தா. பாண்டியன் குமுறல்

21 ஜன

நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார்,

எனக்கு வெறும் அம்பேத் காரா?

tha.pa

 

முதற்பதிவு: முகநூல்

கிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை

15 டிசம்பர்

ஆவணப்படம் வெளியீடு. வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

2012-12-15 08.39.24

2012-12-15 08.39.44

கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? விவாதம்

20 நவ்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

மீண்டும் பதிவர் குலாமுடன் விவாதம். இந்த முறை சற்று சீரிய கட்டுடன் இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கான அடித்தளம் குறித்து அறிய விரும்புவோர் அவருடைய கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல் எனும் பதிவின் பின்னூட்டங்களைப் பார்வையிடுங்கள்

இந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக இவ்விவாதத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் முதன்மையான சில கூறுகளைப் பற்றிய தெளிவுகள் தேவைப்படுகின்றன.

அறிவியல் என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல். மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல். அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள். இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.

மனிதனின் அறிதல் என்றால் என்ன?

மனிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான். தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது. பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல. அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.

கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?

மனிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான். எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில் ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்? மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ எனும் கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

இனி நண்பர் குலாமின் கட்டுரைக்குள் பயணிக்கலாம். அந்தக் கட்டுரையில் சாராம்சமாக அவர் கூறியிருப்பது என்ன? அறிவியல் தன்னளிவில் முழுமையடையாத ஒன்று. அறிவியல் இன்னும் விடையளிக்காத வினாக்கள் இருக்கின்றன. எனவே குறைபாடுடைய அந்த அறிவியலைக் கொண்டு கடவுளை அளக்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது, கூடாது. நண்பரின் கருத்து தவறானது என்பதை அவரின் வாதங்களினூடாவே பார்ப்போம்.

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும்/// நண்பர் குலாம் ஒரு ஆத்திகர் என்பதால் அவரளவில் அவர் கடவுளை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் ஒரு மனிதர் எனும் அடிப்படையில் இதுவரை ஏராளமான விசயங்களை தன் வாழ்வில் உறுதிப்படுத்தியிருப்பார். தயவு செய்து அப்படியான உறுதிப்படுத்தல்களில் அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்தியவற்றை குறைந்தது ஒரு பத்து விசயங்களையாவது அவர் பட்டியலிட வேண்டும் எனக் கோருகிறேன். முடியாது. ஒன்றைக்கூட அவரால் கூற முடியாது. ஆக அனைத்தையும் முழுமைப்படுத்திச் சொல்லாத அறிவியலை மட்டுமே துணைக்கழைத்துக் கொண்டுதான் தன் வாழ்வின் அத்தனை உறுதிப்படுத்தல்களையும் செய்திருக்கிறார். ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் அவருக்கு அறிவியலில் போதாமை வந்துவிடுகிறது. இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் வாழ்வின் மெய்யான விசயங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பேதம் இருக்கிறது.

அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஒரு குண்டூசி உடலில் குத்தினால் ஏன் வலிக்கிறது என்பது தொடங்கி இப்பேரண்டத்தின் கோள்களின் இயக்கம் வரை அனைத்தையும் கண்டறிந்து முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. எதை முழுமைப்படுத்தாமல் குறையுடன் விட்டு வைத்திருக்கிறது? இந்த இடத்தில் நாம் ஒரு புரிதலுக்கு வந்தாக வேண்டும். அறிவியல் குறைபாடுடையது என்று ஆத்திகர்கள் என்ன நோக்கில் கூறுகிறார்கள்? அதற்கு என்ன சான்றுகள் தருகிறார்கள்? என்பதை நுணுகிப் பார்க்க வேண்டும். அறிவியல் இன்னும் கடக்காத எல்லை இருக்கிறதா? என்றால், ஆம் இருக்கிறது. எடுத்துக் காட்டாக பெருவெடிப்புக் கொள்கைக்கு முன்னர் நடந்த மாற்றங்கள் என்ன? என்று கேட்டால் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதே பதில். ஆனால் ஆத்திகர்கள் அறிவியலின் இந்த தொடர்ந்து தேடும் தன்மையை சுட்டிக்காட்டி அறிவியல் குறைபாடுடையது என்று கூறுகிறார்கள். இதோ நண்பர் குலாம் இதற்கு பயன்படுத்தியிருக்கும் வாசகங்களை கவனித்துப் பாருங்கள். \\\ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும்.. .. ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு.. .. அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது/// கடவுளை அதை நம்பாதவர்களும் கூட அதன் இயல்புகளை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று கோரும் நண்பர் குலாம். அறிவியலுக்கு மட்டும் அதன் இயல்புகளை தூக்கிக் கடாசி விட்டது ஏன்? அறிவியல் என்பது ஒரு தேடல். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஒரு விசயத்தில் குறைபாடுடையது என ஒன்றை கூற வேண்டுமாயின் அந்த விசயத்தின் அதன் இயலாமை வெளிப்பட்டிருக்க வேண்டும். அறிவியல் எந்த விசயத்திலாவது இப்படி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அல்லது அறிவியலால் முடியாதவைகள் என்பதற்கு பட்டியல் ஏதும் குலாம் வைத்திருக்கிறாரா? அறிவியலின் இந்த எட்டப்படாத உயரம், தொடர்ந்து பயணப்படும் தன்மைகள் குறித்து குலாம் அறியாதவராக இருக்க முடியாது. என்றால் ஏன் அறிவியலை குறைபாடுடையது என காட்ட முயற்சிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுளை மெய்ப்பிக்க அதைத்தவிர வேறு வழி இல்லை. நண்பர் குலாமுக்கு மட்டுமல்ல எல்லா மதவாதிகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து நண்பர் குலாம் பொருத்தமான ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார். \\\எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்/// சரிதான். இதை யாரும் மறுக்கப் போவதில்லை. தெளிவாகச் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நண்பர் குலாம் இதை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதத்தை நான் இரண்டு விதங்களில் நேர்கொள்கிறேன்.

1. கடவுள் உறுதியானவர், அவர் நிலைத்திருந்து காரியமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதைத்தான் நாத்திகர்கள் எதிர்க்கிறார்கள். அது ஒரு கருத்து, ஆத்திகர்களின் நம்பிக்கை என்றால் யாரும் அதில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த விவாதத்தின் தலைப்பு கூட வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? என்றுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது ஒரு நம்பிக்கை என்றால் அதில் எந்த உரசலுக்கும் இடமில்லை. இப்போது குலாம் கூறுவதைப் பாருங்கள், அவர் எந்த விதத்திலிருந்து இதை அணுகுகிறார்? கடவுள் உறுதியாக நிலவுகிறது எனும் அடிப்படையிலிருந்தே மேற்கண்ட வாதத்தை அவர் வைக்கிறார். துல்லியமாகக் கூறினால், அது நம்பிக்கையா? மெய்யான இருப்பா? என்பது தான் இங்கு விவாதமாகியிருக்கிறதேயன்றி கடவுளல்ல. இதை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

2. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதம் ஒரு பாதி தான். “எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிரூபணம் தரவில்லையோ அது இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அது குறித்த தகவல்களோ, வாய்ப்புகளோ உறுதி செய்யப்படாதவரை அது உறுதியாக இருக்கிறது என கூறவியலாது என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்” என்பது தான் அந்த மறுபாதி. இதற்கு குலாம் என்ன பதில் கூறுவார்?

அடுத்து குலாம் எழுப்பியிருக்கும் ஒன்று ‘அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் கடவுள்’ என்பது. முதலில் ஒரு விசயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள் என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான் கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக் கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான். நண்பர் குலாம் கடவுள் மறுப்பு குறித்து தவறான புரிதலோடு இருக்கிறார். கடவுளின் தகுதிகளாக, வல்லமைகளாக ஆத்திகர்கள் கூறுகிறவைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் எனும் கருத்தை மட்டும் மறுப்பது தான் கடவுள் மறுப்பு என்பதாக அவரின் புரிதல் இருக்கிறது. அவ்வாறல்ல, கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் தகுதிகள், வல்லமைகள் என கடவுளின் மீது ஏற்றப்பட்டிருக்கும் அத்தனை புனிதங்களோடு சேர்த்துத்தான் கடவுளை மறுக்கிறோம். அறிவியலால் அளக்கப்படுவதைவிட கடவுள் உயர்வானவர் எனவே அறிவியலில் அகப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று கூற முடியாது என்பது அபத்தமான வாதம்.

அடுத்து நண்பர் குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை/// இப்படிக் கூறுவதற்கு நிரம்பவும் அசட்டுத் துணிச்சல் வேண்டும். கண்ணெதிரே காணப்படவில்லை என்பதால் மட்டுமல்ல, 1. அறிவியல் ரீதியாகவும் 2. வரலாற்றியல் ரீதியாகவும் 3. சமூகவியல் ரீதியாகவும் கடவுள் இல்லை என்பதற்கான காரணிகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

இனி, நண்பர் குலாமின் அமெரிக்கா லாம்கு எடுத்துக்காட்டை கொள்ளலாம். இதில் அமெரிக்கா பற்றிய விளக்கங்கள் புரிதலுக்காகவும், லாம்கு வாதமாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா குறித்த விளக்கத்தில் இருக்கும் தெளிவு,லாம்கு குறித்த விளக்கத்தில் இல்லை. அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் செலவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் கண்ணால் கண்டுவிட்டு வந்துவிடலாம். ஆனால் லாம்கு?

லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? அமெரிக்கா விசயத்தில் நாடு என்பதற்கு என்னென்ன வரையறைகள் பயன்படுத்தப்பட்டனவோ அதே வரையறைகளை இங்கும் பயன்படுத்தினால் எளிதாக முடிவு கிடைத்துவிடும். லாம்கு எனும் நாடு புவிப்பரப்பில் தற்போது எங்கும் இல்லை. லாம்கியர்கள் எனும் தேசிய இனத்தை உலகில் தற்போதுள்ள எவரும் கண்டதில்லை. வேறு எந்த சான்றுகளும் கிடைக்காத நிலையில் நாம் இரண்டு முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். 1. லாம்கு என்றொரு நாடு இல்லை. 2. முன்னெப்போதோ இருந்து பின்னர் அழிவுபட்டுப் போயிருக்கலாம். இப்போது இரண்டாவது முடிவை எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கியக் குறிப்புகளோ, மரபு சார்ந்த கதையாடல்களோ அது இருந்ததாக கருதப்படும் பகுதி மக்களிடையே உலவ வேண்டும். தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த இலக்கியக் குறிப்புகளையோ, மரபுக் கதையாடல்களையோ உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் லாம்கு எனும் கருத்தாக்கம் யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது? அதற்கு தனிப்பட்ட பலன்கள் ஏதும் அவருக்கு உண்டா? அது குறித்த பின்னணிகள் ஆராய்ந்து அதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். இப்படி ஏதுவுமே கிடைக்காத பட்சத்தில் லாம்கு என்ற நாடு இல்லை, இருந்ததில்லை என்று முடிவு செய்து விடலாம்.

