Tag Archives: ஆத்திகர்

இற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்

28 ஜன

அண்மையில் தம்பி குலாம் ‘கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு’ எனும் ஓர் அரிய(!) கட்டுரையை பதிவேற்றியிருக்கிறார். தமிழ் இணையப் பரப்பில் அன்றாடம் இதுபோன்ற மதவாத குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. தம்பி குலாம் கூட இன்னும் ஏராளமான கட்டுரைகளை தன்னுடைய தளத்தில் தந்து கொண்டே இருக்கப் போகிறார். இவைகளுக்கெல்லாம் நான் மறுப்பெழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அவை குறுகிய வட்டத்தின் சுய சொரிதல்களை திருப்திப்படுத்தும் நோக்கில் நேர்மையற்று, பரந்த பார்வையற்று, பரிசீலனையற்று, முன்முடிவில் தேங்கி, அந்த முன்முடிவுகளுக்கு ஏற்ப வளைத்து வெளித்தள்ளப்படும் குப்பைகள். ஆனால் தம்பி குலாமின் மேற்கண்ட இடுகை இதே வார்ப்புகளில் வந்ததுதான் என்றாலும், கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் தலைப்பில் நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக வந்திருப்பதால் அதற்கு மறுப்பளிப்பது அவசியமாகிறது. அந்த நோக்கில் விளைந்தது தான் இந்தக் கட்டுரை.

 

முதலில் அந்த விவாதத்தின் தொகுப்பை மிகச் சுருக்கமாக பார்த்து விடுவோம். அறிவியல் ரீதியான சான்றுகள், வரலாற்று ரீதியான சான்றுகள், சமூக ரீதியான சான்றுகள் என மூன்று அடிப்படைகளின் மேல் நின்று கடவுள் என்ற ஒன்று இல்லை, இருக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்திருந்தேன். மறுபக்கம் தம்பி குலாமோ அறிவியலால் கடவுளை அளக்க முடியாது, இந்த உலகில் கடவுளின் வெளிப்பாடு எந்த வகையிலும் இருக்காது. எனவே, இவற்றுக்கு வெளியில் தான் கடவுளை உறுதிப்படுத்த முடியும் என்றார். அவ்வாறான உறுதிப்படுத்தல்களாக சில கேள்விகளையும் முன்வைத்தார். தம்பி முன்வைத்த அத்தனை கேள்விகளையும் அவை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தாது என்பதையும், ஆத்திகர்கள் முன்வைக்கும் இது போன்ற எதிர்நிலைக் கேள்விகள் அனைத்தும் அறிவியலின் நிகழ்கால எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்பதையும், கடவுளின் இருத்தலோடு தொடர்பற்று இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினேன். இதன் தொடர்ச்சிக்கு தம்பி குலாமிடம் பதிலில்லை. மட்டுமல்லாது கடவுளின் இருப்பை நேரடியாக உறுதி செய்ய முடியாது என்றால் புறநிலைக் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் செய்யுங்கள் என்று தம்பி குலாமுக்கு சில கேள்விகளை எழுப்பினேன். பலமுறை வலியுறுத்தியும் பதிலளிக்க முன்வராத அவர் கடைசியில் வேறு வழியின்றி பதில் எனும் போர்வையில் சில சமாளித்தல்களை செய்திருந்தார். அவை எந்த அடிப்படையில் சமாளித்தல்களாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினேன். இவைகளுக்கு நேர்மையாக பதில் கூற மறுக்கும் தம்பி குலாம் தன்னுடைய நம்ப்பிக்கையை வேறு வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது கடவுள் மறுப்புக்கு எந்த சான்றையும் அளிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

விவாதக் கேள்வி பதில்களுக்கு அப்பாற்பட்டு தம்பி குலாம் மீதான விமர்சனங்களாக பொய் சொல்கிறார், கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார், கூறப்பட்ட விளக்கங்களை பரிசீலிக்க மறுக்கிறார் என்றெல்லம் விமர்சனம் செய்தேன். செய்யப்பட்ட இந்த விஅர்சனங்களுக்கு எந்தவித மறுப்பையோ, விள்க்கத்தையோ தம்பி குலாம் கூறவில்லை. மாறாக நான் புலம்புகிறேன் என்றும், சந்தர்ப்பவாதமாக கூறுகிறேன் என்றும் என் மீது விமர்சனங்களை வைத்தார். தம்பி குலாம் மௌனமாக இருந்தது போல நானும் இருக்க முடியாதே. அதனால், நான் கூறியவை எந்த விதத்தில் புலம்பல்களாக இருக்கின்றன, சந்தர்ப்பவாதமாக இருக்கின்றன என்பதை விளக்குங்கள் என்று கேட்டேன். கடைசி வரை பதில் கூறவே இல்லை. எனவே, கடவுள் இருப்புக்கு எந்தவித சான்றுகளையும் வைக்காததாலும், கடவுள் மறுப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்காததாலும் கடவுள் என்பது மனிதர்களின் நம்பிக்கை தானேயன்றி, உறுதியாக நிலவுவதல்ல என விவாதம் முடிவுக்கு வந்தது.

 

இப்படி இருக்கும் நிலையில் தான் மேற்கண்ட கட்டுரையை வழக்காமன திருகல்களுடன் புதிதாக பதிவேற்றியிருக்கிறார். எனவே, மீண்டும் கடைசியாக மீண்டும் ஒருமுறை அந்த திருகல்களுக்கு ‘டிங்கரிங்’ செய்து விடலாம்.

 

அந்தக் கட்டுரையில் தம்பி குலாம் கூறியிருப்பது என்ன? 1. கடவுள் இருப்பு நம்பிக்கை எனும் வகையில் கடவுள் மறுப்புக்கே அதிக சான்றுகள் தரவேண்டும். 2. கடவுளை எப்படி ஏற்க வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன, அந்த முறைகளல்லாது வேறு முறைகளில் கடவுளை ஏற்க முடியாது. 3. கடவுளை மனிதன் அறிவதற்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இரண்டாவதான புறக் கேள்விகள் மூலம் தான் அறிய முடியும். ஏனென்றால் கடவுள் உலகில் தோன்றவே மாட்டார். 4. கடவுளை மறுப்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை. 5. கடவுளின் தகுதிகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ அவைகளை வைத்தே கடவுளை மறுக்கக் கூடாது. 6. கடவுளுக்கு அறிவியல் எந்த வரையறையையும் ஏற்படுத்தவில்லை. 7. மறுப்பவர்கள் கூறும் கடவுள் எது? அல்லது எப்படி இருந்தால் கடவுளை ஏற்றுக் கொள்வீர்கள்? 8. கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் எந்த சான்றையும் அளிக்கவில்லை. 9. பல கேள்விகளுக்கு அறிவியல் புரிரையே பதிலாக கொண்டிருக்கிறது. 10. கடவுள் ஏற்பாளர்கள் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பளர்கள் விரல் நுனியில் பதில் வைத்திருக்க வேண்டும். இந்த பத்து அம்சங்களில் எதிலாவது கடவுளை ஏற்பதற்கான சான்றுகள் இவைதான் என அடையாளம் கட்டப்பட்டுள்ளதா? இல்லை. என்றால் தெளிவாக தெரிவது ஒன்று தான் கடவுள் என்பது மனிதனின் கற்பனைகளில் உலவும் ஒன்று என்பது தான்.

