மீண்டும் சௌதியில் சலுகைகள், உரிமைகளுக்கான மக்கள் போராட்டம் என்னானது?

19 மார்ச்

நேற்று (18/03/2011 வெள்ளி) சௌதியின் மன்னர் அப்துல்லா, சௌதி மக்களுக்கு 500 பில்லியன் ரியால் அளவுக்கு சலுகைகளை, திட்டங்களை அறிவித்திருக்கிறார். சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் சலுகைகளையும் மானியங்களையும் அள்ளிவீசும் அளவிற்கு அரசை தங்களின் சிறு அசைவின் மூலம் தள்ளியிருக்கிறார்கள் மக்கள். இதுவரை சௌதியில் ஆங்காங்கே நடந்த கிளர்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் துப்பாக்கி ரவைகளையும், கவச வாகனங்களையும் காட்டிய சௌதி அரசு இப்போது சலுகைகளை காட்டியிருக்கிறது என்பதே சௌதி மக்கள் இனியும் அமைதியாக இருப்பார்களா எனும் ஐயம் ஆள்பவர்களுக்கு தோன்றியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேநேரம் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக காட்டிக்கொண்டே அவர்களை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்திய தந்திரங்கள் தான் இவைகளில் தொழிற்படுகிறது. அறிவிக்கப்பட்ட 500 பில்லியன் திட்டங்களை உற்று நோக்கினாலே இதைக் கண்டுகொள்ள முடியும். 5 லட்சம் வீடுகள் கட்டித்தருவதற்காக 250 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 பில்லியன் மருத்துவமனைகள் கட்டுவதற்கு. வீடு கட்டுவதற்கான கடன் 3 லட்சம் ரியாலிலிருந்து 5 லட்சம் ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட சலுகைகளில் பாதிக்கு மேலாக ரியல் எஸ்டேட் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான இந்த அம்சங்களை மறைப்பதற்காக, சௌதி அரசு பணியாளர்களுக்கு இரண்டுமாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பன போன்ற இனிப்புகள் தடவப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலைவசதி வேண்டும் என்று காலம் காலமாக போராடிய கிராமப்புற மக்களுக்கு காவல்துறை மூலம் குண்டாந்தடி பரிசு வழங்கிய மத்திய மாநில அரசுகள், திடீரென உள்கட்டுமானத்தை பெருக்குகிறோம் என்ற பெயரில் கிராமங்களை வழவழப்பான சாலைகளால் இணைத்தன. கிராம மக்களின் நலன்களுக்காக செய்ததாக பிரச்சாரம் செய்தன. ஆனால், தானியக் கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை தங்களின் தங்களின் கிடங்குகளுக்கு கொண்டு செல்வ‌தற்காக தனியார் நிறுவனங்களுக்காக சாலை வசதிகளை ஏற்படுத்தித்தந்தன என்பது தான் மெய்யான காரணம்.

அது போலவே, கடந்த உலக பொருளாதார நெருக்கடியில், அரபுலகின் நாடுகளில் திவால் நிலைக்கு செல்லுமளவுக்கு பொருளாதாரம் தள்ளாட ஓரளவுக்கு சமாளித்து நின்றது சௌதியின் பொருளாதாரம் மட்டுமே. காரணம் எமிரேட்டுகளைப்போல சௌதியின் பொருளாதாரம் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழில்களையே சார்ந்து நிற்காதது தான். ஆனால், அதன்பிறகு பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சௌதியில் காலூன்றத் துடித்தன. இப்போது அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. மத ரீதியான வரலாற்று தலங்களான மக்கா, மதீனா உட்பட சௌதியில் பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கின்றன.

முகம்மது நபி பிறந்த வீடு நூலகமாக மாற்றப்பட்டதை கண்டித்தும், கதீஜாவின் வீடு கழிப்பிடமாக மாற்றப்பட்டதை எதிர்த்தும், அப்ரஜ் அல் பைத் கோபுரம் (மக்கவின் கடிகார கட்டிடம்) வெளிநாட்டு உதவியுடன் கட்டப்பட்டதற்கும், மக்காவின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சீனாவிலிருந்து முஸ்லீமல்லாத நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கிளம்பிவரும் எதிர்ப்பை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் வீட்டுக் கடன்கள் உயர்த்தப்பட்டிருப்பதையும், கட்டுமான திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதையும் புரிந்து கொள்ள முடியும். ஆக மக்களுக்கு வழங்குவது போல் போக்கு காட்டிவிட்டு பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் போகின்றன. தெளிவாகச் சொன்னால் மக்களை போராடத்தூண்டும் புறக்காரணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் (11/03/2011 வெள்ளி) மக்கள் பொது இடங்களில் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்தி பரவியது. சிறிய அளவில் நடந்த சில நிகழ்வுகளைத் தவிர பெரிதாக எதுவும் நிகழவில்லை. ஆனால் குறித்த நாளுக்கு முன்னதாகவே சௌதி அரசு, முன்னணியில் செயல்படப்போகும் பலரை உளவறிந்து ரகசியமாக கைது செய்து விட்டிருக்கிறது. அந்தவகையில் சிறு சிறு எதிர்ப்புகளைத் தவிர வேறொன்றும் நிகழாதவாறு சௌதி அரசு வெற்றிகரமாய் நிலமையை சமாளித்திருக்கிறது. ஆனால் இவைகளை எதிர்காலத்திலும் அப்படியே சௌதி அரசால் கையாண்டுவிட முடியாது. நஜ்ரான் பகுதிகளில் முன்பொருமுறை தோன்றிய கம்யூனிச இயக்கத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியதைப் போல் இனியும் சௌதி அரசு செய்து விட முடியாது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு பதில் to “மீண்டும் சௌதியில் சலுகைகள், உரிமைகளுக்கான மக்கள் போராட்டம் என்னானது?”

  1. farook மார்ச் 19, 2011 இல் 7:28 பிப #

    you are sending mails against saudi govt, on rumors, lot of our people working there bcoz of your curse,please send useful mails

பின்னூட்டமொன்றை இடுக