தொகுப்பு | ஏப்ரல், 2011

விவசாயியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத விஞ்ஞானி(!) சாமிநாதன்

30 ஏப்

கடையநல்லூர் எம்.ஒய்.எம் நூலகத்தில் நேற்று (29/04/2011) ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர வாசகர்வட்ட கூட்டம் நடைபெற்றது. புளியங்குடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி உயர்திரு. அந்தோனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமது உரையில், பாரம்பரிய முறையிலான இயற்கை விவசாயத்தின் சிறப்பு குறித்தும், இரசாயண இடுபொருட்கள் சார்ந்து தற்போது நடப்பிலிருக்கும் விவசாயமுறையின் தீமைகள் குறித்தும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் தீமை குறித்தும், தன்னுடைய அனுபவங்களினூடாக எளிமையான நடையில் கேட்போருக்கு எளிதில் புரியும் வண்ணம் விவரித்தார்.

வேளாண் விஞ்ஞானியாக இந்தியாவால் கொண்டாடப்படும் ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியான எம்.எஸ். சுவாமிநாதன் குறித்தும் தம்முடைய உரையினிடையே அவர் குறிப்பிட்டார். இயற்கை விவசாய முறையில் தம்முடைய நிலத்தில் விளையவைத்த பயிர்களின் தன்மை குறித்தும், மண்ணின் வளம் குறித்தும் மைசூர் இந்திய வேளாண் ஆய்வு மையம் அளித்த அறிக்கையை அவரிடம் கொடுத்து இந்நாட்டில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் விவசாயத்தை அழித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வாதம் புரிந்ததை குறிப்பிடுகையில் விவசாயியான தன்னுடைய எந்தக் கேள்விக்கும் விஞ்ஞானியான அவர் பதில் கூறமுடியாமல் நின்றதாக எள்ளலுடன் நினைவு கூர்ந்தார்.

இந்திய அரசால் மிகுந்த மரியாதையுடன் வேளாண் அறிவியலாளராக மதிக்கப்படும், தெளிவாகச் சொன்னால் இந்தியாவின் விவசாயக் கொள்கையை தீர்மானிக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு விவசாயி செயற்கை உரங்களைக் கொட்டும் பசுமைப்புரட்சியைவிட எல்லா விதத்திலும் சிறந்ததாய் இயற்கை விவசாயம் இருப்பதை தன்னுடைய சொந்த நிலத்தில் சொந்த முயற்சியில் நிரூபித்துக் காட்டிய பின்னும் அதை ஏற்று செயல்படுத்த மறுப்பதேன்? இந்தக் கேள்விக்கு திரு அந்தோனிசாமியிடம் உரிய பதில் இல்லை. ஒருவேளை இந்தக் கேள்வியை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம். ஆனால் பல லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கும் உதிரித் தொழிலாளர்களாய் நகர்புறங்களில் வீசி எறியப்பட்டதற்கும் அந்தக் கேள்வியில்தான் பதிலிருக்கிறது.

பன்னாட்டு உணவுக்கழகங்களின், உலக வங்கியின், உத்தரவினால் இந்திய அரசு விவசாயத்தை அழிக்கும் செயலை திட்டமிட்டு செய்துவருகிறது. அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிக்காகத்தான் சுவாமிநாதன் போன்றோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் லட்சக்கணக்கான விவசாயிகள் மடிந்தபின்னரும் விவசாயத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது இந்திய அரசு.

மிகப்பரவலான வேலை வாய்ப்பை வழங்கிவரும் விவசாயத்தைவிட, சொந்த நாட்டு விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து போனதை விட அன்னிய நிறுவனங்களின் உத்தரவு இந்திய அரசுக்கு முக்கியமானதாக தெரிவது ஏன்? எனும் கேள்விதான் மக்களிடம் மிச்சமிருக்கிறது.

இறுதிப்போரும் விசாரணை அறிக்கையும்

27 ஏப்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

 

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

முன்பு வெளிவந்த அத்தனை தகவல்களுமே உறுதியாகியுள்ளது, இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்க்கும்போது.

இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

-இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

***********************************************

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையிலிருப்பவைகள் யாருக்கும் தெரியாதவை என்றோ, முன்பு யாரும் கூறாதது என்றோ கூறமுடியாது. போர் நடந்துகொண்டிருக்கும் போதிலிருந்து அறிவுத்துறையினாராலும், புரட்சிகர இடதுசாரிகளாலும், தமிழின ஆர்வலர்களாலும் தொடர்ந்து கூறப்பட்டுக்கொண்டிருப்பவைதான். இந்த அறிக்கை அவர்கள் கூறி வந்ததை மெய்ப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இவை முழுவதுமாக நிகழ்ந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்திவிடவில்லை. மட்டுமல்லாது இதுகுறித்து இலங்கை அரசையே விசாரணை நடத்தச் சொல்லியிருப்பதும் கேலிக்கூத்தானது. ஒரு வேளை வல்லரசு நாடுகள் விசாரிக்க முன்வந்தாலும் அதுவும் அவர்களின் வல்லாதிக்கத்திற்கு உட்பட்ட நடவடிக்கையாகத்தான் இருக்கும். அந்தவகையில் இந்த அறிக்கையும் கூட பலனளிக்காத ஒன்றுதான், இதுவரை அங்கு நடந்தது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று பிடிவாதமாக நம்பிக்கை வைத்திருந்தோரையும் பரிசீலிக்க வைத்திருக்கிறது என்ப்பதைத்தவிர.