 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். தம்பி குலாம் கடவுளின் இலக்கணங்கள் என்று சிலவற்றை தந்திருக்கிறாரே அவை இஸ்லாமிய மதக் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும், ஏனைய மதக் கடவுளுக்கு பொருந்தாது. தம்பி குலாம் கூறுவது போலவே கடவுள் எந்த விதத்திலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்த மாட்டார் என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டே தொடர்வோம். ஏதாவ்து ஒரு வழியில் கட்வுள் தன்னை மனிதனுக்கு உணர்த்திக் கொள்ள வேண்டுமல்லவா? அந்த வழிகள் என்ன? எந்தெந்த வழிகளில் கடவுள் மனிதர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்? இதற்குத்தான் தம்பி குலாம்போன்ற மதவாதிகள் பேரண்டத்தைப் படைத்தது யார்? அதை இயக்குவது யார்? மழையை அனுப்பியது யார்? அதை கட்டுப்படுத்த முடியுமா? பிறக்கும் இறக்கும் நேரத்தைக் கூற முடியுமா? போன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்? இந்த இட்த்தில் தான் மதவாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் தான் படைத்து இயக்குகிறார், எல்லா நேரமும் கடவுளுக்குத் தான் தெரியும் என்பதெல்லாம் ஆத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நாத்திகர்களுக்கு இருக்க முடியுமா? எனவே கடவுள் தான் படைத்து இயக்குகிறார் என்பதற்கும், கடவுளுக்குத்தான் அனைத்து நேரமும் தெரியும் என்பதற்கு ஏதாவது சான்று காட்ட வேண்டும். எந்த ஆத்திகவாதியோ, மதவாதியோ இப்படி ஏதாவது சான்றுகள் காட்டியிருக்கிறார்களா? அக அவர்கள் கூறுவது என்ன? கடவுள் எந்த வழியிலும் தென்படவும் மாட்டார். அதேநேரம் அவர் படைத்தவைகளையும் அவர்தான் படைத்தார் என உறுதிப்படுத்தவும் முடியாது. இதை ஈடுகட்டத்தான் கடவுள் படைக்கவில்லை என்றால் மனிதனா படைத்தான் அறிவியலா இயக்குகிறது என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த நாத்திகவாதியாவது இப்பேரண்டத்தைப் படைத்தது மனிதன் தான் என்றோ, பேரண்டத்தின் இயக்கவிதிகளை அறிவியல் கட்டுப்படுத்த வல்லது என்றோ கூறியிருக்கிறானா? ஆக நாத்திகர்கள் யாரும் கூறாத ஒன்றை அவர்கள் கூறுவது போல் பவித்துக் கொண்டு எதிர்க் கேள்வியை எழுப்பி ஆத்திகர்களின் நம்பிக்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்கிறார்கள். இது தான் தம்பி குலாம் போன்றவர்கள் கூறும் ஏதாவது வழியில் உணர்த்துவது என்பதின் லட்சணம்.

 

இது போன்ற கேள்விகளை கேட்பதைக் கொண்டு தான் விரல் நுனியில் பதிலை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் தம்பி குலாம். யாரிட்ம் பதில் இல்லை? விரல் நுனியில் பதில் கூறியிருக்கிறேன். இன்னும் எத்தனை கேள்விகளை அள்ளிவந்தாலும் அவ்வாறே பதில் கூற முடியும். ஆனால் தற்செயல் என்று கூறக்கூடாது, எதிர்காலம் சார்ந்து பதிலைக் கூறக்கூடாது என்று நிபந்தனைகளை விதிப்பது யார்? இதை எடுத்துக்காட்டுடன் கூறினால் தான் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இப்பேரண்டம் ஏன் உருவானது? எனும் கேள்வியோடு பார்ப்போம். பெருவெடிப்பு என்பது ஓர் அறிவியல் யூகம் தான். அது அப்படித்தான் நடந்தது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் ஏன் உருவானது என்பதை ஆராய முடியும் இப்போது முடியாது. அண்ட வெளியின் பருப்பொருட்களை யார் இயக்குவது? என்றால் அது எந்த ஆற்றலாலும் முன்திட்டமிட்டு இயக்கப்படுவதல்ல. அவைகளின் இயக்கமும் தோற்றமும் தற்செயலானவை என்று பதில் கூறியதற்குத்தான் தற்செயல் என்றோ, எதிர்காலம் சார்ந்தோ பதில் கூறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் தம்பி குலாம். ஆனால் தன்னுடைய வசதிக்காக மறந்து விட்ட இரண்டு அம்சங்கள் அதில் இருக்கிறது. அவை என்னவென்றால் 1. நிகழ்கால அறிவியல் எல்லைகளை மீறி கேட்கப்படும் பதில்களுக்கு எதிர்காலத்தில் தான் பதில் கூற முடியும். 2. அறிவியல் ரீதியாக இது தான் சரியான, மெய்யான பதில். கூறப்படும் பதில் சரியான பதிலா அறிவியல் ரீதியான பதிலா எனும் அம்சங்களெல்லாம் மதவாதிகளுக்கு தேவையில்லை. இந்த மாதிரியெல்லாம் பதில் கூறினால் கடவுளை எங்களால் தூக்கிப் பிடிக்க முடியாது எனவே, அப்படி பதில் சொல்லாதீர்கள், இப்படி பதில் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக பிரிதொரு இடத்தில் பதிலே கூறவில்லை என்று கதையளப்பார்கள்.

 

கடவுள் மறுப்புக்கு வருவோம். காரணமே இல்லாமல் கடவுள் மறுப்பு கூறப்படுகிறதா? கடவுள் இருப்பு வாதங்களை மறுப்பதால் மட்டுமே கடவுள் மறுப்பு முன்வைக்கப்படுகிறதா? இரண்டுமே ஆற்றாமையால் கூறப்படும் அற்பவாதங்கள். கடவுள் இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்களை நான் முன்வைத்திருக்கிறேன்.

 

அறிவியல் ரீதியான காரணங்கள்:

1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

 

வரலாற்றுரீதியான காரணங்கள்:

1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

 

சமூக ரீதியான காரணங்கள்:

1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

 

கடவுள் மறுப்புக்கு இவைகளெல்லாம் தூலமான காரணங்கள் இல்லையா? கடவுள் இருப்பு வாதங்களின் பதிலாக முன்வைக்கப்பட்டவைகளா இவை? எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ’கொய்த பழம் கொய்யாப் பழம் என்றால் எய்த அம்பு எய்யா அம்பு’ எனும் சொலவடைக் கேற்ப கூறப்படும் அங்கலாய்ப்புகள் அவ்வளவு தான்.

