறிவைத்து தாக்குகின்றது. மேலும் பார்ப்பன புரோக்கர்கள், பா.ஜ.க முதலான பார்ப்பனியக் கட்சிகளும் சசிகலா கும்பலை வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுக்கின்றன. இது புதுப் பணக்காரன் பரம்பரைப் பணக்காரன் மேல் கொண்டிருக்கும் பகையைப் போன்றதுதான். அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.

இப்படித்தான் இரண்டின் நலனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்திருக்கின்றன. இதில் சசிகலாவை தவிர்த்து மற்ற ஊழல் தளபதிகளை நீக்குமாறு பார்ப்பன ஊடகங்கள் கோரவில்லை. ஏனெனில் அந்த் தளபதிகளெல்லாம் அம்மா காட்டும் திசையில் ஐந்தடி பள்ளத்தில் விழுந்து வணங்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இடையில் சசிகலா கும்பல் புரட்சித்தலைவியன் கிச்சன் காபினெட்டாக இருப்பதுதான் அவர்களுடைய கவலை. அதனால்தான் மன்னார்குடி கும்பலை தூக்கி எறிந்து விட்டு பார்ப்பனர்களின் கிச்சன் காபினெட்டை திணிக்க அவர்கள் துடிக்கிறார்கள்.

அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம்.ஃ

நம்மைப்பொறுத்த வரை ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடையே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை.

அரசியல் என்றால் அதை ஒரு கிசுகிசு நடவடிக்கைகள் போல கற்றுத்தரும் இந்த ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து நாம் விடுபடுவதும், மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும். பதிவுலகில் பலரும் இதை ஒரு கிசுகிசு நடவடிக்கையாக பேசி விவாதிப்பது பலன்தராது. மாறாக பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகவே அவை மாறும்.

முதல் பதிவு: வினவு

குர் ஆனும் முரண்பாடுகளும்

19 டிசம்பர்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 16

 

திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம். குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

“இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”

(குர்ஆன் 4:82) 

குர்ஆன் எவ்விதமான தவறுகளும், முரண்பாடுகளும் இல்லாதது. குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இதுவே சரியான ஆதாரம். அதில் காணப்படும் முன்னறிவிப்புகள் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை மிக வலுவாக நிருபிக்கிறது என்கிறார்கள்.

குர்ஆனைப் பற்றி பொதுவாக கூறுவதென்றால், சற்று கவிதை நடையில் எழுதப்பட்ட உரைநடையே.

…அ(வருக்கு அருளப்படுவ)து நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர (வேறு) இல்லை.…

(குர்ஆன் 36:69) 

அல்லாஹ் கூறுவதைப் போல குர்ஆன் தெளிவான புத்தகம் அல்ல. குர்ஆனை ஹதீஸ்களின் துணையின்றி முழுமையாக எவராலும் புரிந்து கொள்ள இயலாது. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகள் குர்ஆனில் மட்டுமல்ல ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்  இந்த புலம்பல் குர்ஆனில் இல்லை.

புகாரி ஹதீஸ் -4826

அபூ ஹுரைரா (ரலி ) அவர்கள் கூறியதாவது.

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

        குர்ஆனின் வசனங்களை ஆய்வு செய்யும் பொழுது பல முரண்பாடுகள் தோன்றியது. எனவே  முஹம்மது நபியின் ஒவ்வொரு சொல்லையும், அசைவையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  சுருக்கமாகச் சொல்வதென்றால் குர் ஆனின் விரிவுரையாகவே அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. ஹதீஸ்கள் எனப்படும் வரலாற்றுச் செய்களை இஸ்லாமிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடாத ஒன்றாகும். இதன் காரணமாகவே இத்தொகுப்பில் ஹதீஸ்களைப் பெருமளவு பயன்படுத்தியிருக்கிறேன். குர்ஆனின் முரண்பாடுகளை விவாதிக்கையில் ஹதீஸ்களை மிகமுக்கிய ஆதராமாக முன்வைக்கிறேன். இனி நாம் குர்ஆனை விவாதிப்போம்.

                புதிதாக குர்ஆனை வாசிப்பவர்கள் அதன் எதிர்பாரத திருப்பங்களால் அதிர்ச்சியடைவது உறுதி. ஒரே செய்தியை சிறிய மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப பலமுறை கூறுவது. ஒரு வரலாற்று செய்தியிலிருந்து மற்றொன்றிற்கு திடீரென்று தாவிக் குதிப்பது. அற்பமானவன் என்று வர்ணிக்கப்பட்ட  மனிதனிடம்  விடப்படும் சவால்கள், எச்சரிக்கைகள், பயமுறுத்தல்கள், முன்னுக்குப்பின் முரணாக தொகுக்கப்பட்ட  முறை என்று நிறைய கூறலாலாம்.

குர்ஆனை நடுநிலையாக ஆய்வு செய்தவர்களின் கருத்து என்னவென்றால், இலக்கண பிழைகளும், எழுத்துப் பிழைகளும் நிறைய காணப்படுகிறது. இது மெய் சிலிர்க்க வைக்கும் இலக்கியமல்ல என்கின்றனர்.

வாதத்திற்காக, எழுத்துப் பிழைகள் குர்ஆனைப் பதிவு செய்த எழுத்தர்களிடம் நேர்ந்திருக்கலாம் என்று விட்டுவிடலாம். இலக்கணப் பிழைகளுடன்தான் அல்லாஹ் உரையாடுவானா? அல்லாஹ்வின் மொழியிலக்கணத்தை அற்ப மனிதர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூற முடியாது ஏனெனில் அல்லாஹ்வின் பதில் வேறுவிதமாக உள்ளது.

அவருக்கு கவிதை (இயற்ற) நாம் கற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் அவருக்கு அது தேவையுமில்லை அ(வருக்கு அருளப்படுவ)து நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர (வேறு) இல்லை.…

(குர்ஆன் 36:69) 

மார்க்க அறிஞர்கள் முன்வைக்கும் “குர்ஆன் ஒரு ஈடுஇணையற்ற இலக்கியம்” என்ற வாதத்தை விவாதிக்கவும் அதன் இலக்கிய நயத்தையும் இலக்கணத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் என்னிடம் அரபி மொழியில் புலமை இல்லை. அது எனக்குத் தேவையுமில்லை குர்ஆனின் ஏகபோக உரிமையாளர் என்று கூறப்படும் அல்லாஹ்வே குர்ஆனைக் கவிதையில்லை என்று அறிவித்த பிறகு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மட்டும் விடாப்பிடியாக மெய்சிலி்ர்க்க வைக்கும் இலக்கியம் புல்லரிக்க வைக்கும் கவிதை என்று சொறிந்து கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. முரண்பாடுகளை மறைக்க அவர்கள் செய்யும் “ஜிகினா வேலை”யாகத்தான் இருக்க வேண்டும்.  எனவே, கருத்து முரண்பாடுகளை ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன். உருவவழிபாடு இல்லாமை, வழிபடும் முறை,  என்று  மற்ற மதநம்பிக்கைகளுடன் முரண்படுவது சாதாரண விஷயம். உறுதி செய்யப்பட்ட உண்மைகளுடனும், தனக்குத் தானே முரண்படுவதையும் நிச்சயமாக ஏற்க இயலாது. 

 குர்ஆன் தன்னைப்பற்றி இவ்வாறு கூறுகிறது

உம்முடைய ரப்பின் வார்த்தைகள் உண்மையாலும்  நீதத்தாலும்  பரிபூரணமடைந்து விட்டன.

(குர்ஆன் 6:116)

இது மனிதர்களுக்கு விளக்கமாகவும் நேர்வழிகாட்டியாகவும் பயபக்தியாளர்களுக்கு நற்போதனையாகவும் இருக்கிறது

(குர்ஆன் 3:138)

அவர்கள் பயபக்தியுள்ளவர்களாவதற்காக கோணலில்லாத அரபிமொழியில் குர்ஆனை (அருளியுள்ளோம்)

(குர்ஆன் 39:28)

நிச்சயமாக இந்தக் குர்ஆன் எது மிக நேர்மையானதோஅதன் பக்கம் நேர்வழிகாட்டுகிறது…

(குர்ஆன் 17:9)

ஆனால் அல்லாஹ் குர்ஆனின் மற்றொரு பகுதியில்,

அவன்தான் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தான் அதிலிருந்து தெளிவான வசனங்களும் இருக்கின்றன அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும் மற்றவை முதஷாபிஹத் ஆகும்.…

(குர்ஆன் 3:007)

முதஷாபிஹாத்துகள் என்பது பல பொருள் தரும் வசனங்கள். முதஷாபிஹாத்துகளின் தேவை என்ன?

