அன்பார்ந்த நண்பர்களே, கடந்த சில வாரங்களாக “கடையநல்லூரின் சூழ்நிலை” குறித்து பல்வேறு மின்னஞ்சல்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. ஒருங்கிணைந்த ஜமாத் என்றும், அவர்களின் தீர்மானங்கள் என்றும், அதற்கு மறுமொழிகள், சேர்க்கைகள் திருத்தங்கள் என்றும், அண்மை நாட்களில் இணையத்தில் கடையநல்லூர் பற்றி எரிகிறது. இவைகளை தற்செயல் வாய்ப்பாக காணநேரும் பிற பகுதி நண்பர்கள் பூடகமான சில மின்னஞ்சல்களை கண்டு என்ன பிரச்சனை என்று குழம்புகிறார்கள். வெளிப்படையான சில மின்னஞ்சல்களைக் கண்டு மிகையாக புறிந்து கொண்டு கலக்கமடைகிறார்கள். தொடக்கத்தில் இவை குறித்து நான் அலட்சியம் காட்டினாலும், கூடும் இடங்களிலெல்லாம் இவை பற்றிய பேச்சும், அதை ஒட்டிய அவர்களின் மனோநிலைத் திருப்பங்களும் நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரைச்சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அலட்சியம் செய்து ஒதுங்கியிருப்பது பிழையெனப்பட்டதால் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
அப்படி என்ன பிரச்சனை நம்முடைய ஊரில்? நம் ஊரிலிருந்து வெளியூர் சென்று கல்லூரிகளில் படிக்கும் சில மாணவிகள் காதல் என்ற பெயரில் ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். திருமணமான சில பெண்கள் அன்னிய ஆடவரோடு பழகினார்கள். இதனுடன், ஆர் எஸ் எஸ் போன்ற இந்து வெறிக்கும்பல்கள் இஸ்லாமிய பெண்களுடன் காதல் என்ற பெயரில் கலந்து பழகி அவர்களின் வாழ்வை சீர்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கென ஒரு அமைப்பாகிச் செயல்படுவதாக கூறப்படும் வதந்தி, இது தான் மையமான பிரச்சனை. எனக்கு குழும அஞ்சலாக அனுப்பிய பலரிடம் இது குறித்து கேட்டேன். ஒரு பிரசுரம் ஒரு வெளியீடு ஏதாவது ஆர் எஸ் எஸ் இப்படி ஒரு அமைப்பை தொடங்கியிருப்பதற்கான சான்று தர இயலுமா என்று. யாரிடமும் அப்படி எதுவும் இல்லை. எல்லோரும் செவியுற்றவர்களே. இதன் மூலம் காவிக்குண்டர்கள் யோக்கியமானவர்கள் என்றோ, இப்படி ஒரு அமைப்பைக்கட்டும் சாத்தியம் இல்லை என்றோ நான் கூறுவதாக பொருளில்லை. ஆனால் இந்த சில நிகழ்வுகளைக்கொண்டு ஏற்கனவே அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களை இன்னும் அடிமைத்தனத்தில் கட்டிவைக்கும் முயற்சியை தீர்மானம் என்ற பெயரில், இது தான் பெண்களை முன்னேற்றும் என்ற பெயரில் தந்திருப்பது பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, கண்டிக்கப்படவேண்டியதும் கூட.