 

அடுத்து தம்பி குலாம் என்ன சொல்கிறார்? கடவுள் வாழும் உலகில் மனிதனுக்கு எந்தவிதத்திலும் தன்னை வெளிப்படுத்த மாட்டார். இதை ஏற்றால் தான் கடவுள் ஏற்பு. எனவே கடவுள் மறுப்பும் இதை ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்கிறார். இது அறிவுக்கு உகந்ததல்ல என்றாலும், வாதத்துக்காக அதை ஒப்புக் கொள்வோம். நாம் கேட்பது என்ன? இவ்வாறு எதுவும் இல்லாத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள்? என்பது தான். இந்தக் கேள்வி எழுப்பும் விசயத்திற்கும் வாதத்துக்காக ஏற்கும் அம்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒன்றுமில்லை. சரி அறிவியல் ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.  எந்த விதத்திலும் கடவுள் தன்னை வெளிக்காட்டமாட்டார் என்பதிலா அந்தக் காரணங்கள் அமைந்திருக்கின்றன? அல்ல. கடவுளுக்கு என்னென்ன தகுதிகளைக் கூறுகிறார்களோ அந்த தகுதிகளையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்தக் காரணங்கள். கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா? கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, தொடக்கமும் முடிவும் அற்ற எதுவும் இல்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா? கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எந்த ஒன்றை சாராமலும் எந்த ஒன்றுக்கும் சார்பை பெறாமலும் தனித்தது என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல் இதை மறுக்க முடியுமா? இப்படிக் கேட்டால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார் என்று தோசையை திருப்பி போடுகிறார் தம்பி குலாம். 

 

வரலாற்று ரீதியான காரணங்களைப் பார்ப்போம். ஆதிமனிதர்கள் வாழ்வில் தற்போது கற்பிக்கப்படும் விதத்தோடு பொருந்தத்தக்க கடவுள் என்ற ஒன்று இல்லை. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா? இதற்கு என்ன பதில் தம்பி குலாம் கூறுவாரா? புவியில் மனிதன் மட்டுமல்லவே பல்கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் கடவுள் எனும் உணர்வு இல்லையே. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா, இதற்கு என்ன பதில்? தம்பி குலாம் கூறுவாரா

 

சமூக ரீதியான காரணங்களைப் பார்ப்போம். இதில் முதல் காரணம் மனிதர்களைப் படைத்தது சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் என்பதோடு உரசுகிறது என்பதால் அதை விட்டு விடுவோம். மனிதன் கேட்டு கடவுள் நிறைவேற்றிய சோதித்தறியத் தக்க ஏதேனும் சான்று இதுவரை ஒன்றுமில்லையே எப்படி? இது என்ன தம்பி குலாம் கூறுவது போல கடவுளின் வருகையோடும் தகுதியோடும் மோதுகிறதா? இல்லையே பின் பதில் கூறுவதில் தம்பிக்கு ஏன் தயக்கம்?

 

இவ்வளவு காரணங்களும் இருக்கும் நிலையில் கடவுள் குறித்து நாம் கூறுவது என்ன? அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. கடவுளின் துணைநிலைகளும் இப்படியான எந்த தடயங்களும் இல்லாதிருக்கின்றன. அதுமட்டுமன்றி, துணை நிலைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் போதும் அந்த இயங்கு விசைகள் கண்டறியப்பட முடியாததாக இருக்கிறது. மட்டுமல்லாது எக்காலத்திலும் அதைக் கண்டறிய முடியாது என ஆத்திகர்கள் கூறுகிறார்கள். எனவே தான் நான் கடவுள் இல்லை என மறுக்கிறேன். இது சான்றாதாரங்களின் அடிப்படையிலான என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம் எதிர்காலத்தில் கடவுள் குறித்தோ, அதன் துணை நிலைகள் குறித்தோ ஏதேனும் சின்னஞ்சிறு தடயம் கிடைத்தாலும் கூட என்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறேன். இது சாத்தியங்களின் அடிப்படையிலான என்னுடைய நேர்மை. மறு பக்கம் ஆதாரங்களோ சான்றுகளோ எதுமற்ற நிலையிலும் கூட பேரண்டத்தை படைத்துவிட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாதிருக்கும் கடவுள் என்றால் அதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன். இது உலகின் கோடிக்கணக்கான மக்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் எழுந்த என்னுடைய பரிசீலனை.

 

மறுபக்கம் தம்பி குலாம் போன்ற ஆத்திகர்களிள் கடவுள் குறித்து கொண்டிருக்கும் கருத்து என்ன? கடவுள் என்பதற்கு எந்த விதத்திலும், எந்த அடிப்படையிலும் எக்காலத்திலும் எந்த ஏற்புச் சான்றுகளும் தர இயலாது, ஆனாலும் கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். அதனால் நீங்களும் நம்புங்கள். இது எப்படி இருக்கிறது? கேட்பவன் கேணையனாக இருந்தால் எருமை ஏரோப்ளேன் ஓட்டும் என்பார்களே அது போன்று இல்லையா?

 

அறிவியலின் தகுதி குறித்துப் பேசுகிறார் தம்பி குலாம். தான் ஓர் உள அறிவியல் துறை மாணவன் எனக் கூறும் தம்பிக்கு அறிவியல் குறித்து பேசும் தகுதி இருக்கிறதா? அறிவியல் குறித்து தம்பி குலாம் அவிழ்த்து விட்ட சில முத்துகளைப் பார்ப்போம்.

 

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே

துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி

சொல்லி இருக்க வேண்டும் .. .. .. தற்செயல் என்று ஒன்று அறிவியல் இல்லவே இல்லை

.. .. .. அண்ட வெளியில் நடைபெற்ற, நடைபெரும் மோதல்களும், நிகழ்வுகளும் அறிவியலால் தான் நிகழ்ந்தது என்பதற்கு சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும்

.. .. .. பெருவெடிப்பு நிகழவில்லையென்றால் ஒட்டுமொத்த அறிவியலும் அர்த்தமற்றதாகி விடும்

.. .. .. அறிவிலை கொண்டு தான் ஒருவர் மீதான பாசமும், அன்பும் கொள்வது சாத்தியமென்றால் பல நேரங்களில் ஒருவரின் பாசமும், அன்பும் பொய்த்துவிடுகின்றன… இவ்விடத்தில் அறிவியல் எப்படி செயலற்று போனது .. .. .. உங்கள் சொல்லில் உண்மையாளராக இருந்தால் அண்டவெளி இயக்கத்தை எந்த அறிவியல் இயக்கி கொண்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் பட்டியலிடுங்கள்///

 

இவைகளெல்லாம் அறிவியல் குறித்து தம்பி குலாம் உதிர்த்த முத்துகளில் சில. அறிவியல் என்பதை தன் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தும் நெளித்தும் திருகல்களுடனும் எப்படியெல்லாம் கூறினால் அது கடவுளை சார்ந்திருக்கும்படி வருமோ அப்படியெல்லாம் கூறுகிறார் தம்பி குலாம். சுருங்கச் சொன்னால் அறிவியல் என்று தம்பி குலாம் கூறியிருப்பதெல்லாம் அறிவியலல்ல. இதை தெளிவாகவும் துல்லியமாகவும் விவாதத்தில் விளக்கியிருக்கிறேன்.

