Tag Archives: tntj

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே

25 ஜன

tntj appalam

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்கு நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.

முதலில் ஷிர்க் என்றால் என்ன? இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.

சரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும்? இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா? டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்பது முக்கியமான கேள்வி.

அண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா? அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா? இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.

இந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா? அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா?

விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா? அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா? இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்?

ஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அவர்கள் கூறுவது என்ன? ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தாயத்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை? டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா?

பொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன? தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.

சமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.

பரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

மேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.

இப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன? டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.

இன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா? அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா? முடியாது என்பதே யதார்த்தம்.

ஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும்? இது முக்கியமான கேள்வி அல்லவா?

இங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன? உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன? அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன? அதை எப்படி தீர்ப்பது? உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா? அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா? ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா? ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா? உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது?

ஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா? உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா? என்பது மட்டுமே கேள்வி.

நீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? உங்களின் பங்களிப்பு என்ன?

நல்லூர் நண்பர்களே! ஒரு நிமிடம் .. .. ..

20 ஆக

அன்பார்ந்த நல்லூர் நண்பர்களே!

 

காயிதே மில்லத் திடலிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இடத்திலோ நோன்புப் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு; பெருநாள் வாழ்த்துகளை நேரிலும், தொலைபேசியிலும், குருஞ்செய்தியிலும், இணையத்திலும் பகிர்ந்துவிட்டு ஒழிவாய் அமர்ந்திருப்பீர்கள். அல்லது இந்த திருநாளை, கிடைத்த விடுமுறையை எந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு குறுக்கீடு.

 

மேலே காணும் சுவரொட்டியை கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரின் சுவர்களில் ஆங்காங்கே நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை ஒரு தகவலாக நீங்கள் கடந்து சென்றிருக்கலாம், சிலர் இது குறித்து விவாதித்துக் கூட இருக்கலாம். நானும் இது குறித்துத் தான் உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

 

நோன்புப் பெருநாள் தொழுகையை காயிதே மில்லத் திடலில் எந்தக் கும்பல் நடத்துவது எனும் போட்டியில் வெல்வதற்கு உதவி செய்ததற்காக இந்த நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்றும், தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகளிடம் எந்தக் கும்பல் தொழுகை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நாமே ஒப்படைப்பது சரியா? என்றும் அந்த வாதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது இது மட்டும் தானா? எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி ஒன்று அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது உங்களுக்கு புலப்ப்படவில்லையா?

 

அரசியல் என்றால் என்ன? ஜெயலலிதா என்ன சொன்னார்? கருணாநிதி என்ன செய்தார்? பிஜேபியா? காங்கிரசா? இன்னபிற பல்வண்ண ஓட்டுக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? போன்றவற்றை வாய்களால் அலசிக் காயப் போடுவது மட்டும் தானா? அல்ல. அரசியல் என்பது; நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு செயல்களை, அவை ஏன் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன? எந்த நோக்கில் அது நிகழ்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மைகளை தேடிக் கண்டு, அது நம் மீது என்னென்ன விதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிந்து, அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான். இது தான் அரசியல் என்பதன் சாரம்.

 

இந்த அடிப்படையில், அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன? அதற்கு நாம் என்ன எதிர்வினை புரிவது? கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பது இது போன்ற ஆன்மீக இயக்கங்கள் தாம். இத்தகைய ஆன்மீக இயக்கங்கள் மத ரீதியான ஒழுங்கை மக்களிடம் மேம்படுத்துவதே தங்களின் பணி என்று கூறிக் கொண்டு, அதற்கான முனைப்புகளில் முழுமூச்சாய் ஈடுபடுவதாகக் காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றன. ஒற்றைக் கும்பலிலிருந்து பிரிந்த பல்வேறு கும்பல்களுக்கிடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்திக் காட்டுவதாலேயே இன்று கடையநல்லுர் சந்தித்துக் கொண்டிருக்கும், வேவ்வேறு நாட்களில் ஒரே பெருநாள், தொழுகைத் திடலுக்கு போட்டி உள்ளிட்ட பலவும் நிகழ்கின்றன. ‘கியாமத்து’ நாளில் எது சிறந்த கும்பல் என அறியப்படுவதற்கு இன்று எந்தக் கும்பலுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது தானா அளவுகோல்? அல்லது காயிதே மில்லத் திடலில் அதிகம் பேரைத் திரட்டி தொழுகை நடத்தியது எந்தக் கும்பல் என்பது தான் அளவுகோலா? இறைவனுக்கு எது பொருத்தமானது என்பதை உங்களுக்கு பாடம் நடத்தும் இந்தக் கும்பல்களின் செயல்களில் இறைப் பொருத்தம் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

 