…எனவே எவர்களுடைய இதயங்களில் சருகுதல் இருக்கிறதே அவர்கள் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும், அதனில் விளக்கத்தை தேடுவதற்காகவும் அதிலிருந்து பல பொருட்கள் உடையதையே தொடருவார்கள் அதனுடைய விளக்கத்தை அல்லாஹ் தவிர (வேறு யாரும்) அறியமாட்டார்கள்…

(குர்ஆன் 3:007)

அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் பொருளறிய முடியாத வசனங்களின் தேவை என்ன? குழப்பத்தை ஏற்படுத்தி நேர்வழி அடைவதை எதற்காக தடுக்கப்பட வேண்டும்? பொதுவாகச் சொல்வதென்றால் மனிதன் தவறு செய்யக் கூடியவனே. அவனது உள்ளத்தில் ஏற்படும் சந்தேகங்களின் காரணமாக நம்பிக்கையில் சருகல் ஏற்படுவது இயல்பு. அப்பொழுது அவனை நேர்வழிப்படுத்த உதவாத வேதம் எதற்கு? கோணலில்லாத தெளிவான மொழியில் கூறப்பட்டுள்ளதாக முரண்படுவது ஏன்?

இதன் நேரடிப் பொருள் என்னவென்றால், குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளே எனவே இது மிகச் சரியானது, கோணலில்லாதது, தெளிவானது, முழுமையானது என்பதை உளமாற உறுதி கொண்ட பிறகே  குர்ஆனை ஆராய வேண்டும். ஆய்வின் முடிவுகள் உங்களது முன்கூறிய உறுதிமொழிக்கு முரண்பட்டால் உங்களது நம்பிக்கையில் சருகுதல் ஏற்பட்டு விட்டது, பாதை விலகிச் சென்று விட்டீர்கள் என்பதே இதன் பொருள்.

இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”

(குர்ஆன் 4:82) 

இப்பொழுது இந்த குர்ஆன்வசனத்தை என்ன செய்வது?

பலவிதமான பொருள் தரும்  வசனங்களைக் கொண்டதொரு தொகுப்பை நேர்வழிகாட்டியென தன்னைத்தனே பாரட்டிக் கொள்வது சரியாகத் தோன்றவில்லை. ஏனெனில். பலவிதமாக பொருள்தரும்  வசனங்களிலிருந்து தனக்கு பிடித்தமான பொருளில் ஒவ்வொருவரும் உறுதியானால் இறுதியில் மிஞ்சுவது குழப்பமே!  ஆனால் அல்லாஹ், குர்ஆனின்  மற்றொரு பகுதியில் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி,

இக்குர்ஆனை நினைவுபடுத்த (உபதேசம் பெற) திட்டமாக நாம் லேசாக்கி வைத்துள்ளோம் எனவே (இதனைச்) சிந்தித்துணருகிறவர் எவரேனும் உண்டா?

(குர்ஆன் 54:17, 22, 32, 40)

இது என்னை முரண்பட வைத்தது. குர்ஆனை நடுநிலையாக ஆய்வு செய்தபோது மிகவும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டேன். சில வசனங்கள் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கருத்துகளை கூறியது அவற்றில் சில,

கஃபிர்களைப்பற்றி குறிப்பிடுகையில்

எனவே அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளைக் கொண்டு வரும் வரை நீங்கள் மன்னித்து விடுங்கள் இன்னும் புறக்கணித்து விடுங்கள்.

(குர்ஆன் 2:109)

சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்களே அத்தகையோரிடம் அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கும் நிலையில், (தம்) கையால் ஜிஸ்யா (வரியை) அவர்கள் கொடுக்கும் வரை நீங்கள் போரிடுங்கள்.

(குர்ஆன் 9:29)

மிகத் தெளிவான வசனங்களை உம் மீது திட்டமாக இறக்கி வைத்திருக்கிறோம்.

(குர்ஆன் 2:106) 

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம் நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106)

உங்களுடைய பெண்களில் மானக்கேடானதைச் செய்தவர்கள்… அவர்களை மரணம் முடிவாகும் வரையில் அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒருவழியை ஏற்படுத்தும் வரையில் வீடுகளிலேயே அவர்களை தடுத்து வையுங்கள்.

(குர்ஆன் 4:15) 

உங்களி(ன் ஆண்களி)லிருந்து இருவர் அதனை மானக்கேடானதைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (ஏசிப் பேசி) நோவினை செய்யுங்கள் அவ்விருவரும் தவ்வாச் செய்து இருவரும்  திருந்திவிட்டால் அவ்விருவரையும் (துன்புறுத்தாமல்) விட்டுவிடுங்கள்…

(குர்ஆன் 4:16) 

விபச்சாரி விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வுடைய மார்க்க(மாகிய சட்ட)த்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டு விட வேண்டாம். அவ்விருவரின் தண்டனையை முஃமின்களிலிருந்து ஒரு கூட்டம் பார்க்கவும்

(குர்ஆன் 24:2) 

இதற்கு  அறிஞர்களின் பதில் :

முதலில் கூறப்பட்ட வசனங்கள் (சிவப்பு) இரண்டாவது கூறப்பட்ட வசனங்களால் (பச்சை) இரத்து செய்யப்பட்டது. காரணம் முதலில் கூறப்பட்ட வசனங்கள் இறக்கப்படும் காலத்தில் முஹம்மது நபி ஆட்சியாளராக இல்லை, இஸ்லாமிய அரசாங்கம் அமைந்ததிற்குப் பிறகு, அல்லாஹ்வால் புதிய சட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்டது, முந்தின விதிமுறைகள் இரத்து செய்யப்பட்டது என்று விளக்கம் தருகின்றனர்.

மறுப்பு :

இவ் விளக்கங்கள் அல்லாஹ்வை, தன்னுடைய விதிமுறைகளை தெளிவாக முடிவு செய்யத் தெரியாத உறுதியற்ற மனநிலை கொண்டவனாகவே சித்தரிக்கின்றது. ஒருவேளை இஸ்லாமிய அரசாங்கம் அமையாது என்று அவன் நினைத்திருக்க வேண்டும் அதனால்தான் இறுதியான சட்டவடிவத்தை முன்னமே கூறவில்லை என்று நினைக்கிறேன்.

மேலும், இரத்து செயப்பட்ட விதிமுறைகளை முற்றிலும் நீக்குவதே சரியான முறை. மனிதர்களால் இயற்றப்படும் விதிமுறைகள் மாற்றத்திற்குள்ளாகும் பொழுது பழைய விதிமுறைகளை முற்றிலும் நீக்கி விடுகின்றனர் அல்லது இரத்து செய்யப்பட்ட விதிமுறைகளைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றனர். ஆனால் குர்ஆனில் இரத்து செய்யப்பட்ட விதிமுறைகள்  இன்றும்  இடம் பெற வேண்டிய தேவை என்ன?  இது தேவையற்ற குழப்பத்திற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. இதைப் போன்று சில வசனங்கள் புதிய வசனங்களால் மாற்றப்பட்டுள்ளது. அந்த பழைய வசனங்கள் குர்ஆனில் இடம் பெறவில்லை. ஆனால் இவைகள் மட்டும் எப்படி குர்ஆனில் இடம் பிடித்தன? இது தவறான தொகுப்பு முறைக்கு உதாரணமாகும்.

உண்மையில், சர்வவல்லமையுடைய இறைவனின் வேதம் என்பது, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுடன் ஒப்பிட்டாலும் எவ்விதமான முரண்பாடுகளுமின்றி மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக Drஜாகீர் நாயக், ஹாரூன் யஹ்யா போன்ற நவீன இஸ்லாமிய அறிஞர்கள் முன் வைக்கும் நவீன கண்டுபிப்புகளைப் பற்றிய முன்னறிவிப்புகள் நினைவிற்கு வந்தது ஒருவேளை அவற்றை ஆராய்ந்தால் தெளிவு பிறக்கலாம் என்று குர்ஆன் தொடர்பாக அவர்களது ஆராய்சிக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தேன்.  ஆனால் குர்ஆனின் நிலை தலைகீழானது.

உண்மையில், நவீன கண்டுபிடிப்புகளுக்கும்  குர்ஆனுக்கும்  எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. குர்ஆனில் காணப்படுவதாக முஸ்லீம் அறிஞர்கள் குறிப்பிடும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலும் தவறாகத் திரித்துக் கூறப்பட்டவைகளே. குர்ஆனில் நவீன கண்டுபிப்புகளைப்பற்றிய முன்னறிவிப்புகள் இருப்பாதாக் கூறிக் கொண்டிருப்பது முஸ்லீம் அறிஞர்களின் மதவியாபாரத் தந்திரமே தவிர வேறில்லை. 