இது தான் அறிவியல் முறை. அதவது ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதனதற்குறிய ஆதாரங்கள் வேண்டும். குலாம் இதை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? லாம்கு குறித்த எந்த தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதைக் கூறியவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் முறை என்கிறார். அதாவது லாம்கு குறித்த எந்தத் தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் லாம்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாலும் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி புனைவான ஒரு கருத்தைக் கூறிவிட்டு \\\இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம்/// என்று துணிந்து கூறியிருக்கிறாரே நண்பர் குலாம். எப்படி இது?

இந்த லாம்குவை அப்படியே கடவுளுக்கு ஒட்டுவோம். கடவுள் என்றொருவர் உண்டு, அவருக்கு இன்னின்ன வல்லமைகளை உண்டு, அவரால் தான் எல்லாம் நடந்தது என்று ஒருவர் கூறினால், லாம்குவைப் போல கடவுள் குறித்த தகவல்களைத் தேடுவோம். எந்தத் தகவலும் எப்படியான குறிப்புகளும் கிடைக்கவில்லை என்றால் என்ன நிலை எடுப்பது? நண்பர் குலாமின் முடிவுப்படி அந்த ஒருவர் கூறியதை ஏற்ககலாம். அறிவியலின் வழியில் கிடைத்த சான்றுகளின் படி மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதால் கடவுள் இல்லை என்று முடிவுக்கு வரலாம். இரண்டில் எது சரியான முடிவு என்றால் நண்பர் குலாமின் முடிவை புறந்தள்ளுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

இதில் இன்னொரு உத்தியும் இருக்கிறது. அமெரிக்கா எனும் நாடு இருக்கிறதா இல்லையா? லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா இல்லையா? என்று நண்பர் குலாம் கேள்வி எழுப்பவில்லை. அமெரிக்கா என்றொரு நாடு இல்லை என்றால், லாம்கு என்றொரு நாடு இல்லை என்றால் என்றுதான் கேள்வியை எழுப்புகிறார். அப்போது தான் அவர் விரும்பும் முடிவை வந்தடைய முடியும். அப்போதும் கூட லாம்கு வை கடவுளோடு இணைக்கும் விசயத்தில் அவர் இடறியிருப்பதை ஊன்றிக் கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். லாம்கு என்றொரு நாடு குறித்த தகவல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் கூறுவதை ஏற்று லாம்கு இல்லை என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் கடவுள் எதிரான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். இதைத்தான் நண்பர் குலாம் கூற விருப்புகிறார். ஆனால் முடிவுகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. ஒரு விசயத்தை தெளிவாக முன்வைத்து விடலாம். இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஆய்வதற்கும் அறிவதற்கும் இருக்கும் ஒரே அளவுகோல் அறிவியல் தான். அறிவியலை விலக்கி வைத்துவிட்டு எதையும் அறிந்துவிட முடியாது.

அடுத்து குலாம் கடவுள் பற்றி கூறப்படுவது வரட்டுத் தத்துவமல்ல என்கிறார். எப்படி? \\\கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள். இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும்/// எந்த நிரூபணமும் தராமல் தாங்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அடம் பிடிப்பதே ஆத்திகர்களின் வேலையாகி விட்டது. கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார், அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள். எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

\\\கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது/// இதுவும் குலாமின் கூற்று தான், கலப்படமில்லாத சுத்தமான பொய்யான கூற்று. அறிவியலின் தொடக்கத்துற்கு முன்னர் கடவுள் எனும் ஒன்று இருக்கிறது என மனிதனால் உணரப் பட்டிருந்ததா? என்று மனிதன் நெருப்பை கண்டறிந்தானோ அன்றே அறிவியல் யுகம் தொடங்கி விட்டது. ஆனால் மனிதனின் வாழ்வில் அதற்கும் வெகு காலத்திற்குப் பின்பே கடவுள் அறிமுகமாகிறார். இது மதவாதிகளுக்கு வழக்கம் தான் அவர்களின் உளக்கிடக்கைகளை பொது உண்மைகளைப் போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கூறிக் கொண்டே செல்வது. நண்பர் குலாம் அவரது கூற்றில் உண்மையுள்ளவராக இருந்தால் இதற்கு சான்றுகள் தரட்டும்.

இனி நண்பர் குலாமின் கேள்விகளின் பக்கம் முகம் திருப்பலாம். பொதுவாக மதவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம் என்ன? எனும் கேள்வியால் துளைக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை யாரும் பதில் கூறியதில்லை. அப்படியான பதில் கூறும் முயற்சிகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒது ஒரே விதமாக தோற்றமளிப்பதைக் காணலாம். அவை அனைத்தும் கேள்விகளின் விளக்கங்களாகவே இருக்கும். ஒருபோதும் அவை பதில்களின் தொகுப்பாக இருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் எதிர்க் கேள்விகள் கேட்பதே கடவுளுக்கான நிரூபணம். அந்த வகையில் தான் குலாமின் இந்தக் கேள்விகளும் அடங்கும். பழைய பாட்டையில் பயணிக்கும் பசலிக் கேள்விகள்.

1. பெருவெடிப்பு ஏன் நிகழ வேண்டும்? பெருவெடிப்பு உறுதியாக நிகழ்ந்தது என்று எந்த அறிவியலாளனும் கூறவில்லை. அது ஒரு அறிவியல் யூகம். அது எப்படி நிகந்திருக்கக் கூடும் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஏன் நிகழ வேண்டும். அது ஒரு தற்செயல் நிகழ்சி. அண்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவை அனைத்தும் தற்செயல் நிகழ்ச்சிகளே. எதுவும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளல்ல. ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் என்ன வடிவத்தில் பரவும் என்பது எப்படி தற்செயலானதோ அது போன்றே பெருவெடிப்பும் தற்செயல் நிகழ்ச்சி தான். காட்டாக ஒரு கோள் ஏன் கோள வடிவில் இருக்கிறது? கோள வடிவில் இருப்பதால் தான் அது கோள். அவ்வாறின்றி வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் இருந்தால், அப்போது வேறு ஏதாவது ஒரு பெயரில் அழைத்துக் கொண்டிருப்போம். ஏன் இந்த வடிவில் இருக்கிறது கோள வடிவில் இருந்திருக்கக் கூடாது? என்று கேள்வி கேட்ட்க் கொண்டிருப்போம். அதேபோல் தான் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது என்பதும். பெருவெடிப்பு நிகழ்ந்ததால் இந்தப் பேரண்டம் உருவானது எனும் யூகம் வேறு விதமாய் இருந்திருக்கும், அவ்வளவு தான். ஏனென்றால் ஏன் நிகழ்ந்தது? ஏன் இப்படி இருக்கிறது? எனபன போன்ற ஆத்திகக் கேள்விகளெல்லாம் அறிவியலிலிருந்தோ தேடலிலிருந்தோ எழுந்ததல்ல. அது ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்திலிருந்து எழுந்தது. அவ்வாறன்றி பெருவெடிப்பு நிகழ்ந்ததற்கு திட்டமிடப்பட்ட காரணம் உண்டு என நண்பர் குலாம் நம்பினால், அந்தக் காரணத்தை அவர் விளக்கட்டும். பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம்.

2. கோள்கள் சரியாக சுற்றுகிறதே எப்படி? இது அறியாமையினால் எழுந்த கேள்வி. வான் வெளியில் கணந்தோறும் எத்தனையோ ஒழுங்கீனங்கள், மோதல்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பிறிதொரு கோளால், அஸ்ட்ராய்டால், விண்கற்களால், எறிகற்களால், வால் நட்சத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளாகாத பருப்பொருள் என்று விண்ணில் எதுவுமில்லை. சந்திரனின் மேற்பரப்பு சிறுவர்களின் பம்பரம் போல் அத்தனை காயங்களுடன் இருப்பது ஏன்? செவ்வாயின் ஒருபகுதி சற்று வீக்கத்துடன் காணப்படுவது குறுங்கோளின் மோதலால் தான் எனக் கண்டறிந்திருக்கிறார்களே. சூரியனின் பாதைக்குள் ஷூமேக்கர் லெவி வால் நட்சத்திரம் பாதை மாறி வந்து போகவில்லையா? ஏன் பூமியில் விண்கல் வந்து மோதிய பள்ளம் சைபீரியாவில் இன்னும் இருக்கிறதே. மரியானா ட்ரன்ச் பூமியிலிருந்து பிய்ந்து போனது என்று தானே அறிவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பூமியே கூட ஒருமுறை தன் துருவத்தை தலை கீழாக மாற்றியிருக்கிறது. இந்த ஒழுங்கீனங்களும் மோதல்களும் ஏன் நிகழ்கின்றன? மதவாதிகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு புளகமடைவார்கள். இதுவும் அதுதான்.

3. உயிர்கள் வாழத் தகுதியற்ற பல கோள்கள் விண்ணில் இருக்கின்றனவே, இது ஏன்? உண்மையில் இது ஆத்திகர்களை நோக்கி நாத்திகர்கள் கேட்க வேண்டிய கேள்வி. இப்பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தான் ஆத்திகர்களின் நிலை. அப்படியென்றால் இந்தக் கேள்விக்கு பதில் கூறும் பொறுப்பும் ஆத்திகர்களுக்கே, அதாவது நண்பர் குலாமுக்கே உண்டு.

4. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரணங்களை இப்போதே துல்லியமாக கணித்திருக்கிறார்களா? இது எள்ளல், அதுவும் தன் கருத்துக்கு சாதகமான பயன் கருதிய எள்ளல். போகட்டும். குழந்தை பிறக்கும் நேரத்தை மருத்துவ அறிவியல் இயற்கையாகவும், செயற்கையாகவும் வெகு தெளிவாக கணிக்கிறது. தொடக்கத்தில் மனிதன் மாதக்க்கணக்காக, பின் நாட்கணக்காக, தற்போது மணிக்கணக்காகக் கூட துல்லியமாக கூற முடிந்திருக்கிறது. பெரும்பாலான பிரசவங்களில் நிமிடக்கணக்கில் கூட இந்த துல்லியம் இருப்பதுண்டு. அறிவியல் இதை சாத்தியமாக்கி இருப்பது அனைவரும் அறிந்தது தான். மற்றொருபுறம் வினாடி துல்லியத்தில் தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் செய்பவர்களும் இருக்கிறார்கள். இது அறிவியலின் வளர்ச்சி. ஆனால் இந்தக் கேள்வியின் சாரம் இருக்கிறதே அது ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை பிறக்கும் நாளை சரியாக கணித்துக் கூற முடியுமா? என்று கேட்டார்கள், இன்று வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்கிறார்கள், நாளை மைக்ரோ வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்பார்கள், அதனிலும் பிறகு நானோ வினாடி துல்லியமாக குழந்தை பிறப்பதை கணித்துக் கூற முடியாத அறிவியல் என்ன அறிவியல் என்பார்கள்.இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கேள்வியை அல்ல, கேள்வியின் நோக்கத்தை.

5. மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இது அறிவுபூர்வமான கேள்வியா அறிவுக்கு முரணான கேள்வியா? மனிதன் ஒரு பொருள். எல்லாப் பொருளுக்கும் மூன்று பரிமாணங்கள் இருப்பதைப் போல் திட்டவட்டமாக நான்காவது பரிணாமமாகிய காலமும் இருக்கிறது. காலத்தின் ஒரு புள்ளியில் தொடங்கும் ஒரு பொருள் மற்றொரு புள்ளியில் முடிந்தே தீர வேண்டும். இது அறிவியல் விதி. இதற்கு மாறாக ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கேட்டால் அதில் அறிவியலுக்கு கொஞ்சமும் இடமில்லை. அறிவுபூர்வமான கேள்வியாக நினைத்து கேட்கப்பட்டிருந்தாலும் கூட அதில் அறிவியல் இல்லை. ஆனால் மரணத்தை மனிதன் வெற்றிகரமாக தள்ளிப் போட்டிருக்கிறான். ஆதிகாலத்தில் மனிதனின் அதிகபட்ச வாழ்நாளே முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகள் தான். தெளிவாகச் சொன்னால் முப்பதைக் கடப்பவர்கள் வெகு அரிது. ஆனால் இன்றோ எழுபதைக் கடந்து இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் கடந்த மூன்று லட்சம் ஆண்டுகளில் மனிதன் தன் வாழ்நாளை இரண்டு மடங்குக்கும் அதிகமாக மாற்றிக் காட்டியிருக்கிறான். இதை அவன் ஏதோ ஒரு ஆற்றலின் துணை பலத்தால் அல்ல, தன் சொந்தப் பலத்தில் அடைந்திருக்கிறான்.

கடைசி இரண்டு கேள்விகளிலும் பிறக்கும் மரணிக்கும் நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இரண்டுமே கணிப்புகளை கோருகின்றன. கணிப்பு என்றாலே அது எதிர்காலம் தொடர்பானது. எதிர்காலம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டால் அது முழுமையாக துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்பில்ல்லை. ஏனென்றால் அவை கணிப்புகள். அப்படி கணிக்கப்படுபவைகளும் பெரும்பாலும் வெற்றியடைகின்றன என்பதிலிருந்து அறிவியலின் ஆளுமையை புரிந்து கொள்ளலாம். மாறாக இப்படியான கணிப்புகளுக்கு அவசியமின்றி ஏதோ ஒரு ஆற்றலுக்கு துல்லியமாக இவைகள் தெரியும் என்றால் கூறட்டும்; மனிதனின் அறிவியல் கணிப்பு துல்லியமாக இருக்கிறதா? அல்லது அந்த ஏதோ ஒன்றின் அறிவிப்பு துல்லியமாக இருக்கிறதா? என்று பார்த்துவிடலாம்.

சரி மேற்கண்ட கேள்விகளை நண்பர் குலாம் ஏன் எழுப்பியிருக்கிறார். அறிவியலெல்லாம் ஒன்றுமில்லை, ஆண்டவனே எல்லாம் என்று காட்டுவதற்காக. மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அவற்றை பார்த்து விடலாம். கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்விக்கான பதிலை நாம் அறிவியலிலும், பேரண்டப் பருப் பொருட்களிலும் அவற்றுக்கிடையேயான இயங்கு விசைகளிலும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்வியின் சாராம்சம் கடவுளைச் சொன்னவன் கூறியது உண்மையா பொய்யா என்பது தான். இந்தக் கேள்வியின் வலியை எதிர்கொள்ள முடியாமல் தான் அதை அறிவியலுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, கடவுள் என்பது அறிவியலுக்குள் சிக்காது என்பதை வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம், கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா என்பதை உறுதி செய்ய கீழே சில கேள்விகளை தருகிறேன், பதில் வந்த பின் தொடர்ந்து பரிசீலிக்கலாம்.

1. கடவுள் ஒரு சுயம்பு என்பதை வாதத்துக்காக கொள்வோம். பேரண்டம் உட்பட அனைத்தையும் அவர் படைப்பதற்கு முன் எங்கு இருந்தார். அதாவது அவர் முதலா? அவர் இருந்த இடம் முதலா?

2. கடவுள் எல்லா ஆற்றல்களையும் கொண்டவர் என்பதை ஒப்புக்கு ஒப்புக் கொள்வோம், அவரின் பிற படைப்பினங்களான, வானவர்கள், சைத்தான்கள் உள்ளிட்ட வேறு சிலவைகளையும் தடம் பிடிக்க முடியவில்லையே ஏன்?

3. கடவுளை அளக்க முடியாது, ஆனால் கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்த வானவர்கள் இயங்குவதற்கு என்ன விசையை பயன்படுத்துகிறார்கள்? அதையும் ஏன் அளக்க முடியவில்லை.

4. மழையைக் கூட பிரார்த்தித்து கேட்க முடியும் எனும் போது இந்த உலகில் சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?

அறிவியலின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற முடிவை வந்தடைய வேண்டும் என்பதற்காக வளைப்பதை விட, நேரிய முறையில் பாரிசீலித்துப் பார்க்கலாம். அப்படியான பரிசீலனைக்கு நண்பர் குலாமை அழைக்கிறேன்,

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

7 நவ்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நவ. 7, 1917, உழைப்பது மட்டுமல்ல, நம்முடைய வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்ற சொர்க்கத்தை உழைப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களுக்கான உண்மையான கொண்டாட்ட நாளும் இதே நாள் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான ஆசான் தோழர் லெனின் தலைமையில், ரசிய கம்யூனிச கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், குடிநீர் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடனடியாகத் தீர்த்து வைத்த்தோடு, அனைவருக்கும் கல்வி-வேலையும் உத்தரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால், நம் நாட்டில் நிலைமை?

விலைவாசி விசம் போல்  ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதியில் வீசப்படுகிறார்கள், விவசாயம் அழிந்து தற்கொலை, பட்டினிசாவு என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறியாக்கப்படுகிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்த நாடே பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீதே இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது. மன்மோகன் – சோனியா கும்பலின் காங்கிரஸ் அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்திவரும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்னும் மறுகாலனியாக்க்க் கொள்கைதான். இது தான் இன்று மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு, நாட்டை மீண்டும் அடிமை (மறுகாலனி)யாக்கி வருகிறது.

இக்கொடுமை நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க்கக்  கொள்ளை. இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் மீதான இன்றைய கடமை. இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை – மறுகாலனியாக்க்கக்  கொள்கையை முறியடிப்போம். இதற்கு தெற்காசிய மக்களுக்கு நாம் ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம். மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் மீண்டும் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டிமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நட்த்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்கு இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

முதல் பதிவு: பு.மா.இ.மு

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

6 நவ்

அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட வெகு சிலரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் தளபதி அளவுக்கு செயல்பாடு கொண்ட ஒரு பெண் போராளி வன்புணர்ச்சியுடன் வேறு தண்டனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை இலங்கை இராணுவம் ஒருபோதும் செய்திருக்காது. எனவே, அந்த செவ்வி புனைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த புனைவினூடாக தெறிக்கும் கேள்விகள்.. .. ..?

 

அந்தப் புனைவு கூறும் செய்தி என்ன? இரண்டு செய்திகளை அது அழுத்தமாக கூற விரும்புகிறது. ஒன்று ஈழப் போராட்டம் முடிந்து விட்டது. இனி அங்கு போராடுவதற்கு யாரும் தயாராக இல்லை, சூழலும் இல்லை. இரண்டு, தமிழகத்தில் ஈழ மக்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஈழம் குறித்து அக்கரையும் புரிதலும் இல்லாதவை. இப்படிக் கூறுவதன் மூலம் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழத்திலிருக்கும் ஆதரவு நிலையை நீர்த்துப் போக வைப்பது; அவர்களை அப்புறப்படுத்திய இடத்தில் அரசு சாரா நிறுவனத்தையோ, வேறு குழுக்களையோ வைத்து, இந்திய அரசு செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும், பிராந்திய நலன்களுக்கான செயல்களை இன்னும் வீரியமாகவும், நுட்பமாகவும், மறைமுகமாகவும் செய்வதற்கான முந்தயாரிப்பாகக் கூட அந்தப் புனைவு இருக்கலாம்.

 

ஆனால் இந்தப் புனைவு யாரைத் தாக்குகிறதோ அவர்கள், அதாவது வைகோ, நெடுமாறன், சீமான் இன்னபிற தமிழ் தேசிய கட்சிகள் போன்றவை இது குறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ‘ஏசு இருக்கிறார், வந்து கொண்டே இருக்கிறார்’ என்பது போல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், இதோ துப்பாக்கியோடு வந்து விட்டார் என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் பேசினாலுமே கூட அது கற்பனையாக எழுதப்பட்டது என்பதை தாண்டி வேறெதையும் கூறப் போவதில்லை. அது கற்பனை உரையாடலாகத்தான் இருக்கும் என்றாலும், மெய்யாகவே தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அது தான்.