 

\\\அறிவியல், அறிவியலின் மூலம் பெறப்பட்ட முடிவு, மனிதனின் அறிவு இந்த மூன்று தனித்தனியான விசயங்களை ஒன்றாக கலந்து குழப்பி வைத்துக் கொண்டு அதைத்தான் அறிவியல் என்று கூறிக் கொண்டிருக்கிறார் நண்பர் குலாம். அறிவியல் என்பது தேடும் முறை. சான்றுகள் இல்லாத எதையும் அறிவியல் ஏற்பதில்லை. சான்றுகள் இல்லாமல் எதையும் ஏற்காத தேடும் முறையான அறிவியலைக் கொண்டு தான் இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு ஆற்றலையும் நாம் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்///

 

இன்னொரு அம்சத்தையும் கவனிக்கலாம். கடவுளுக்கு அறிவியல் வரையறை ஏற்படுத்தி இருக்கிறதா என்பதை எத்தனை முறை பதில் சொன்ன போதிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அறிவியல் எதற்கெல்லாம் வரையறை தந்திருக்கிறதோ அதையெல்லாம் அறிவியல் கண்டடைந்திருக்கிறது என்பது பொருள். அறிவியல் கண்டடையாத ஒரு பொருளுக்கு எந்த வரையறையும் தர முடியாது. அந்த வகையில் கடவுளுக்கு அறிவியல் ரீதியில் எந்த வரையறையும் இருக்க முடியாது. ஆனால் தம்பி குலாமோ நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுளுக்கு அறிவியல் வரையறை உண்டா? என்று கேட்பதில் அலாதி ஆர்வமுள்ளவர், அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்பதை உணராமலேயே. ஒரு கையால் கடவுளை பிடித்து தூக்கிக் காட்டி இதோ பாருங்கள் இது தான் கடவுள் (கடவுளுக்கான வரையறை) இந்தக் கடவுளைத்தான் நாங்கள் மறுத்துக் கொண்டிருக்கிறோம் என கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். எவ்வளவு விளக்கினாலும் புரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கும் தம்பி குலாமுக்கு கடைசியாகவு ஒருமுறை விளக்கி விடுவோம். இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் செய்யலாம், ஒரு இரும்புத் துண்டும் அருகில் ஒரு கண்ணாடித் துண்டும் இருக்கிறது என்று கொள்வோம். இதில் இரண்டு விதத்தில் நாம் தர்க்கம் நிகர்த்தலாம். ஒன்று இரும்பு கண்ணாடியை உடைக்கும் வல்லமை கொண்டதா இல்லையா? என்பது, இரண்டு இரும்பு எனும் பொருள் இருக்கிறதா இல்லையா? என்பது. இதில் இரும்பு என்பதை கடவுளுக்கு உவமையாக கூறியுள்ளேன். இரும்பு தூலமாக உலகில் இருக்கிறது, கடவுள் தூலமாக இல்லை என்பது தான் வேறுபாடு. இங்கு முதல் விவாதத்தில் நாம் ஈடுபடுகின்றோம் என்றால் அதன் பொருள் இரும்பு இருக்கிறது என்பதை இரண்டு தரப்பு ஒப்புக் கொண்டு அதற்கு கண்ணாடியை உடைக்கும் வல்லமை இருக்கிறதா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு. ஆனால் இரண்டாம் விவாதத்தில் இரும்பு இருக்கிறது என்பதை ஒரு தரப்பு ஏற்றுக் கொள்கிறது மறுதரப்பு மறுக்கிறது. இந்த இரண்டுவிதமான நிலையில் இரும்புக்கான அறிவியல் ரீதியான வரைவிலக்கணம் என்றால் முதல் நிலையில் மட்டுமே சாத்தியம். ஏனென்றால் முதல் நிலையில் இரும்பின் இருப்பில் ஐயம் ஒன்றுமில்லை அதன் வல்லமையில் மட்டுமே பிரச்சனை. ஆனால் இரண்டாம் நிலையிலோ இருப்பே ஐயமாக இருக்கிறது. இருப்பே ஐயமாக இருக்கும் நிலையில்; இருக்கிறது எனும் தரப்பு இல்லை எனும் தரப்பை நோக்கி நீங்கள் இல்லை எனும் பொருளுக்கு அறிவியல் வரைவிலக்கணம் தாருங்கள் என்று கேட்டால் .. .. ? இது தான் பிரச்சனை. கடவுளின் வல்லமையை மட்டும் நாம் மறுக்கவில்லை. கடவுளையே இல்லையென மறுக்கிறோம். இதை தெளிவாக உணராத வரை அந்தக் கேள்வியிலுள்ள அபத்தத்தை தம்பி குலாமால் உணர்ந்து கொள்ள முடியாது.

 

கடவுளை ஏற்பவர்கள் அதற்கு நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் காரணமாக காட்ட முடியாது, முடியவில்லை என்பதே இதுவரையான யதார்த்தம். மாறாக கடவுள் இல்லை என்பவர்கலோ காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக வேறு சிலவற்றையும் காண வேண்டியதிருக்கிறது. கடவுளின் தகுதிகள் என்பதென்ன? ஆதி மனிதர்களிடம் கடவுள் எனும் பேறாற்றல் இல்லை. ஆனால் பின்னர் அது மக்களிடையே தோன்றுகிறது. திடீரென கடவுள் உருக் கொள்ள முடியுமா? அப்படி ஓரிரவில் கடவுள் உருவாகிவிடவும் இல்லை. படிப்படியாக மக்களிடம் நிலவிய நம்பிக்கைகள், பயங்கள், இறந்த பிற்கு என்ன நேர்கிறது எனும் அறியாமை போன்ற அனைத்தும் ஒன்று திரண்டு மெல்ல மெல்லவே கடவுள் உருவாகிறார். தற்போது உலகில் நிலவும் அத்தனை கடவுளர்களுக்கும் அதைக் கூறியவர்கள் என்று திட்டமாக சிலர் இருக்கிறார்கள். அவ்வாறு கடவுளைக் கூறிவர்கள் தாம் கடவுளுக்கான தகுதிகளையும் வகுத்திருக்கிறார்கள். அந்த தகுதிகளும் கூட காலத்தால் திருத்தியமைக்கப்பட்டே வந்திருக்கின்றன. தம்பி குலாம் போன்ற மதவாதிகள் அவ்வாறான தகுதிகளில் தான் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அதாவது கடவுளுக்கு என்னென்ன தகுதிகள் கூறப்படுகிறதோ அவைகளை கேள்வி கணக்கின்றி ஏற்பது தான் கடவுள் ஏற்பு, எனவே அதற்கு உட்பட்டே தான் கடவுள் மறுப்பைக் கூற வேண்டும் என்பதன் பொருள் அது தான். இது அறிவார்த்த ரீதியாக தவறு. ஒரு நிலையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோமென்றால் அதன் அனைத்து அம்சங்களையும், அதன் அனைத்து கோணங்களையும் ஆராய வேண்டும். அப்போது தான் சரியான முடிவுக்கு வர முடியும். ஆனால் மதவாதிகளோ புனிதம் கற்பிப்பதன் மூலம் மறைத்து வைக்கிறார்கள். சரி, அந்த தகுதிகள் எந்த கண்ணோட்டத்துடன் இருக்கின்றன? வரலாற்று காலம் தொடங்கி கடவுளை எதிர்த்து கேட்கப்பட்ட கேள்விகளின் தாக்கத்தில், அந்த கேள்விகளை எதிர் கொள்ளும் இயலாமையிலிருந்து தப்பிக்கும் கண்ணோட்டத்திலிருந்தே கடவுளுக்கான தகுதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கடவுளைக் காட்டு என்றால் காட்ட முடியாது எனவே கடவுள் இந்த உலகில் தோன்ற மாட்டார். கடவுள் எங்கிருக்கிறார் என்றால் கூற முடியாது எனவே கடவுள் அண்ட சராசரங்களை கடந்து சஞ்சரிப்பவர். கடவுளைப் பெற்றவர் யார் வாரிசுகள் உண்டா அவர்களின் தன்மைகள் எப்படி என்றால் பிரச்சனைகள் ஏற்படும் எனவே பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை. இப்படி கூறிக் கொண்டே போகலாம். ஆக கடவுளின் தகுதிகள் என்பது கடவுளை வெற்றிகரமாக யதார்த்தத்திலிருந்து மறைக்கும் உத்திகள்.