நான் அறிந்து கொண்டவற்றில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சில முரண்பாடுகளைக் கூறுகிறேன். முதலில் வார்த்தைகளைச் சிதைத்து தாங்கள் விரும்பும் பொருளில் குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அறிஞர்களின் வித்தையைக் கூறுகிறேன்.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2

17 டிசம்பர்

நண்பர் குலாம் எந்த அறிவிப்பும் இன்றி எதிர்ப்பதிவை இட்டிருக்கிறார். எதிர்ப்பதிவு குறித்த விவரங்களுக்கு, விளக்கங்களுக்கு செல்லுமுன் பொதுவான வேறு விளக்கங்களும் தேவையாய் இருக்கிறது. எனவே இந்த இடுகையை பொது விளக்கங்கள், பின்னூட்டங்களுக்கான விளக்கங்கள், எதிர்பதிவுக்கான மறுப்பு என மூன்றாய் பிரித்துக் கொள்ளலாம்.

கடந்த இடுகையில் நான் இரண்டு விதிமுறைகளை முன்னிருத்தியிருந்தேன். ஒன்று, எதிர்ப்பதிவு இட்டவுடன் தொடர்புடைய பதிவில் இதற்கான மறுப்பு இடப்பட்டிருக்கிறது என்பதை பின்னூட்ட வாயிலாக தெரிவிக்க வேண்டும். இரண்டு, பதிவுகளை இடுவதற்கு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க வேண்டும். இவற்றில் கால அளவு குறித்து சில கருத்துக்களை நண்பர் கூறியிருந்தார். ஆனால் எதிர்பதிவை தெரிவிப்பது குறித்து எந்த மறுப்பும் நேரடியாக அவர் கூறாத நிலையில், பதிவிட்டதும் இத்தளத்தில் தெரிவிப்பார் என எண்ணியிருந்தேன். ஆனால், செங்கொடிக்கு பதிலளிப்பது எனது நோக்கமல்ல என அவர் வலியுறுத்தியதின் பின்னே தெரிவிப்பதற்கான மறுப்பும் அடங்கியிருக்கிறது என்பதை, அவர் தெரிவிக்காததன் பின்னரே உணர்ந்து கொண்டேன்.

முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், என்னை கடவுள் குறித்த விவாதத்திற்கு அழைத்தது நண்பர் குலாம் தான். அவர் அழைப்பை ஏற்றே நான் தொடர்ந்தேன். இந்த நிலையில் ஒரு ஒழுங்கில் உடன்பட மறுப்பது நேர்மையானவர்களின் செயலாக இருக்க முடியுமா? நான் குறிப்பிட்டிருந்த இரண்டு விதிமுறைகளும் ஒரு நேரிய விவாதத்திற்கு தேவையற்றவை என்றும் ஒதுக்கிவிட முடியாது. இதில் நண்பருக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் அதை வெளிப்படுத்தி ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அவ்வாறன்றி நண்பரின் வாதங்கள் இந்த விவாதத்தை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதே என்னுடைய புரிதல்.

நேரமின்மை என்பது தவிர்க்கவியலாதது. யாருக்கும் ஏற்படக் கூடியது. எனவே நண்பரின் நேரமின்மையில் நான் எந்தவித விமர்சனத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக நேரமின்மை என்பதை முன்னிருத்தி கால அளவு குறிப்பதை தள்ளிப்போட முனைவதையே விமர்சிக்கிறேன். தன்னுடைய அதிகபட்ச இலக்காக மாதத்திற்கு மூன்று பதிவுகள் என்று நண்பர் கூறியிருக்கிறார். என்றால் இரண்டு மாதத்திற்குள் ஒரு எதிர்ப்பதிவு போடுவதொன்றும் அவருக்கு கடினமாக இருக்கப் போவதில்லை. ஆனால் நான் குறைந்த அளவாக ஒரு வாரம் என்றும் அதிக அளவாக ஓர் ஆண்டு என்பதையும் முன்வைத்திருக்கிறேன். ஆயின் அவருக்கு ஏதுவான கால அளவை கூறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?

நான் எழுப்பியவைகளுக்கான மறுப்பைத்தான் நண்பர் கூறியிருக்கிறார் எனும் போது அதை என்னிடம் தெரிவிப்பதில் அவருக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும்? மட்டுமல்லாது, \\பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்// என்றே அவரது பதிவை முடித்திருக்கிறார். நான் எழுப்பியவைகளுக்கான பதிலைக் கூறி என்னிடமிருந்து பதிலையும் எதிர்பார்த்திருக்கும் நண்பர், அதை என்னிடம் தெரிவிக்கவில்லை என்றால், பதிலை எதிர்பார்ப்பதில் அவருக்கு தார்மீகம் இருக்க முடியுமா? இதற்கு, அது செங்கொடிக்கான பதிலோ, செங்கொடியிடமிருந்து பதிலை எதிர்பார்த்தோ எழுதப்பட்டதல்ல என நண்பர் கூறுவாராயின், \\அதில் உங்களின் கேள்வியும் உள்ளடக்கியிருந்தால் அதற்கான தெரிதல்களையும் சேர்த்து பதிவிடுவதற்காக அப்படி சொன்னேன்// என்று ஏற்கனவே அவர் கூறியிருந்ததற்கான பொருள் என்ன?

என்னுடன் விவாதம் செய்வதும், மறுப்பது நண்பரின் விருப்பு, வெறுப்புகளின் பாற்பட்டது. அதில் நான் எந்தவித வற்புறுத்தல்களையும் செய்வதற்கில்லை. ஆனால், அப்படியான விவாதத்திற்கு என்னை அழைத்து, அதை நானும் ஏற்றுக் கொண்டதன் பின், அதிலிருந்து நண்பர் பின்வாங்க விரும்புவாராயின்; அதை தெளிவாகவும், வெளிப்படையாகவும், அதற்கான காரணத்தையும் சேர்த்து அறிவிப்பது அவருடைய கடமை. ஏனென்றால், விவாதத்திற்கு அழைத்தது அவர் தான். மட்டுமல்லாது, செங்கொடி பின்னூட்ட விவாதத்திற்குப் பிறகு, பின்னூட்டங்களில் ஆழமாக விவாதிக்க முடியாது என்று கூறியதன் பிறகு, சில தளங்களில் நண்பர் பின்னூட்ட விவாதங்கள் செய்திருக்கிறார், அழைத்திருக்கிறர். பின்னூட்டமென்றாலும், எதிர்ப்பதிவு என்றாலும் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. இதை நான் ஏற்கனவே தெரிவித்தும் இருக்கிறேன். ஏனையவை நண்பரின் தெரிவுகளுக்கே. விவாதத்திற்கு வருவதாக இருந்தாலும் விலகுவதாக இருந்தாலும் அதை நண்பர் சுற்றிவளைக்காமல் வெளிப்படையாக கூறவேண்டும், அவ்வளவுதான். இதற்குமேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

அடுத்து நண்பரின் பின்னூட்டங்களுக்கான விளக்கங்களைக் காணலாம். அவரது முதல் பின்னூட்டத்தில் சலித்துக்கொண்டு சமூகத்தின் மீது அக்கரை கொள்ள வேண்டாம் என என்னைக் கோரியிருந்தார். மேற்கோள் காட்டப்பட்ட அந்த வாக்கியத்தில் சலிப்பு தென்படுகிறதா? கடவுள் குறித்த விவாதத்தைவிட சமூக அரசியல் விவாதங்களையே நான் விரும்புகிறேன் என்பதை ஒரு தகவலாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான். நண்பர் குறிப்பிடுவது போன்ற சலிப்பு மனோநிலை எனக்கு இருந்திருக்குமாயின் இந்த விவாதத்தை நான் ஏற்றிருக்கும் நிர்ப்பந்தம் ஏதும் என்மீது இருந்திருக்கவில்லை என்பது நண்பரின் கவனத்திற்கு.

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடர் இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூல். அதன் நோக்கம் இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் சார்ந்து அதை விமர்சிப்பது. எங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒன்றுதான். சகதியின் அடர்த்தியில் கூடுதல் குறைவு இருக்கலாமேயன்றி எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். நாங்கள் முன்வைக்கும் தீர்வு கம்யூனிசம். ஏன் இத்தொடரை எழுதுகிறேன் என்பதற்கு அதன் நுழைவுவாயில் பகுதியில் காரணங்களைக் கூறியிருக்கிறேன். மட்டுமல்லாது, நான் பிறந்து, குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்த மதம் என்பதால் சற்று கூடுதல் கவனம். நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் நடப்புகளை விமர்சிப்பதினூடாக கம்யூனிச விழிப்புணர்வை நோக்கியே இருக்கும். எனவே கம்யூனிசத்தை எழுதுவதைவிட மதம் குறித்தே அதிகம் எழுதுகிறேன் என்று எளிதாக கூறிவிட முடியாது. நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளபடி மதங்களுக்கானவைகள் 10 நூற்றுமேனிக்கு அதிகமாக போய்விடக்கூடது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறேன்.