ஐ.நாவின் அறிக்கை

கடையநல்லூர்: ஆணாதிக்கப் பொறுக்கிகள் தப்பித்துவிட அனுமதிக்கலாகாது

25 ஏப்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ”கடையநல்லூர் ஆணாதிக்கவாதிகளுக்கு ஓர் சவுக்கடி” என்ற தலைப்பில் ஒரு இடுகை இடப்பட்டிருந்தது. கடையநல்லூரில் இருக்கும் ஆணாதிக்கத்தைக் குறிப்பதாக அது இருந்தாலும், அக்கட்டுரை ஒரு நிகழ்வை முன்வைத்தே எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதில் நாம் குறிப்பிட்டிருந்த விபரங்கள் தவறானவை என்பதோடு மட்டுமல்லாமல் உண்மை அதற்கு நேர் மாறான தன்மையுடன் இருந்திருக்கிறது என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது. எனவே தவறான தகவலை தந்ததற்க்காகவும், சரியான முறையில் உறுதிப்படுத்திக்கொள்ளாமல் வெளியிட்டதற்காகவும் நல்லூர் முழக்கம் வாசகர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருவதுடன், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நேராது என்றும் உறுதியளிக்கிறது.

கடையநல்லூரைப் பொருத்தவரை இப்படி ஓடிப்போவது என்பது புதிதல்ல என்றாலும், குறிப்பிட்ட இந்த நிகழ்வின் பின்னணியிலுள்ள பல செய்திகள் அதிர்ச்சி தரத்தக்கதாய் இருக்கிறது. இது குறித்து மாலைமுரசு நாளிதளில் 23/04/2011 அன்று வெளிவந்த செய்தியின் சுருக்கம்,

கடையநல்லூரில் சமூக நல அமைப்புகள் பெயரில் அதிகாரிகளுக்கு பெண்களை விருந்தாக்கும் பலே கும்பல்

போலீசாரின் ரகசிய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சமூக நல அமைப்புகள் என்ற போர்வையில் சிலர் விபச்சாரத் தொழில் நடத்திவருவதாக புகார் எழுந்துள்ளது. அரசுத்துறைகளில் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ள சில சமூகநல அமைப்பினர் அரசு அதிகாரிகளுக்கு விபச்சார அழகிகள், குடும்பப்பெண்கள், இளம் பெண்களை விருந்தாக்குகிறார்கள். இதனால் அவர்கள் முதலீடு இல்லாமல் முதலாளிகளாக மாறிவருகிறார்கள்.. இப்படி பெண்களை அதிகாரிகளுக்கு விருந்துபடைத்து ஆதாயம் அடைந்துவரும் சில பெரும் புள்ளிகள் பற்றி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிக்கு புகார்கள் வந்தன. அதுபற்றி ரகசியமாக விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு அவர் உத்திரவிட்டார். அதன்பேரில் கடையநல்லூர் பகுதியில் உளவுப்பிரிவு போலீஸார் மாறுவேடங்களில் சென்று ரகசிய விசாரணை நடத்திவந்தனர். அவர்கள் கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டு வந்தார்கள்.

 

அதில் பெண்களை அரசு அதிகாரிகளுக்கு விருந்தாக்கி காரியம் சாதிக்கும் செயலில் பலே கும்பல் பற்றியும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்தும் பல திடுக்கிடும் தகவல்கல் வெளியாகி உள்ளன. அந்த கும்பலின் செயல்பாடு குறித்த முழு விபரமும் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அந்த தகவல்கள் போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த கும்பலில் உள்லவர்கள், அவர்களுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் பட்டியலும் எஸ்.பியிடம் வழங்கப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில் கும்பலைச் சேர்ந்தவர்கள் விரைவில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

 

பொதுவாக ஆணாதிக்கம் என்பது, பெண்களை சக மனிதப் பிறவியாக பார்க்காமல் ஆண்களுக்கான போகப்பொருளாக, காமப் பதுமையாக கருத்திக்கொண்டு அனைத்து நிலைகளும் ஆண்களின் கீழே பெண் இருக்க வேண்டும் என்பதான கருத்தியலின் மொத்தம். உலக அளவில் இது தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்றாலும், அவ்வப்போது பெண்களின் எழுச்சிகள் போராட்டங்கள் காரணமாக சிற்சில சீர்திருத்தங்களும் செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தில் ஆணாதிக்கம் தொழிற்படும் விதங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் ஆணாதிக்கமே உலகில் நிலவிக்கொண்டிருக்கிறது, இதில் கடையநல்லூர் எந்தவிதத்திலும் விலக்கில் இல்லை.