 

தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியா எனும் பிராந்திய வல்லாதிக்கத்திற்காக முற்றிலுமாக தகர்த்தெறியப் பட்டிருக்கிறது. தனி ஈழ தாகம் கொண்டிருந்த மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். போராளிகள் போரின் போதும் அதன் பிறகும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள், உயிருடன் எஞ்சியவர்கள் சிறைக் கொட்டடிகளில் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகவோ, போராளிகளுக்கு ஆதரவாகவோ நிலை எடுப்பது குற்றச் செயலாக, அரசு ஒடுக்குமுறைக்குள் வலிந்து மாட்டிக் கொள்வது போன்ற செயலாக மக்களிடம் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு போராட்ட அமைப்பு முற்றிலுமாக குலைக்கப்படுவது முன்னெப்போதும் நடந்தே இராத ஒன்றல்ல. அது அவமானகரமான ஒன்றும் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் விசயத்தில் இவ்வாறான புரிதலுக்கு அதன் ஆதரவாளர்கள் ஏன் வர மறுக்கிறார்கள்? எந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இயக்கம் தான் முதன்மையான ஒன்றேயன்றி அதன் தலைவர்களோ, தனிநபரோ அல்ல. புலி ஆதரவாளர்களிடம் இது தலைகிழாக இருக்கிறது. அதனால் தான் படையணிகளும், ஆயுதங்களும் எதிரியால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்து விரல் சொடுக்கினால் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகிவிடும் என்பதைப் போல கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகள் ஏன் அழிந்தார்கள், எது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதை விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் தான் எனும் நாயக மனப்பான்மைக்கு இவர்களை இட்டு என்றது யார்? எது? லட்சக் கணக்கில் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும், தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அந்தக் கடைசிக்கட்டப் போரில் இங்கிருந்து செய்த பங்களிப்பு என்ன? பாசிச ஜெயாவுக்கு ஓட்டுக் கேட்டது தான் இவர்களின் ஒரே பங்களிப்பு. அங்கு மக்களின் மேல் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தபோது, இங்கே இவர்கள் இலைமலர்ந்தால் ஈழம் மலரும் என்று அறிக்கைக் கணைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள், ஈழ ஆதரவு என்பதை கருணாநிதியை திட்டுவது என்று குறுக்கிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்காக போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததோ அந்த ஆளும் வர்க்கத்தின் பலன்களைப் பெறுவதில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கை அரசு தமிழர்கள் விசயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே தான் இந்திய அரசு காஷ்மீர் விசயத்திலும், மத்திய கிழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை ஆதரித்துக் கொண்டு, இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் பெற துடித்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் ஆதரிக்கிறோம் என்பது அவர்கள் கொள்கையில் இருக்கும் ஓட்டாண்டித் தனமா இல்லையா? இந்த ஓட்டாண்டித் தனத்தை மறைக்கத்தான் பிரபாகரனை ஒரு நாயகனைப் போல தாங்கிப் பிடிக்கிறார்கள். நாளையே அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு களத்துக்கு வந்து விடுவார் என்று பிரமையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் வெறுமனே தலைவராகப் பிறந்தவரல்லர். அங்கிருந்த சூழல் அவரை தலைவராக பரிணமிக்க வைத்தது. ஆனால் இன்று அங்கிருக்கும் சூழல் துப்பாக்கியை அல்ல புரசிகர மக்கள் திரள் இயக்கத்தையே கோரி நிற்கிறது. அரசில் அங்கம் வகிக்கத் துடிப்பவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியுமா? அதனால் தான் அவர்கள் துப்பாக்கியை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக பிரபாகரனுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இருந்தாலும் வெளியில், சொந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈழப் போரை நினைத்தாலே வலிக்கும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொட்டால் நொறுங்கிவிடும் அளவுக்கு அவர்களுக்குள் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதை வெல்ல, அவர்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனை தொடங்கி, வர்க்க அடிப்படையில் திரட்டி, உணவுப் பிரச்சனையினூடாக உலகப் பார்வையை ஊட்டி ஆயத்தப்படுத்தும் பெரும்பணி தேவையாக இருக்கிறது. அதை ஒரு புரட்சிகர இடதுசாரி இயக்கத்தாலல்லாது பிரிதொரு கொள்கையால் செய்யவியலாது.

 

அண்மையில் பலநாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிமிகு போராட்டங்கள் புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் இல்லாததால் நீர்த்துப் போய், மக்கள் போராடியதன் பலன் யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுக்கே கிடைத்திருக்கிறது. அங்கெல்லாம் புரட்சிகர இயக்கத்தின் தேவை அவர்களின் சொந்த அனுபவங்களினூடாகவே உணரப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் அவர்களின் சிதைவுக்கும் இந்த இன்மையே தொடக்கமாக இருந்திருக்கிறது. பெண் போராளியின் பெயரால் புனையப்பட்டிருக்கும் அந்தக் கற்பனை உரையாடல், அது என்ன நோக்கத்திற்காக புனையப்பட்டிருந்தாலும் இதையே உணர்த்துவதாய் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

மாவீரர் நாள் எனும் சடங்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பழைய வேதங்களின் நிலையும், குரானின் குழப்பமும்

1 நவ்

 

 

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …

(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.

(குர்ஆன் 2:75)

 

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

 

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.

(குர்ஆன் 15: 9)

                இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

 

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.

(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …

(குர்ஆன் 2: 4)

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

(குர்ஆன் 5:44)

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.

 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :

  • குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
  • குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய வேதங்கள்  ஆகும்
  • குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய      மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
  • முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக       அல்லாஹ்      தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர் ஆன் பாதுகாக்கப்பட்டு   இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

 

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

 

குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

அல்லது

அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ்,  பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தை வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும். 

அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?

முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?

அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?

குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்.  இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.

ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.

ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)

ü “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106) 

முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

புகாரி ஹதீஸ்4095

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள்கூறியதாவது :

பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)

” நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள்  சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் “.

நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்?  ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.

புகாரி ஹதீஸ் : 4986          

வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது

…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …

 நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282)  விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில்  தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு (வாத்து, மாடு, ஒட்டகம், பூனை, நாய், முயல்) மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.

புகாரி ஹதீஸ் :        4987  

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில்  இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான்,  குர்ஆனை மீண்டும் தொகுக்க  அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,

(ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,)

Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:

حديث “اقتلوا نعثلا قتل الله نعثلا” تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة

The hadith “kill Nathal, may Allah kill Nathal” refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.

Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:

فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا

Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’

(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக்  கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்” என்பார்.)

ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத்  தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?

பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும்  திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?

எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா இருக்கிறது. 

முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி  பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?

சரி…  

அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி  பெற ஏவுவது எதற்காக?

ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.

(குர்ஆன் 17: 16)

 இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது.  தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம்.  சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா?  இதற்கு ஒரு வேதம் தேவையா?

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

26 அக்

 

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்என்னவேண்டுமானாலும் செய்வேன்அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

– 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!

அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.

உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள். மேலாளரின் கன்னத்தில் அறைந்தார்கள். மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். கல்லூரித் தாளாளரின் கைகளை ஒடித்தார்கள். காதலியுடன் முரண்பட்டார்கள். மனைவியை அடித்தார்கள். மகனுக்காக ஏங்கினார்கள். மகளுக்காக துடித்தார்கள். அப்பாவை அடித்தார்கள். அம்மாவை கொஞ்சினார்கள். அண்ணனை கொன்றார்கள். அக்காவை போற்றினார்கள். தங்கையை முத்தமிட்டார்கள். தம்பியை உதைத்தார்கள். மாநில முதல்வரை அவமானப்படுத்தினார்கள். பிரதமரின் கோவணத்தை அவிழ்த்தார்கள். மத்திய – மாநில அமைச்சர்களின் வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்தார்கள். கை கோர்த்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கட்டி உருண்டார்கள். சிரித்தார்கள். அழுதார்கள். கதறினார்கள். கலைந்தார்கள்.

மறுநாள் அல்லது வரும் வார இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடுவார்கள். திரும்பவும் கனவு காண்பார்கள். ஒரே மனநிலையை பலதரப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.

இது ஏதோ ஒரு டாஸ்மாக் கடையில், என்றேனும் ஒருநாள் நடந்த – நடக்கும் – சம்பவமல்ல. இதுதான் தமிழகத்திலுள்ள 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளையும் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். நகரங்களில் உள்ள 3,562 டாஸ்மாக் கடைகளிலும் கிராமப்புறங்களிலுள்ள 3,128 கடைகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கிறார்கள். டாஸ்மாக்கே நமது ஆண்களின் புனிதக்கோவிலாக மாறிவருகிறது.

இந்த உண்மை அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் சுவரெழுத்து எழுதவும், அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகிக்கவும், அடிப்படை உரிமைக்காக சாலை மறியல் செய்யவும், தடை விதிப்பது போல் அரசாங்கம் இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு தடையேதும் விதிப்பதில்லை. பதிலாக தங்களைத்தான் திட்டுகிறார்கள் என்று தெரிந்தே அரசாங்கமும், தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் டாஸ்மாக்கையும், ‘பார்’களையும் ‘ஸ்பான்சர்’ செய்து நடத்துகின்றன.

———-

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

உடைமையாளர்களுக்கு சொந்தமான இந்த வாக்கியத்தை, 1500 ஆண்டுகளுக்கும் முன்பே உடைமையற்றவர்களின் மனதிலும் நாவிலும் வலுக்கட்டாயமாக ஒருவன் புரண்டு, தவழ வைத்தான். அதற்கு குடிப் பழக்கத்தையே அடிப்படை காரணமாக மாற்றினான். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்கினான். அவன் கவுடில்யன். அவன் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் இதுகுறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…

இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம். இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 – 03-ஆம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிகைகளையும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை திணித்தது.

குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799-ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது. அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகளை ஏல முறையில் தரகு முதலாளிகளிடம் (‘மரியாதையும் மூலதனமுள்ள பெருவியாபாரிகளிடம்’ என்பது அயர்லாந்தில் ஆங்கிலேய அரசு பயன்படுத்திய வார்த்தை) அளிப்பது. சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது. அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும், கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களை கலந்து மதுவை தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டுமென மாகாண அரசுகளுக்கு 1859ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவனிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள். தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. (1951ல் விட்டல் மல்லையா – விஜய் மல்லையாவின் தந்தை – இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார்). இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய தரகு முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது. 2010 – 11-ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் வழியாக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், இந்த விவரங்கள் உணர்த்தும் செய்தியோ வேறு. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே அரசாங்கங்கள் குடி விற்பனையை ஊக்குவிக்கின்றன. இங்கிலாந்தில் லாட்டரியும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டங்களும் எப்படி உழைக்கும் மக்களை பலி வாங்குகிறதோ அப்படி தமிழகத்தில் டாஸ்மாக் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை காவு வாங்குகிறது.

————–

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

என்ற வாக்கியம் பொருளாதார ரீதியாக ஒரு அர்த்தத்தை தருவது போலவே பண்பாட்டுக்கு ரீதியாக வேறொரு பொருளைத் தருகிறது. ஆனால், அனைத்து அர்த்தங்களின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, பொழுதுபோக்கையும் சேர்த்து சுரண்டுவது. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் மேல்நிலை வல்லரசுகளின் சுரண்டல்களுக்கு ஏற்ப உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக – தக்கை மனிதர்களாக – மாற்றுவதுதான் இந்த வாக்கியத்தின் பின்னால் இருக்கும் உண்மை.

இதனடிப்படையிலேயே உழைப்பு நேரங்களை எப்படி அட்டவணைப் போட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் நிறுவனங்கள் சுரண்டுகிறதோ அப்படி அத்தொழிலாளியின் ஓய்வு நேரங்களையும் அட்டவணைப் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கின்றன. எதைப் பார்க்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எந்தத் தொழிலாளிக்கும் இல்லை. உழைக்கும் நேரம் போலவே ஓய்வு நேரமும் பறிபோய் விட்டது. அதாவது தொழிலாளர்களின் பொழுதுபோக்கு நேரங்கள், சுரண்டல் அமைப்பின் உழைப்பு நேரங்களாகிவிட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வீக் எண்ட்’ கலாச்சாரம், இன்று பிரபஞ்சம் தழுவிய கலாச்சாரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.

வாரநாட்களில் 10 அல்லது 12 அல்லது 14 மணிநேரங்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளியின் கண்முன்னால், வார இறுதி என்ற கொண்டாட்டத்தை எலும்புத் துண்டு போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் ‘வீக் டேஸில்’ கோழையாக – மேலாளரின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து – இருப்பது ‘வீக் எண்ட்’டை உத்திரவாதப்படுத்துகிறது. குடிக்கும் நேரத்தை எதிர்பார்த்தே குடிக்காத நேரங்களை கடத்தும் மனநிலைக்கு தள்ளுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் குடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிறுவனங்கள், குடிக்காமல் அதே தொழிலாளி உறங்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.

அதனாலேயே உரிமைக்காக குரல் எழுப்புவர்களின் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர், குடித்துவிட்டு ‘மாண்புமிகு’களை என்ன திட்டினாலும் கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். சாலைகளில் வண்டிகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்படி எப்படி நிறுத்தினாலும் புன்னகையுடன் நகர்கின்றனர். இப்படியாக பொது ஒழுங்கையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க டாஸ்மாக் அவசியமாகிறது.

ஆக, குடிப்பது என்பது உள்ளார்ந்த விருப்பமல்ல. அது திணிக்கப்பட்டது. இதுவே பின்னர் விருப்பமாக உருவெடுக்கிறது. உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது. அடுத்த நாள் அல்லது அடுத்த வார வேலை(களை) செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம், என்றைக்கும் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு வரன் தேடும்போது மாப்பிள்ளை குடிப்பவராக இருந்தால், அந்த மணமகனை நிராகரிப்பார்கள். இன்று குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்கத்தான் பெண்கள் தயங்குகிறார்கள். ‘என்றாவது குடிப்பதில் தவறில்லை’ என்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.

இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது. ஐந்து ரூபாய்க்கு தேநீர் பருகும்போது, இந்த அளவில், இவ்வளவு டிகாஷனுடன் டீ வேண்டும் என்று கேட்பவர்கள், மேஜையின் மீது ஈ மொய்ப்பதை சுட்டிக் காட்டி துடைக்கச் சொல்கிறவர்கள், டாஸ்மாக் கடையில் அவர்கள் தரும் ‘சரக்கை’ மறுபேச்சில்லாமல் தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாங்கிச் செல்வது எதனால்? சிறுநீர் கழிக்கும் இடம் அருகிலேயே இருக்க, யாரோ எடுத்த வாந்தி காய்ந்திருக்க, அதன் அருகிலேயே அமர்ந்து குடிக்க நேர்வதை அவமானமாக கருதாதது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் டாஸ்மாக் சுவர் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் மரணமடைந்தது நினைவில் இருக்கலாம். இன்றும் பழுதுப்பட்ட சுவர்கள் பல டாஸ்மாக் கடைகளை தாங்கித்தான் நிற்கின்றன. அதன் அடியில் அமர்ந்துதான் இப்போதும் பலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 120 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வணிக விற்பனைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் விழா நாட்கள், குடிப்பதற்கான நாட்களாகவும் இருக்கின்றன. உடைகளின் விற்பனை இந்நாட்களில் அதிகரிப்பது போலவே மது பானங்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன.

திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது. இந்த ‘லட்சணத்தை’ பத்திரிகைத்துறையில் இப்போது அதிகம் பார்க்கலாம். கண்முன் இருக்கும் உதாரணம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை. இக்காலத்தில் இலங்கை தூதரக அதிகாரியான அம்சா, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைத்தார். அதுவரை ‘சிங்கள இராணுவம்’ என்று எழுதி வந்த ஊடகம், இந்தப் ‘பார்ட்டி’க்கு பிறகு ‘இலங்கை இராணுவம்’ என்று எழுத ஆரம்பித்தன. ஈழப்பிரச்னை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, சில கோப்பைகள் மதுவே இலங்கைத் தூதரகத்துக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

இதே வழிமுறைகளை பல காவல்துறை அதிகாரிகளும், ஆணையர்களும் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். செய்தியாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைப்பதன் வழியாக அவர்களிடமிருந்து செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள்; செய்திகள் வராமல் தடுக்கிறார்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் ‘விருந்து’களில் தீர்மானமாகின்றன. இராணுவ ரகசியங்களை அறிய எந்த சித்திரவதைகளையும் அண்டை நாடுகள் செய்வதில்லை. ‘ஒரு ஃபுல்’ முழு ரகசியத்தையும் தாரை வார்த்து விடுகிறது.

குடிக்கு அடிமையான – அடிமையாக்கப்பட்ட மனிதர்களை குறி வைத்துத்தான் தரகு முதலாளிகளும் பன்னாட்டு மது உற்பத்தி நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கும் என்கிறது புள்ளி விவரம். 2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்’ அல்லது 24 ‘ஆஃப்’ அல்லது 12 ‘ஃபுல்’ இருக்கலாம்.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் எதுவொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒன்றுக்குள் மற்றது அடக்கம். மற்றதுக்குள் இன்னொன்று அடக்கம். அந்தவகையில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அரசு சாரா அமைப்புகள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்குவதும், கவுன்சிலிங் என்ற பெயரில் ஒரு தொகையை பறிப்பதும், புதிதுப் புதிதாக மன நோய்கள் பூப்பதும், மருந்துகள் அறிமுகமாவதையும் சொல்லலாம்.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடட் ப்ரீவரீஸ் லிட் நிறுவனத்தின் அதிகாரியான ரவி நெடுங்காடி, ”மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வயதுடையவர்கள். சட்டப்படி குடிக்க அனுமதி இல்லாதவர்கள். இவர்களை குறி வைத்துதான் நாங்கள் விற்பனையில் இறங்கியிருக்கிறோம். 3500 இலட்சம் பேர் இப்போது குடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் இலட்சமாக உயர்த்துவதுதான் எங்கள் நோக்கம்…” என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”  என டிராகுலாவின் பற்களை ஆல்கஹால் கொண்டு மறைத்தபடி தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்கான வார்த்தைகளை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வாக்கியமாக மாற்றத் துடிக்கிறார்கள்.

குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.

_________________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

__________________________________________________________
முதல் பதிவு: வினவு

ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்

21 அக்
வணக்கம் நண்பர்களே,
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள்  தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும்.
அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றியதின் விளைவே இப்பதிவு.
ஐன்ஸ்டின் அய்யா குறித்து அறியாதோர் இருக்கவே முடியாது என்னும் அள்வுக்கு அறிமுகம் தேவையற்றவர் எனினும் நியுட்டனின் ஈர்ப்பு  விசைக்கு மாற்றுக் கொள்கை[ பொது சார்பியல் கொள்கை General theory of relativity] கண்டுபிடித்தவர்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி[சிறப்பு சார்பியல் கொள்கை Special relativity] என்பதும், பருப் பொருளின்[matter] இன்னொரு பரிமாணமே ஆற்றல்[E=mc^2] என்பதும் இவரின் முக்கிய கொள்கையாக்கங்கள் ஆகும்.

 

யூதராக இருந்தாலும் யூத இன மேட்டிமை மீது கடுமையான விமர்சனம் வைத்த மனித நேயர். 

 

I should much rather see reasonable agreement with the Arabs on the basis of living together in peace than the creation of a Jewish state. …the essential nature of Judaism resists the idea of a Jewish state with borders, an army, and a measure of temporal power….I am afraid of the inner damage Judaism will sustain – especially from the development of a narrow nationalism within our own ranks…
— Einstein speech in New York, 1938.
 