மிகப்பெரும் பிரச்சனையாக, எல்லோர் மனதையும் அரித்துக்கொண்டிருக்கும் ஒன்றாக மிகைப்படுத்திக் காட்டப்படும் ஓடிப்போவதும் கூடிப்போவதும் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்றாலும் அதற்கு தீர்வாக வந்திருப்பது சிரிப்பை வரவழைத்தாலும் வலி தந்தவை. பெண்களை கீழ்மைப்படுத்தி அடைத்து வைத்தால் பெருமை வரப்போவதில்லை. +2 வரை மட்டுமே பெண்களை படிக்கவைப்பது சிறந்தது என்றொரு பரிந்துரை. கல்லூரியில் படிக்கப்போனால் காதல் செய்கிறார்கள் எனவே +2 போதும். வீட்டைவிட்டு வெளியில் சென்றால் கேலி செய்வார்கள் எனவே வீட்டில் முடங்கி இருங்கள். பால்காரர், துணி தேய்ப்பவர் போன்றோரெல்லாம் வீட்டிற்கு வர வாய்ப்பிருக்கிறது எனவே பகலில் மட்டும் தக்க துணையுடன் அணுகுங்கள்….. இவைகளின் பொருள் என்ன? பெண்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக நினைத்திருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகள் மனதில் எழும். பிரச்ச்னையை சரியான கோணத்தில் புறிந்து கொள்ளாமலும், அதன் போக்கை கண்டுணராமலும் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் மதரீதியான தீர்வை முன்தள்ளுவது பிரச்சனையை மேலும் வெடித்துப்பரவச்செய்யுமா? தணிக்குமா? முதலில் இது கடையநல்லூருக்கு மட்டுமேயான தனிப்படையான விசயமா? அல்லது முன் எப்போதும் இல்லாதிருந்து இப்போது திடீரென்று வந்து குதித்ததா? இது போன்ற பிரச்சனைகள் இல்லாத ஊர் என்று எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா உங்களால்? அப்படி என்றால் இது போன்ற தீர்மானங்களை கொண்டு வந்து சொந்த வீட்டுப்பெண்களையே வீட்டுக்குள் முடக்கிவைக்கும் அளவிற்கு உங்களை தள்ளிச்சென்றது எது?
நெசவுத்தொழிலை குடிசைத்தொழிலாக நாம் கொண்டிருந்தவரை பெண்களை முடக்குவது இந்த அளவுக்கு வேகமெடுத்திருக்கவில்லை, அப்போதும் சில கட்டுப்பெட்டித்தனங்கள் இருந்தன என்றாலும். உலகமயமாக்கலின் காரணமாக கைத்தறிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரகங்கள் நீக்கப்பட்டுவிட கைத்தறித்தொழில் நசியத்தொடங்கியது. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து நமது ஊரிலுள்ள ஆண்கள் வெளியூர் வெளிநாடுகளில் சென்று சம்பாதிப்பது இருந்து வந்திருக்கிறது. பழைய காலத்து பர்மா, ரங்கூன் கதைகள் இன்னும் சிலருக்கு ஞாபகம் இருக்கக்கூடும். அதற்கு அடுத்த தலைமுறையில் பினாங்கு சென்று சம்பாதித்தவர்கள், அதன் விளைவால் குடியுறிமை பெற்றவர்கள் இன்னும் கடையநல்லூருக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். பின்னர் சிங்கப்பூரும் அப்படியே. அதன் பிறகுதான் வளைகுடா