ஆனால் கடையநல்லூர் பாலியல் பிரச்சனைகளில் ஒரு தனித்தன்மை இருக்கிறது. கடையநல்லூரில் இளைஞர்களும், நடுத்தர வயதுடையவர்களும் சற்றேறக்குறைய 95 விழுக்காடினர் வெளிநாடுகளில் வேலை காரணமாக‌ தங்கியிருக்கின்றனர். இதனால் மணமான பெண்கள் துணையின்றி தனித்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருகிறது. கூடவே முதலாளிதுவ ஊடகங்களின் இடையறாத மூளைச் சலவைகளும் பெண்களையும் ஆண்களையும் அவர்கள் இதுகாறும் கட்டிக்காத்துவந்த ஒழுக்கங்களை பிறழச்செய்ய தூண்டுகின்றன.

இந்த புறச் சூழ்நிலைகளைத்தான் ஆணாதிக்கப் பொறுக்கிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் நலம் விரும்பிகளாக,பொதுக்காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு அரசு அதிகாரிகளிடமும், அதிகாரவர்க்கத்தினரிடமும் தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள பெண்களை கருவியாக பயன்படுத்திக்கொண்டுள்ள‌னர். இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்றாலும் நீண்ட நாட்களாகவே இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

பெண்களின் தனிமையை பயன்படுத்திக்கொண்டு ஆறுதலாகப்பேசி தங்கள் வலையில் வீழ்த்தி அதைக்கொண்டே அவர்களை மிரட்டி எல்லாவகையிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இது போன்ற ஆணாதிக்கப் பொறுக்கிகளையும் அவர்களால் பயனடைந்தவர்களையும் இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தனிமைப்படுத்துவதும் மிகுந்த அவசியம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஆனால், காவல்துறை விசாரணையோ, ஊர்கூட்டங்களோ இதில் ஊடாடியிருக்கும் அனைவரையும் வெளிக்கொண்டுவந்து தண்டிக்குமா என்பது ஐயமே. ஏனென்றால் இதில் பயணப்பட்டவர்களில், பலனடைந்தவர்களில் சமூகத்திலும், அரசியல் அதிகார வர்க்கத்திலும் இதுவரையிலும் உயர்ந்த நிலையில் இருப்ப‌வர்களும் அட‌க்கம். தங்களின் அதிகாரத்தை, பணபலத்தை பயன்படுத்தி அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதற்கு முன் இதுபோன்ற பிரச்சனைகள் வெளிவந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தும் இருக்கிறார்கள்.

எனவே இந்தமுறை அவ்வாறு தப்பித்துக்கொள்ள முடியாமல் அனைத்து வழிகளையும் அடைத்து அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திக் காட்டவேண்டியது சமூக அக்கரையுள்ள ஒவ்வொருவருக்கும் கடமையாகும். அந்தவகையில் தகுந்த ஆவணங்கள் கிடைத்ததும் இங்கு அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்.

சமூக அக்கரையுள்ள அனைவரையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் இந்த சமூகவிரோத ஆணாதிக்கப் புழுக்கள் தப்பிவிடாமல் பார்த்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் இதற்காக போராட்டங்கள் நடத்தவும் தங்களிடையே இருக்கும் பேதங்களை விலக்கி முன்வரவேண்டும் என்று நல்லூர் முழக்கம் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

கேள்விக்கும் பதிலுக்கும் இடையிலுள்ள தூரம்

22 ஏப்

அண்மையில் கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் ’எஸ்.டி.பி.ஐ யிலிருந்து போட்டியிடும் கடையநல்லூர் தொகுதி வேட்பாளரான திரு முபாரக் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவிருக்கிறார்’ என்றொரு அறிவிப்பை வெளியிட்டு கேள்விகளை பதிவு செய்யுமாறு கோரியிருந்தார்கள். நாணும் என்னுடைய கேள்வியை பதிவு செய்திருந்தேன். அந்த கேள்வியும் முபாரக் அவர்களின் பதிலும் கீழே,

திரு முபாரக் அவர்களுக்கு,

இந்தியாவின் இரட்டை ஆட்சி முறை குறித்து உங்கள் கருத்தென்ன? பொதுவாக ஒரு வேட்பாளர் நான் வெற்றிபெற்றால் இதை செய்து தருவேன் என வாக்குறுதி கொடுப்பது மக்களிடமிருந்து ஓட்டை பெறுவதற்கான ஒரு உத்தி என்பதை தாண்டி ஒரு பயனும் இல்லாதது என்பது என்னுடைய கருத்து. அரசு நிர்வாக நடைமுறையில் எந்தவித பங்களிப்பையும் செய்துவிட முடியாத ஒரு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர், தேர்தல் வாக்குறுதி அளிப்பது ஒரு ஏமாற்று எனும் கருத்தை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?

ஒரு நீண்ட நிலப்பரப்பை ஆட்சி செய்யும்போது நிர்வாக வசதிக்காக சில ஏற்பாடுகள் செய்வது, இரட்டை ஆட்சிமுறை என்பது அதில் ஒரு வகைதான்.