நான்கு மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்ட ஓர் அறிவிப்புக்கு இப்போது ஏன் பாராட்டுச் சுவரொட்டி? தொழுகையை யார் நடத்துவது என்பதை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக தீர்த்துக் கொள்ள முனையும் ஒரு கும்பலுக்கு ஏன் இது கௌரவப் பிரச்சனையானது? ஏனென்றால் இது அவர்கள் நடத்தும் அரசியல். மக்களை அரசியலற்றவர்களாக தங்களின் பின்னே திரட்டி வைத்திருக்கும் பலத்தில் அவர்கள் செய்யும் அரசியல். முதலாளித்துவமும் இதைத்தான் செய்கிறது. எந்த விதத்திலும் மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே அது விரும்புகிறது. அதற்காகவே புதுப்புது பொழுது போக்குகளையும், நவீன கண்டுபிடிப்புகலையும் பயன்படுத்துகிறது. இனவெறி, மொழிவெறி, மதவெறி உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கி, தூண்டிவிட்டு பயன்படுத்துகிறது.

 

அது போன்றே, இயல்பான மத வழிபாட்டு முறைகளுடன் இருந்த மக்களிடையே மதத் தூயவாதம் பேசி மக்களிடையே செல்வாக்குப் பெற்று, அந்த செல்வாக்கின் பலத்திலேயே மக்களின் அரசியலையும், சிந்தனையையும் மழுங்கடித்திருக்கின்றன இந்தக் கும்பல்கள். இதை புரிய மறுப்பவர்களுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். 1) எந்த பேதமுமின்றி வீட்டருகே இருந்த பள்ளிவாசல் திடலில் தொழுது எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட மக்கள், இன்று ஒரே பெருநாளை அடுத்தடுத்த மூன்று நாட்களில் கொண்டாடியதை எந்த முணுமுணுப்பும் இன்றி அங்கீகரித்தார்களே, இது எப்படி நேர்ந்தது? 2) எவ்வளவோ மோசமான கட்டுரைகளெல்லாம் இணையத்தில் இரைந்து கிடக்க ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார் என்பதற்காக அவரை அடிப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டார்களே. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா எனும் சிந்தனை யாரிடமுமே எழவில்லையே, இது எப்படி நேர்ந்தது? காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

 

மதங்களும் அதைத்தான் விரும்புகின்றன. எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று, தன்னை நம்புபவர்களுக்கே அவைகள் சொர்க்கங்களை வாக்களிக்கின்றன. மழுங்கடிக்கப்படும் அரசியல் உணர்வு, மக்களிடம் இன்னும் மிச்சமிருக்கும் தவறுகளைக் கண்டு பொங்கி எழும் தன்மை, இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளில் தோதாக அமர்ந்து கொள்ளும் இந்த மதவாதக் கும்பல்கள், மக்களின் அந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது தான் அந்த சுவரொட்டி முகத்திலறைந்து வெளிப்படுத்தியிருக்கும் உண்மை.

 

உழைக்கும் மக்களே! அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி பின்னிரவில் படுக்கையில் விழும் வரை பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் உழைப்பை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களோடு சேர்ந்து அந்த உழைக்கும் மக்களை பல்வேறு பிரச்சனைகள் நாலாதிக்கிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, தனியார்மயம், ஏழ்மை, கல்வியின்மை, அடிப்படை வசதிகளின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஊழல்கள், அடக்குமுறைகள் .. .. .. இது போன்ற எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இல்லையா? இருக்கின்றன என்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அற்பமான முகநூல் பிரச்சனைக்கும், ஒரு குறுஞ்செய்து தகவல் மூலமும் நொடியில் உங்களால் ஆயிரக்கணக்கில் திரளமுடியும் என்றால்; தினமும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை எதிர்த்து நீங்கள் ஏன் திரளக் கூடாது?

 

பிரச்சனைகளுக்காக போராடுவது குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? சலவை செய்த வேட்டியில் தேனீர் குடிப்பதற்காகவும் இன்னும் பலவற்றுக்காகவும் நாளில் பலமுறை கடந்துபோகும் சாலைகளில் உங்களை பாதிக்கும் ஒரு பிரச்ச்னைக்காக உங்களால் நிற்க முடியாது என்றால், உங்களுக்குள் அரசியல் உணர்ச்சி எந்த அளவுக்கு வற்றிப் போய் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு காட்டுகள் வேண்டுமா?

 

இந்த வறட்சியை உங்களிடம் ஏற்படுத்தியது யார்? இதை நீங்கள் எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இவைகளை அறிந்த பிறகான உங்களின் எதிர்வினை என்ன? சமூக நடப்புகளை ஊன்றிக் கவனியுங்கள், உங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை ஆலோசியுங்கள். அவற்றை நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத் தலைமைகளிடம் முன்வைத்து கேள்விகளை எழுப்புங்கள். ஆம், உங்கள் இயக்கத் தலைமைகளிடம் நீங்கள் எழுப்பும் கேள்விகளிலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்வினை.

தொடர்பான இடுகைகள்

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

இஸ்லாமிய இளைஞர்களே எங்கு செல்கிறீர்கள்?