 

கடவுளோ கடவுளோடு தொடர்புடையவைகளோ மனிதர்களுடன் தொடர்பு கொண்டவைகளே, மனிதத் தீண்டலின்றி சுயமான கடவுட் தாக்கம் என்று எதுவுமில்லை, அவ்வாறாக உலவும் கதைகளெல்லாம் எந்தவிதமான சான்றுகளுமின்றி தனிமைப்பட்டு நிற்கின்றன. இதை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

 

எந்த ஒன்றை ஆராய்வதாக இருந்தாலும் அதற்கு இருக்கும் கருவிகள் அறிவியல் முறையில் உரசிப்பார்ப்பதும், வரலாற்று அறிவும் தான். ஆசான் ஏங்கல்ஸ் கூறுகிறார், “அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப் படாத எதும் இற்று வீழ்ந்துவிடும்” அறிவியலோடு உரசிப்பார்க்காத வரையில் தான் கடவுளுக்கு உயிர் வாழும் சாத்தியம் இருக்கும். அறிவியலோடு உரசிப் பார்க்கத் தொடங்கி விட்டால் கடவுளுக்கு சீழ் பிடிக்கத் தொடங்கும். இன்றைய சுரண்டல் சமூக அமைப்பு தன்னுடைய தேவைகளின் நிமித்தம் கடவுளை தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. அந்த அடிப்படையிலும் கடவுள் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுரண்டல் அமைப்பு மக்களால் வீழ்த்தப்படும் போது கடவுளும் வீழ்த்தப்படும். இதில் ஐயம் ஒன்றுமில்லை.

கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? விவாதம்

20 நவ்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

மீண்டும் பதிவர் குலாமுடன் விவாதம். இந்த முறை சற்று சீரிய கட்டுடன் இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கான அடித்தளம் குறித்து அறிய விரும்புவோர் அவருடைய கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல் எனும் பதிவின் பின்னூட்டங்களைப் பார்வையிடுங்கள்

இந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக இவ்விவாதத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் முதன்மையான சில கூறுகளைப் பற்றிய தெளிவுகள் தேவைப்படுகின்றன.

அறிவியல் என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல். மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல். அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள். இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.

மனிதனின் அறிதல் என்றால் என்ன?

மனிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான். தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது. பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல. அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.

கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?

மனிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான். எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில் ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்? மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ எனும் கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

இனி நண்பர் குலாமின் கட்டுரைக்குள் பயணிக்கலாம். அந்தக் கட்டுரையில் சாராம்சமாக அவர் கூறியிருப்பது என்ன? அறிவியல் தன்னளிவில் முழுமையடையாத ஒன்று. அறிவியல் இன்னும் விடையளிக்காத வினாக்கள் இருக்கின்றன. எனவே குறைபாடுடைய அந்த அறிவியலைக் கொண்டு கடவுளை அளக்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது, கூடாது. நண்பரின் கருத்து தவறானது என்பதை அவரின் வாதங்களினூடாவே பார்ப்போம்.

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும்/// நண்பர் குலாம் ஒரு ஆத்திகர் என்பதால் அவரளவில் அவர் கடவுளை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் ஒரு மனிதர் எனும் அடிப்படையில் இதுவரை ஏராளமான விசயங்களை தன் வாழ்வில் உறுதிப்படுத்தியிருப்பார். தயவு செய்து அப்படியான உறுதிப்படுத்தல்களில் அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்தியவற்றை குறைந்தது ஒரு பத்து விசயங்களையாவது அவர் பட்டியலிட வேண்டும் எனக் கோருகிறேன். முடியாது. ஒன்றைக்கூட அவரால் கூற முடியாது. ஆக அனைத்தையும் முழுமைப்படுத்திச் சொல்லாத அறிவியலை மட்டுமே துணைக்கழைத்துக் கொண்டுதான் தன் வாழ்வின் அத்தனை உறுதிப்படுத்தல்களையும் செய்திருக்கிறார். ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் அவருக்கு அறிவியலில் போதாமை வந்துவிடுகிறது. இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் வாழ்வின் மெய்யான விசயங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பேதம் இருக்கிறது.

அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஒரு குண்டூசி உடலில் குத்தினால் ஏன் வலிக்கிறது என்பது தொடங்கி இப்பேரண்டத்தின் கோள்களின் இயக்கம் வரை அனைத்தையும் கண்டறிந்து முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. எதை முழுமைப்படுத்தாமல் குறையுடன் விட்டு வைத்திருக்கிறது? இந்த இடத்தில் நாம் ஒரு புரிதலுக்கு வந்தாக வேண்டும். அறிவியல் குறைபாடுடையது என்று ஆத்திகர்கள் என்ன நோக்கில் கூறுகிறார்கள்? அதற்கு என்ன சான்றுகள் தருகிறார்கள்? என்பதை நுணுகிப் பார்க்க வேண்டும். அறிவியல் இன்னும் கடக்காத எல்லை இருக்கிறதா? என்றால், ஆம் இருக்கிறது. எடுத்துக் காட்டாக பெருவெடிப்புக் கொள்கைக்கு முன்னர் நடந்த மாற்றங்கள் என்ன? என்று கேட்டால் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதே பதில். ஆனால் ஆத்திகர்கள் அறிவியலின் இந்த தொடர்ந்து தேடும் தன்மையை சுட்டிக்காட்டி அறிவியல் குறைபாடுடையது என்று கூறுகிறார்கள். இதோ நண்பர் குலாம் இதற்கு பயன்படுத்தியிருக்கும் வாசகங்களை கவனித்துப் பாருங்கள். \\\ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும்.. .. ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு.. .. அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது/// கடவுளை அதை நம்பாதவர்களும் கூட அதன் இயல்புகளை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று கோரும் நண்பர் குலாம். அறிவியலுக்கு மட்டும் அதன் இயல்புகளை தூக்கிக் கடாசி விட்டது ஏன்? அறிவியல் என்பது ஒரு தேடல். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஒரு விசயத்தில் குறைபாடுடையது என ஒன்றை கூற வேண்டுமாயின் அந்த விசயத்தின் அதன் இயலாமை வெளிப்பட்டிருக்க வேண்டும். அறிவியல் எந்த விசயத்திலாவது இப்படி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அல்லது அறிவியலால் முடியாதவைகள் என்பதற்கு பட்டியல் ஏதும் குலாம் வைத்திருக்கிறாரா? அறிவியலின் இந்த எட்டப்படாத உயரம், தொடர்ந்து பயணப்படும் தன்மைகள் குறித்து குலாம் அறியாதவராக இருக்க முடியாது. என்றால் ஏன் அறிவியலை குறைபாடுடையது என காட்ட முயற்சிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுளை மெய்ப்பிக்க அதைத்தவிர வேறு வழி இல்லை. நண்பர் குலாமுக்கு மட்டுமல்ல எல்லா மதவாதிகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து நண்பர் குலாம் பொருத்தமான ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார். \\\எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்/// சரிதான். இதை யாரும் மறுக்கப் போவதில்லை. தெளிவாகச் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நண்பர் குலாம் இதை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதத்தை நான் இரண்டு விதங்களில் நேர்கொள்கிறேன்.