செங்கொடிக்கான பதிலல்ல என்பதை நண்பர் சில தடவைகள் கூறியுள்ளார். செங்கொடி குலாம் என்று பெயர் குறிப்பிடப்பட்டால் அதை படிக்கும் யாரும் அவற்றை ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றமாக கருதமாட்டார்களா? செங்கொடி குலாமின் கருத்தாக ஒதுங்கிவிடுமா? ஏன், பிஜே திக விவாதத்தில் அதை நீங்கள் தனிப்பட்ட இரண்டு குழுக்களின் கருத்தாகத்தான் கருதினீர்களா? குறிப்பாக எழுதினாலும் பொதுவாக எழுதினாலும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது தான் முதன்மையானதேயன்றி யாரை முன்னிருத்தி கூறப்பட்டிருக்கிறது என்பதல்ல. மட்டுமல்லாது, விவாதம் என்று வந்துவிட்டால் குறிப்பிட்டு எழுதுவது தான் இருவருக்கும் மறுப்புக்கான கடப்பாட்டை ஏற்படுத்தும்.

\\என்னிடம் முன்னிருத்தப்பட்ட கேள்விகளுக்கு- என் விளக்கங்களில் எதுவும் மிச்சமில்லை., மாறாக நான் முஸ்லிம் தள பதிவுகளுக்கு விளக்கம் இல்லை// என்றும் கூறியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டது தான். ஒன்றைத்தொட்டு ஒன்றாக தாவிச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் பதிவு ஒன்றை பரிந்துரை செய்யுங்கள், அது குறித்து எது சரியானது? என்று விவாதம் செய்வோம். ஒரு முடிவுக்கு வந்தபின் அடுத்த தலைப்பை எடுத்துக் கொள்ளலாம். அப்படி நண்பர் பரிந்துரைத்த தலைப்பு தான் “கடவுள் ஏன் இருக்கக்கூடாது” என்பது. எனவே இதில் கவனம் செலுத்துமாறு நண்பரை கோருகிறேன்.

\\கடவுளை நம்புவதென்பது நம்பிக்கை சார்ந்த விசயம் – ஆனால் மறுப்பதென்பது ஒரு சாரார் கொண்ட நம்பிக்கையில் சிந்தனைரீதியான உடன்பாடில்லாமல் இருப்பது அப்படியான மறுப்புக்கு விளக்கம் முடிந்தவரை நேரடியாக விளக்கப்பட வேண்டும். ஏனெனில் நம்பிக்கை தான் விளக்கப்பட முடியாதது. ஆனால் அந்த நம்பிக்கை போலியானது என நிருபிக்க நேரடி நிருபணம் தந்தாக வேண்டும். அப்படியில்லாமல் “இருப்பதாக நம்பக்கூடாதென்றால்” அதுவும் அவர் சார்ந்த நம்பிக்கை எனும் வட்டத்திலே பதிவு செய்யக்கூடியது// இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? நம்பிக்கையாளர்கள் நிரூபிக்க வேண்டியதில்லை, அதை மறுப்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பதா? இது பிறழ்தலான கருத்து. கடவுள் என்பது நம்பிக்கை என்றால் அங்கு எந்தவித விமர்சனத்திற்கும் இடமில்லை. பொதுவில் கடவுள் நம்பிக்கையை யாரும் விமர்சிப்பதுமில்லை. ஆனால், அதுதான் உண்மை எனும்போது தான் விமர்சனம் வருகிறது. உங்களின் அத்துனை ஆக்கங்களையும் எடுத்துக் கொண்டால் அவைகளின் ஆதாரப்புள்ளி கடவுள் நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்கான வாதங்களாகத்தான் இருக்கிறது. அந்த மெய்ப்பிப்புகள் தான் விமர்சனங்களைக் கிளப்புகிறதேயன்றி நம்பிக்கையல்ல. நீங்கள் அறிவித்து விடுங்களேன், ”கடவுள் மெய்யாக நிலவுகிறதா இல்லையா என்பது குறித்து எனக்கு கவலையில்லை, அது எனது நம்பிக்கை மட்டுமே” என்று. விவாதங்களுக்கு நாம் இங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அவ்வாறன்றி அது மெய்யாக நிலவுகிறது என்றால் அதை நிரூபிக்கும், மறுக்கும் கடமை இருவருக்கும் உண்டு.

இதுவரை கூறியவை தலைப்புக்கு வெளியிலான சுற்றாடல்கள். இனி தலைப்புக்குள் செல்லலாம். முதலில் ஒன்றை பதிவு செய்துவிடுவது சிறப்பு என கருதுகிறேன். இஸ்லாமிய நிலைப்பாட்டையே பொதுக்கருத்து போல் நண்பர் கூறியதற்கான எதிர்வினையில் பொதுவாக கூறப்பட்டவைகளை இஸ்லாத்தை முன்னிருத்தியே செங்கொடி பதிலிறுத்திருந்தார் என்று என்னை குற்றப்படுத்தியிருந்தார். அதனால் என்னுடைய முதல்பதிவில் இஸ்லாத்தை முன்னிருத்தாமல் பொதுவாகவே பதிவிட்டிருந்தேன். ஆனால் நண்பர் குலாம் இஸ்லாத்தை முன்னிருத்தியே தனது விளக்கங்களை இட்டிருக்கிறார். எனவே, முன்னர் கூறியது போன்ற குற்றச்சாட்டை இனி அவர் கூறும் வாய்ப்பற்றுப் போய்விட்டது.

என்னுடைய பதிவின் மையக்கருத்தாக ஐந்து கருத்துகளை நண்பர் பட்டியலிட்டிருக்கிறார். \\1. கடவுளின் பெயரால் மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள். 2. விதி என்ற ஒன்றை நம்புவதால் வாழ்வியல் முன்னற்றமின்மை 3. கடவுளை நம்புவோரும் சமூகத்தில் தவறு செய்தல் 4. மத குறுக்கீட்டால் அறிவியல் ரீதியான வளர்ச்சியின்மை. 5. ஏனைய உயிரனங்கள் போலல்லாமல் கடவுள் என்ற நிலை ஏன் மனித சமூகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது//

இதில் முதல் கருத்து குறித்து நண்பர் கூறுவதென்ன? \\மனிதர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளுக்கு காரணம் மதம் தான் காரணமென்றால் மதங்களை பின்பற்றாவர்கள் வீடுகளிலும் தந்தை- மகன் அண்ணன்-தம்பிக்கு மத்தியில் சண்டைகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு கூட செல்கிறதே அதையும் நாம நியூஸ் பேப்பர்ல பார்க்கதான் செய்யுறோம். ஆனா அவர்கள் ஏதெனும் மதகுறீயிட்டு பெயர்களை சார்ந்திருப்பதால் அவர்கள் சார்ந்த கொள்கை முன்னிருத்தி பேசப்படுவதில்லை// ஆனால் இது தொடர்பாக நான் கூறியிருந்ததென்ன? \\கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது எனும் எண்ணம் மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை என்று கொண்டால் இன்று மனிதன் கண்டிருக்கும் எந்த முன்னேற்றமும் தடைபட்டிருக்காது என்பதோடு மட்டுமன்றி இன்னும் மேலதிக உயரங்களை மனிதன் எட்டியிருக்கக் கூடும். எப்படி என்றால், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு என்ற நிலை மட்டுமே பூமியில் இல்லை. கடவுள் இருப்பின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் கட்டமைக்கப் பட்டிருப்பதால், வரலாற்றில் மனிதனின் ஆற்றல் பெருமளவில் மதங்களுக்கிடையேயான முரண்பாட்டிற்காகவே செலவழிக்கப்பட்டிருக்கிறது, செலவு செய்யப்பட்டும் வருகிறது// மதங்கள் மட்டுமே மக்களிடையேயான சண்டை சச்சரவுகளுக்கு காரணம் என்று நான் கூறவும் இல்லை. மதங்களைப் பின்பற்றாதவர்களின் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை என்றும் நான் கூறியிருக்கவில்லை. கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு ஏற்படவில்லை என்றால் இதுவரையான முன்னேற்றங்கள் தடைபட்டிருக்கும் என்று கூறமுடியாது. அதேநேரம் இதுவரையான வரலாற்றில் மனிதர்களின் ஆற்றல் பெருமளவில் மத ரீதியான சண்டை சச்சரவுகளில் செலவிடப்பட்டிருப்பதால் அஃதில்லாதிருந்தால், இன்னும் அதிக உயரங்களை பெற்றிருக்கக் கூடும். ஆக நான் கூறியதற்கும் நண்பர் கூறியிருப்பதற்கும் தொடர்பு ஒன்றுமில்லை. எழுப்பியவற்றுக்கு சரியான விளக்கங்களை நண்பர் வைத்த பிறகு மீண்டும் இது பற்றி விளக்கலாம்.