அடுத்து, எம்.எல்.ஏக்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் சும்மா? எந்த அதிகாரமும் அற்றது என்றால் அதற்கு எம்.எல்.ஏ என்ற பதவியே தேவையில்லையே! நீங்கள் ஆயிரம் மேடை போட்டு பேசினாலும் அரசின் கோப்புகளில் பதிவாகாது. ஆனால் ஓர் எம்.எல்.ஏவின் ஐந்து நிமிட பேச்சு என்பது அரசைப் பொருத்தவரை தவிர்க்க முடியாத ஒரு அம்சம். எனவே இந்த வாக்குறுதிகள் ஏமாற்று வேலை என்று சொல்வதை ஏற்க முடியாது. நிச்சயமாக அந்த பதவியின் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

ஒரு தொகுதியின் வேட்பாளராக நிற்கும் ஒருவர், அதாவது அவர்களின் நம்பிக்கைப்படி அரசு நிர்வாகத்தில் பங்கேற்க விரும்பும் ஒருவர் எப்படி சாரமற்று மேம்போக்காக இருக்கிறார் என்பதற்கு இந்த பதில் ஓர் எடுத்துக்காட்டு. இவர் மட்டுமல்ல வெகு சிலரைத் தவிர எல்லோருடைய நிலையும் இதுதான்.

இரட்டை ஆட்சி முறை என்பது நிர்வாக வசதிக்காக அல்ல மக்களை சுரண்டும் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. பதில் சொன்ன வேட்பாளருக்கு இரட்டை ஆட்சிமுறை என்பது குறித்த புரிதல் இல்லை. இந்திய அரசை நிர்வகிப்பது, அதன் செயல்களை தீர்மானிப்பது அரசு அதிகாரிகள். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதும் இல்லை, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையும் அவர்களுக்கு இல்லை. மாறாக அனைத்து அதிகாரமும் அவர்களிடமே குவிந்து கிடக்கிறது. இதற்கு நேர் எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் எளிமையாக விளக்கலாம். தற்போதைய இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்கும் அடிப்படையாக இருப்பது காட் ஒப்பந்தம். தொன்னூறுகளின் தொடக்கத்தில் காட் ஒப்பந்தம் அரசினால் அமல்படுத்தப்பட்டபோது மக்கள் பிரதிநிதிகளான எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் (எம்பி) அது தெரியாது. அதாவது இந்திய அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கை மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, அவர்களின் அனுமதியைப் பெறாமலேயே இந்தியாவில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இது தான் இரட்டை ஆட்சிமுறை என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகரத்தையும் தங்களிடம் வைத்திருக்கும் அதிகாரிகளோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

என்றால், வேட்பாளர் கேட்பதுபோல் எம்.எல்.ஏ என்றொரு பதவி இருக்கவேண்டிய அவசியமென்ன? இதற்கு நாம் சுதந்திரத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தியாவை இங்கிலாந்து தன்னுடைய காலனி நாடாக வைத்திருந்தது என்றால் அதன் பொருள் என்ன? தொழிற்புரட்சியின் விளைவால் உற்பத்தி செய்து குவிக்கப்பட்ட பொருட்களுக்கு சந்தை தேடித்தான் இந்தியாவில் நுழைந்தான் வெள்ளையன். ஒரு கட்டத்தில் நேரடியாக ஆட்சி செய்வது இனியும் லாபகரமாக இருக்காது என்றதும், மக்கள் தங்கள் சுதந்திரத்தை தானே தேடிக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக சுதந்திரம் என்ற பெயரில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதாவது நேரடியாக தாமே ஆள்வதற்குப் பதிலாக இந்தியர்களை ஆளவைத்துவிட்டு ஆட்சியின் சாதகங்களை தம்மிடமே தக்கவைத்துக் கொள்வது. இது தான் 1947ல் நடந்தது. ஆள்வது நம்மவர்கள் ஆனால், அதிகாரம் அவர்கள் கையில்; அப்போதுதான் அதை சுதந்திரம் என்று கூறிக்கொள்ள முடியும். நம்மை நாமே ஆள்கிறோம் எனும் எண்ணம் மக்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் மக்களுக்கு நாமே தேர்ந்தெடுத்து ஆள்கிறோம் எனும் எண்ணம் ஏற்படவேண்டுமென்பதனால் தேர்தல் இரட்டையாட்சிமுறை கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தரகுவேலை பார்ப்பதற்காகத்தான் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுகின்றனர். அன்று ஏகாதிபத்தியமாக பிரிட்டன் இருந்தது, அந்த இடத்தில் இன்று அமெரிக்கா. இவ்வளவுதான் வித்தியாசமேயன்றி வேறொன்றுமில்லை.