நாடுகள் பர்மா, மலேயா, சிங்கப்பூரைப்போன்றே வளைகுடா நாடுகளுக்கும் முதலில் பெருவாரியாகச்செல்லவில்லை. காரணம் தறிநெசவு என்னும் தொழில் அவர்களிடம் இருந்தது. பீஸ் ஓணம் என்றும், சொஸைட்டிக்கு எதிரான போராட்டம் என்றும் தங்களின் கூலிப்பற்றாக்குறையை வசதி வேட்கையை சரியான திசைவழியில் தீர்த்துக்கொள்ள முயன்ற நம் முந்தைய தலைமுறையினரிடம் உலகமயமாக்கம் விழைவித்த சம்மட்டி அடி, ஊரோடு வளைகுடா நடுகளில் தஞ்சமடைய வைத்தது. பெண்கள், வயோதிகர்கள், வேலையிலிருப்போர் ஆகியோரைத்தவிர அனைவரும் இன்று வெளிநாடுகளில். எரிபொருள் கண்டுபிடிப்பால் வளைகுடா நாடுகளின் குடிமக்கள் பெற்ற வளம், அந்த எண்ணெய் வளத்தை அமெரிக்கா கொள்ளையடிக்க ஏற்படுத்தப்பட்ட மறுகட்டுமான வேலைவாய்ப்புகள் குறைந்த கூலியில் கடுமையான வேலைகளை செய்யத்தயாரான ஆட்கள். நமதூரினருக்கு மிகப்பெரும் வேலை வாய்ப்பை வழங்கிய காரணிகள் இவை. குறைவான கூலி என்றாலும் நாணய மாற்று வீதத்தால் கிடைத்த செல்வம், அதோடு வளைகுடாவின் மதமும் அதன் நடைமுறைகளும் ஏற்படுத்திய தாக்கம் இவை எல்லாம் சேர்ந்து நமதூரின் முகத்தை மாற்றத்தொடங்கியது. யாரேனும் வீட்டிற்கு வந்தால் வீட்டுப்பெண்களை அறையில் அடைத்துவைத்துவிட்டு ஆண்கள் மட்டும் அளவளாவுவதும், புர்கா போன்ற பழக்கவழக்கங்களும் நம்முள் கலக்கத் தொடங்கின. வசதியான வீடுகளைக்கூட இடித்து புதிதாய் கட்டுவது. முதலீடு என்ற பெயரில் ஊரைச்சுற்றிய பொட்டல் காடுகளில் கோடிகளைக்கொண்டு முடக்கியது. வீட்டு வசதி சாதனங்கள் தாராளமாய் வீட்டுக்குள் நுழைய நுழைய உடலுழைப்பு வீட்டை விட்டு வெளியேறியது. நகரியமாக்கலின் கோரப்பிடிக்குள் கடையநல்லூர் வீழும் போது அதன் விளைவுகளிலிருந்து மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? வாழ்க்கை வசதிகள் வேண்டும், அது தரும் சொகுசு வேண்டும், விளைவுகளை நிதானிக்காத மாற்றம் வேண்டும், உணவு வகை தொடங்கி இசை ரசனை வரை புதுப்புது மாற்றங்கள் நித்தமும் வேண்டும்; ஆனால் அவைகளால் விளையும் சீரழிவுகள் மட்டும் வேண்டாம் என்றால் அது முரண்பாடில்லையா? இந்த மாற்றங்களுக்கெல்லாம் பெருமளவு காரணமாக இல்லாத பெண்கள் விளைவுகளின் போது மட்டும் அடக்குமுறையை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? சீர்தூக்கிப்பார்த்து நிஜத்தை சொல்லுங்கள், பெண்கள் கெட்டுப்போகவேண்டும் என்று விரும்புவதால் இம்மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்கிறதா? இல்லை ஒட்டுமொத்த ஊரின், குறிப்பாக ஆண்களின் மாற்றங்களும் போக்கும் ஒருசில பெண்களை இம்மாதிரியான முடிவுகளுக்கு தள்ளுகிறதா? எது சரி?