இரண்டாவதாக, விதி குறித்து நண்பர் கூறுவதில் பொருள் ஒன்றுமில்லை. நடந்து முடிந்தவற்றுக்குத்தான் விதி, நடக்கவேண்டியவைகளுக்கு விதி இல்லை என்று கூற வருகிறாரா? அப்படி ஒன்றுமில்லை என்பதை நண்பரை வைத்தே வெளிப்படுத்த முடியும். பின்னூட்டமானாலும், பதிவானாலும் ’இறை நாடினால்’ என்பதை நண்பர் எழுத மறப்பதில்லை. இஸ்லாத்தை ஏற்றிருக்கும் எந்த ஒருவரும், ”நடக்கவிருக்கும் காரியங்களில் மனித முயற்சியே முழுப்பங்கு வகிக்கிறது, இறையின் தெரிவு அதை ஆள்வதில்லை” எனும் எண்ணத்தில் செயல்படுவதில்லை. மாறாக, ’அவனன்றி அணுவும் அசையாது’ என்பதுதான் எல்லோரின் கருத்தாகவும் இருக்கிறது. நாளைக்குத் தேர்வென்றால் இன்றைக்கு படி என்பது தான் இஸ்லாமிய நிலைப்பாடு என்றால், இன்றைக்கு படிப்பதன் பலன் தான் தேர்வுகளில் வெளிப்படுமேயன்றி இறைவன் அதை முடிவு செய்வதில்லை என்று நண்பர் கூறுவாரா? அவரால் கூறமுடியாது. ஏனென்றால், அடுத்த கணத்தில் ஒரு இலை அசைவதிலிருந்து அனைத்தும் ஏற்கனவே ஏட்டில் எழுதப்பட்டுவிட்டது. ஏட்டில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அது தான் நடக்குமேயன்றி மனித முயற்சியினால் எதுவும் நடக்காது. இது தான் இஸ்லாமிய விதிக் கொள்கையின் சாராம்சம். இதற்கு மாறாக நடந்து முடிந்தவற்றிலிருந்து ஆறுதல், நடக்கவிருப்பதில் முயற்சி என்பதெல்லாம் அதை சமன் செய்வதற்காக கூறப்படும் மேலோட்டமான கருத்துகள். நண்பர் குலாம் உட்பட அம்மதத்தை பின்பற்றும் அனைவரும் விதியின் சாராம்சத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், அதேநேரம் மனிதமுயற்சி எனும் வெளி அலங்காரங்கள் மூலம் ஆறுதலடையவும் செய்கிறார்கள். இரண்டில் எது முதன்மையானது என்றால் சாராம்சம் தானேயன்றி அலங்காரமல்ல. ஆக நான் எழுப்பியிருக்கும் கேள்வி சாராம்சத்தில், பதில் தந்திருப்பது அலங்காரத்தில் இதை நண்பர் உணர வேண்டும்.

மூன்றாவதாக, கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் தவறு செய்தல் என்பதில், நான் எந்த அடிப்படையில் அதைக் கூறியிருந்தேன். கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களை தவறு செய்வதிலிருந்து தடுக்கிறது எனும் கூற்றுக்கு எதிராகவே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் தவறு செய்கிறார்கள் என்று கூறியிருந்தேன். இப்போது நண்பர் கடவுளை உண்மையாக நம்புபவர்கள், வெறுமனே மதத்தை பின்பற்றுபவர்கள் என்று பிரிவினை செய்திருக்கிறார். ஆனால் இங்கு சுட்டப்படவேண்டியது கடவுள் நம்பிக்கையைவிட அதிகமாக சமூக மதிப்பிழத்தலே குற்றம் செய்வதிலிருந்து மக்களை தடுக்கிறது என்பதே. குற்றம் செய்பவர்கள் மெய்யாக கடவுளை நம்புகிறார்களா? வெறுமனே மதத்தை பின்பற்றுகிறார்களா? என்பது தேவையற்ற விசாரணை. குற்றம் செய்வதிலிருந்து எது மக்களை தடுக்கிறது? கடவுள் நம்பிக்கையா? சமூகமா? இதில் சமூகமே அதிக பங்களிப்பை செய்கிறது என்பதால் அதை ஏற்றுக் கொள்வதும் மேலதிக இலக்குகளை எட்ட சீர் செய்வதும் தானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

நான்காவதாக மதக்குறுக்கீட்டால் அறிவியல் வளர்ச்சியின்மை என்பது. மதம் அறிவியல் சமூக வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று நான் நேரடியாக கூறவில்லை. வரலாற்றில் மத முரண்பாடுகளிலேயே மக்களின் பெரும் ஆற்றல் செலவிடப்பட்டிருக்கிறது. இது இல்லாமலிருந்தால் தற்போது மனிதன் கண்டிருக்கும் முன்னேற்றங்களை விட அதிக உயரங்களை எட்டியிருக்கக் கூடும். நான் கூறியிருப்பது இது தான், இதற்கு மறுப்பேதும் கூறமுடியாது. மாறாக இந்த விசயத்தில் நண்பர் கூறியிருப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. அவை இந்த விவாதத்திற்கு வெளியில் அமைந்திருப்பதால் தேவை ஏற்படின் அது குறித்து பின்னர் பார்க்கலாம்.

ஐந்தாவதாக ஏனைய உயிரினங்கள் போலன்றி மனிதனுக்கு மட்டும் ஏன் கடவுள் எனும் கருத்தியல் தேவைப்படுகிறது? என்பது குறித்து, \\மனித – ஜீன் வர்கங்களுக்கு மட்டுமே இவ்வுலகை தேர்வு களமாக்கி வைத்திருக்கிறான் இறைவன். அதற்கு துணைப்பொருட்களாக தான் இவ்வுலக உயிர்களும் – அஃறிணைப்பொருட்களும். ஆக மனித சமூகத்தை இங்கு முன்னிருத்துவது தான் பிரதான செயலாக இருப்பதால் ஏனைய உயிரினங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவைகளும் இறைவனுக்கான -இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயிரினம் தான். சரி பிற உயிரினங்களுக்கு கடவுளின் தாக்கம் இல்லை என்பதை எந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து கண்டறீந்தீர்கள் சகோ?// என்று கூறியிருக்கிறார் நண்பர். உலகில் பல்விதமான உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் மனிதன் மட்டுமே மேம்பட்ட நிலையை தன் முயற்சியின் மூலம் எட்டியிருப்பதால் அவன் ஏனைய உயிரினங்களையும் இயற்கையும் தனக்கு இசைந்த வழியில் பயன்படுத்திக் கொள்கிறான். இதை மனிதனின் வசதிக்காகவே அவைகள் இருக்கின்றன என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கடவுள் என்பது கருத்தியல் சார்ந்தது. மனிதனைத்தவிர ஏனைய உயிரினங்களுக்கு கருத்தியல் வளர்ச்சி வெகு சொற்பமான அளவே இருப்பதால் அவைகளுக்கு கடவுள் எனும் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை. மட்டுமல்லாது, அவைகளின் செயல்கள் எதுவும் கடவுளின் இருப்பை பிரதிபலிப்பதில்லை.

\\இப்போதும் பாருங்கள் கடவுளின் பெயரால் மக்களுக்கு மத்தியில் நிலவும் சமூகரீதியான பிரச்சனைகள், மூட நம்பிக்கை தான் கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாக சொல்கீறீர்கள் மாறாக நேரடியாக இல்லை// என்றும் நண்பர் கூறியிருக்கிறார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? எனும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் தான் நேரடியாக கடவுள் இல்லை என்பதற்கான மறுப்பை கூற முடியும். இந்த விவாதம் கடவுள் ஏன் இருக்கக் கூடாது? எனும் கேள்வியை முன்வைத்து தொடங்கியிருக்கிறது. எனவே கடவுள் எனும் தாக்கம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளைக் கொண்டே வாதங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் ஏன் இருக்கக்கூடாது என்பதற்கு, மையச் சரடில் கோர்க்கப்பட்டதாகவே என்னுடைய வாதங்களை வைத்திருந்தேன். ஆனால் நண்பர் மையச்சரடை உருவிவிட்டு தனிப்பட்டு வாதங்களுக்கு எதிரான உதிரிப் பதில்களாக கூறியிருக்கிறார். எனவே என்னுடைய பதிலும் அவ்வாறான தோற்றத்தில் இருக்கிறது. அவ்வாறன்றி ஒருங்கிணைந்த முறையில் நண்பர் தன்னுடைய வாதங்களை வைத்தால் அது இவ்விவாதத்தை இன்னும் சீரியதாக ஆக்கும்.