ஆயிரம் கூட்டம் போட்டு பேசினாலும் சட்டசபையில் ஐந்து நிமிடம் பேசுவதுதான் பதிவாகும் என்றும் கூறியிருக்கிறார். பேசுவது பதிவாவதால் மக்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள், அவைகள் பதிவும் ஆகியுள்ளன. முபாரக் அவர்களுக்கு ஆசையிருந்தால் அவைகளை ஒருமுறை பார்வையிட்டுக் கொள்ளட்டும்; முதலாளிகளுக்கு பாதகமான எதாவது ஒன்று பதிவாகியிருக்கிறதா என்று. நாம் நேரடியாகவே முபாரக் அவர்களிடம் கேட்கலாம், தமிழகத்தில் தொழில் தொடங்கிய நோக்கியா நிறுவனம் முதலீடு செய்த மொத்த முதலீட்டுக்கு ஈடான தொகையை ஒவ்வொரு ஆண்டும் வரிச்சலுகையாக தமிழகத்திலிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் இதை கேள்வியாக எழுப்பி இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியுமா முபாரக் அவர்களால்?

ஆக அலங்காரப் பதவிக்காக போட்டியிட்டு வெல்வதற்கு மக்களை மயக்கும் ஒரு வித்தைதான் தேர்தல் வாக்குறுதிகள். அதை நிறைவேற்றுவதும் முடியாமல் போவதும் அந்தந்த வாக்குறுதிகளின் அற்பங்களில் இருக்கிறதேயன்றி உறுப்பினர்களின் அதிகாரத்தில் இல்லை.

போதும் என நினைக்கிறேன். இதற்கு பதிலளிக்க முபாரக் அவர்கள் முன்வந்தாலோ, அல்லது விளக்கங்களை பெறுவதற்கு கடையநல்லூர்.ஆர்க் தள நிர்வாகிகள் முயற்சி செய்தாலோ இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் இதை விவாதிக்கவும் விவரிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்பது அனைவரின் கவனத்திற்கும்.

மீண்டும் வேற்றுக்கிரகவாசியா?

21 ஏப்

ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இண்டர்நெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

2 அடி உயரமே உள்ள அந்த உடல் பாதி எரிந்து, அழுகிய நிலையில் காணப்படுவதாகவும், அதன் வாய் திறந்தபடி உள்ளதாகவும், அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் உள்ளதாகவும் இருவரும் கூறியதாக அந்த வீடியோ தெரிவிக்கிறது.

இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக் கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

*****************************************

இதுபோல் அவ்வப்போது பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகவும், வேற்றுக்கிரகவாசிகளைப் பார்த்ததாகவும் அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் இதுவரை அவ்வாறு வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் அறிவியல் ரீதியாக கிடைக்கவில்லை. என்றாலும், பரந்து விரிந்த இப்பேரண்டத்தில் ஏதாவது ஒரு கோளில் ஏதேனும் ஒரு உயிரினம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஒதுக்கிடவிட முடியாது.

கடையநல்லூர் ஆணாதிக்கவாதிகளுக்கு ஒரு சவுக்கடி

18 ஏப்

கடந்த சில நாட்களாக கடையநல்லூரில் ஒரு செய்தி சுற்றி வந்துகொண்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள் எனும் அந்தச் செய்தி; நச்சுள்ளம் கொண்டவர்களாலும், ஆணாதிக்கவாதிகளாலும் சொந்தச் சரக்குகளை இணைத்து கிளுகிளுப்பிற்காக விவாதிக்கப்படும் அந்தச் செய்தி; கடையநல்லூரில் பெண்கள் இருக்கும் நிலையை தெள்ளென வெளிக்காட்டுகிறது.

படிப்பது, விருப்பப்பட்ட துணிவகைகளை, அணிகலன்களை எடுத்துக்கொள்வது இவைகளையே பெண்களுக்கான சுதந்திரமாய் காட்டி பீற்றிக் கொள்ளப்படும் இந்த ஊரில் ஒரு பெண் துணிவுடன் சொந்த மணவாழ்க்கை குறித்த தன்னுடைய நிலையை வெளிப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் முடைநாற்றமெடுக்கும் ஆணாதிக்கமோ இதை ‘ஓடிப்போய்விட்டாள்’ என்று வம்பு பேசித் திரிகிறது.

அங்கன்வாடியில் பணிபுரியும் அந்தப்பெண் ஏப்ரல் 13 தேர்தல் நாளன்று தன்னுடைய பணிகளை முடித்துக்கொண்ட பிறகிலிருந்து காணப்பட‌வில்லை. ஒரு நாள் கழித்து தட்டச்சு செய்யப்பட்ட மடல் ஒன்று ஐந்து பேர்களுக்கு வருகிறது. அந்த மடலின் சுருக்கம்,

“கடந்த 12 ஆண்டுகளாக கணவனின் போக்கிலுள்ள கொடுமைகளையும் சிரமங்களையும் சுட்டிக்காட்டி எனக்கு மணவிலக்கு செய்து தாருங்கள் என என்னுடைய தகப்பனாரிடம் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கணவன் ஊர் வரும்போது என்னை சமாதானம் செய்து சேர்ந்து வாழச் செய்வது தொடர்கிறது. நான் எங்கும் ஓடிப்போய்விடவில்லை. என் தோழி ஒருவரின் வீட்டில் இருக்கிறேன். எனக்கு மணவிலக்கு செய்து தருகிறேன் என்று உறுதியளித்தால் உடன் நான் ஊர் திரும்புகிறேன்.”