அதே சமயம் யூதனாக இருந்தும் யூத மதத்தை விமர்சிக்கிறாயா என யூதர்கள் யாரும் அவர் தலைக்கு விலை வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும்.
இது அறிவியல் பதிவு அல்ல என்பதால் ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்க தேவையில்லை.  அவர் கடிதம்  குறித்து திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அய்யாவின் இணைய தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் முழுதும் அளிக்கிறோம்.[கடிதத்தின் மொழியாக்கம் மட்டும் சிவப்பு எழுத்துக்களில் இருக்கும்]
******
ஐன்ஸ்டின் கடவுள் பற்றி கூறினார் என மதவாதிகளின்  பரப்புரைகளுக்கு  ஒருவகையில் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. ஐன்ஸ்டினும் கடவுள் என்பதை ஒரு கவிதை உருவகமாக பலமுறை கருத்து வெளியிட்டதன் ஒர் எதிர்பாரா ,விரும்பத் தகாத விளைவே எனலாம்.
ஆகவே ஐன்ஸ்டின் கடவுளை நம்பினார் என்னும் மதவாதிகளின் விளம்பர பிரச்சாரத்தை முழுதும் முறியடிக்க, இக்கடிதத்தை முற்றிலும் படித்து விளங்குவதின் மூலம் செய்ய இயலும்.இக்கடிதம் உள்ளிட்ட இதர ஆவண‌ங்கள் ஐன்ஸ்டின் ஒரு எதார்த்த இறை மறுப்பாளர் என்பதை தெளிவாக்குகின்றன.
இக்கடிதம் 2008ல் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது நான்(ரிச்சர்ட் டாக்கின்ஸ்) எனது அமைப்பிற்காக எடுக்க முயன்றேன்,அப்போதைய  விலை இப்போதைய ஏல தொடக்க விலை 3 மில்லியன் டாலரை[15 கோடி ரூபாய்] விட குறைவாக இருந்தாலும் என்னால் முடியவில்லை.
ஆகவே இக்கடிதத்தை ஏலத்தில் எடுப்பவர்கள் அதன் ஆங்கிலம்& இதர  மொழியாக்கங்களுடன்[ மூலம் ஜெர்மன் மொழி] உலக முழுதும் பரப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 
**********
இந்த தனிப்பட்ட கடிதம் அனைவருக்கும் பகிர்ந்த பொதுவான விடயம் இல்லை என்றாலும் கடவுள், மதம் மற்றும் இனம் சார் சிந்தனை போன்றவைகளின் மீதான‌ ஒரு தலை சிறந்த சிந்தனாவாதியின்  கருத்து என்ற வகையில் அறியத் தக்கதே.
இந்த ஞானியின் கடவுள்,மதம் மீதான தனிப்ப‌ட்ட ,வெளிப்படையான கருத்துகளை வெகு சிலரே சரியாக அறிந்து இருக்க முடியும் என்பதால் இக்கடிதம்  அக்கருத்துகளை ஒரு ஆவணமாக்கி அனைவருக்கும் அளிக்கிறது.
இக்கடிதத்ம் ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதால் ஐன்ஸ்டினின் உள் மனதின் உண்மையான  கருத்தை உறுதியாக தொடர்பு படுத்துகிறது.இக்கடிதத்தின் கருத்துகள் வாழ்வின் நோக்கம் பற்றிய  பல அடிப்படை கேள்விகளின் பதிலை நோக்கிய நெடுநாள் தேடலை எடுத்து இயம்புகிறது.
வாழ்வின் நோக்கம் பற்றிய உண்மைத்தேடல் உடையவர்களுக்கு இக்கடிதம் ஒரு சிறப்பு அறிமுக விளக்கமே. 
இக்கடிதம் ஐன்ஸ்டின் அபோது பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கடித குறிப்பேட்டில் ஜன்வரி 3,1954ல் பிரபல தத்துவவியலாளர் எரிக் குட்கிண்ட்[Eric B. Gutkind] அவர்கள்க்கு ஜெர்மன் மொழியின் எழுதப்பட்டது. 
இக்கடிதம் திரு குட்கிண்ட்டின் புத்தகமான  .Choose Life: The Biblical Call to Revolt”மீதான விமர்சனம் எனலாம்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலத்தில் [1954ல் ஜோம் ஸ்டாம்பர்க் ஆல்]மொழியாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்கிறது.
 
Key Passages:
 
கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகம் பற்றி பரபரப்பாக பல விட‌யங்கள் அறிய‌ முடிந்தது. உங்கள் புத்தகத்தின் பிரதியை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் படித்த‌ உடனே எனக்கு தோன்றியது  நம்மிடையே உள்ள ஒற்றுமைகள்தான். சான்றுகள் மீதான எதார்த்த அணுகுமுறை கொண்டு தனிப்பட்ட ,மனித சமூகத்தின் வாழ்வை ஆய்வதுதான் அந்த ஒற்றுமை எனலாம்.

கடவுள் என்பது மனித பலகீனத்தின் உருவாக்கமாகவும்,வெளிபாடாகவும் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.பைபிள்[மத புத்தகம்] என்பது மதிப்புக்குறிய‌ ஆனால்  பழைய புராண ,குழந்தைகள் கேட்கும்அம்புலிமாமா கதைகளின் தொகுப்பு மட்டுமே.

எவ்வளவு நுட்பமான ,தர்க்கரீதியான தத்துவ விளக்கமும் இக்கருத்தை மாற்ற முடியாது.இம்மாதிரி நுட்பமான தத்துவ விளக்கங்கள் விளக்குபவரின் இயல்புக்கேற்ப ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன தவிர அந்த புத்தக்த்தின் எழுதப்பட்டுள்ளவைக்கு தொடர்பற்றவை.

 

[அதாவது மத புத்தகத்தில் அறிவியல்,உருவகமாகப் பார்க்க வேண்டும், சூழலுக்கு பொருத்தி பார்க்க வேண்டும்,அந்த கருத்து  அப்போது மட்டுமே, …இந்த மாதிரி..சார்வாகன்]

.என்னைப் பொறுத்தவரை யூதமதமும் பிற மதங்கள் போல பழைய அம்புலிமாமா கதைகள்,மூட நம்பிக்கைகள் அனைத்தையும் பழைய கள்ளை புதிய புட்டியில் ஊத்தி கொடுப்பது போல்தான்… .
 
யூதர்களின் ஒருவன் என மகிழ்சியுடன் நான் அறிவித்துக் கொண்டாலும், அவர்களோடு ஒத்த சிந்த்னை கொண்டு இருந்தாலும், பிற [இன,மத] மக்களை விட யூதர்களிடம் வித்தியாசமாக எந்த மேம்பட்ட குணமோ தகுதியோ  இல்லை எனவே கூறுகிறேன்.

என் அனுபவத்தில் இருந்து இப்போதைய சூழலில் தங்களை மோசமான நிலைக்கு ஆளாத‌ அளவுக்கு போதிய பாதுகாப்பு சக்தியை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தவிர [கடவுளால்]தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 
 நீங்கள் யூத இன மேட்டிமை என பெருமை பாரட்டுவதும். அதனை வெளியில்  மனிதன்,உள்ளே யூதன் என இரு எல்லைகளிலும் நின்று பாதுகாப்பதும் என்னை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

ஒரு மனிதனாக செய்த வினைகளின் பலனுக்கு விலக்கு கோருவதும் ,இல்லையெனில் ஏற்போம் என்பதும்,ஒரு யூதனாக ஓரிறைக் கொள்கையின் உயர்வு என தூக்கிப் பிடிப்பதுமே ஆகும். 

[அதாவது யூதர்கள் தாங்கள் 2000 வருடம் துன்புற்றோம் என்பதும்,கடவுள் இந்த தேசத்தை எங்கள்க்கு கொடுத்தார் என்ற வாதங்கள்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பை, துன்புறுத்துவதை நியாயப் படுத்தாது என்கிறார். அவர் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதை எதிர்த்தார்,பாலஸ்தீனர்களோடு யூதர்கள் ஒரே நாடாக ஒன்றுபட்டு வாழவே விரும்பினார்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தது என்பதால் விளக்கம் அவசியம் ஆகிறது]

குறிப்பிட்ட காலத்திற்கான காரண காரியம் முழுமையானது அல்ல,இதனை தத்துவமேதை ஸ்பினோஜா மிக அருமையாக் முதன்முதலில் விளக்கினார்

[அதாவது மனித சமூக வரலாற்றை ஆதியில் இருந்து பார்த்தால் மட்டுமே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் அடைந்ததும்,கொள்கை கோட்பாடுகள் வரையறுத்த வரலாறும் தெரியவரும்.பாருச் ஸ்பினோசா[Baruch Spinoza and later Benedict de Spinoza (24 November 1632 – 21 February 1677) ] எனப்படும் யூத_டச்சு தத்துவமேதையின் பைபிள்,ஓரிறைக் கொள்கையின் மீதான விமர்சனங்களே 18 ஆம் நூற்றாண்டு பைபிள் விமர்சனம் ஆய்வுகளுக்கு அடித்தளம் இட்டது. ‍]

 உருவ,முன்னோர் ,இயற்கை  வழிபாடு போன்றவை உள்ளடங்கிய மதங்கள் ஓரிறைக் கொள்கையால் முழுதும் இல்லாமல்  போய் விடவில்லை.இச்சூழலில் அம்மதத்தவரிடம் ஒழுக்க கோட்பாடுகள் இல்லை அல்லது தரம் அற்றவை என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அப்படி அல்ல!!!
.

நாம் இருவரும் சில அறிவுசார் கருத்துகளில் மாறுபட்டாலும் பல அடிப்படை விடயங்களில் ஒன்று படுகிறோம்[எ.கா மனித நடத்தை மதிப்பீடுகள்,] என்றே எண்ணுகிறேன். நமது அறிவுசார் முட்டு கொடுத்தல்களும்,பகுப்பாய்வுகளும் [மனோ தத்துவ மேதை ஃப்ரய்டின் மொழியில்]மட்டுமே வித்தியாசப்படுகின்றன்.ஆகவே சான்றுகள் உள்ள‌ உறுதிப் படுத்தப்பட்ட விடயங்களை நாம் விவாதித்தால் மட்டுமே நம் ஒருவருக்கொருவர் மீதான சரியான புரிதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.
நட்புடன் கூடிய அன்பின் வாழ்த்துக்களுடன்
ஐன்ஸ்டின்
 

***********

முழுமையான கடிதம் எப்படி இருக்கும் என்பதை மாதிரியாக இந்த பகுதி விளக்கி இருக்கிறது. மதபுத்த்கம் குறிப்பாக யூத கிறித்தவ மத புத்தக கதைகளும் அதன்  மீதான அரசியலே இப்போது வரை தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பதைப் புரிந்தால் இக்கடிதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரியும். ஒருவேளை ஐன்ஸ்டின் யூத மேட்டிமை கொள்கை கொண்டு இருந்தால் இஸ்ரேல் அரசியலில் முக்கிய பதவி கூட கிடைத்து இருக்கலாம்.சிந்தனையாளர்கள் மத இன சார் கொள்கை உடையவர்களாக இருக்க கூடாது என்பதன் எ.கா ஐன்ஸ்டின்தான்!! 