1. கடவுள் உறுதியானவர், அவர் நிலைத்திருந்து காரியமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதைத்தான் நாத்திகர்கள் எதிர்க்கிறார்கள். அது ஒரு கருத்து, ஆத்திகர்களின் நம்பிக்கை என்றால் யாரும் அதில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த விவாதத்தின் தலைப்பு கூட வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? என்றுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது ஒரு நம்பிக்கை என்றால் அதில் எந்த உரசலுக்கும் இடமில்லை. இப்போது குலாம் கூறுவதைப் பாருங்கள், அவர் எந்த விதத்திலிருந்து இதை அணுகுகிறார்? கடவுள் உறுதியாக நிலவுகிறது எனும் அடிப்படையிலிருந்தே மேற்கண்ட வாதத்தை அவர் வைக்கிறார். துல்லியமாகக் கூறினால், அது நம்பிக்கையா? மெய்யான இருப்பா? என்பது தான் இங்கு விவாதமாகியிருக்கிறதேயன்றி கடவுளல்ல. இதை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

2. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதம் ஒரு பாதி தான். “எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிரூபணம் தரவில்லையோ அது இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அது குறித்த தகவல்களோ, வாய்ப்புகளோ உறுதி செய்யப்படாதவரை அது உறுதியாக இருக்கிறது என கூறவியலாது என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்” என்பது தான் அந்த மறுபாதி. இதற்கு குலாம் என்ன பதில் கூறுவார்?

அடுத்து குலாம் எழுப்பியிருக்கும் ஒன்று ‘அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் கடவுள்’ என்பது. முதலில் ஒரு விசயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள் என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான் கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக் கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான். நண்பர் குலாம் கடவுள் மறுப்பு குறித்து தவறான புரிதலோடு இருக்கிறார். கடவுளின் தகுதிகளாக, வல்லமைகளாக ஆத்திகர்கள் கூறுகிறவைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் எனும் கருத்தை மட்டும் மறுப்பது தான் கடவுள் மறுப்பு என்பதாக அவரின் புரிதல் இருக்கிறது. அவ்வாறல்ல, கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் தகுதிகள், வல்லமைகள் என கடவுளின் மீது ஏற்றப்பட்டிருக்கும் அத்தனை புனிதங்களோடு சேர்த்துத்தான் கடவுளை மறுக்கிறோம். அறிவியலால் அளக்கப்படுவதைவிட கடவுள் உயர்வானவர் எனவே அறிவியலில் அகப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று கூற முடியாது என்பது அபத்தமான வாதம்.

அடுத்து நண்பர் குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை/// இப்படிக் கூறுவதற்கு நிரம்பவும் அசட்டுத் துணிச்சல் வேண்டும். கண்ணெதிரே காணப்படவில்லை என்பதால் மட்டுமல்ல, 1. அறிவியல் ரீதியாகவும் 2. வரலாற்றியல் ரீதியாகவும் 3. சமூகவியல் ரீதியாகவும் கடவுள் இல்லை என்பதற்கான காரணிகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

இனி, நண்பர் குலாமின் அமெரிக்கா லாம்கு எடுத்துக்காட்டை கொள்ளலாம். இதில் அமெரிக்கா பற்றிய விளக்கங்கள் புரிதலுக்காகவும், லாம்கு வாதமாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா குறித்த விளக்கத்தில் இருக்கும் தெளிவு,லாம்கு குறித்த விளக்கத்தில் இல்லை. அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் செலவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் கண்ணால் கண்டுவிட்டு வந்துவிடலாம். ஆனால் லாம்கு?

லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? அமெரிக்கா விசயத்தில் நாடு என்பதற்கு என்னென்ன வரையறைகள் பயன்படுத்தப்பட்டனவோ அதே வரையறைகளை இங்கும் பயன்படுத்தினால் எளிதாக முடிவு கிடைத்துவிடும். லாம்கு எனும் நாடு புவிப்பரப்பில் தற்போது எங்கும் இல்லை. லாம்கியர்கள் எனும் தேசிய இனத்தை உலகில் தற்போதுள்ள எவரும் கண்டதில்லை. வேறு எந்த சான்றுகளும் கிடைக்காத நிலையில் நாம் இரண்டு முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். 1. லாம்கு என்றொரு நாடு இல்லை. 2. முன்னெப்போதோ இருந்து பின்னர் அழிவுபட்டுப் போயிருக்கலாம். இப்போது இரண்டாவது முடிவை எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கியக் குறிப்புகளோ, மரபு சார்ந்த கதையாடல்களோ அது இருந்ததாக கருதப்படும் பகுதி மக்களிடையே உலவ வேண்டும். தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த இலக்கியக் குறிப்புகளையோ, மரபுக் கதையாடல்களையோ உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் லாம்கு எனும் கருத்தாக்கம் யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது? அதற்கு தனிப்பட்ட பலன்கள் ஏதும் அவருக்கு உண்டா? அது குறித்த பின்னணிகள் ஆராய்ந்து அதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். இப்படி ஏதுவுமே கிடைக்காத பட்சத்தில் லாம்கு என்ற நாடு இல்லை, இருந்ததில்லை என்று முடிவு செய்து விடலாம்.

இது தான் அறிவியல் முறை. அதவது ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதனதற்குறிய ஆதாரங்கள் வேண்டும். குலாம் இதை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? லாம்கு குறித்த எந்த தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதைக் கூறியவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் முறை என்கிறார். அதாவது லாம்கு குறித்த எந்தத் தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் லாம்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாலும் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி புனைவான ஒரு கருத்தைக் கூறிவிட்டு \\\இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம்/// என்று துணிந்து கூறியிருக்கிறாரே நண்பர் குலாம். எப்படி இது?

இந்த லாம்குவை அப்படியே கடவுளுக்கு ஒட்டுவோம். கடவுள் என்றொருவர் உண்டு, அவருக்கு இன்னின்ன வல்லமைகளை உண்டு, அவரால் தான் எல்லாம் நடந்தது என்று ஒருவர் கூறினால், லாம்குவைப் போல கடவுள் குறித்த தகவல்களைத் தேடுவோம். எந்தத் தகவலும் எப்படியான குறிப்புகளும் கிடைக்கவில்லை என்றால் என்ன நிலை எடுப்பது? நண்பர் குலாமின் முடிவுப்படி அந்த ஒருவர் கூறியதை ஏற்ககலாம். அறிவியலின் வழியில் கிடைத்த சான்றுகளின் படி மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதால் கடவுள் இல்லை என்று முடிவுக்கு வரலாம். இரண்டில் எது சரியான முடிவு என்றால் நண்பர் குலாமின் முடிவை புறந்தள்ளுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