இனி நண்பரின் கடவுள் ஏன் இருக்க வேண்டும்? எனும் எதிர்ப்பதிவுக்குள் கடக்கலாம். நண்பரின் பதிவை முழுமையாக அலசினால், கடவுள் நம்பிக்கை, முதலாளித்துவம் இந்த இரண்டு தாக்கங்களின் கலவையாக இருக்கிறது. 1) நன்மை செய்து வாழ்வதற்கும், 2) தீமை மறுத்து வாழ்வதற்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத உலகில் என்ன தேவை இருக்கிறது? 3) மனிதச் சட்டங்களின் போதாமை எனும் மூன்று பகுப்புகளின் அடிப்படையில் நண்பரின் பதிவு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

எந்த மனிதனும் தன்னுடைய செயல்களில் திருப்தியுறாத நிலையில் அச்செயலை மீண்டும் செய்ய வேண்டிய தேவை அவனுக்கில்லை. இந்த திருப்தி பொருளாதார பலன்கள், சமுக மதிப்பு, குடும்பத்தேவை, அங்கீகாரம் உள்ளிட்டவைகளை கொண்டதாக இருக்கும். இவை மனிதனுக்கு நன்மை செய்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும் என்பது நண்பரின் கணிப்பு. இது முதலாளித்துவ சிந்தனையின் மரூஉ. தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதோ ஒரு வகையில் பலன் இல்லாவிட்டால் அதை செய்வதினின்று தவிர்த்துக் கொள்வது என்பது மனிதனை தான், தன் குடும்பம் தன் சுற்றம் என தனியுடமைப் பாட்டையில் செலுத்தும் உந்து விசையாக இருக்கிறது. அதே நேரம் எந்தவிதமான பலனும் இல்லாவிட்டாலும் கூட கடவுளின் விருப்பத்திற்காக அதை செய்வது என்பது ஆன்மீக சாரம். இந்த இரண்டுவித சிந்தனைகளையும் மீறி வேறொரு சிந்தனை இருக்க முடியாதா?

உலகம் உனக்குக் கிடைத்த வாய்ப்பு. இதில் முடிந்தவரை பொருளாதார ஏனைய பலன்களை பெற்று உன்னையும், குடும்பத்தையும், சுற்றத்தையும் சிறப்பாக வைத்துக் கொள். இது ஒருபுறம், மறுபுறமோ, இந்த உலகம் ஒரு தற்காலிக தங்குமிடம். அதில் முடிந்தவரை இறை விருப்பத்தை பூர்த்தி செய்து நிரந்தரமான மறு உலகத்தில் உனக்கான இடத்தை உறுதி செய்து கொள். ஒன்று தனக்காக உலகை சுரண்டச் செய்வதன் மூலம் சமூகத்தை பொருளற்றதாக்குகிறது. மற்றதோ தனக்காக உலகை அலட்சியம் செய்யக் கோருவதன் மூலம் சமூகத்தை பொருளற்றதாக்குகிறது. ஆனால் இரண்டுமே தம்முடைய வேலைத் திட்டங்களை இவ்வுலகை மையப்படுத்தியே முன்வைக்கின்றன. இங்கு தான் சமூகம் என்பதன் பிறழ்தலற்ற பொருள் விஞ்சி நிற்கிறது.

சமூகம் என்பதன் சரியான பொருளில் நன்மை என்பதென்ன? அது யாருக்கும் தனிப்பட்ட முறையில் பொருளாதரமோ அல்லது வேறு விதங்களிலோ பலன்களை பெற்றுத்தருவதல்ல. மாறாக சமூகம் முழுமைக்குமான மக்களின் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துவது. இந்த உலகில் மட்டுமே மனிதனின் வாழ்வு இருக்கிறது. ஒருவன் மரணித்துவிட்டால் சிலரின் நினைவுகளிலன்றி தூலமான முறையில் அவன் எங்கும் என்றும் வாழமுடியாது. இருக்கும் உலகில் கிடைக்கும் வளங்களை அனைவருக்குமானதாக பொதுவில் வைப்பதற்கான நோக்கில் செய்யப்படும் அனைத்தும் நன்மை. அதை மறுக்கும் அனைத்தும் தீமை. அவைகளை இணைப்பது போராட்டம்.

இந்த அடிப்படையில் நன்மை செய்வதற்கும் தீமையை எதிர்த்து போராடுவதற்கும் தேவையான உந்தாற்றலை சமூகம் பற்றிய புரிதலே வழங்கும். இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக பார்க்கலாம். ஒரு குழாயிலிருந்து நிறுத்தப்படாமல் தண்ணீர் வழிந்தோடி வீணாகிக் கொண்டிருக்கிறது. வீணாகும் தண்ணீரை நிறுத்துவது நன்மை, நிறுத்தாமல் விட்டுச் செல்வது தீமை, விட்டுச் செல்பவர்களிடம் எடுத்துக் கூறி புரியவைப்பது போராட்டம். இதை கண்ணுறும் ஒருவன் “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்” என்று கடவுள் கூறியிருக்கிறார் அதனால் நிறுத்துகிறேன் என்பதை விட; இந்த தண்ணீரை புட்டியில் அடைத்து விற்றால் பொருளாதார பலன் கிடைக்குமே என்றோ, அல்லது இன்னொருவனுக்கு சொந்தமான தண்ணீர் கவனக் குறைவினால் வீணாகிக் கொண்டிருக்கிறது, அந்த நட்டத்தை தடுக்க வேண்டும் எனும் உந்துதலினால் நிறுத்துவதை விட; இந்த உலகம் என்பது நானோ, இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களோ மட்டும் அல்ல, தொடக்கத்திலிருந்து இன்னும் எத்தனை நூற்றாண்டு காலம் மனிதகுலம் வாழ்கிறதோ அது வரைக்குமானது, நேற்றைய மனிதகுலம் இந்த நீர்வளத்தை எப்படி என்னிடம் தந்திருக்கிறதோ அதே தன்மையில் நாளைய மனித குலத்திடம் கைமாற்ற வேண்டும் எனும் புரிதலோடு அந்த குழாயை நிறுத்துவதே சரியானது. சமூகம் பற்றிய இந்த சரியான புரிதலுக்கு கடவுள் நம்பிக்கையோ, இவ்வுலகை இன்று ஆண்டு கொண்டிருக்கும் முதலாளியமோ கொஞ்சமும் உதவாது.

ஆனால், நண்பருக்கு கடவுள் நம்பிக்கை, முதலாளியம் தாண்டி வேறெந்தப் புரிதலும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் கடவுள் நம்பிக்கையோ, முதலாளித்துவப் பார்வையோ இல்லாவிட்டால் வேறெதுவும் மனிதனை நன்மை செய்யத் தூண்டவும், தீமையை தடுக்கவும் முடியாது என்று கருதுகிறார். பொதுவுடமைச் சிந்தனை மனிதர்களுக்கு இல்லாவிட்டால் கடவுளியத்திலும், முதலாளியத்திலும் கூட நன்மை செய்யும் சிந்தனை தோன்றியிருக்க முடியாது என்பதே மெய்.

அடுத்து, நண்பர் மனிதச் சட்டம் இறைச்சட்டம் எனும் பாகுபாட்டையும் இதனுள் புகுத்தியுள்ளார். இந்த பாகுபாடு குறித்தும், சட்டம் என்பதன் தன்மை குறித்தும் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. அவைகளை உள்வாங்கியதற்கான எந்த அறிகுறியும் நண்பரிடம் தென்படவில்லை. ஆகையால் வேறொரு கோணத்தில் இதை அணுகலாம்.

குற்றம் என்பது தனியுடமையின் விளைவு. ஒன்று, பிறருக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு அது கிடைத்தாக வேண்டும் எனும் மனோநிலைதான் குற்றச் செயலை தூண்டுகிறது. குற்றம் செய்யத் தூண்டும் மனோநிலை வசதி வாய்ப்புகளை, சூழல்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து குற்றம் தொடங்குகிறது. இந்த மனோநிலை நிலைத்திருக்கும் வரை குற்றம் இருக்கவே செய்யும். சட்டம் என்பது இதற்கு மாற்றோ, தீர்வோ அல்ல. ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே சட்டம் இருக்க முடியும். சமூகம் குறித்த சரியான புரிதல் மனிதனுக்குள் ஏற்படும் விகிதத்தில் குற்றத்தை தூண்டும் மனப்போக்கும், அதற்கு அணை கட்டும் சட்டங்களும் விடைபெறும்.