யூத மத இனவாதிகள் கடவுள் இஸ்ரேல் என்னும் நாட்டை தங்களுக்கு எகிப்தில் இருந்து வர வைத்து ,அங்கு ஏற்கெனவே வாழ்ந்தவர்களை வெற்றி கொள்ள வைத்து அளித்ததாக இன்னும் [நம்பி?!!!!] பிரச்சாரம் செய்கிறார்.

இதில் எதிர் கோஷ்டி பாலஸ்தீனர்கள் தரப்பும் இன்னும் மோசமான மதவாதிகளாக முத்திரை குத்தப்பட்டது அவர்கள் பக்க நியாயத்தை எடுபடாமல் செய்து விட்டது.சமீபத்தில் எந்த நியாயமான தீர்வும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இது போன்ற கட்டுக்  கதைகளை ஒழிக்காதவரை அடக்குமுறை ஆக்கிரமிப்பும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும். ஐன்ஸ்டின் இதனை உணர்ந்தே பைபிள் கட்டுக் கதை, எந்த திற்மையான மதப் பிரச்சாரகரின் தத்துவ விளக்கமும் ஏற்புடையது அல்ல என அருமையாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால் ஐன்ஸ்டின் ஆத்திகர் என்றும்,அவரின் கண்டுபிடிப்பும் எங்கள் புத்தகத்தில் சொல்லி இருக்கிறது என மத விளம்பரம் செய்யும் கோமாளிகளும் எதிர்காலத்தில் வருவார்கள் என அறிந்து இருப்பாரா??? ஹா ஹா ஹா!!

நன்றி!!

முதல் பதிவு: சார்வாகன்

ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவரின் பொய்யில் உறையும் கள்ள மௌனம்

10 அக்

கவுண்டமணியைவிட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க’ பதிவு வெளியிடப்பட்ட செய்தியை பின்னூட்டமாக குலாமின் நான் முஸ்லிம் தளத்தில் பதிவு செய்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகி விட்டது. இன்னும் அது வெளியிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தளத்திற்கு வரும் பின்னூட்டங்களை வெடியிடுவது குறித்த உரிமை அத்தளத்தை நடத்துபவருக்கே உரியது, அதில் நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அவர் அதை என்ன காரணத்துக்காக முடக்கி வைத்திருக்கிறார் என்பதை ஆராய முடியும். இந்தப் பதிவு அந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. முதலில் அங்கு நான் பின்னூட்டமிட்டதற்கான ஆதாரத்தை கீழே தந்திருக்கிறேன்.

 

பொதுவாக பதிவர்கள் இந்த வகையில் ஒரு பின்னூட்டத்தை தடுக்கும் போது பரிசீலனையற்று திரும்பத் திரும்ப ஒரே செய்தியை கூறுவதால் அது வெளியாகவேண்டிய தேவையில்லை என முடிவு செய்வதாக கூறுவர். ஆனால் இவ்வாறான காரணத்தை குலாம் கூறமுடியுமா? அந்த கவுண்டமணி நடிப்பு இடுகையில் நான் எழுப்பியிருந்த விசயங்கள் என்ன? எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதை பொய் என்று நிரூபித்திருந்தேன். நடந்த விவாதத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்திருந்தேன். விவாதத்திற்கு அழைக்கிறீர்களே இப்போது நடப்பது என்ன? நேரடி விவாதத்தை நான் ஏன் மறுக்கிறேன் என்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு ஏற்கனவே பதிவெழுதி இருக்கிறேன் அதில் எழுப்பபட்டிருந்த அம்சங்களை எந்த விதத்தில் மறுக்கிறீர்கள்? என்று கோரியிருந்தேன். இப்படி கேள்வியெழுப்பும் பதிவை தன் பார்வையாளர்களுக்கு காண்பிக்காமல் ஒருவர் தடுக்க நினைக்கிறார் என்றால் அதன் பொருள் என்னவாக இருக்க முடியும், தன் குட்டு வெளிப்பட்டு விடக் கூடாது என எண்ணுகிறார் என்பதைத் தவிர.

 

குலாம் இரண்டு விதங்களில் பொய் கூறியிருக்கிறார். 1. நல்லூர் முழக்கம் தளத்தில் அவர் பின்னூட்டமிட்டு அது பதிவு செய்யக் கோருவதாக தெரிவித்ததை மறுத்து; அப்படியென்றால் அதை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தேன். இன்றுவரை அப்படி எதையும் வெளியிடவில்லை. எனவே, குலாம் அவ்வாறு கூறியது பொய். 2. அந்த திரைக்காட்சியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திருப்பதாக கூறினார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை என்று என்னுடைய மின்னஞ்சலின் உள்பெட்டியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிட்டிருந்தேன். மட்டுமல்லாது, மெய்யாகவே குலாம் அவ்வாறு அனுப்பியிருந்தால் தேதி நேரம் தெரியும்படி அனுப்பிய அஞ்சல் பகுதியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடும்படியும் கோரியிருந்தேன். இதுவரை அவ்வாறு குலாம் எதையும் வெளியிடவில்லை. எனவே, எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதும் பொய். தவிரவும் இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. எனக்கு மின்னஞ்சலில் திரைக்காட்சியை அனுப்பியதாக குலாம் ஏன் பொய் கூற வேண்டும்?

 

தன்னுடைய தளத்தில் குலாம், தன்னை ஒரு நேர்மையானவராக எதிர்பின்னூட்டங்களை வரவேற்கும் பண்புள்ளவராக எதையும் நேரிய முறையில் மென்மையாக அணுகும் பண்புள்ளவராக இடுகைகளின் மூலமும் வெளிப்படுத்தலின் மூலமும் தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஒருவர் இதுவரை அவர் காட்டியிருக்கும் நேர்மைப் பண்புக்கு மாற்றமாக பின்னூட்டம் இடாமலேயே இட்டதாக கூறுவதை ஆதாரபூர்வமாக மறுக்கவில்லை என்றால் அது அவரது பிம்பத்தை உடைக்கும். அதேநேரம் அவரால் ஆதாரபூர்வமாக மறுகவும் முடியாது. அதனால் தான் தன்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தான் அனுப்பியதாக ஆதாரபூர்வமாய் காட்டவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் மின்னஞ்சலில் அனுப்பியதாய் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ அது பற்றி குறிப்பிடுவதையோ கவனமாக தவிர்த்திருக்கிறார். இவைகளெல்லாம் அவரிடம் பதில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆனாலும் அதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமாட்டார். அது தான் மதத்தின் தன்மை. ஏனென்றால் அவர் மதத்தையும் கடவுளையும் நம்புகிறாரேயன்றி ஏற்கவில்லை.

 

குலாம் மட்டுமல்ல, இஸ்லாத்தை மீப்பெரும் இறும்பூறெய்தல்களாக காட்டி பதிவெழுதும் அனைவருக்கும் இவ்வாறு தனக்குத் தானே நேர்மையற்று இருப்பது தான் அடிப்படைப் பண்பாக இருக்கிறது. தான் கற்றறிந்ததை எழுதினாலும் அல்லது காப்பி பேஸ்ட் செய்து எழுதினாலும் அவர்களின் பண்பு இந்த எல்லையில் தான் நிற்கிறது. அதற்குக் காரணம் அவர்களிடம் பரிசீலனை இல்லாததே. பரிசீலனை எப்படி வரும்? மதம் என்றாலே அது பரிசீலனைக்கு அப்பாற்பட்டது தானே.

 

இப்படி பதிவெழுதி புழகமடையும் -தான் இம்மைக்காக அல்ல மறுமைக்காக எழுதுகிறேன் என்று ‘அல்டாப்பாக’ அலட்டிக் கொள்ளும்- பதிவர்களை விட்டுவிடுவோம். ‘சரியான நெத்தியடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ’ ‘நாத்திகர்களுக்கோர் செருப்படி’ ‘அல்லாஹு அக்பர், ஆண்டவன் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக’ ‘இனியும் நாத்திகர்கள் மறுத்துக் கொண்டிருக்க முடியுமா?’ என்றெல்லாம் அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமெழுதி தங்களைத் தாங்களே சுய சொரிதல்கள் செய்து கொள்ளும் சிலரையும் விட்டுவிடுவோம். ஆனால் இது போன்ற பதிவுகளை படித்து தங்கள் மத அறிவை விரிவுபடுத்திக் கொள்வதாக அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் பலரை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிறேன்.

 

உங்கள் மதத்தின் உண்மைத் தனமையையும், காலத்தால் வழுவாதிருக்கும், அறிவியலால் வீழாதிருக்கும் பண்பையும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து அறிந்து கொள்ளும் நம்பிக்கையாளர்களே, யாரின் எழுத்தைப் பார்த்து உங்கள் நம்பிக்கையை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்கிறீர்களோ அவர்கள், கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓடி ஒழிவதையும் நேர்மையற்ற முறையில் திருகல்கள் செய்வதையும், கவலையற்று பொய்கள் கூறுவதையும் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? மதத்தை பிரச்சாரம் செய்பவர்களே இப்படி நேர்மையற்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவர்களை அப்படி தூண்டுவது எது? எல்லாம் வல்ல அந்த வல்லாற்றல் மிக்க கடவுள் ஏன் அவர்களின் நேர்மையற்ற செயல்களை விலக்கச் செய்யவில்லை? தூய மார்க்கம் என்று கூறுபவர்கள் அனைவருமே ஓர் இடத்தில் நழுவுகிறார்கள், பசப்புகிறார்கள், திசை திருப்புகிறார்கள், கோபப்படுகிறார்கள், அல்லது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இது ஏன்? நடந்து செல்பவர்கள் தொடர்ந்து செல்ல முடியும், ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் நின்றே ஆகவேண்டும். சமூகத்தோடும் யதார்த்தத்தோடும் பொருந்திச் செல்பவர்கள் தொடர்வார்கள், சமூகத்துடன் தொடர்பற்று உச்ச சப்தத்தில் பொய்களை பேசுவோர் நின்றே ஆக வேண்டும். அதனால் தான் மதவாதிகளால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடிவதில்லை, ஏனென்றால் அவர்களிடம் உண்மையில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இதைப் படிக்கும் போது உங்களுக்கு கோபம் கூட வரலாம். ஏனென்றால், ஆண்டாண்டு காலமான மத அழுக்கு உங்களுக்குள்ளும் இருக்கக்கூடும். அந்த அழுக்கை நீங்கள் நீக்க விரும்புகிறீர்களா? என்றால் கேள்விகளைக் கேழுங்கள். கேட்கக் கேட்கத்தான் உண்மை விரியும். இதோ உங்களை வாரியணைக்க சமூகம் காத்துக் கிடக்கிறது.