இதில் இன்னொரு உத்தியும் இருக்கிறது. அமெரிக்கா எனும் நாடு இருக்கிறதா இல்லையா? லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா இல்லையா? என்று நண்பர் குலாம் கேள்வி எழுப்பவில்லை. அமெரிக்கா என்றொரு நாடு இல்லை என்றால், லாம்கு என்றொரு நாடு இல்லை என்றால் என்றுதான் கேள்வியை எழுப்புகிறார். அப்போது தான் அவர் விரும்பும் முடிவை வந்தடைய முடியும். அப்போதும் கூட லாம்கு வை கடவுளோடு இணைக்கும் விசயத்தில் அவர் இடறியிருப்பதை ஊன்றிக் கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். லாம்கு என்றொரு நாடு குறித்த தகவல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் கூறுவதை ஏற்று லாம்கு இல்லை என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் கடவுள் எதிரான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். இதைத்தான் நண்பர் குலாம் கூற விருப்புகிறார். ஆனால் முடிவுகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. ஒரு விசயத்தை தெளிவாக முன்வைத்து விடலாம். இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஆய்வதற்கும் அறிவதற்கும் இருக்கும் ஒரே அளவுகோல் அறிவியல் தான். அறிவியலை விலக்கி வைத்துவிட்டு எதையும் அறிந்துவிட முடியாது.

அடுத்து குலாம் கடவுள் பற்றி கூறப்படுவது வரட்டுத் தத்துவமல்ல என்கிறார். எப்படி? \\\கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள். இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும்/// எந்த நிரூபணமும் தராமல் தாங்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அடம் பிடிப்பதே ஆத்திகர்களின் வேலையாகி விட்டது. கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார், அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள். எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

\\\கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது/// இதுவும் குலாமின் கூற்று தான், கலப்படமில்லாத சுத்தமான பொய்யான கூற்று. அறிவியலின் தொடக்கத்துற்கு முன்னர் கடவுள் எனும் ஒன்று இருக்கிறது என மனிதனால் உணரப் பட்டிருந்ததா? என்று மனிதன் நெருப்பை கண்டறிந்தானோ அன்றே அறிவியல் யுகம் தொடங்கி விட்டது. ஆனால் மனிதனின் வாழ்வில் அதற்கும் வெகு காலத்திற்குப் பின்பே கடவுள் அறிமுகமாகிறார். இது மதவாதிகளுக்கு வழக்கம் தான் அவர்களின் உளக்கிடக்கைகளை பொது உண்மைகளைப் போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கூறிக் கொண்டே செல்வது. நண்பர் குலாம் அவரது கூற்றில் உண்மையுள்ளவராக இருந்தால் இதற்கு சான்றுகள் தரட்டும்.

இனி நண்பர் குலாமின் கேள்விகளின் பக்கம் முகம் திருப்பலாம். பொதுவாக மதவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம் என்ன? எனும் கேள்வியால் துளைக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை யாரும் பதில் கூறியதில்லை. அப்படியான பதில் கூறும் முயற்சிகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒது ஒரே விதமாக தோற்றமளிப்பதைக் காணலாம். அவை அனைத்தும் கேள்விகளின் விளக்கங்களாகவே இருக்கும். ஒருபோதும் அவை பதில்களின் தொகுப்பாக இருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் எதிர்க் கேள்விகள் கேட்பதே கடவுளுக்கான நிரூபணம். அந்த வகையில் தான் குலாமின் இந்தக் கேள்விகளும் அடங்கும். பழைய பாட்டையில் பயணிக்கும் பசலிக் கேள்விகள்.

1. பெருவெடிப்பு ஏன் நிகழ வேண்டும்? பெருவெடிப்பு உறுதியாக நிகழ்ந்தது என்று எந்த அறிவியலாளனும் கூறவில்லை. அது ஒரு அறிவியல் யூகம். அது எப்படி நிகந்திருக்கக் கூடும் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஏன் நிகழ வேண்டும். அது ஒரு தற்செயல் நிகழ்சி. அண்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவை அனைத்தும் தற்செயல் நிகழ்ச்சிகளே. எதுவும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளல்ல. ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் என்ன வடிவத்தில் பரவும் என்பது எப்படி தற்செயலானதோ அது போன்றே பெருவெடிப்பும் தற்செயல் நிகழ்ச்சி தான். காட்டாக ஒரு கோள் ஏன் கோள வடிவில் இருக்கிறது? கோள வடிவில் இருப்பதால் தான் அது கோள். அவ்வாறின்றி வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் இருந்தால், அப்போது வேறு ஏதாவது ஒரு பெயரில் அழைத்துக் கொண்டிருப்போம். ஏன் இந்த வடிவில் இருக்கிறது கோள வடிவில் இருந்திருக்கக் கூடாது? என்று கேள்வி கேட்ட்க் கொண்டிருப்போம். அதேபோல் தான் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது என்பதும். பெருவெடிப்பு நிகழ்ந்ததால் இந்தப் பேரண்டம் உருவானது எனும் யூகம் வேறு விதமாய் இருந்திருக்கும், அவ்வளவு தான். ஏனென்றால் ஏன் நிகழ்ந்தது? ஏன் இப்படி இருக்கிறது? எனபன போன்ற ஆத்திகக் கேள்விகளெல்லாம் அறிவியலிலிருந்தோ தேடலிலிருந்தோ எழுந்ததல்ல. அது ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்திலிருந்து எழுந்தது. அவ்வாறன்றி பெருவெடிப்பு நிகழ்ந்ததற்கு திட்டமிடப்பட்ட காரணம் உண்டு என நண்பர் குலாம் நம்பினால், அந்தக் காரணத்தை அவர் விளக்கட்டும். பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம்.

2. கோள்கள் சரியாக சுற்றுகிறதே எப்படி? இது அறியாமையினால் எழுந்த கேள்வி. வான் வெளியில் கணந்தோறும் எத்தனையோ ஒழுங்கீனங்கள், மோதல்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பிறிதொரு கோளால், அஸ்ட்ராய்டால், விண்கற்களால், எறிகற்களால், வால் நட்சத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளாகாத பருப்பொருள் என்று விண்ணில் எதுவுமில்லை. சந்திரனின் மேற்பரப்பு சிறுவர்களின் பம்பரம் போல் அத்தனை காயங்களுடன் இருப்பது ஏன்? செவ்வாயின் ஒருபகுதி சற்று வீக்கத்துடன் காணப்படுவது குறுங்கோளின் மோதலால் தான் எனக் கண்டறிந்திருக்கிறார்களே. சூரியனின் பாதைக்குள் ஷூமேக்கர் லெவி வால் நட்சத்திரம் பாதை மாறி வந்து போகவில்லையா? ஏன் பூமியில் விண்கல் வந்து மோதிய பள்ளம் சைபீரியாவில் இன்னும் இருக்கிறதே. மரியானா ட்ரன்ச் பூமியிலிருந்து பிய்ந்து போனது என்று தானே அறிவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பூமியே கூட ஒருமுறை தன் துருவத்தை தலை கீழாக மாற்றியிருக்கிறது. இந்த ஒழுங்கீனங்களும் மோதல்களும் ஏன் நிகழ்கின்றன? மதவாதிகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு புளகமடைவார்கள். இதுவும் அதுதான்.