நடைமுறைப் படுத்தப்படும் சட்டங்கள், நிகழ்ந்து விட்ட குற்றத் தன்மைகளுக்கான எதிர்வினைகள் எனும் அடிப்படையில் தான் குற்றங்களுக்கான தண்டனைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு கொலையா ஒன்பது கொலையா என்று பார்த்து தண்டனைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. வன்புணர்ச்சி செய்ய முயலும் ஒரு பொறுக்கியை ஒரு பெண் கொன்றால், கொலைக்கு கொலை என்று தண்டனை அளிப்பதை நண்பர் ஏற்பாரா? பல உயிர்களை காக்கும் நோக்கில் செய்யப்படும் சில கொலைகளை எண்ணிக்கை கணக்கிட்டு தீர்ப்பளிக்க முடியுமா? ஆக வழங்கப்படும் தண்டனை என்பது குற்றத்தின் தன்மையைப் பொருத்தது. குற்றத்தின் தன்மையைப் பொருத்து அதை செய்தவனுக்கு சமூகத்தில் வாழும் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று தீர்மானிப்பது தான் தண்டனையேயன்றி, எண்ணிக்கையை பார்ப்பதல்ல. வன்புணர்சியை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலைக்கு விடுதலையும், திருடும் நோக்கில் செய்யப்பட்ட காயமேற்படுத்தலுக்கு தண்டனையும் வழங்கப்பட்டால், இது நியாயமல்ல, கொலைக்கு விடுதலையும், காயமேற்படுத்தியதற்கு தண்டனையுமா? மனிதச் சட்டம் குறையுடையது என்று நண்பர் கூறுவாரா?

சட்டங்கள் குற்றத்தை எந்த முறையில் அணுகுகின்றன என்பது முக்கியமானது. குற்றத்தைச் செய்வதும் அதை குற்றம் எனத் தீர்மானித்து தண்டனை வழங்குவதும் மனிதர்கள் தாம். அதை சூழலின் சான்றுகள் மூலமே கண்டடைகிறார்கள். இதில் தவறுகள் நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்றால், மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆம், இருக்கிறது. தொழில்நுட்ப அறிவையும், சூழல் சாட்சிகளையும் கொண்டு குற்றத்தை தீர்மானிக்கும் நடைமுறை குறையுடையதாகவே இருக்க முடியும். மேம்பட்ட அறிவையும் தொழில்நுட்பங்களையும் குற்றவாளிகளும் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்பதால் சட்டம் முற்றிலும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது.

சரி, முக்கியமான விசயத்திற்கு வருவோம். மனிதச் சட்டம் குறையுடையதாக இருப்பதைக் கொண்டு நண்பர் முன்வைப்பது என்ன? மனிதச் சட்டம் குறையுடையது என்பதால் இறைவனின் இருப்பை ஏற்க வேண்டும் எனும் வாதத்தில் என்ன தொடர்பு இருக்க முடியும்? வாதத்திற்காக இறைவனின் இருப்பை ஏற்பதாகக் கொள்வோம். குறைபாடுகளுடைய மனிதச் சட்டம் தொடர்ந்து நிலுவையில் இருக்கும். அதோடு, இங்கு தண்டனை வழங்கத் தவறியவர்களுக்கு செத்ததன் பின்னர் தண்டனை கிடைப்பதாக ஒரு கற்பனை இருக்கும். இந்தக் கற்பனை என்னவிதமான தாக்கத்தை சமூகத்தின் மீது ஏற்படுத்தும்? அல்லது ஏற்படுத்தியிருக்கிறது? தன்னுடைய பலம் பலவீனங்களுக்கு உட்பட்டு ஒரு எல்லையின் பின் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, கடவுள் பார்த்துக் கொள்வார் எனும் முடக்கத்தை தோற்றுவிக்குமா? அல்லது போராடும் உத்வேகத்தைத் தருமா? எந்தக் கற்பனை சமூகத்தின் நோயாக இருக்கிறதோ அந்த கற்பனையையே மருந்தாக சுட்டுவது பேரவலம்.

வறட்டுக் கற்பனைகளுக்கு நேர்மாற்றமாக உலகை மாற்றியமைக்க மக்களை அழைக்கிறது கம்யூனிசம். இவ்வுலகில் மக்களின் முழுமையான வாழ்வுக்கு எதிராக இருக்கும் அனைத்தும் தனியுடமையிலிருந்தே தொடக்கம் பெற்றன. இதை வரலாற்று ஆய்வின் மூலமும், உழைப்புக் கருவிகளின் உடமை மாற்றங்களினால் சமூகம் மாற்றமடைந்த வழிகளின் மூலமும் மிகத் தெளிவாக நிருவி இருக்கிறது கம்யூனிசம். உழைப்புக் கருவிகளையும் உற்பத்தியையும் பொதுவுடமை ஆக்குவதன் மூலம் எல்லாவகை சுரண்டலுக்கும் முடிவுகட்டி அனைத்து வகையிலும் வளர்ச்சியடைந்த பொதுவுடமை சமுதாயத்தை கட்டியமைப்பதற்கு போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. இதன் மூலம் மட்டுமே கடவுள் எனும் மாயக் கற்பனையின் தேவையற்று மக்கள் சமவாய்ப்பும் சமவசதியும் பெற்று மனிதச் சட்டமோ, இறைச்சட்டமோ அவசியமற்ற குற்றம் செய்யும் மனோநிலையின்றி வாழவதற்கான வகையேற்படும்.

இது ஒரு மிக நீண்டகால இலக்கு. ஆனால் இந்த இலக்கை நோக்கி பயணப்படும் கொள்கையோ, கோட்பாடோ, இசங்களோ, மதங்களோ வேறொன்று இல்லை, கம்யூனிசத்தை தவிர. இதில் ஐயுற்றிருப்பவர்கள் தொடருங்கள், விளக்கமுண்டு. எதிர்நிற்பவர்களே, முடிந்தால் மறுத்துப் பாருங்கள்.

முந்திய பதிவு

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 1

அரசவைக் கோமாளி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் அப்துல் கலாம்

17 டிசம்பர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தமிழக, கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது’ என்றார். 

முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு முதலமைச்சர்கள் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

****************************************************

பயன்படுத்தப்படும் நிலத்திற்காகவும், மின்சாரத்திற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு முறையாக பணம் வழங்கி வருகிறது என்பது இந்த கோமாளிக்கு தெரியாதா? பலமுறை, பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி அவைகளை மீறி கேரளா செயல்படுகிறது என்பதால் நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் அணையின் பலம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து, அந்த அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கேரளா அடாவடி செய்து கொண்டிருக்கிறது. இப்போது எல்லாவற்றையும் அழித்துவிட்டு முதலிலிருந்து தொடங்குங்கள் என்கிறார். இவரை கோமாளி என்று கூறுவது மட்டும் போதுமா?

இது கதையல்ல…

14 டிசம்பர்

அப்பவெல்லாம் இது மாதிரியான வசதிகள் இல்லாத ஒரு வறுமையான சூழல் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தான் என் சின்ன வயசுக் காலம். நானும் சேர்ந்து எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பேரு. அரிசிச்சோறு அப்ப கொஞ்சம் அரிது…வீட்டில் தறி நெசவு வாப்பாவும் உம்மாவும் என் தாத்தா (அக்கா) வுமாக சேர்ந்து காலை நான்கு மணிக்கு மிதிக்க ஆரம்பிக்கும் பலகை சட்டக் சட்டக் என பின்னிரவு வரை ஒரு நாற்பது வாட்ஸ் பல்பு அந்தத் தறியில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் அதன் ஒளியிலும் தொடரும்…

 

வாங்கு சொல்லியாச்சா என்று அந்த மூமின்கள் வாழும் பகுதியில் அதிகாலையில் எழும் அந்தக்கேள்வியில் ஒளிந்திருப்பது தொழுகைக்கான ஆவல் அல்ல பாவு விரிச்சுக்கட்டவும் பாவ போடவும் தான்…

 

அந்தக் காக்குழியில் ( ஆள் நின்று தறியிழுக்கும் பள்ளம் ) வாப்பா வின் உள்ளமை இப்பவும் மனதில் பிரேமில் இட்ட படமாய் உள்ளது…கடின உழைப்பாளி கடும் கோபம வரும். எங்க அண்ணன் அலி தான் வீட்டில் ரண்டாவது அவனுக்கு நெறைய படிக்க ஆசை அதனால வாப்பாவும் அவனை படிக்க வைக்க அரும்பாடு பட்டார்… அலியண்ணன் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். நானும் தான் என்வகுப்பில் நல்ல படிக்கிறவன். ஆனால் வாப்பா ஆறாவதிலேயே என்னை பாவு முடியச்சொல்லி அனுப்பிவிட்டது.. அண்ணன் படிப்புக்கு நாம எல்லாரும் ஒத்தாசை பண்ணனும் அப்படின்னு சொல்லிரும்…..காலையில் சென்று நண்பனும் நானும் பாவுல ஆளுக்கு ஒரு புறமாக இருந்து சீவி முடியுவோம் இழைகளை. பாடல்கள் பாடிக் கொண்டும் படக்கதைகளைப் பேசிக்கொண்டும் சுமார் எட்டு மணி நேரம் குறுக்கு வளைச்சு நிமிரும்போது வலிக்கும்….கிடைக்கும் அந்த ஒன்னாரூவா காசு வலியை மறக்கச்செய்யும்… வரும்போதே வாப்பா வேற ஆபர் குடுப்பார் சில நேரம் சாப்பாடு போக மிதி நேரம் முழுக்க ராத்திரி பதினொரு மணி வரையில எல்லாம் முடியுவோம்…பெரும்பாலும் சோளக்காடியும் வெங்காயமும் தான்..