வேற்று மதத்தவரை காதலித்து ஓடிப்போவது உங்களுக்கு அவமானகரமான ஒன்றாக தெரிகிறது. இஸ்லாமிய மதத்துக்குள்ளேயே ஒரு ஆணைக் காதலித்தால் அதனைப் பரிசீலிக்க உங்களில் எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்? திருமணம் நிச்சயிக்கப்போகும் பெண்ணின் விருப்பம் எந்த அளவுக்கு உங்களிடம் முக்கியத்துவம் பெறும்? நீங்கள் பார்த்துவைத்திருக்கும் ஒரு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று ஒரு பெண் சொன்னால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? சிறுமியாக இருக்கும் போது ஆடைகள், தின்பண்டங்கள், விளையாட்டுப்பொருட்களைத்தவிர ஒரு பெண்ணின் விருப்பங்கள் எங்கெல்லாம் நிறைவேற்றப்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். இவைகளையெல்லாம் நேர்மையான முறையில் பரிசீலிக்க முடியாத உங்களிடம் காதலைப்பற்றி பேசும் தகுதி எங்கிருந்து வரும்? இப்போதைய இளைஞர்களும், இளைஞிகளும் வயப்படுவது காதலல்ல என்றாலும் அதற்காக காதலை எப்படி மறுப்பது? பெற்றோர்களிடமும், சகோதரர்களிடமும், உறவினர்களிடமும் அடங்கி நடப்பதே பெண்களின் கடமை என்று நிர்ப்பந்திக்கப்படும் போது; அவ்வாறான நிர்ப்பந்தங்கள் இல்லாத இடத்தில் அவர்களின் சுதந்திரம் வெளிப்படத்தான் செய்யும், தவறாக என்றாலும். அந்தத்தவறு நிகழக்கூடாது என விரும்பினால் அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான் அதற்கான தீர்வாக இருக்குமேயல்லாமல் மேலும் அடக்குவது ஒருபோதும் தீர்வைத்தராது. வாழ்வைப்பற்றியும், அதன் வலிசுகங்களைப்பற்றியும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதற்கு உழைப்புதான் சிறந்த வழி. அவ்வாறன்றி பெண்களை பாதுகாக்கபடவேண்டிய பொருளைப்போல் எண்ணாமல் போகப்பொருளாக்காமல் சக மனிதப்பிறவியாய் அங்கீகரியுங்கள். அவ்வாறன்றி தர்பிய்யாக்களும், தீனியாத் வகுப்புகளும் வாழ்வை புறிந்து கொள்ள உதவாது.
சில பெண்கள் அன்னிய ஆடவருடன் உறவு கொண்டிருப்பது வெளிப்பட்டிருக்கிறது. இதுவும் புதிதான நடைமுறையோ வேறெங்கும் இல்லாத நடைமுறையோ அல்ல. ஆனால் ஆணைப்பொருத்தவரை இது பொழுதுபோக்கு என்றும், வீரம் என்றும் வகைப்படுத்தப்படும்போது பெண்ணைப்பொருத்தவரை இதை கற்பாக வைப்பது என்ன நியாயம்? ஊர் கெட்டுவிட்டதாய் கொதித்தெழும் இளைஞர்களை கேட்கிறேன். எந்தக்காலத்தில் ஆண்கள் இதுபோன்ற தவறைச்செய்யாமலிருந்தார்கள்? அப்போதெல்லாம் கெட்டுப்போகாத ஊர் இப்போது மட்டும் கெட்டுப்போனது எப்படி? உடலுறவு என்பது பசியைப்போன்றது அதற்கு உணவளிக்காத ஆண்களின் வெளிநாட்டு மோகம் பெண்களை கதற வைக்கிறது என்பதை முதலில் நாம் புறிந்து கொள்ளவேண்டும். தற்போதைய வசதிகளும் வாய்ப்பும் அதற்கு வழி ஏற்படுத்தித்தருகிறது. இதற்கு முதற்காரணம் ஆண்களேயன்றி பெண்களல்ல. தலைமுறை தலைமுறையாய் வெளிநாட்டு மோகம் குடி கொண்டிருக்கும் நம்முடைய ஊரில் நம்முடைய தலைமுறையில் அதற்கு முற்றுப்புள்ளிவைப்போம். பட்டினியாக கிடக்க நேர்ந்தாலும் நம் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவதில்லை என்று தீர்மானம் ஏற்போம். வெளிநாட்டு மோகத்திலிருந்து தான் நம்முடைய பிரச்சனைகளும் குழப்பங்களும் தொடங்குகின்றன. எங்கு பொந்து இருக்கிறதோ அங்கு தான் அடைக்கவேண்டும். எலிகளை சுதந்திரமாக உலவவிட்டுவிட்டு உழுந்தவடையை சுற்றி காவலிருக்கிறேன், கண்காணிப்பை ஏற்படுத்துகிறேன் என்பதெல்லாம் கவைக்குதவாதது. எலியை ஒழித்துக்கட்டுவோம் அதுதான் சரியான செயல். நம்முடைய வெளிநாட்டு மோகம் தீரும் போது பிரச்சனைகளும் குறையத்தொடங்கும்.