இந்த மடல் ௧) தகப்பனார், ௨) கணவன் வீட்டார், ௩) தாய்மாமன், ௪) வட்டார நாட்டாமை, ௫) குடும்பத்தார்கள் ஆகிய ஐவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தப்பெண்ணின் மடலில் பொதுவாக கொடுமைகள் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், கணவனின் சந்தேக புத்தி அந்தப் பெண்ணிற்கு மனதளவில் என்னவிதமான சித்திரவதைகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது தான். வேலை செய்யும் இடத்திற்குச் சென்று எத்தனை மணிக்கு வேலைக்கு வரும்? வேலை நேரத்தில் யாருடனெல்லாம் பேசும்? எத்தனை மணிக்கு வீடு திரும்பும் என்று விசாரித்து நிமிடக் கணக்குப் பார்த்து கேள்விகள் கேட்கும் கணவனுடன் வாழமுடியாது என்று மணவிலக்கு கோருவதும் புரிந்து கொள்ளக் கூடியது தான். ஆனால் இதை யாருடனோ ஓடிப்போய் விட்டதாக கதைகட்டி உலாவரச் செய்வதை என்னவென்று புரிந்து கொள்வது, ஆணாதிக்க வக்கிரம் என்பதல்லாது.

தற்போது வட்டார பஞ்சாயத்தில் அந்தப் பெண் திரும்பிவந்தால் வீட்டில் சேர்க்கக்கூடாது என்றும், நாளைக்குள் திரும்பி வராவிடில் காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் கொடுப்பது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் புகாரளிப்பது என்பதை ஒரு வகையில் நடப்பு என்று கொள்ளலாம். திரும்பி வந்தால் வீட்டில் சேர்க்கக் கூடாது என்பதை என்னவென்பது?

வீட்டை விட்டு வெளியேறிவிட்டது என்பதை மட்டும் விவாதப்பொருளாக ஆக்கியிருப்பவர்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெற்றோரிடம் முறையிட்டும் முடிவு ஏதும் கிடைக்கவில்லை என்ப‌தை ஏன் மறந்துவிட்டார்கள்?

இவ்வளவு தீர்க்கமாக தீர்வு காண விரும்பிய அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் துணிவுடன், குடும்பத்தாரிடமோ, வட்டார பெரியவர்களிடமோ முறையிட்டிருக்கலாம். நேராக நின்று பிரச்சனையை எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் பெற்றோரிடம் முறையிட்டும் கிடைக்காத நீதி மற்றோரிடம் கிடைக்குமா என அந்தப் பெண் எண்ணியிருந்தால் அதை குறை காண முடியாது.

மெய்யாக இந்தப் பிரச்சனையில் யாரிடம் தவறு இருக்கிறது? யாரின் கூற்றில் மெய் இருக்கிறது? என்பதை விட‌ பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக காட்ட விரும்புகிறது இந்த சமூகம் என்பது தான் இந்தப் பிரச்சனையின் மையமாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க சமூகத்தில், சாராம்சத்தில் அதை எதிர்த்து கலகக் குரல் எழுப்பிய பெண் எனும் அடிப்படையில் நமது பாரட்டுதல்களும், ஆதரவும் அந்தப் பெண்ணுக்கு உண்டு.

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

16 ஏப்

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது  தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்  சத்ய சாயிபாபாதான்.

வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்  ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது  பக்தர்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின்  அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாயிபாபாவை  பற்றி பெரிதாக  அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில்  செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில  பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு  அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள்  உண்டு.  பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.

1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில்  மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது,  இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.,  வீசிய பூக்கள்  தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம்  இன்று ஒரு சிறு நகரமாக  வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக  வளர்ந்திருக்கிறது.

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று  பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து  சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை  பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று  மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய  பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன்.  நான்கு  வருட  காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப்  பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”

1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு  உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில்  இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது  இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா  அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.  கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது  பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர்  வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ  அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா  நடக்கும்.

அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல்  மருத்துவமனையைக் கட்ட  108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக  வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டுhttp://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால்  எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.  இவை  எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில்  இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள்.  ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின்  கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின்  வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும்    எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை  உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள்  அல்லது இந்த சாமியார்களின்  மடத்துக்கு வருகிறார்கள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும்  தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த  வகுப்புக்குச் சென்று  வந்தவரொருவர்.  ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப  வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை  வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.  நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள்,  ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும்  வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி  வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்  பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு  என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது  மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள்  அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று  முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

பார்க்கப்  பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

மக்களின் போராட்டங்களை அடக்க  ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம்  பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான  கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள்  உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.