 

அண்ணனும் பெரிய பத்து முடிச்சு பியூசி யும் படிச்சிட்டு காலேஜில பெரிய என்ஜினியர் படிக்க சேந்து அப்ப அப்ப ஊருக்கு வரும் வந்தால் லைப்ரரி மற்றும் சங்கம் போல இடங்களில் தான் முழுக்க தங்கும்…எங்கள்ட்ட அவ்ளவா பேசாது நல்ல ட்ரஸ் பண்ணிட்டு எங்க கண்ணுலே வராம அப்படியே விடுமுறைய கழிச்சிட்டு திரும்ப போயிரும்… வாப்பாட்ட கேட்டதுக்கு…ஏல அவன் படிச்சவன் அவனுக்கு படிப்பு தான் முக்கியம்மின்னாரு

 

எங்க தரவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து எங்க எல்லோரையும் நல்லா விசாரிச்சிட்டு வாப்பா கூட எதோ ரகசியமா பேசிட்டு போனார்.. அவரு பெரிய பணக்காரர் அவர் வீடு பெரிய அரண்மனை மாதிரி கம்பியளிப் போட்டு கல்லுத் திண்ணையோட கம்பீரமா நிக்கும்…அவங்க வீட்டில் காலையில் நாஷ்டாப் பண்ணுபவர்கள்..

 

அவருக்கு கடையில போயி கலரு வாங்கி வந்து கொடுத்தேன்… வாப்பா சந்தோஷப்பட்டார்.. போனப் பெறவு அண்ணனுக்கு அவர் மகளை பேசி கல்யாணம் பண்ணப் போறதாச்சொன்னார் வாப்பா.

 

வாப்பா வுக்கு தலை கால புரியாத சந்தோசம். அதுக்குப் பிறகு சம்பந்த வீட்டிலிருந்து அரிசி தேங்காய் எண்ணெய் பலகாரங்கள் என எங்களுக்கு எப்பவும் மகிழ்வு தான்,,,,

 

அண்ணனுக்கு படிக்க வாப்பா கடன் வாங்கிய வகையில் நிறைய பாக்கி இருந்தது அத்துடன் கல்யாணத்துக்கும் சேர்த்து கொஞ்சம் கடனாக வாங்கி சோடனைக் காரில் அண்ணன் ஏறி வந்து நாலு சங்கம் பைத்து படிச்சு ஆட்டிறைச்சியுடன் அருமையாக கல்யாணம் நடந்தது…

 

ஆக அண்ணனும் மதினியும் இரண்டு நாள் சேர்ந்து எங்க வீட்டில இருந்தது தான் நான் கடசியப் பாத்தது அதுக்குப் பிறகு அவன் முழுக்க மாமனார் வீட்டில் தான் இருந்தான்…

 

இப்ப அண்ணனுடைய மக்கள் நல்ல படிப்பு படிச்சு ஒசந்த நெலையில இருக்காங்க… நான் பெருமையா எப்பவும் சொல்வேன் அவன் என் கூடப்பெறந்தவன்னு…  ஆனா அண்ணனுக்கு எங்கள தன்னுடைய உறவுன்னு சொல்ல கஷ்டமாத்தான் இருக்கும்… எங்கேயாவது கண்டால் என்னடே அப்படின்னு ஒரு கேள்வி…

 

அண்ணனின் வாழ்க்கையும் அவனது மேன்மையும் அவனது உயர்வும் பட்டினியாய் நாங்கள் ராப்பகலாய் அவனுக்காகப் பட்ட பாடும் எங்களின் ரத்தம் நெற்றி வியர்வையாய் நிலம் பார்த்தது தான்…

 

போன வாரம் வாப்பா மௌத்தாயிடுச்சு அண்ணன்தான் வந்து நின்னு எல்லா காரியமும் முன் நின்னு செய்தார்……… மையத்து சிலவுக்கு அவரும் காசு பங்கு தருவதாக சொன்னார் அட வேண்டாமே….

 

வாப்ப வின் மௌத்துக்கு மதினி வந்து விட்டுப் போய் விட்டார்கள் அண்ணனின் மக்கள் யாருமே வரவில்லை…அவர்களுக்கு படிப்பு முக்கியம் ….

 

அவங்க படிச்சவங்க பணக்காரங்க …

 

போன வாரம் சாயாக்கடையில எனது ஆறாவது வகுப்பில் பாடம் எடுத்த பழைய முத்தையா சார்வாளைப் பாத்தேன் …

 

என்னடே எப்படியிருக்க

அப்படியே உன்காலத்த கழிச்சிட்டியப்பா அடிமையாக் கெடந்து…

என் வகுப்பில ஒன்ன மாதிரி அறிவுள்ள பையனை நான் பாத்ததில்லையப்பா… நாலு எழுத்து படிக்காம ஒரு ஜென்மம் முழுசையும் கடத்திட்டியப்பா…

உங்க அண்ணன் அலிய விட நீ ரண்டு மடங்கு கெட்டிக் காரன்லடே…. போச்சப்பா உன்காலமும் இப்ப எவளவு நாளைக்கு லீவு?

எங்க சவுதியாப்பா?

 

வலிச்சது கொஞ்சம்…

 

வெள்ளை மனசு ஒன்னு சொல்லியதைக் கேட்டு இங்கு எழுத்தாக்கும் நேரத்திலும் என் கண்ணில் நீர்த்திரை…

 

கல்வி ஒருவனுக்கு உறவுகளை போற்றும் பண்பை ஒழுக்கத்தை அவனது அறிவை வளர்க்க உதவ வேண்டும்…  அவ்விதம் இல்லையெனில் அவன் கற்ற கல்வியின் பயன் தான் என்ன…உறவுகளை மறப்பதற்கும் உயரத்தில் இருந்து திமிராய் நடப்பதற்கும் தான் இந்த தம்பிகள் அண்ணன்களின் உயர்வுக்கு உரமானார்களா…

 

முதல் பதிவு: ஆழ்கடலின் மனவோட்டங்கள்

முல்லைப் பெரியாறு: போராட்டக் காட்சிகள்

13 டிசம்பர்

கடந்த சனிக்கிழமை 10.12.2011 முதல் இன்று வரை பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த திணறும் போலீசு படிப்படியாக வன்முறையை அரங்கேற்றி வருகிறது. இன்றும் அங்கே தடியடி நடந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!

 

கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து வரும் மக்களை தடுத்த நிறுத்த குமுளி அருகே வேன்களை குவித்திருக்கும் போலீசு

 

மக்களை பார்வையிடும் ஐ.ஜி ராஜேஸ்தாஸ்

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களிடம் அடிவாங்கி ஓடியதை அடுத்து தடியடி நடத்தும் தமிழக போலீசு

போர்முரசு கொட்டி வந்த மக்களிடம் பேசும் தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி.

தமிழக கேரள எல்லையான குமுளியில் மக்கள் வெள்ளம்.

குமுளி சாலையில் போலீசு தடுப்பை தகர்க்க முனையும் மக்கள்

குமுளி சாலையில் போலீசு தடுப்பை தகர்க்க முனையும் மக்கள்

குமுளி சாலையில் போலீசு வாகனங்களை தடுத்த நிறுத்த மக்கள் தடையரண்கள்

கேரள சுற்றுலாத்துறையின் சொகுசு மாட்டு வண்டிகளை தீவைப்பு

தேனி மாவட்ட எஸ்.பி தலைமையில் குருவனூத்து பாலத்தில் மக்களை தடுத்து நிறுத்தும் போலிசு

குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்

குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்

குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்

கம்பம் வட்டார கிராமங்களிலிருந்து வண்டிகளில் செல்லும் பெண்கள்

திரண்டு வந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

 

முதல் பதிவு: வினவு