3. உயிர்கள் வாழத் தகுதியற்ற பல கோள்கள் விண்ணில் இருக்கின்றனவே, இது ஏன்? உண்மையில் இது ஆத்திகர்களை நோக்கி நாத்திகர்கள் கேட்க வேண்டிய கேள்வி. இப்பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தான் ஆத்திகர்களின் நிலை. அப்படியென்றால் இந்தக் கேள்விக்கு பதில் கூறும் பொறுப்பும் ஆத்திகர்களுக்கே, அதாவது நண்பர் குலாமுக்கே உண்டு.

4. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரணங்களை இப்போதே துல்லியமாக கணித்திருக்கிறார்களா? இது எள்ளல், அதுவும் தன் கருத்துக்கு சாதகமான பயன் கருதிய எள்ளல். போகட்டும். குழந்தை பிறக்கும் நேரத்தை மருத்துவ அறிவியல் இயற்கையாகவும், செயற்கையாகவும் வெகு தெளிவாக கணிக்கிறது. தொடக்கத்தில் மனிதன் மாதக்க்கணக்காக, பின் நாட்கணக்காக, தற்போது மணிக்கணக்காகக் கூட துல்லியமாக கூற முடிந்திருக்கிறது. பெரும்பாலான பிரசவங்களில் நிமிடக்கணக்கில் கூட இந்த துல்லியம் இருப்பதுண்டு. அறிவியல் இதை சாத்தியமாக்கி இருப்பது அனைவரும் அறிந்தது தான். மற்றொருபுறம் வினாடி துல்லியத்தில் தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் செய்பவர்களும் இருக்கிறார்கள். இது அறிவியலின் வளர்ச்சி. ஆனால் இந்தக் கேள்வியின் சாரம் இருக்கிறதே அது ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை பிறக்கும் நாளை சரியாக கணித்துக் கூற முடியுமா? என்று கேட்டார்கள், இன்று வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்கிறார்கள், நாளை மைக்ரோ வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்பார்கள், அதனிலும் பிறகு நானோ வினாடி துல்லியமாக குழந்தை பிறப்பதை கணித்துக் கூற முடியாத அறிவியல் என்ன அறிவியல் என்பார்கள்.இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கேள்வியை அல்ல, கேள்வியின் நோக்கத்தை.

5. மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இது அறிவுபூர்வமான கேள்வியா அறிவுக்கு முரணான கேள்வியா? மனிதன் ஒரு பொருள். எல்லாப் பொருளுக்கும் மூன்று பரிமாணங்கள் இருப்பதைப் போல் திட்டவட்டமாக நான்காவது பரிணாமமாகிய காலமும் இருக்கிறது. காலத்தின் ஒரு புள்ளியில் தொடங்கும் ஒரு பொருள் மற்றொரு புள்ளியில் முடிந்தே தீர வேண்டும். இது அறிவியல் விதி. இதற்கு மாறாக ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கேட்டால் அதில் அறிவியலுக்கு கொஞ்சமும் இடமில்லை. அறிவுபூர்வமான கேள்வியாக நினைத்து கேட்கப்பட்டிருந்தாலும் கூட அதில் அறிவியல் இல்லை. ஆனால் மரணத்தை மனிதன் வெற்றிகரமாக தள்ளிப் போட்டிருக்கிறான். ஆதிகாலத்தில் மனிதனின் அதிகபட்ச வாழ்நாளே முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகள் தான். தெளிவாகச் சொன்னால் முப்பதைக் கடப்பவர்கள் வெகு அரிது. ஆனால் இன்றோ எழுபதைக் கடந்து இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் கடந்த மூன்று லட்சம் ஆண்டுகளில் மனிதன் தன் வாழ்நாளை இரண்டு மடங்குக்கும் அதிகமாக மாற்றிக் காட்டியிருக்கிறான். இதை அவன் ஏதோ ஒரு ஆற்றலின் துணை பலத்தால் அல்ல, தன் சொந்தப் பலத்தில் அடைந்திருக்கிறான்.

கடைசி இரண்டு கேள்விகளிலும் பிறக்கும் மரணிக்கும் நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இரண்டுமே கணிப்புகளை கோருகின்றன. கணிப்பு என்றாலே அது எதிர்காலம் தொடர்பானது. எதிர்காலம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டால் அது முழுமையாக துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்பில்ல்லை. ஏனென்றால் அவை கணிப்புகள். அப்படி கணிக்கப்படுபவைகளும் பெரும்பாலும் வெற்றியடைகின்றன என்பதிலிருந்து அறிவியலின் ஆளுமையை புரிந்து கொள்ளலாம். மாறாக இப்படியான கணிப்புகளுக்கு அவசியமின்றி ஏதோ ஒரு ஆற்றலுக்கு துல்லியமாக இவைகள் தெரியும் என்றால் கூறட்டும்; மனிதனின் அறிவியல் கணிப்பு துல்லியமாக இருக்கிறதா? அல்லது அந்த ஏதோ ஒன்றின் அறிவிப்பு துல்லியமாக இருக்கிறதா? என்று பார்த்துவிடலாம்.

சரி மேற்கண்ட கேள்விகளை நண்பர் குலாம் ஏன் எழுப்பியிருக்கிறார். அறிவியலெல்லாம் ஒன்றுமில்லை, ஆண்டவனே எல்லாம் என்று காட்டுவதற்காக. மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அவற்றை பார்த்து விடலாம். கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்விக்கான பதிலை நாம் அறிவியலிலும், பேரண்டப் பருப் பொருட்களிலும் அவற்றுக்கிடையேயான இயங்கு விசைகளிலும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்வியின் சாராம்சம் கடவுளைச் சொன்னவன் கூறியது உண்மையா பொய்யா என்பது தான். இந்தக் கேள்வியின் வலியை எதிர்கொள்ள முடியாமல் தான் அதை அறிவியலுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, கடவுள் என்பது அறிவியலுக்குள் சிக்காது என்பதை வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம், கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா என்பதை உறுதி செய்ய கீழே சில கேள்விகளை தருகிறேன், பதில் வந்த பின் தொடர்ந்து பரிசீலிக்கலாம்.

1. கடவுள் ஒரு சுயம்பு என்பதை வாதத்துக்காக கொள்வோம். பேரண்டம் உட்பட அனைத்தையும் அவர் படைப்பதற்கு முன் எங்கு இருந்தார். அதாவது அவர் முதலா? அவர் இருந்த இடம் முதலா?

2. கடவுள் எல்லா ஆற்றல்களையும் கொண்டவர் என்பதை ஒப்புக்கு ஒப்புக் கொள்வோம், அவரின் பிற படைப்பினங்களான, வானவர்கள், சைத்தான்கள் உள்ளிட்ட வேறு சிலவைகளையும் தடம் பிடிக்க முடியவில்லையே ஏன்?

3. கடவுளை அளக்க முடியாது, ஆனால் கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்த வானவர்கள் இயங்குவதற்கு என்ன விசையை பயன்படுத்துகிறார்கள்? அதையும் ஏன் அளக்க முடியவில்லை.

4. மழையைக் கூட பிரார்த்தித்து கேட்க முடியும் எனும் போது இந்த உலகில் சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?

அறிவியலின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற முடிவை வந்தடைய வேண்டும் என்பதற்காக வளைப்பதை விட, நேரிய முறையில் பாரிசீலித்துப் பார்க்கலாம். அப்படியான பரிசீலனைக்கு நண்பர் குலாமை அழைக்கிறேன்,