 

முற்றும்.

 

பின்குறிப்பு: இந்த இடுகையும் வழக்கம் போல் குலாமின் தளத்தில் பின்னூட்டமாய் தெரிவிக்கப்படும். அதை வெளியிடுவதும் தடுத்துவிடுவதும் அவர் பொறுப்பு. ஆனால், இனியும் அதை திரைக்காட்சியாய் எடுத்து வைத்து அம்பலப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால், ஒட்டுக் கோமணமும் இல்லாமல் நிற்பவரிடம் எதை அம்பலப்படுத்த?

கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க

6 அக்

 

ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் .. .. .. எனும் பதிவுக்கு குலாம் கீழ்கண்டவாறு தன்னுடைய தளத்தில் கீழ்கண்டவாறு பதிலுரைத்துள்ளார்.

 

G u l a mOctober 4, 2012 8:46 AM

சற்றுமுன் செங்கொடிக்கு இட்ட மெயிலில்..

G u l a m gulamdhasthakir@gmail.com

11:43 PM (0 minutes ago)

 to செங்கொடி

சகோ செங்கொடி நான் இடும் பின்னூட்டம் அனைத்திற்கும் இப்படி தான் வருகிறது அதற்கான ஸ்கீன்ஸ்டார்ட் எடுத்து வைத்து என்னை மெய்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக நான் சொல்வது பொய்யில்லை என்பதற்காக தான் இந்த மெயிலிடுகை.

 வார்த்தைகளை கவனித்து பேசுங்கள் என்பது மட்டுமே என் வேண்டுகோள்

 அந்த மெயிலுடன் எனது தற்போதைய ஸ்கீன் ஸ்டார்டையும் இணைத்து அனுப்பியுள்ளேன்.

அவரது தளத்தில் தற்போது இட்ட பின்னூட்டத்திற்கும் இப்படி தான் வருகிறது

 நீங்கள் Gulam ?

 You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.

 By logging in you’ll post the following comment to ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் ‘அல்லது’ அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்:

அண்ணே, செங்கொடி., ரொம்பவும் பயம் காட்டாதீங்கண்ணே,.

 சுற்றி வளைத்து பேச ஒன்றுமில்லை., நீங்கள் சவுதி அரேபியாவில் மதம் சாராத குறிப்பாய் இஸ்லாமியன் என்ற அடையாளம் சாராத நாத்திகவாதியாக தான் அச்சமுகத்தில் தான் வேலை செய்து வருகிறார்களா? அதற்கு ஆதாரம் தர முடியுமா?

 ஏன் இங்கே மட்டும் பொய்யான பரப்புரை. சவுதியில் இருந்தால் உங்கள் அட்ரஸ் கொடுங்கள் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லது இந்தியாவில் இருந்தால் விவாதத்திற்கு வர தயாரா?

 இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கண்ணே.,

 எவருக்கும் ஸாரி., எவனுக்கும் ஓடி ஒளியும் எண்ணமும், பழக்கமும எனக்கு இல்லை. கவனித்து பேச கற்றுக்கொள்ளுங்கள்

 WordPress.com / Gravatar.com credentials can be used.

 

இதில் குலாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை. இதோ என்னுடைய மின்னஞ்சல் உள்பெட்டியை திரைக்காட்சிப் படமாக கீழே இணைத்துள்ளேன். அவர் செய்ததெல்லாம் ஜிடாக்கில் ஒரு சிறிய அரட்டை தான், அதையும் படமாக கீழே இணைத்துள்ளேன்.

 

மெய்யாகவே குலாம் எனக்கு அவர் குறிப்பிட்டிருந்தபடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் அவரின் மின்னஞ்சலில் அனுப்பிய அஞ்சல் பகுதியை எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் விபரத்தை தேதி நேரம் தெரியும்படி திரைக்காட்சியாக(ஸ்க்ரீன் ஷாட்) எடுத்து அவர் தளத்தில் வெளியிடத்தயாரா? ஏன் அவரின் தளத்தில் வெளியிடக் கோருகிறேன் என்றால், மின்னஞ்சல் என்றால் அனுப்பாமலேயே அனுப்பிவிட்டேன் என்று கூறமுடியும் என்பதால் தான். ஐயோ சாமி! ஒரு பொய்யை மறைக்க இன்னும் எத்தனை பொய்களோ.

 

முதலில் குலாமுக்கு நன்றி கூறிவிட வேண்டும். ஓடி ஒழியும் இஸ்லாமிய பரப்புரை பதிவர் என்று தலைப்பு வைத்ததும் விரைந்து பதிலெழுதி ‘ஆம், நான் அப்படி ஓடி ஒழிபவன் தான்’ என நிரூபித்து விட்டாரே, அதற்கு நன்றி கூறாமலிருக்க முடியுமா? எப்படி நிரூபித்தார் என்கிறீர்களா? ஒரு கேள்வி கேட்டால் யோக்கியவான்கள் என்ன செய்வார்கள்? பதில் கூறுவார்கள். கேட்கப்பட்ட கேள்வி எதற்காவது குலாம் பதில் கூறி இருக்கிறாரா? இதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?

 

வேறு என்ன தான் கூறியிருக்கிறார்? வேறென்ன நான் சௌதியில் இருந்தபோது எப்படி இருந்தேன்? இந்தியாவில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவா? பேரன்புமிக்க பெருந்தகையாளர் சகோ. குலாம் அவர்களே இதற்கும் கேட்ட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியவில்லை. அப்படித்தானே. முதலில் அதை ஒப்புக் கொள்ளுங்கள். அது தான் நேர்மை, கண்ணியம். இவைகள் உங்களுக்கு இல்லை என்று கூறுவதை விட அந்த இன்மைகளை மறைப்பதற்காகத் தான் நீங்கள் விவாதத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறீர்கள் என்பதே சரியானது.

 

விவாதத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறும் பேராண்மை மிக்க சகோ. குலாம் அவர்களே, இதுவரை இங்கே நடந்து கொண்டிருந்ததன் பெயர் என்ன? நேரடி விவாதம் குறித்து நான் குறிப்பிட்டிருந்த இடுகையை படித்துப் பார்த்தீர்களா? அதில் கூறப்பட்டிருப்பவை குறித்து உங்கள் கருத்து என்ன? தர்க்கம், அறிவியல் என்று சொற்களின் இடைவெளியில் புகுந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவது; முடியாது போகும் போது நேரடியாக வா என்று கூப்பாடு போடுவது, மிஸ்டர் குலாம் இது போன்ற பூச்சாண்டிகளெல்லாம் நிறையவே கண்டு விட்டோம். சரி, கடவுளின் இருப்பு குறித்து நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலில் அவர்களை பதில் கூறச் சொல்லுங்கள், பின்னர் நான் முடிவு செய்கிறேன், என்னுடன் நேரடி விவாதம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்பதை.

 

வார்த்தைகளை கவனித்துப் பேச வேண்டும் என்று குலாம் கேட்டுக் கொண்டுள்ளார். எனக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை மீறி எந்தச் சொற்களையும் நான் பயன்படுத்தி விடவில்லை. ஆனாலும் ஒன்று சொல்லிக் கொள்ளலாம், தோற்றங்களைக் கண்டு அவருக்கான மதிப்பை முடிவு செய்யும் கெட்ட பழக்கம் எனக்கில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடை வெளியைக் கொண்டே அவருக்கான மதிப்பை தீர்மானிக்க முடியும். மட்டுமல்லாது சமூகத்தின் உயர்வுக்கு ஒருவரின் பங்களிப்பு எந்த உயரத்தில் இருக்கிறதோ அந்த உயரத்துக்குத் தான் அவர்களை மதிக்க முடியும். உள்ளத்தில் உங்களின் செயல்களை சீர்த்துக்கிப் பார்த்துவிட்டு வெளியில் போலியாய் மதிப்பளிக்க முடியாது. தவிரவும் கடந்த பதிவின் முன்குறிப்பில் இதை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.

 

மதம் என்பது ஒரு போதை. ஆல்கஹால் போதையைப் பார்க்கிலும் மிகக் கடுமையாகவும், வெகு ஆபத்தானதாகவும் இருக்கும் போதை மதம். அந்த போதையை மூளையில் ஏற்றி வைத்திருப்பவர்கள் நேர்மையுணர்ச்சியை அரிக்கக் கொடுத்தவர்களாகிறார்கள். அதனால் தான் அவர்கள் வெளியில் நடித்துக் கொண்டே உள்ளுக்குள் தங்கள் மூடநம்பிக்கையை தக்கவைக்க சித்து வேலைகளில் இறங்குகிறார்கள். அவர்களிடம் தேடலைத் தூண்டுவதன் மூலமே அவர்களின் நேர்மையுணர்ச்சியை மீளமைக்க முடியும். அதற்கு உதவும் என நான் கருதுவதால் தான் அந்த சவால் அழைப்பு.

 

இறுதியாக, ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி கதவை அடைத்துக் கொண்டு மனைவியிடம் அடி வாங்குவார். ஆனால், சப்தம் மட்டும் ‘பிச்சுப்புடுவேன், அடி பின்னிப் போடுவேன்’ என்று வரும். முடிவில் கையில் கத்தியுடன் யாருகிட்டே என்று தெனாவெட்டாக கூறிக் கொண்டே வெளியில் ஓடி வருவார். மரியாதைக்குறிய சகோ. குலாம் அவர்களின் பதிலைப் பார்க்கும் போது அந்தக் காட்சி தான் நினைவில் வந்தது. ஆனாலும், கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க. (என்னை அண்ணன் என்று விளித்திருப்பதாலேயே நானும் தம்பி என விளித்திருக்கிறேன்)