நன்றி: தோழர் சந்தனமுல்லை
நன்றி: வினவு

கடையநல்லூர் 49 ஓ: ஒரு வேண்டுகோள்

16 ஏப்

நடந்து முடிந்த தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 78 பேர் 49 ஓ வைப் பயன்படுத்தி எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்திருக்கின்றனர். நடப்பு அரசியல் நிலையில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அது வீணானது தான் என்பதை உணர்ந்து வேட்பாளர்களை புறக்கணிக்கும் முடிவை எடுத்த அந்த 78 பேரையும் நல்லூர் முழக்கம் பாராட்டுகிறது, அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யவும் விரும்புகிறது. இந்த செய்தியை நேரடியாக இணையத்தில் பார்ப்பவர்களில் அந்த 78 பேரில் யாரேனும் இருந்தால் அவர்கள் நல்லூர் முழக்கத்தை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அல்லது தெரிந்தவர்களாக நண்பர்களாக இருந்தால் அவர்களுக்கு கூறி அவர்களையும் நல்லூர் முழக்கத்தை தொடர்பு கொள்வதில் உதவவும்.

பொன்னர் சங்கர் யாருக்காக?

15 ஏப்

அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை  ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது.

இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர்  கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது.  அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிக்க பலகோடிகளை செலவழித்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள், படமும் வெளிவந்துவிட்டது.

சரி!  அப்படி என்ன அண்ணன்மார்களிடம் இருக்கிறது அவர்கள் என்ன தீரன் சின்னமலை,கட்டபொம்மன் போன்று வெள்ளையனுக்கு எதிரான போரில் வீரமரணம் எய்திய மாவீரர்களா? பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு நம் மக்களுக்கு சொல்லுகின்ற பாடம்தான் என்ன? எதற்காக அண்ணன்மார் கதையை கருணாநிதி மீள் உருவாக்கம் செய்தார்?

தான் கோவையில் வாழ்ந்த காலத்தில் அண்ணன்மார் கதையை கேட்டு ரசித்து  பொன்னர் சங்கர் கதையை எழுதியதாகவும் மு.க சொல்லியிருக்கிறார். தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் மு.க வை அணணன்மார் கதை கவர்ந்திழுத்திருக்கிறதே , அப்படியானால் கதையில் பார்ப்பன, பார்ப்பனிய இந்துத்துவா எதிர்ப்பு எதாவது இருக்குமா என்று தேடி பார்த்தால் ம்ஹும்… ஒரு வெங்காயமும் இல்லை.

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் தலைவர்களான பொன்னர் , சங்கர் இருவரும் அண்ணன் தம்பிகள், இவர்களின் தங்கை அருக்காணி இவர்கள் வாழ்க்கை தான் அண்ணன்மார் கதை    இவர்களுக்கும், கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர்களின் தலைவனான தலையூர்காளிக்கும் இடையிலான சண்டையும் அதன் முடிவில் அண்ணன்மார்கள் இறப்பதே இக் கதை.  இக்கதை நடந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  இப்படி ஒரு கதை நடந்ததா அல்லது எவனாவது கரடி விட்டுட்டு போயிட்டானா? என நாம் சந்தேப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.

பொன்னரும் சங்கரும் இறந்த பின்பு அவர்கள் கடவுளாக்கபட்டு ஊர் ஊருக்கு கோயில் கட்டபட்டுள்ளது . கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் வேளாளக்கவுண்டர் சாதிக்காக வேட்டுவகவுண்டர்களிடம் சண்டை போட்டதுதான்.

அதுவும் கொடூரமாக வேட்டுவர் மக்களை வீழ்த்தியிருக்கிறான் பொன்னர்.கீழேயுள்ள அண்ணன்மார் பாடல்களில் பொன்னர் வேடுவர்களுக்கு எதிரான போரில் வேட்டுவர்களின் ஆண் குழந்தைகளையயல்லாம் தலையை வெட்டி கொன்றதாக கூறுகிறது.

“கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு

 பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு

 வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து

 ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்”

இப்படி வெள்ளாளர்களுக்கும் வேடுவர்களுக்கும் இடையிலான போரில் அண்ணன்மார்கள் மட்டும் வீரசிங்கங்களாக்கப்பட்டது ஏன்? 

வேடுவர்கள் மீதான பகையும் அதை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதற்கும் அண்ணன்மார்கள் கதை பயன்படுத்தபடுகிறது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்களான வேடுவர்கள் இப்பகுதியில் வேட்டையாடி தொழில் செய்து வருகின்றனர் அப்போது அங்கு பிழைப்புக்காக வந்த வந்தேறிகளான கொங்கு வெள்ளார்களுக்கும்  வேடுவர்களுக்கும் போர் நடநதாக கொங்குவேளாளர்கள் வரலாற்றில் கூறப்படுகிறது. என்றோ ஒரு காலத்தில் எவனோ ஒரு வேட்டுவனுக்கும் வெள்ளாளனுக்கும் இடையே நடந்த சண்டையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு கோயில் நோம்பிகளில் நாடகம் போட்டு பகையயை வளர்த்த வேண்டிய அவசியம் என்ன? ஒட்டுமொத்த வேட்டுவர்களையும் திருடர்களாக காட்டுவதை அனுமதிக்கவேண்டுமா?