இந்த இடத்தில் இதனோடு தொடர்புடைய இன்னொரு விசயத்தையும் சொல்லியாகவேண்டும். நம்முடைய வெளிநாட்டு மோகம் குறைந்தாலும் இல்லையென்றாலும் வெளிநாட்டு வாய்ப்புகள் குறுகிவருகின்றன. தனியார்மயம் தாராள மயம் உலகமயம் என்னும் பொருளாதார கொள்ளைக்கொள்கை பணக்கார வளைகுடா நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, நெருக்கடிகள் முற்றுகின்றன. இந்தவகையில் நம் வெளிநாட்டு மோகம் குறையவில்லை என்றாலும் இன்னும் சில காலத்தில் வாய்ப்பிழந்து ஊர் திரும்புவது நிச்சயம். அப்போது இது போன்ற பிரச்சனைகள் எழாமலிருக்குமா? என்றால் குறையலாமே தவிர முற்றிலும் இல்லாது போகாது. ஏனென்றால் ஊரிலிருப்பது என்பது தற்காலிக தீர்வுதான். என்றால் நிரந்தரத்தீர்வு என்ன?
வாழ்வு குறித்தும் வாழ்முறை குறித்துமான நம் பார்வை. குறிப்பாக வறுமை குறித்த நமது எண்ணம். ஒருவன் பணக்காரனாக சுகிப்பதும், ஏழையாக சிரமப்படுவதும் ஆண்டவன் தந்தது, அவனுடைய தீர்மானம். உலகில் வேதனையில் வாடினாலும் இறந்த பிறகு சொர்க்கத்தில் சேரலாம் எனும் மத ரீதியான சிந்தனைகள். ஒருவன் பணக்காரனாக இருக்கிறான் என்றால் பல ஏழைகள் உலகில் இருக்கிறார்கள் என்று பொருள். ஒருவனைச்சுரண்டாமல் இன்னொருவன் பணக்காரனாக முடியாது. நாம் சந்திக்கும் துன்பமும் துயரங்களும், ஏழ்மையும், இயலாமைகளும் இந்த சுரண்டல்களிலிருந்தே வெளிப்படுகின்றன. நீங்கள் வெட்டியாக கதைபேசி, சுற்றித்திரிந்து, சினிமா பார்த்து இன்னும் பலவாறாக போக்கும் பொழுதுகளில் பத்தில் ஒரு பங்கு நேரத்தை பொதுவுடமை தத்துவத்தை படிப்பதில் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். புதிய வாழ்க்கை ஒன்று உங்கள் கண்முன்னே விரியத்தொடங்குவதை காண்பீர்கள். இதுதான் சர்வரோக நிவாரணி, இந்தப்பக்கம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் கூறவரவில்லை. பலவற்றையும் தெரிந்து கொள்ளும்போது தான் சிந்தனை விரிவடையும். இதைத்தவிர வேறெதையும் பார்க்கமாட்டோம், பேசமாட்டோம் என்பது குருகிய மனப்பான்மை. அதை விடுத்து பல்வேறு தத்துவங்களையும் படியுங்கள். பின் எது சரியானது என சிந்தித்து தீர்வு காணுங்கள்.
இறுதியாக இவைகுறித்து உங்களுடன் நான் விரிவாக பேச விரும்புகிறேன். ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம். காத்திருக்கிறேன்.
பின்குறிப்பு: இக்கட்டுரை பல மாதங்களுக்கு முன் எழுதப்பட்டு மின்னஞ்சலில் சுற்றுக்கு விடப்பட்டிருந்தாலும், இக்கட்டுரையின் கருவோ, இதன் உள்ளீடோ காலங்கடந்துவிடவில்லை என்பதற்கு சமகால நிகழ்வுகளே சான்று, என்பதால் இந்த மீள்பதிவு.
குறிச்சொற்கள்:கடையநல்லூர், கலவி, கலாச்சாரம், காதல், சமூகம், சிங்கப்பூர், சௌதி, பர்மா, மதம், மலேசியா, வாழ்வு, வெளிநாடு