இந்த அணணன்மார் நாடகங்களையும் கோயில்களையும் எந்தவொரு வேட்டுவனும் ரசிப்பதில்லை, ஒரு சாதியையே திருடனாக அழைப்பதை யார் தான் ஏற்று கொள்வார்கள்.

இன்றைய காலகட்டங்களில் குறிப்பிட்ட இரு சாதியினரும் நண்பர்களாக இருந்தாலும் இது போன்ற கதைகள் சாதி பகையை மூட்டி விடுகின்றன. அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் தனியரசு சில ஆண்டுகளுக்கு முன் வேட்டுவக் கவுண்டர்கள் அதிகமாக வாழும் நாமக்கல் மாவட்டம் பூசாரிப்பட்டியில்  அவர்களை வமபுக்கு இழுத்து  ஒரு கலவரத்தையே உண்டாக்கினான். அதன் பின்னணியில் பொன்னர் சங்கர் கதையிருப்பதை மறுக்க முடியாது. அன்று வேட்டுவனாகவும் வெள்ளாளனாகவும் இருப்பவன் இப்போதும் அதே சாதியாக இருப்பான் என்று கூறமுடியாது.

இந்ந கதை  மூதறிஞர்(!) கருணாநிதியை கவர்ந்திழுக்க காரணம் என்ன?

ஓட்டு.

ஆம்! ஓட்டு பொறுக்குவதற்காக வேட்டுவன்களை தாழ்த்தியும் வெள்ளாளன்களையும் உயர்த்தியும் இக்கதையை மெருகேற்றியுள்ளார் மு.க., அதற்கு காரணம் கொங்கு பகுதியில் வேட்டுவக்கவுண்டர்கள் சிறுபான்மை சமூகத்தினராகவும் பொருளாதாரரீதியில் பின் தங்கியும்உள்ளனர். ஆனால் வெள்ளாளக்கவுண்டர்கள் பெரும்பான்மையுடனும், பொருளதார பின்னணியுடனும் உள்ளனர்.

ஒரு வேளை, வேட்டுவர்கள் பெரும்பான்மையினராக இருந்திருந்தால் மு.க பொன்னர் சங்கர் எழுதியிருக்கமாட்டார். மாவீரன் தலையூர் காளி என்ற வீர புராணத்தை எழுதியிருப்பார்.

தலையூர் காளியும் பொன்னர் சங்கரும் வேட்டுவர் சாதியைசேர்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது இப்படி சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதி என்பதிலும் பல கருத்து நிலவுகிறது .

இன்றையக் காலக்கட்த்தில் இப்படி ஒரு கதை தேவையா . இந்த டுபாக்கூர் சாதி வெறி கதையை ரசித்து எழுதியதாக சொல்லும் கருணாநிதிக்கு சாதி ஒழிப்பு வீரரான பெரியாரின் பெயரை சொல்லும்  தகுதி கூட கிடையாது.

நடந்ததா என்ற ஐயத்துக்குறிய கதையை எழுதும் கருணாநிதி   வெள்ளையர்களுக்கெதிரான காலனியாதிக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரன் பகத்சிங்கின் கதையை எழுதுவாரா?  ஒரு வேளை பகத்சிங்கின் சாதியினர் தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகளாக இருந்திருந்தால் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் .

நன்றி: தோழர் விடுதலை

மசினகுடியில் 49 ஓ; விழிப்புணர்வு ஏற்படுமா?

13 ஏப்

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறி 49 ஓ படிவத்தை பெருமளவில் பயன்படுத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், அதை தெரிவிக்கும் 49 ஓ படிவத்தை வாக்குச் சாவடியில் சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பெருமளவிலானோர் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இன்றுநடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிக அளவில் மசினகுடியில்தான் இதை வாக்காளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதி கூடலூர் தொகுதிக்குட்பட்டதாகும். இங்குள்ள மக்கள் யானைப் பாதை மற்றும் புலிகள் சரணாலயத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மசினகுடி பகுதி மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி 49 ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பித் தந்தனர்.

பெருமளவில் வாக்காளர்கள் 49 ஓ படிவத்தைக் கொடுத்து வருவதால் மசினகுடியில் பரபரப்பு நிலவுகிறது.

**************************************************************

ஏதோ ஒரு கோரிக்கை, அதை யாரும் நிறைவேற்றவில்லை என்பதால் புறக்கணிப்பு என்பது போன்ற செய்திகளை தேர்தல் காலங்களில் அடிக்கடி உலாவரக் காணலாம். இதை ஒரு கவன ஈர்ப்பாக செய்யாமல் மசினகுடியில் தங்களின் வெறுப்பை சட்டபூர்வ வழிமுறைகளிலேயே பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் 49 ஓவும் ஓர் ஏமாற்றுதான் என்பதை மக்கள் வெகுவிரைவிலேயே கண்டுகொள்வார்கள். அப்போது அவர்களின் பார்வை இந்த தேர்தல் அமைப்பை தூக்கி வீசுவதை நோக்கி திரும்பியிருக்கும்.